Thursday, May 13, 2010

சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு- பகுதி 2


அய்யப்ப மாதவன்

.கிளம்புவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியனைச் சமாளிக்க நெகிழிக் குவளையில் அடைக்கப்பட்ட ஐம்பூதங்களில் ஒன்றான நீரினை இரண்டு லிட்டர் அளவில் வாங்கிக்கொண்டோம். நான் மூவுருளிக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டதால் நண்பன் தண்ணீருக்கு செலவு செய்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக உள்ளுக்குள்ளேயே புரிந்திருந்தோம். அதனால்தான் எவ்வித சச்சரவுகளில்லாமல் பயணத்தை நிம்மதியாகத் தொடர முடிந்தது.

இருவரின் இருக்கை எண்களும் தாறுமாறாயிருந்ததால் 104 இருக்கை எண்ணுக்கு சொந்தக் காரரை தாறுமாறாய் மாறியிருந்த இருக்கையில் அமரச் சொல்லி தயவு கூர்ந்து கேட்டுக்கொண்டோம். அவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவ்விருக்கையில் செவ்வனே உட்கார்ந்து கொண்டு எங்கள் தொடர்வண்டி பேச்சுக்கு வழிவகுத்தார்.

எதிரே ஒரு வயதான கிழவி மற்றும் ஒரு பெண் அவளின் குழந்தை அவள் கணவனென உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தமிழ்மொழி பேசத் தெரியாதவர்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொண்டோம். அந்தக் கிழவியும் அந்தக் குழந்தையும் தூங்கிக்கொண்டிருந்தனர். குழந்தையும் கிழவியும் ஒன்று போலவேயிருந்தார்கள். கிழவிக்கு பல்லுப்போன குழந்தை வாய். குழந்தைக்கு பல்லில்லாத கிழவி வாய். வயதானவர்கள் மீண்டுமொருமுறை குழந்தையாய் மாறுவார்கள் என்பதற்கு இந்தக் காட்சியை எடுத்துக்காட்டாய் இயம்பலாம். நண்பன் குழந்தையை ஒரு பிரபஞ்சமென்று இயம்பினான். நானும் ஆழ்ந்து சிந்திக்காமல் ஆமோதித்தேன். குழந்தையைப் பற்றிய நானெழுதிய கவிதையொன்றை சொல்லிக் காண்பித்தேன். அவரும் அருமையாய் ரசித்து மகிழ்ந்தார்.

அந்தக் கவிதை

**
யாருடைய கைகளிலோ
ஒரு குழந்தை துளிர்க்கிறது
அதன் துள்ளலில் ஒரு மொட்டின் இதழ்கள்
எந்த மாயமுமில்லாது எளிமையில்
இயல்பில் விரிந்து மலர்கினறன.

**
அவன் கையில் தொகுப்பாய் வரக்கூடிய கவிதைகளைப் படிக்கக் கொடுத்தேன். அவனும் ஆர்வம் கொப்பளிக்க வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கினான். அவன் பதிலுக்கு படிக்க அவனுடை நேர்காணலைப் படிக்கத் தந்தான். அதில் அவனின் புகைப்படம் போட்டு வந்திருந்ததைப் பார்த்து உள்ளுக்குள் சிறிதாய் பரவசமடைந்தேன். நான் படிக்க அவனும் படித்தான். இடையிடையே கவிதையைப் பற்றி உணர்ச்சிகள் மோலோங்கப் பேசினான். நானும் அவன் அந்தப் புத்தகத்தில் கொடுத்திருந்த பதில்களில் அவன் சொல்லியிருந்த குட்டிக்கதைகள் பற்றி அவாவினேன். அவனும் சிறு புன்முறுவலுடன் மகிழ்ச்சி நீரோடையில் நனைந்துகொண்டான். மகிழ்ச்சி வெள்ளமென்றாலும் சொல்லமுடியாது. அது அடக்கமான சிரிப்பாக மகிழ்வாகயிருந்தது. அதான் நீரோடையென்று எழுதினேன்.

சேலம் போய்ச் சேரும் நேரம் பற்றி அறிய இருவரும் அதிக ஆவலில் நிரம்பி வழிந்தோம். அருகிலிருந்தவனைக் கேட்டபோது அவனுக்கு சரிவரச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பயணி பதினொரு மணியெனச் சொன்னார். ஆக இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சேலத்தில் காலெடுத்து வைத்துவிடலாம். இதற்கிடையில் இறங்கியதும் எங்கு தங்குவது யாரைக் கேட்பது என்ற குழப்பமிருந்தது. நல்லவேளை இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் தக்கை பாபுவின் கைபேசி எண் என்னிடமிருந்தது. கிளம்பும் முன் அவருக்கும் வருவதாகக் கைபேசியில் பேசியிருந்தேன். அவரும் காலை எட்டு மணிக்கு எங்களை அழைப்பதாயும் அப்போது தங்கும் விவரங்கள் கூறுவதாகவும் கூறினார். ஆனால் பாபு எட்டு மணிக்கு அழைக்கத் தவறிவிட்டார் அல்லது மறந்துவிட்டார். அவருக்கும் இதுவொன்றதானா வேலை. அவரை உண்மையில் போற்றிப் புகழவேண்டும். பின்னால் வரும் வரிகளில் அவருக்கான புகழாரங்களை அடுக்கவிருக்கிறேன். பிறகு நானே அவரை அழைத்து தொடர்வண்டியில் இருப்பதாகவும் மொரப்பூர் வந்துவிட்டதாகவும் சொன்னேன். அவரும் நல்லது. இறங்கியதும் பேசுங்கள் என்றார்.

நானும் நண்பனும் கவிதைகளையும் அவருடைய நேர்காணலையும் பேசி பேசிச் சேலத்தை நெருங்கிவிட்டோம். நண்பன் பாதிவரை கவிதைகள் படித்து மண்டை காய்ந்துவிட்டான். சூரியன் ஒரு பக்கம் தொடர்வண்டியின் வழியாய் அவனின் தலையைக் காய்ச்சியதுபோக பற்றாக்குறைக்கு நானும் என் கவிதைகளைக் கொடுத்து காய்ச்சிக்கொண்டிருந்தேன். ஒரு வேக்காடையே தாங்க முடியவில்லை. இரண்டு வேக்காடென்றால் என்னாவானென யோசித்துப்பாருங்கள். முற்றிலும் அவன் மூளையும் முகமும் சோர்ந்து தொங்கிப் போயிருந்த்ததைக் கண்ணுற்றேன். மீதியைச் சேலம் சென்று படிக்காலாமென்று மரியாதையாகக் கவிதைகளைத் திருப்பித் தந்துவிட்டான். நானும் அவனின் கடும்வெட்கையைப் புரிந்துகொண்டு வாங்கி வைத்துக்கொண்டேன்.

சேலம் சந்திப்பை அடைவதற்கான அறிகுறிகள் தென்பட நானும் நண்பனும் இறங்கிச் செல்லத் தயாரானோம். தொடர்வண்டியின் வேகம் மிதமாக மிதமாக சேலத்தின் வாயில்கள் மெல்லத் திறந்தன. ஒரு விசயம் சொல்லத் தவறவிட்டேன். நான் நீள்சதுர பெட்டியினுள்ளிருந்தபோது அதன் கழிவறைக்கு இருமுறை சென்றேன் ஒன்றுக்கிருக்க. ஆனால் நண்பன் அந்தப் பிரக்ஞையே இல்லாதிருந்தான். இவ்வளவுக்கும் இருவரும் மாறி மாறி நெகிழிக் குவளையைக் காலி செய்திருந்தோம். இப்படித்தான் ஒரு சிலபேர் ஒரு நாளக்கு ஒருமுறைதான் உடலின் உப்பு நீரை வெளியேற்றுகிறார்கள். அதற்கும் ஒரு பொறுமை வேண்டும்போலும்.

சேலம் எனக்குப் பழக்கப்பட்ட ஊர்தானென நண்பனிடம் சொல்லிவந்தேன். இதற்குமுன்பு ஜவுளித்துறை சம்பந்தமான தொழில் செய்ததாகச் சொன்னேன். ஆனால் தொடர்வண்டியில் சேலத்திற்கு மிகக் குறைந்த அளவே வந்ததாகக் கூறினேன். ஆனால் இறங்கியதும் ரயில்நிலையத்தில் பழைய பதிவுகளை மனம் சரிபார்க்கத் தொடங்கியது. அவ்விடங்களெல்லாம் மூளையில் பழைய நினைவுகளிலிருந்து மீண்டன. ஒரு கணத்தில் முழுக்க ஞாபகம் வந்துவிட்டது. என்றோ பார்த்த அதே சேலம்தான் என்று நினைத்தவாறு பாவுவை கைபேசியில் அழைத்தேன். பாபுவும் பக்காவாக நான்கு சக்கர உருளியை ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த ஓட்டுநர் முபாரக் எங்களைக் கண்டுபிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு போனார். சேலத்தின் சாலைகள் வெயிலில் வெள்ளை வைரங்களென ஒளிர்ந்தன. ஊர்தியின் சாளரங்களைத் திறந்துவைத்துக்கொண்டு அனல்காற்றை அனுபவித்தபடி போய்க்கொண்டிருந்தோம்.

நிகழ்வுக்கு முதல்நாளே வந்துவிட்டதால் நானும் நண்பனு ஒரு குளிர்ச்சியான திட்டமொன்று வைத்திருந்தோம். அந்தத் திட்டத்தை பாவுவிடம் போனதும் சொல்லிவிட எத்தனித்திருந்தோம். அடுத்தவற்றை நாளை பார்ப்போம் என்று தோன்றிவிட்டது நண்பர்களே... முகமெல்லாம் பிசுபிசுக்க கைகளால் துடைத்தவண்ணமெழுதிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment