Showing posts with label மாமல்லன் கார்த்தி. Show all posts
Showing posts with label மாமல்லன் கார்த்தி. Show all posts

Sunday, March 13, 2011

ஜான் ஆபிரகாம்- கலகக்காரனின் திரைக்கதை (புதிய பதிப்பு)


'ஜான் ஆபிரகாம்- ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இதனை தொகுத்துள்ள ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களின் சிரத்தையும், அர்ப்பணிப்புணர்வும்- இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திலும், அது செம்மையாக தொகுக்கப்பட்ட விதத்திலும் புலப்படுகிறது. ஜான்'னின் திரைப்படங்களைத் தாண்டி அவரது ஆளுமையை நுட்பமான புரிதலோடு கவனப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு திரைக் கலைஞனுக்கான மிகச் சரியான மரியாதையை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா சூழலை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு ஆச்சர்யமான, முக்கியமான பணி. சினிமாவில் ஆர்வம்கொண்ட இளையசமூகம் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும். ஜானை போல் நாம் வாழ இயலாது..ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் -அவரின் 'மாற்று சினிமா' குறித்த கருத்துக்கள், அதற்காக அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான காரியங்கள் நமக்கு உற்சாகத்தையும் துணிச்சலையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

-மாமல்லன் கார்த்தி


தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர்.சீனிவாசன்
வெளியீடு: வம்சி புக்ஸ்
விலை: 200 /-

அசையும் படம் - சி.ஜெ. ராஜ்குமார் (புத்தக அறிமுகம் )


ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை அன்போடு அளித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதே நிகழ்வு 2003 'றில் நடந்திருந்தால் இரண்டே நாட்களில் புத்தகத்தை படித்து முடித்திருப்பேன், அப்போது தாய் மொழியின் வழியே கேமரா தொழில்நுட்பத்தை கற்க எனக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது சினிமாவை ஒரு ஆரம்பக்கட்ட மாணவனாக கற்றுகொள்வதைத் தவிர வேறு வேலையும் இல்லாமல் இருந்தது . இன்று ஒரு முழுநீள திரைப்படம் எடுக்க முயன்று வரும் இருத்தல் சார்ந்த அலைகழிப்புகளுக்கு மத்தியில் இருக்கும் என் நிலை வேறு. அதனால் தான் இந்த தாமதம்.

ராஜ்குமாரை போல் தொழில் நுட்ப்ப அறிவும், செய்முறை அனுபவமும் ஒரு சேர பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய புத்தகத்தை கொண்டு வர இயலும். நடைமுறைக்கு தேவையான விடயங்கள் என்னவென்று அவர் அனுபவத்தில் கற்ற பாடங்களை மிகவும் அக்கறையோடு எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனர்களின் பிரத்யேக தன்மையில் இல்லாமல், சினிமா மீது ஆர்வம் கொண்டிருக்கும் எல்லோருக்குமான புத்தகமாக இருப்பதன் காரணம் இது தான்.

இந்த புத்தகம் சினிமா என்ற ஊடகத்தின் துவக்கத்தில் இருந்து, இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் சினிமா வரை, அதன் தொழில்நுட்பதை மையமாக கொண்டிருக்கிறது. வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் பரிமாணத்தை, முக்கியமாக ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படை கூறுகளை எளிய வரைபடங்களின் மூலமும் எளிய சொல்லாடலின் மூலமும் விளக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களில் தமிழ் படுத்துதல் என்பது கடினமானது, அந்த காரியத்தை எந்த குழப்பமும் தராமல் கடந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திரைப்பட கல்லூரிக்கு சென்று சினிமா கற்க வாய்ப்பில்லாதிருக்கும் பல தமிழ் மாணவர்களுக்கு, தங்களது தாய் மொழியில் இப்படி ஒரு எளிமையான புத்தகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தரக் கூடியது.. தொழில்நுட்பப வார்த்தை ப்ரோயோகங்களை கண்டு அவர்கள் இனி அஞ்சத் தேவையிலை. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எடுக்கும் 'notes' போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிப்பட்டறைகள் என்று பன்முகத் தன்மை கொண்ட ஒருவராய் இருக்கிறார். இப்படிப்பட்டவர்களை நம் சூழலில் காண்பது அரிது. இவர்களை போன்றவர்கள் தான் சினிமாவை பற்றிய வெறும் கனவுகளை மட்டும் அளிக்காது, நமக்கு அதன் நடைமுறைத் தன்மையை, அது இயங்கக்கூடிய யதார்த்தத்தை தெளிவுடன் அடையாளம் காட்ட முடியும். சினிமாவின் அடிப்படைகளை அறியாது ஒரு விபத்தை போன்று ஒரு நல்ல படத்தை யாரும் எடுத்துவிடலாம் ஆனால் அந்த வெற்றியை தொடர்வது என்பது இயலாது , சாயம் வெளுத்துவிடும். என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக கூறுவார், "தமிழில் தற்போது இரண்டு வகையான இயக்குனர்கள் தான் உள்ளார்கள், ஒரு வகையினர் சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் , இன்னொரு வகையினர் சினிமா எடுக்க தெரிந்தது போல் நடிப்பவர்கள்". இந்த நிலை ஒருவகையில் உண்மை என்றாலும் இது தொடராமல் இருக்க வேண்டும். ராஜ்குமாரை போன்றவர்கள் மேலும் இது போன்ற ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இந்த புத்தகத்திற்கு பின்பான உழைப்பு என் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 'டிஜிட்டல் சினிமா' குறித்து அவரது நடைமுறை அனுபவங்களை இதே எளிமையோடு விரிவாக புத்தகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்குமாரிடம் முன்வைக்க விரும்புகிறேன், இன்றைய சூழலில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். -மாமல்லன் கார்த்தி-

ஆசிரியர்: சி.ஜெ. ராஜ்குமார்
பதிப்பாளர்: தி. திருநாவுக்கரசு
வெளியீடு: கீற்று பதிப்பகம்
விலை: 150 /-

Wednesday, September 22, 2010

மாமல்லன் கார்த்தி கவிதைகள்


அவளது தொலைப்பேசி அழைப்பின் போது
ஜன்னலைத் திறந்தேன்
மழை பெய்து கொண்டிருந்தது

*

புகை சூழ்ந்திருக்கும்
இந்த இரவில்
தனிமை
ஒற்றைத் திரியில் எரிகிறது

*

எப்போதும்
என் வீட்டு ஜன்னலின் வழியே
உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீயோ
இன்னொரு பிரதேசத்தில்
இருப்பதாய் கனவு காண்கிறாய்

*

பசுமை செழித்த
நம் சம்பாஷனைகளுக்கு அப்பால்
கனவுகளின்
ஓங்கி நிற்கும் மரங்கள்
அதன் தூரத்து கிளைகளின் இடையே தெரியும்
நிலவின் ஒளியில் துயில்வோம்

*

நரகம்
கேள்விகளோடும்
சொர்க்கம்
பதில்களோடும்
துயில்கின்றன
இடையில்
நாம்
இருக்கிறோம்
பெரும் ரணம் கொண்ட மனிதர்களாய்

*

அவன் கண்களில் விரியும் வானம்
நெஞ்சினுள் பாயும் நதி
குருதியுள் பரவும் மண்
நாவினுள் வீசும் காற்று
ஆன்மாவினுள் தகிக்கும் தணல்
இன்று அவன் ஆனான்
ஒரு மனிதப் பிறவியாக

*

என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன

*

அதிக பட்ச ஒளி
என்பது
பளீர் என்ற இருள்

*


தீயின் ஒளியில் நிழலின் நடனம் -
வளைந்து , நெளிந்து ,குறைந்து ,நீண்டு ,படுத்து ,மிதந்து ,சுருண்டு -
தீயுள் உறையும் என் நிழல்

*

என் காலி அறையை
ஒரு குழந்தை நிரப்பிக் கொண்டிருகிறது
மிதக்கிறேன் மோன வெளியில்
வாழ்வை மீட்க்கும் பொருட்டு

*

கவிதை எழுதுவது
சினிமா எடுப்பது
இவர்களுக்கு வெட்டி வேலை
சோறு போடும் தொழில்
தெய்வம்
நான் கேட்கிறேன்
தெய்வமே! உனக்கு வேறு வேலை இல்லையா ?

*


மரங்கள் நிழலை தருவதில்லை
மாறாக
அவை வெயிலை வேண்டி நிற்கின்றன
நாம் குளிர் காய்கிறோம்

*

பாதி நிலா ராத்திரி
பாதிச் சொருகி விழும் விழிகள்
பாதி முடிந்த மதுக்கோப்பை
என்னைச் சுற்றி எங்கும் நிரம்பி வழிகிறது மௌனம்

*

தீராத ரணங்களையும் சற்றே ஆற்றும் ஒரு முத்தம்
கொடுக்க அவளுக்கும்
வாங்கிக் கொள்ள எனக்கும்
சம்மதம் தான்
இடையில்
கண்மூடித்தனங்கள்

*

எல்லோரும் ஓடும் அந்த நகரத்தில்
அவனும் ஓடினான் பிழைப்புக்காக
சுட்டுக் கொன்றார்கள்
கொன்ற பின்னும் சுட்டார்கள்
ஐந்து முறை!
ஏதும் இல்லாத
அவனை

*

நீயுமில்லை
நானுமில்லை
ஏதுமில்லாத வெற்று வெளியொன்றில்
கட்டிக்கிடக்க மனம் ஆவல் கொள்ளும்
சக்தி வெளிப்படும்
உயிர் கலக்கும்
அந்த நொடியில்
பிரபஞ்சத்தில் ஒரு பூ மலரும்

*

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது போல்
நடு நிசி ஊளைக் காற்றின் படபடப்பில்
எங்கோ சப்தமிடுகின்றன
ஜன்னல் கதவுகள்
சாத்திவிட யாருமில்லை வெகு நேரமாய்
மரணத்தின் பெருத்த அதிர்வுகள் பின் தொடர
முடிவற்ற இருண்ட பள்ளத்தில்
விழுந்து கொண்டிருக்கிறேன்

*

ஓசை படாமல்
சாரலாய் வந்தவன்
ஏதேதோ செய்துவிட்டிருந்தான்
உலர்ந்த பின் பார்த்தேன்
நிறைவு தரும் படி இருந்தது
உருக்குலைந்த என் கவிதைகள்
ஓவியங்களாய் மாறி இருப்பது


*

அவள் பொம்மைகளை
நேசிக்கத் துவங்கிய நாள்
எதுவென்று அறிந்திருக்கவில்லை

நினைவில் தங்காத ஏதோ ஒரு
நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்

முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்

பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது

மூப்படையாத,
எதிர்த்துப் பேசாத பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்

மயங்கிக் கிடந்த மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்

சிரிக்கும் பொம்மைகளை
பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்

பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன் என்று சொல்லி
கருணை முத்தமொன்றை அளித்தாள்


*


என் மாடி அறையின் குளிர் சாதனப் பெட்டிக்குப் பின்
புறாக்கள் கூடு கட்டியாயிற்று
சீக்கிரம் குஞ்சுகள் பொறித்துவிடும்

இரவில் தினம் சாந்து நிறப் பூனையொன்று
அறையை சுற்றி வந்து
குட்டிகளை ஈன்றிட
தோதான இடம் பார்த்த வண்ணம் திரிகிறது

வயிறு பெருத்த பல்லி ஒன்று
சுவற்றின் மீதிருந்து
அவ்வபோது பரணை நோட்டம் விடுகிறது
தன் முட்டைகளைப் பற்றிய பாதுகாப்புடன்

என் முற்றத்து மண்தொட்டிகளில்
காற்று வழங்கிச் செல்லும் விதைகளும்
முளைவிடும் காலம் தான்

வெண் இருள் படிந்த தனிமைக்குள்
உயிர் பாய்ச்சும் இத்தருணங்களில்

மனைவி முழுகாமல் இருக்கிறாள்
அவளது தாய் வீட்டில்

*




ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை - மாமல்லன் கார்த்தி


ராவணன்(சிறப்புக் காட்சி ): அதிகாலை நாலரை மணி, கோவில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் பக்தகோடிகளை போல, மடை திரண்டு வந்திருந்தார்கள் விக்ரம் ரசிகர்கள். நடை திறந்ததும், கூச்சலும் கும்மாளமும் வானவேடிக்கைகளும் கேட்கவே வேண்டாம். படம் துவங்கியது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சத்தமே இல்லை, அவ்வளவு ஒன்றிப்போய் படம் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன், இடைவேளையில் விளக்குகள் போட்டதும் எல்லோரும் துயிலேளுந்தார்கள், பின் பாதியில் எங்களை தட்டி தட்டி எழுப்பினார்கள் மணிரத்னமும் ரஹ்மானும்..ஒரு வழியாக எங்களை பார்க்க வைத்துவிட்டார்கள்.

புராண இதிகாசங்களில் இருந்தும் இன்னபிற சர்வதேச இத்யாதிகளில் இருந்தும், கதைச்சரடைப் பின்னி.. நாட்டில் தற்போது நடக்கக்கூடிய முக்கிய பிரச்சனை ஒன்றை, பிரச்சனையே இல்லாமல் சொல்லிவிட வேண்டும் என்று, பறவையின் பார்வையில் (birds view) அந்த துக்கம் நிறைந்த காடுகளை கடந்து (escape) செல்கிறார் மணி. பழைய மாவையே வேறுவிதமாக அரைத்து மசாலா தடவ முயற்சித்திருக்கிறார், ஆனால் மாவு புளிப்பு தட்டி விட்டது. படத்தில் சித்தரிக்கப்பட்ட உலகத்தில் ஒரு நம்பகத்தன்மை இல்லாதது.. உண்மையில் இது ஹிந்தி மொழிக்காக செய்யப்பட்டதால் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.. சுஹாசினியின் வசனங்கள் அவ்வப்போது பெண்ணிய நிலைப்பாடுகளை பற்றி கதைக்கிறது.. இருந்தும் என்ன பிரயோஜனம்?.. ராகினி (ஐஸ்..) தன் பத்தினித்தனத்தை நிரூபிக்க வேண்டியதாக உள்ளதே..?(அதிலும் ஒரு சிண்டு முடிக்கிறார் மணி.. அதாவது வீராவை பிடிபதற்காக அவளது கணவன் போடும் நாடகமாம் அது.. பேத்தல்!). இன்னொரு கொடுமை வேறு உள்ளது, படத்தில் கடைசி வரை வீரா (விக்ரம்) ராகினியை தொடுவதே இல்லையாம்.. ஆனால் படத்தில் வரும் மற்ற குண்டர்கள் சகட்டுமேனிக்கு அவளை பிடித்திழுகிறார்கள், வீரா மட்டும் அவளை தொடாமலேயே தொட்டுவிட்டு பாதாளலோகத்தை சென்றடைகிறான். கவித்துவம்!!

படம் எனக்கு பல படங்களின்(apocalypse now, rashomon, north by north west, crouching tiger hidden dragon இன்னும் தோண்டினால் நிறைய கிடைக்கும் போல), பல கணங்களை நினைவு படுத்தியது, முக்கியமாக 'காதல் கொண்டேன்' . அந்த கிளைமாக்சை (climax) செல்வராகவன் 'உணர்வுரீதியாக' மிக சிறப்பாக செய்திருந்தார் என்று தோன்றுகிறது.

படத்தின் அடி நாதம் என்ன? ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கும், மேல் தட்டில் வாழும் ஒருத்திக்கும் (இந்த படத்தில் பழங்குடியினனுக்கும்-உலக மயமாக்கத்தில் இருப்பவளுக்கும்) ஏற்படும் நூல் இழையிலான அன்பும், காதலும், பரிதாபமும்..அவர்களின் உறவு தான் சூட்ச்சமம்... இந்த காரியத்தை ஒரு வகையில் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில் செய்திருக்கிறார்.. வினோத்(தனுஷ்) ஒடுக்கப்பட்ட வலியினால் மனசிக்களுக்குள் இருப்பவன்.. அவனது கதாபாத்திர வார்ப்பு நம்பகத் தன்மையுடன் இருந்தது.. வினோதிற்கும் திவ்யாவுக்கும் உள்ள உறவின் அலைகழிப்புகளை, போராட்டங்களை மிக வலிமையாக சொல்லி இருந்தார்.. மணிரத்தினம் அவர்களோ, தன் புரட்சி செய்யும் மகோன்னதமான கதாபாத்திரத்தை ஒரு பைத்தியத்தை போல் உளற வைத்து கேவலப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்..அழகான காட்சிகளையும், நடனங்களையும் பாடல்களையும் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் தான் ஓட்ட முடியும்..? 360 degree'யில் தேவையில்லாமல் காமெராவை வைத்துக்கொண்டு circus விளையாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார் மணி..முக்கியமான உணர்வெழுச்சி மிக்க சில காட்சிகளை, நம்மை சேர விடாமல் தடை செய்துவிட்டார்.. சந்தோஷ் சிவனை வீணடித்துவிட்டார். ' நீர்' என்பதை ஒரு குறியீடாக 'Terorist' படத்தில் சந்தோஷ் சிவன் பயன்படுத்தியிருந்தார்.. அது தன் மூல கதாபாத்திரத்தின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றத்தை பிரதிபலிப்பதற்கு மிக சரியாய் பொருந்தியது.. ஆனால் ராவணனில் அது ஒரு விளம்பர படத்தில் வருவது போன்று செயற்கையாக மாறிவிட்டது. அது ஒரு வித்தை என்பதைத் தவிர ஒன்றும் இல்லை.. ரஷிய திரைமேதையான் தார்கொவிஸ்கி(Tarkovsky) தனது படங்களில் 'நீரை' நம் பிரபஞ்சத்தின் குறியீட்டுத் தன்மையுடன் உள்ளார்ந்த கவித்துவத்துடன் மாற்றி இருப்பார்.. அங்கிருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட சந்தோஷ் சிவன் Terorist படத்தில் புரிதலோடு செய்திருந்தார்.. இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது நீர்கோர்த்த கூந்தலை அவள் முகத்தின் முன் தலைவிரி கோலமாக கொண்டுவரும் காட்சி அப்படியே தார்கொவிஸ்கியின் Mirror படத்தில் இருந்து சுட்டது. ஒரு கலைப் படைப்பில் இருந்து உருவி எப்படி ஜீவனற்ற சரக்காக மாற்றுகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் .

மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate. Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. ஊழல் கிடையாது(No corruption).

ராவணன் படத்தின் பின் இருக்கும் நடிகர்களின், தொழில்நுடக் கலைஞர்களின் சிரத்தையை பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காகத்தான் இத்தனை இம்சைகளை அனுபவித்தார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது, ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நான், அவரின் பங்களிப்பை சகித்துக் கொண்டேன்.. பிரபுவையும் கார்த்திக்கையும் காமெடியன்களாக ஆக்கிவிட்டார் மணி. என்ன சொல்வது, படம் பத்து நாள் நன்றாக ஓடினால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போல!!

இணையத்தளத்தில் தற்போது வந்து கொண்டிருக்கும் இராவணன் விமர்சனங்களை படித்து வருகிறேன்.. முடியல!! சும்மா எடுத்ததற்கெலாம் 'making is superb' என்கிறார்கள்..

நான் கேட்கிறேன்: அய்யா! நம் மணிரத்தினம் அவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர், அவரது செய்நேர்த்தி நாம் அறிந்ததே, அவர் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் இந்தியாவில் சிறந்தவர்கள், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ரஹ்மான்.. என்று நீள்கிறது... இவர்கள் கூட்டணியில் இது கூடவா வராது?..இதைத் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சீதாயணம் என்று காமெடி பண்ணுகிறார்கள்.. சரி..இதெல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்றால்.. அரசியல்!! என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள், வீரப்பன், நக்சலைட் இயக்கம், இலங்கை பிரச்சனை, என்று சொல்லி நம்மை துன்புறுத்துகிறார்கள்.. சட்டியில் ஒன்றும் அப்படியில்லை..ஏன் வெறுங்கையில் முழம் போடுகிறார்கள்?.. மணிரத்னம் படமெடுதிருக்கும் காடுகளில் காணப்படும் குண்டுகளும் குழிகளும் போல, அவரது திரைக்கதை பல சரிவுகளோடு உள்ளது.. இதை வைத்துக்கொண்டு என்னென்னமோ அரற்றுகிறார்கள்..என்னை பொறுத்த வரையில் இராவணன் ஒரு ஜீவனற்ற சவம்.. அந்த சவத்தின் அலங்காரங்களை கொஞ்சம் ரசிக்கலாம்.. மணிரத்தினம் படங்களில் முன்பு இருந்த 'ஓட்டை அரசியல்' கூட இதில் இல்லை .. உண்மையை சொன்னால் ஒன்றுமே இல்லை.. அவர் பல விஷயங்களை சொல்ல வந்திருக்கலாம், ஆனால் எதுவுமே நம்மை சேரவில்லை, வந்தடைய வில்லை.. அதன் இல்லாத அரசியலையோ.. சோர்வூட்டும் அழகியலையோ..பற்றி பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அய்யா! படத்தின் சூத்திரம் இது தான் : "ஒரு நல்லவன் - கெட்டவன், உண்மையில் கெட்டவனுக்கு ஒரு பெரிய நியாயம் இருக்கிறது, இவர்கள் இடையில் ஒரு பெண்- சல்லாபங்கள், சஞ்சலங்கள்,மோதல்கள்..அவள் நினைப்பது போல் அவன் கெட்டவன் அல்ல என்று புரிகிறது , கடைசியில் ஊருக்காக உழைத்த அந்த கெட்டவன் பரிதாபமாக, அனாதையை போல் சாகிறான்.." இது தானய்யா formula..!! இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?.. location புதிதாக மாற்றலாம், சில சித்து விளையாட்டுக்களை செய்யலாம்..இதிகாச அல்லது அரசியல் சாயம் பூசலாம்.. நல்ல விலைக்குப் போகக்கூடிய சரக்கை உற்பத்தி பண்ணலாம் ..அவ்வளவு தான்.!!.

cinemams@gmail.com
Note,,
19/7/2010 இல் எழுதப்பட்ட இந்த விமர்சனம் சமகால தமிழ் சினிமாவை பற்றிய அக்கறையை கொண்டுள்ளதால் இங்கு பதிவு செய்துள்ளேன்.
-விஜய் மகேந்திரன்.