Monday, May 17, 2010

அய்யப்ப மாதவன்.- சொற்கப்பல்-தக்கை இணைந்து நடத்திய நீண்ட கதைகள் விமர்சனம் ஒரு பதிவு 4

படகுகள் மிதக்கும் நீர் பரப்பின் முன் பாபு எங்களை நிறுத்திவைத்தார். இதுதான் படகுச் சவாரி செய்யுமிடம். சிறு இயந்திரப் படகுகளுமுண்டு. கால்களால் மிதித்தோட்டும் படகுகளுமுண்டெனச் சொன்னார். என் விழிகளில் நீரில் மொய்க்கும் படகுகள் பற்பல திசைகளில் ஊரியவண்ணமிருந்தன. கணவன் மனைவி குழந்தை மற்றும் மாமியாவென ஒரே படகில் உட்கார்ந்திருந்தனர். மனைவி ஒரு புறம் மாமியா எதிர்ப்புறம் போன்ற காட்சிகளைக் கண்டதும் மனதுக்குள் சிரிப்பு ஊற்றெடுத்தது. திரைப்படத்தில் மாமியாவோ மருமகளோ யாரையாவது ஒருத்தரை நீருக்குள் தள்ளி கொன்றுவிட்டால் எப்படியிருக்குமென நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். நண்பனின் உதடுகளில் யோசித்த சிரிப்பு கசிந்து என்முன் மறைந்தது.

பாபுவின் பையன் எதோ விளையாட்டுப்பொருளைக் காட்டி அதைவாங்கித் தருமாறு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவரும் அதற்குப் பதில் இனிக்கும் பனிக்கட்டிகளை வாங்கிக்கொடுத்து கெட்டிக்கார அப்பாவாகயிருந்தார். அப்புறம் எங்களையும் எதாவது சாப்பிடுவோமா என்று சொல்லி பஜ்ஜிக்கடைக்கு கூட்டிப்போனார். மிளகாய் வெங்காயம் உருளையென பஜ்ஜிகளை கொஞ்ச நேரம் புகுந்து விளையாடிவிட்டு ஏற்காட்டைச் சுற்றிப் பார்க்க உருளியைக் கிளப்பினோம்.

பச்சைபச்சையாய் மரங்கள் நீர்நிலையினைச் சுற்றியிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் உலகை அழகுபடுத்துகின்றன. அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாடு இந்த உலகை அவ்வளவு அழகாய் வைத்துக்கொள்வதில். நாமும்தான் இருக்கிறமே தெண்டமாய் தேமே என்று இவ்வுலகில் என்று மனதுக்குள் மலையில் ஏறிக்கொண்டிருக்கும் உருளியின் சக்கரங்கள் போல நல்ல நல்ல விசயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

சமதளத்தின் மீதான மலையின் மேலோட்டில் சிறு சிறு சாலைகளின் குறுகிய வளைவுகளில் போய்ச் சேருமிடம் மரணப்பள்ளத்தாக்கு என்று சொன்னார் பாபு. அவ்விடத்திற்குப் பெயர் லேடீஸ் சீட்டென்று சொன்னார். ஏன் அப்படி வைத்தார்கள் முன்பிருந்த ஆங்கிலேயர்கள் என யோசிக்க முடியவில்லை. எப்படியோ வைத்துவிட்டார்கள் என சிந்தித்த போது பால்நிலவன் லேடீஸ் சீட் போல மலையின் எதாவது ஒரு பகுதி அந்த வடிவிலிருக்குமோ என்று சந்தேகித்து கடகடவென்ற சிரிப்புடன் சொன்னார். நானும் கற்பனை செய்து அவருடன் கலந்து சிரித்தேன்.

மரணப்பள்ளத்தாக்கைப் பார்ப்பதற்கென்று காசு வசூலிக்கிறார்கள். பெரிதாக காட்டும் பெரிய பைனாகுழல்களை வைத்திருக்கின்றன சிறிய உயரக் கூண்டில். இரண்டு பெண்கள் நின்று கொண்டு அவற்றைச் சுழற்றி சுழற்றி ஒரு பெரிய நிறுவனத்தின் பொட்டல் ஒன்றைக் காட்டி அங்கு கனிமம் எடுப்பதாகக் கூறினார்கள். வளைவு வளைவு கோடுகளாய்த் தெரிந்தது அவ்விடம். மொத்தத்தில் விமானத்திலிருந்து பார்ப்பதுபோல் பூமி தெரிந்ததென்று சொல்லவேண்டும்.

நிறையப்பேர் குதித்து தற்கொலை செய்திருந்ததாக பாபு கூறினார். தற்கொலை செய்துகொள்ளாமலிருக்க அவ்விடத்தைச் சுற்றி இரும்புக்கூரையால் வேய்ந்திருந்தார்கள். என்னதான் இறுக்கமாய் வேய்ந்திருந்தாலும் இவ்வாழ்வை வெறுத்து சாக முடிவெடுத்தவன் பாதுகாப்பு வளையத்தை உடைத்தாவது குதித்து செத்துப்போவான். சாகாமலிருக்கத்தான் முடிவெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். நாம் ஏன் வந்திருக்கிறோமென்று தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறோம். வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே என்று வாழ்வோடு இயந்து மரணத்தை அது வரும்போது ஏற்றுக்கொள்ளலாம். இது மாதிரியான மலைக்குன்றுகளுக்கு வரும்போது இயற்கையின் மீதான தீராத காதல் மேலும் மேலும் அதிகரித்துவிடுகிறது. இவற்றின் எல்லையில்லா அழகில்தான் வாழ்வின் அர்த்தம் புதைந்திருக்கிறது. இதைப் பார்த்தே பார்த்த நினைவுகளிலேயே வாழ்வது அளப்பரியது.
இந்தப் பள்ளத்தாக்குகளில் குரங்கள் சூழ்ந்திருந்தன. அவை கர்ணம் தப்பினால் மரணம் போன்ற இடங்களில் சர்வசாதாரணமாய் அமர்ந்துகொண்டு வருவோரிடம் உணவுகளை சாகவாசமாய் வாங்கிச் சாப்பிட்டபடியிருந்தது. அதற்கு குடும்பப் பிரச்னை காதல் பிரச்னை எதுவும் இருக்காது போலிருக்கும். அதற்கு மரணப்பள்ளத்தாக்குதான் வாழுமிடமாகயிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அப்புறம் அங்கிருந்து சேதுவராயன் மலைக்குச் செல்ல முடிவெடுத்து அங்கு போய்விட்டோம். சேலத்தின் வெயில் அங்கு ஒரு துளியளவுகூட இல்லாமலிருந்தது. ஆனால் பனிக்கட்டிகள் காற்றில் கரைந்துவிட்டதுபோல் ஜில்லென்ற காற்று எங்கள் உடலுக்குள் புகுந்து எங்களை குதூகலப்படுத்தியது. அதீத உற்சாக மனநிலைக்குச் சென்றோம். வெண்சுருட்டை குளிருக்கு புகைப்பதுபோல் நானும் பாவும் மாறி மாறிப் புகைத்தோம். அப்புறம் ஒரு சுரங்கப்பாதைக்கு கூட்டிபோனார் பாபு. அதற்குள் கூனல் மனிதனைபோலத்தான் செல்ல முடிகிறது. ஒரு பூசாரி அந்த இருட்டுக் குகைக்குள் இரு சாமி சிலைகளின் முன் நின்றுகொண்டிருக்கிறார். சிலைகளின் பெயர் ஆண் பெருமாளென்றும் பெண் காவேரியென்றும் கூறினார் பூசாரி. பெருமாளுக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை. முன்பொரு காலத்தில் தலைக்காவிரி பாய்ந்து இந்தக் குகை பிறந்ததாகவும் இன்னமும் தலைக்காவிரி நீர் குகையினடியில் வருவதாகவும் என்ற தகவலையும் சொன்னார். அவர் சொன்னதுபோல் குகையின் தரைகளில் அப்படியொரு சீதளத்தை உணரமுடிந்தது. இன்னமும்கூட அதை நினைத்துவிட்டால் பாதங்கள் ஜில்லிடுகின்றன.

மனைவி ஞாயிற்றுக்கிழமையும் எழுத வேண்டுமா என்கிறாள். எழுத்தாளரென்றால் எழுதத்தான் வேண்டுமென்றேன்.ஞாயிறாயிருதாலென்ன திங்களாயிருந்தாலென்ன நாளை மற்றொருமொரு நாளே என்பது அவளுக்கு எங்கு தெரியப்போகிறது.சீக்கிரம் முடியுங்களென்றாள். மின்விசிறியின் சுழற்சியில் வெப்பக்காற்றை அனுபவிக்க முடியவில்லையென்கிறாள்.

No comments:

Post a Comment