Tuesday, May 11, 2010

லீனா மணிமேகலை தொடர்பாக நடந்த கூட்டத்தில்


லீனா மணிமேகலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் நான் பேசியதையும் மற்ற நண்பர்கள் பேசிய முழு உரை யும் லும்பினி இணைய தளம் வெளியிட்டு உள்ளது. நான் பேசியவற்றை இங்கு போட்டிருக்கிறேன்.

விஜய் மகேந்திரன்
ஒரு ஒன்றரை மணிநேரம் நமக்கு விரயமாகிவிட்டது. நிறைய சண்டை காட்சிகள் பார்த்தோம். என் நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக்கூட்டத்திற்கு போக வேண்டாம் என்றார்.

காரணம் கேட்டதற்கு ம.க.இ.க.வினர் கூட்டத்தில் பிரச்சனை செய்யவுள்ளார்கள் என்றார். அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதுபோல பலபேருக்குத் தெரியும்.

கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திற்கு திட்டமிடுவதைப் போல் அவர்களும் திட்டமிட்டார்கள். இது ஏதோ யதேச்சையாக வந்து செய்துவிட்டுப்போன விஷயமில்லை. ”உங்களுக்கு எதற்கு வீண் வம்பு. பேசாம கதையை எழுதிவிட்டு உட்காரவேண்டியதுதானே. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்” என்றார் என் நண்பர்.

யாருக்கு என்ன நடந்தால் என்ன. நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்பது தான் இன்றைக்கு பொதுபுத்தியில் இருக்கிறது. லீனாவின் கவிதைத் தொகுப்பு வந்த முதல்நாளே நான் வாங்கி விட்டேன். அதன் பின் நான் பார்க்கும் எல்லோர் வீட்டிலும் அந்த புத்தகம் இருக்கிறது. யாரும் இது குறித்து எதுவும் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக பேசவில்லை. இந்தப் புத்தகத்தை வாங்கி யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வீட்டில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொன்னார் ஒருவர். நான் கேட்டேன்.

அரசு சார்ந்த தொலைக்காட்சியில்கூட இரவு 11 மணிக்கு மேல் இதை விட ஆபாசமான நிகழ்ச்சிகள் வருகின்றன. அதோடு ஒப்பிட்டால் இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றேன். அந்த தொலைக்காட்சி நிலையத்தின் முன் யாராவது ஆர்ப்பாட்டம் செய்தார்களா? ஒரு ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய ஒரு கவிதை தொகுதியை எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பு எப்படி வருகிறது? இவர்களெல்லாம் ஒன்று கூடி விட்டால் நம் வெற்று அரசியல் எடுபடாது என்ற நினைப்பில்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தோடு நாம் நின்றுவிடக்கூடாது. தொடர்ந்து கருத்துக்களை அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

3 comments: