Sunday, May 23, 2010

தி போலீஸ் ஸ்டோரி- ஸ்ரீபதி பத்மநாபா

ஆரண்யம் இலக்கிய இதழை நடத்தி கையை சுட்டுக்கொண்டு, அதற்கு தீனி போட்டுக் கொண்டிருந்த மஹாகவி வரைகலை நிலையத்தை நடத்த முடியாதபடிக்கு ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் பணிகள் எதுவும் செய்யாமலிருந்து, முதல் குழந்தையை இழந்து நின்றுகொண்டிருந்த சோதனைக் காலம்.

எப்படியாவது ஆரண்யத்தை திரும்பவும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக யோசித்து வரைகலைப் பணிகளில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் நெடுங்கால நண்பன் இளமாறன் ஒரு திட்டத்தோடு வந்தான். கேரளாவில் அவன் செய்யப்போகும் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கவேண்டும். ஆறே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். ஒரு நல்ல பங்கு எனக்கும் கொடுப்பான்.
அப்படி என்ன தொழில்? லாட்டரித் தொழில். தெருத்தெருவாக 'நாளெ.. நாளெ.. பூட்டான் பூட்டான்' என்று லாட்டரி விற்பதல்ல; அந்த லாட்டரிச் சீட்டுகளை உற்பத்தி செய்து நடத்தும் நிறுவனம் தொடங்குவது. தமிழ்நாட்டில் தொழில் செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஒரு நல்ல தொகை கைக்கு வந்தால் மீண்டும் ஆரண்யம் துவங்கலாமே என்றொரு நப்பாசை எனக்கு. சம்மதித்தேன். புலவர்க்கழகு புரவலருடன் சேர்ந்தொழுகல் தானே?
தமிழ்நாட்டில் லாட்டரி தடைசெய்யப்பட்ட பிறகு இங்கு அந்தத் தொழில் நடத்திக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அங்கே லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். அரசாங்கத்துக்கு எப்படி தண்ணி காட்டுவது என்பதில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் பிரமிக்கவைப்பது.
ஒரு நம்பர் லாட்டரியை நீங்கள் வாங்கிப் பழகிவிட்டீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது நெம்ப கஷ்டம். அந்த அளவுக்கு போதை வஸ்து அது. லாட்டரி சீட்டில் இருக்கும் எண்ணின் கடைசி இலக்கத்தை வைத்து விளையாடும் லாட்டரி அது. அதன் பயங்கரத்தை உணர்ந்த அரசு அதை இந்தியா முழுக்க தடை செய்துவிட்டது.

நமக்கா வழி தெயாது? கடைசி இரண்டு இலக்கங்களை வைத்து பரிசு கொடுக்க ஆரம்பிக்கிறோம். அரசு அதிகாரிகளும் இது பிரச்சினையில்லாத லாட்டரி என்று அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பாவம் அந்த அளவுக்கு படிப்பறிவில்லை - இதுவும் ஒரு நம்பர் போன்றதுதான் என்று. ஒவ்வொரு கடையிலும் அரை மணிக்கொரு முறை வரும் லாட்டரி முடிவுகளுக்காக கடைகளின் அறைகளில் கூட்டம்கூட்டமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்... ஒவ்வொருவர் கையிலும் அடித்துத் திருத்தி எழுதப்பட்ட எண்கள் எழுதிய அட்டவணைகள் கொண்ட கசங்கிய நோட்டுப்புத்தகங்கள்... எளிமையானவர்களின் லலிதமான புரோபபிலிட்டி அன்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்..! சிஸ்டம் அனாலிசிஸ் அன்ட் ரிசர்ச்...!
இளமாறன் ஆரம்பிக்கப் போகும் லாட்டரி நிறுவனத்தின் மேலாளராக நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன். அலுவலகம் பாலக்காட்டில் என்றாலும் பதிவு செய்யப்பட்டது கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோட்டில். எல்லா லாட்டரி நிறுவனங்களும் அங்கேதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால் மிக பின்தங்கிய மாவட்டம் அது. அங்கு பதிவு செய்தால் அதிக தொந்தரவு இருக்காது. விற்பனை வரியை மிகக்குறைந்த கையூட்டில் விழுங்கிவிடலாம்.

விற்பனையைத் துவங்குவதற்கு முன் கேரளத்திலிருக்கும் எல்லா ஏஜென்டுகளையும் சென்று பார்த்து அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. நானும் இளமாறனும் காரில் காசர்கோடு துவங்கி கண்ணூர் மலப்புறம் கோழிக்கோடு பாலக்காடு திருச்சூர் எரணாகுளம் ஆலப்புழை பத்தனம்திட்டா திருவனந்தபுரம் என ஒரு நீண்டதூரப் பயணம் சென்றோம் ...

அப்போதுதான் தெரிந்தது... எப்படிப்பட்ட ஒரு தாதா சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கிறோம் என்பது. பெரும்பாலும் தமிழர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் வியாபாரம். படிப்பறிவைவிட பட்டறிவின் ஆளுமை அவசியம். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் என்பதால் உயிருக்கு விலையில்லை. போட்டியாளன் எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளிவிடுவான்.

ஆரண்யத்துக்காக கேரளத்தின் எல்லா மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து பாரம்பர்ய அடிப்படையிலான ஒரு கட்டுரைத் தொடர் எழுதவேண்டும் என்றொரு ஆதர்சம் எனக்கு இருந்தது. இப்போதைய பயணத்தில் எண்களுடனும் தொகைகளுடனும் அலைபேசி அழைப்புகளுடனும் சேர்ந்து கலந்து அது ஒரு ஏக்கக் கனவாகவே கரைந்துவிட்டிருந்தது.

லாட்டரி துவங்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. நான் திருச்சூரில் இருந்தேன். ஒரு வாரத்துக்கான 21 லட்சம் லாட்டரி சீட்டுகள் இன்று பாலக்காட்டுக்கு வந்திருக்கும். நாளையிலிருந்து எல்லா ஊர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் முதல் குலுக்கல். பாலக்காடு அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து எல்லா லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றி அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டு முதலாளி இளமாறனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். நான் உடனே செல்ல வேண்டும். டிரைவரை அழுத்திப் பிடிக்கச் சொல்லி மாலை நேரத்தில் பாலக்காடு வந்து சேர்ந்தோம்.

அலுவலக ஊழியர்கள் தெருவில் நின்றுகொண்டிருந்தார்கள். இளமாறனின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. உடனடியாக காவல்துறை உயரதிகாரியின் அலுவலகத்துக்குப் போகச் சொன்னார்கள். அங்கே கீழ்தளத்தில் ஒரு மூலையில் இளமாறன் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அருகில் சென்றேன். ஏற்கனவே லாட்டரி நடத்திக் கொண்டிருக்கும் நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் முதலாளி செய்த வேலையாம் இது. எங்கள் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் காசர்கோட்டிலிருந்து மறுநாள்தான் வந்து சேரும். இன்றைக்கே லாட்டரி சீட்டுகள் வந்துவிட்டதைத் தெந்து கொண்ட எதிராளி போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்திவிட்டான். அனுமதியில்லாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் இளமாறன் மீது எஃப்ஐஆர் போடவில்லை. நான் மேல்தளத்தில் உயரதிகாரியின் அறைக்குச் சென்றேன். வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

காத்திருந்தேன். என் அம்மா சரசுவதி டீச்சர் என் முன்னால் வந்து நின்று, 'எவ்வளவு பதவிசா இலக்கிய இதழெல்லாம் நடத்தி மரியாதையோட வாழ்ந்திட்டிருந்த... இங்க வந்து நின்னுட்டிருக்கியே... வெக்கமா இல்ல?' என்றார். மனைவி சரிதாவும் முன் வந்து நின்று, 'கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு அமேரிக்கயிலோ அபுதாபியிலோ போயி சம்பாதிக்கான் நோக்காதெ இவிட வந்நு நில்கான் நாணமில்லே ஸ்ரீயேட்டா?' என்றாள். பெல் அடித்தவுடன் தலையைக் குனிந்தபடி உயரதிகாரியின் அறைக்குள் சென்றேன்.

மலையாள நடிகர் திலகனை போலீஸ் சீருடையில் பார்த்திருக்கிறீர்களா? அவரையே வார்த்து வைத்ததைப் போல கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த உயரதிகாரி. ஐம்பது வயதைக் கடந்தவர். 'பாண்டிகளெல்லாம் இவிடெ வந்நு லோட்டரி என்னு பேரும் பறஞ்ஞு நம்முடெ கவண்மென்டின்டெ பைசயும் ஜனங்களுடெ பைஸயும் கட்டுகொண்டு போகுந்நு. அதினு நீயெல்லாம் கூட்டு. அல்லேடோ?' என்று 'கலிதுள்ளி'னார். 'இல்ல சார். இது கவர்மென்ட் அங்கீகிருதம் உள்ளதாணு சார். நாளெ ராவிலே சர்டிபிகேட் எத்தும் சார்.' என்றேன். 'இந்நு இல்லல்லோ... அதினு எந்து செய்யும்' என்றார். 'சார் வேண்டது எந்தாந்நு வெச்சா செய்யாம் சார்' என்றேன். 'ஓ... மற்றேது... அல்லே...?' என்றார். 'ஞான் பைச மேடிக்குமெந்நு ஆராடோ பறஞ்ஞது?' என்றபடி கோபமாக எழுந்து முன்னால் வந்தார். 'என்னெ கண்டா அத் தரக் காரனாணு எந்நு தோனுந்நுண்டோ?' என்றபடி என் தாடையில் கைவைத்து நிமிர்த்தினார். 'இல்ல சார், குறே பைச செலவு செய்தாணு ஈ பிசினஸ் துடங்கியிட்டுள்ளது. சார் ஒந்நு சஹாயிக்கணம்' என்றேன். 'ம்... ரோபர்ட்டே...' என்று உள்ளே பாத்து கூப்பிட்டார். உளளே இருந்து ரோபர்ட் வந்தான். எதிர் லாட்டரி நிறுவனத்தின் ஆள். 'ஈயாள் மாசம் மூணு லட்சம் ஆணு தருந்நது. தான் எந்து தரும்?' என்று கேட்டார். 'சார் இப்பழாணு துடங்கியிட்டுள்ளது. என்டெ 'போஸி'னோடு சம்சாரிச்சு பறயாம் சார்' என்றேன். 'வில பேசல் ஒன்னும் வேண்டா. மாசம் ரண்டு லட்சம். இந்நு தன்னே வீட்டில் கொண்டு வந்து தரணம். காசு தந்நிட்டு ஆ பாண்டியெ விளிச்சிட்டு போய்க்கோ. அல்லெங்கில் இந்நு லோக் அப்பில் கிடக்கட்டெ' என்றார். 'ஞான் இப்பம் வராம் சார்' என்றபடி கீழே ஓடினேன்.

(அடுத்த மூன்று மணி நேரங்களுக்குள் இரண்டு லட்ச ரூபாயை இளமாறனின் வீட்டிலிருந்து வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டு இளமாறனையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே கேரள அரசு தனியார் லாட்டரிகளை தடை செய்து விட்டது. அறுபது லட்ச ரூபாய் நஷ்டம் இளமாறனுக்கு. செய்த வேலையும் ஆரண்யம் கனவும் எனக்கு நஷ்டம்.)

அதற்கடுத்த இரண்டாம் நாள் நான் கோவைக்கு வரவேண்டியிருந்தது. இளமாறன் பாலக்காட்டிலேயே இருந்தான். பஸ்ஸில் வந்து இளமாறனின் வீட்டுக்குச் சென்று அவனுடைய பைக்கை எடுத்து என் வீட்டுக்கு சென்றேன். வழியில் 'ஒந்நு பூசிக் களயாம்' என்று தோன்றியதால் பாரில் நிறுத்தினேன். இரவு 10 மணியாகி விட்டது. கம்பெனிக்கு யாரும் இல்லை. காழ் ழிட்டர் பிழாந்தியும் காழ் கிழோ சிக்கனையும் அகத்தில் ஆக்கிவிட்டு வெளியே வந்தேன். காந்திபார்க்கில் வளைவில் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

டிரங்க் அன்ட் டிரைவன் !

ஒரு வார்த்தை கூட கேட்காமல் சார்ஜ்ஷீட் எழுதிவிட்டார் சார்ஜன்ட். 1200 ரூபாய் அபராதம். 'சார் எதாவது செய்யறதுன்னா செஞ்சுடலாம் சார்...' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். 'ஓ... லஞ்சம்... இல்லியா?' என்றார். 'என்னப் பாத்தா காசு வாங்குறவன்மாதி தெரியுதா?' என்றார். 'ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல இல்லை. உண்மையிலேயே உண்மையான போலீஸ்காரர்தான் அவர். 'காலையில ஸ்டேஷனுக்கு வந்து ஃபைனைக் கட்டிட்டு வண்டி எடுத்திட்டு போங்க' என்றார். 'இப்பவே கட்டிடறேனே' என்றேன். 'முடியாது. குடிச்சிட்டு வண்டி ஓட்ட விடமாட்டேன். வேணும்னா ஒண்ணு செய்ங்க... உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது வரச் சொல்லுங்க... அவங்க ஓட்டிட்டுப் போலாம்... ஐ மீன் குடிக்காதவங்க...' நானும் யோசித்து யோசித்து பார்த்து அந்த கசப்பான உண்மையை எதிர்கொண்டேன். குடிக்காத நண்பர்களே எனக்குக் கிடையாது.... சரிதாவை வேண்டுமானால் வரச் சொல்லலாம். ஆனால் அவளுக்கு வண்டி ஓட்டத் தெயாது. இதற்காகவாவது அவளுக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் போய் பைக்கை மீட்டு விட்டு மதியம் அதே பைக்கில் ஒரு சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் வெள்ளை பைக் வெள்ளை சீருடையில் அதே சார்ஜன்ட். புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன். 'அப்புறம்... இன்னிக்கு எப்படி? குடிச்சிட்டு அந்தப் பக்கம் வருவீங்களா?' என்றார் இளக்காரமாக. 'நிச்சயமா வருவேன் சார். குடிச்சிட்டுத்தான் வருவேன். ஆனா உங்களால என்னைப் பிடிக்க முடியாது.' என்றேன் நானும் இளக்காரமாக. சிக்னல் விழுந்தது.

அன்று இரவு காந்திபார்க்கில் அவர் நின்றுகொண்டிருந்தார். நானும் குடித்துவிட்டுத்தான் போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்து தோளைத் தட்டிக்கொடுத்தார். இப்போது அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

அன்று 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்' மெட்டில் 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்ற வரிகளைப் பாடியபடி நடந்து சென்றேன். .

No comments:

Post a Comment