Thursday, September 15, 2011

யவன ராணி

என் பிரிய அடிமைகள்

கனிவானவர்கள்

இரக்கமுடையவர்கள்

என்னிடம் அவர்கள்

பிறந்த மேனியாய்

வருகிறார்கள்



நான் அவர்களுக்கு

ஆடை,லாஹிரி தந்து

அரவணைத்து கொள்கிறேன்



என் பிரிய அடிமைகள்

கனிவானவர்கள்

இரக்கமுடையவர்கள்

வஞ்சனையற்றவர்கள்



அவர்களின் நித்திரைப்பொழுதில்

கோர்த்த விரல்களிடையே

நீண்ட கூர்வாளொன்றை

திணித்து வைக்கிறேன்.



என் எதிரிகளிடத்தே

அதை எவ்வாறு

சுழற்றுவது எனக்

கற்றுக்கொடுக்கிறேன்.



உங்களை எனக்கே

மட்டுமாய்

பத்திரப்படுத்துகிறேன்.



நீங்கள் எனக்காய்

பயன்படுத்தும்

அத்தருணங்களில்

கட்டியணைத்து

சிறிய முத்தமொன்றை

பரிசளிக்கிறேன்



உங்களுக்கு நெருங்கிய

நண்பர்களை

பகைவர்களாக்கச் செய்கிறேன்.



நாடு முழுவதும்

என் புராணம்

பேசித்திரிய வைக்கிறேன்.



வென்று வா என்றால்

கொன்றுவரும்

உங்களின் நேர்மை

எனக்கு பிடித்தமாய் இருக்கிறது.



பரிசாய் நீங்கள்

என் நிர்வாண மேனியாய்

புசிக்கக் கேட்கிறீர்கள்



கொடுத்த முத்தங்களும்

ஆகச்சிறந்த விருந்துகளும்

மட்டுமே உங்களுக்கானது

என்கிறேன்.



எனது உடல்

அதிகாரம் உள்ளவர்களால்

மட்டுமே சுகிக்கக்கூடியது.

ஒருபோதும் அடிமைகளுக்கல்ல

என்பதை உணர்த்துகிறேன்.



நீங்கள் என்னை

வன்புணர்ச்சி

செய்ய முற்படுகிறீர்கள்



உங்கள் கையில் கொடுத்த

வாளைப் பறித்து

தலையை கொய்து எறிகிறேன்.



ஆயிரத்தி இரண்டாய்

உங்கள் தலை

எனது எண்ணிக்கையில்

கூடுகிறது,



என் பிரிய அடிமைகளே

நீங்கள் புத்திசாலிகள்

என்னிடம் மட்டுமே

எப்போதும்

முட்டாள்களாகவே இருக்க

விருப்பமாய் இருக்குறீர்கள்