Tuesday, October 11, 2011

குறுங்கவிதைகள்

மைனா ,குயில்
சத்தமெல்லாம் கேட்கும்
புறநகர் வீட்டில்
மனிதர்கள் மட்டும்
அமைதியாகிவிடுகிறார்கள்.

திரும்பி திரும்பி
பார்க்கிறோம்
திரும்ப வராத
அடுக்குமாடி கட்ட விற்ற
பூர்விக வீட்டை.

முழுக்க இந்நாள்
மனைவியாய்
மாறிப் போயிருந்த
முன்னாள் கல்லூரி தோழியை
நேற்று சந்தித்தேன்.

வண்டியை நிறுத்தும்
போது எச்சரித்தார்..
கூடாதென
எடுக்கும் போது பார்த்தேன்
வன்முறையின் சிறுகீறலை

ஐம்பது ரூபாய் கூலி
வாங்கும் பையன் நிற்பது
தலைவரின் நூறு ரூபாய்
படத்திற்காக .

கண்ணாடி சில்லுகள்
சாலையெங்கும்
சிதறிக்கிடக்கின்றன .
மனைவி இவ்வழியேதானே
அலுவலகம் செல்லுகிறாள்.

ஆகப்பெரிய சாதனையாளர்களையும்
அவன் இவன் என்றுதான்
பேசுகிறோம் மறைவாக.

நீ வேறு நான் வேறு இல்லை
என்றவளே
திருமண அழைப்பிதழில்
என் பெயர் இல்லை
என்றுவிட்டாயே..

அம்மா சொன்ன பல கதைகள்
நினைவிருந்தும்
என் மகளுக்கு சொல்லத்தான்
என்னிடம் கதைகள் இல்லை.

உன் ஓராயிரம்
குறைகளையும்
ஒரு முத்தம்
நிவர்த்தி செய்துவிடுகிறது.

உன்னிடம் ரகசியங்கள்
நிற்பதில்லை
என்னை மட்டும்
மிக அந்தரங்கமாய்
இருக்க நிர்பந்திக்கிறாய்.

அற்ப விஷயங்களுக்காய்
சண்டையிடுபவர்கள்
நினைப்பதில்லை
இப்போதெல்லாம்
அரிதாகவே கிடைக்கிறது
நட்பு.