Thursday, February 24, 2011

என் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கு

என் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கு ஒன்றை சாவடி இலக்கிய அமைப்பினர் மதுரையில் 6/3/2011,அன்று நடத்துகின்றனர்.மூத்த படைப்பாளிகளும்,இளைய படைப்பாளிகளும் இதில் பங்கேற்கின்றனர்..என் சிறுகதைகள் படித்த மதுரை நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.விரிவான தகவல்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி “சாவடி” என்கிற
புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய தமிழ்ச்சூழலில்
முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு,
அவர்களின் படைப்புலகம் பற்றிய ...கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான
கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம்.

இதற்கு முன் கே.என்.செந்திலுக்கு முதல் கூட்டம் நடத்தப்பட்டது.இவ்வமைப்பினரால்.அதன் பதிவு மேற்கண்ட சுட்டியில் இணைத்துள்ளேன்.இரண்டாவது கூட்டம் எனக்கு நடக்கிறது.முதலில் தயங்கினேன்.பின் யுவா கிருஷ்ணா சொல்லுவது போல இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும் என்று தான் ஒத்துக்கொண்டேன்.

Sunday, February 20, 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது! - பாரதி மணி




ஜனவரி 9-ம் தேதி ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சாரல் விருது அளிக்கப்பட்டது. என்னையும் பேச அழைத்திருந்தார்கள். மனதுக்கு நிறைவான, நெகிழ்வான விழா. சினிமாத்தனங்கள் இல்லாமல் இருந்தது.

சாரல் விருது விழா! - 09.01.2011
அதில் நான் பேசியதின் சுருக்கம்:

எல்லோருக்கும் வணக்கம். இன்று நாம் வணங்கி கொண்டாடவேண்டிய ஒரு மூத்த எழுத்தாளருக்கு மூன்றாவது ஆண்டுக்கான சாரல் விருதை வழங்கி, நமக்கு நாமே பெருமை தேடிக்கொள்ளவும், எம்பெருமாள் என்ற கலம்காரி ஓவியரைக்குறித்த நூலை வெளியிட்டு, ஓர் ஆவணப்படத்தை காணவும் கூடியிருக்கிறோம்.

இந்த விழாவில் கலந்துகொள்ள என்னை ஜே.டி அழைத்தபோது, எனக்கு என்ன தகுதியிருக்கிறதென்று நினைத்துப்பார்த்தேன். ஒருவேளை நான் வயதில் மூத்தவன் என்பதால் இருக்குமோவென நினைத்தேன். ஆனால் இன்றைய விழாநாயகர் எனக்கும் முந்தியவர். பிறகு யோசித்ததில், ஜேடி ஜெர்ரி இயக்கித்தயாரித்த இரண்டு விளம்பரப்படங்களில் நான் தலையைக் காட்டியிருப்பதால் தானோ என்றும் நினைத்தேன். ஆம், தலையைத்தான் காட்டியிருக்கேன்! மூணே மூணு செகண்ட் மட்டுமே நான் அதில் தெரிவேன். ஒண்ணு, ரெண்டு மூணு எண்ணுவதற்குள் நான் மறைந்துவிடுவேன்! ஜேடி மனசுக்குள்ளெ நினைச்சுக்குவாரு.......ஆமா, 30 செகண்ட் விளம்பரப்படத்தில், ஏழு சீன்லியா வரமுடியும்?

இந்த இரட்டையர்களை – அபூர்வ சகோதரர்களை -- பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் மேலிடும். பொதுவாக சினிமா உலகில் இருப்பவர்களுக்கு சுத்தமாக இலக்கிய ஞானம் தேவையில்லை....ஏன் சினிமா ஞானமே கூட தேவையில்லை! ஸ்டார்ட் காமெரா......கட் சொல்லத்தெரிந்தாலே போதும்! அந்தச்சூழலில் இருக்கும் இவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்ல.... கடந்த 3 வருடங்களாக கைப்பணத்தை செலவழித்து, ‘ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையை துவக்கி, ஆண்டு தோறும் விழா எடுத்து, தமிழில் சிறந்த எழுத்தாளர்களுக்கு சாரல் விருது கொடுத்து பாராட்டி கெளரவிக்கிறார்கள்.



இப்படி இருவர் கருத்தொருமித்து சேர்ந்து வேலை செய்யும்போது, ஒருவர் சாதுவாக இருப்பார்...மற்றொருவர் மிரட்டி வேலை வாங்குவார். இங்கே ஜே.டி. ஒரு மிருதுபாஷிணி என்றால் ஜெரி அதற்கும் ஒருபடி மேலே சாதுவாக இருக்கிறார். இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு திறமையான டீம் தான் இவர்களை சாதுவாக வைத்திருக்கிறது என்று நான் சொல்லுவேன். நான் அந்த விளம்பரப்பட ஷூட்டிங் போயிருந்தபோதும். அதே நிதானம். அவர்கள் ‘ஷாட் ஓகே’ சொல்வது கூட என் காதுக்கு கேட்காது! Both of them have their heads on their shoulders! இது மிகப்பெரிய வரப்பிரசாதம்! God bless both of them!

இந்த விருது அரை சாகித்ய அகாடெமி விருதுக்கு ஒப்பானது!. ஆமாம், அரசு அமைப்பான சாகித்ய அகாடெமியே ஒரு லட்சம் தான் –= அதுவும் இந்த வருடத்திலிருந்து தான் -- கொடுக்கிறதென்றால், இரு தனிநபர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ஒரு வழியில் சாகித்ய அகாடெமி விருதை விட இது அதிக மதிப்புடையது என்று கூறுவேன். காரணம் அங்கே விருதாக அவர்கள் கொடுப்பது ’சாகித்ய’ என்று ஹிந்தியில் எழுதிய ஒரு பித்தளைப்பட்டயம் தான். நமது சாரல் விருது கலைநயம் கொண்டது.

சாகித்ய அகாடெமி பித்தளைப்பட்டயத்தைக்குறித்து ஒரு சின்ன தகவல். எண்பதுகளில் க.நா.சு. இறந்தபிறகு அவரது பரிசுப்பொருட்கள், மானுஸ்க்ரிப்ட் முதலியவை சென்னையிலிருந்து தில்லிக்கு வந்தன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொண்டுவந்த அட்டைப்பெட்டிகள் என் காரில் இருந்தன. அன்று இரவில் கார் ஸ்டீரியோவை திருட வந்த ஒரு திருடன், போனஸாக காருக்குள் இருந்த பெட்டிகளை கிழித்துப்பார்த்ததில் பரிசாகக்கிடைத்த மூன்று வெள்ளித்தட்டுகள் – அதில் ஒன்று மறைந்த நம் எம்.ஜி.ஆர். கொடுத்தது – அதுவே சுமார் ஒன்றரைக்கிலோ எடையிருக்கும் தட்டு – இன்னும் கையை விட்டு துழாவியதில் க.நா.சு.வின் சாகித்ய அகாடெமி பித்தளைப்பட்டயம் – பார்த்தவுடன், இந்த பித்தளை யாருக்கு வேண்டும் என்று அதை காருக்கடியில் வீசிவிட்டு, கார் ஸ்டீரியோ, மூன்று வெள்ளித்தட்டுகள், போனஸாக காரில் வைத்திருந்த, இரண்டாயிரத்துக்கும் மேல் விலையுள்ள ஜெர்மன் பைப் லைட்டருடன் சுருட்டிக்கொண்டு போனார்......அந்த மரியாதைக்குரிய திருடர்! அடுத்தநாள் காலை அவருக்கும் வேண்டாத அகாடெமி பித்தளைப்பட்டயம் செவனேண்ணு கீழே கிடந்தது. க.நா.சு. பெற்ற விருதுகளில் அது ஒன்று தான் உருப்படியாக வீட்டில் இருக்கிறது!

ஆனால் நமது சாரல் விருது வித்யாசங்கர் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட கலைநயம் மிக்க பொக்கிஷம்!. கிடைத்தவர்கள் ஆயுசுக்கும் போற்றிப் பாதுகாக்கலாம்!

இந்தவருடம் சாகித்ய அகாடெமி விருதுபெறவிருக்கும் என் நண்பன் நாஞ்சில்நாடனுக்கு அந்த விருது எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தமும், இன்றைய விழா நாயகர், என் நண்பர், மூத்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரனுக்கும் உண்டு. அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பேயில்லை! இந்தவருடம்,...... சபாஷ்!.....சரியான தேர்வு!

நடுவர்கள் குழுவில் இருக்கும் திரு. மா. அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியம் ஆகியோருக்கு இந்தவருட சாரல் விருது தேர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

திரு. அசோகமித்திரனுடன் கடந்த நாற்பதாண்டு கால தொடர்பு உண்டு. எழுபத்திரெண்டில் நடந்த என் திருமணத்திற்கு, க.நா.சுவின் மாப்பிள்ளை என்ற முறையில் தனியாக கல்யாண வாழ்த்து தெரிவித்து எழுதியது தான் இவர் எனக்கு எழுதிய முதல் கடிதம். இவர் எப்போதுமே இன்லண்ட் லெட்டரில் தான் எழுதுவார். கல்யாணத்துக்கு முன்பே நானும் என் மனைவி ஜமுனாவும் இந்திரா பார்த்தசாரதி எழுதிய மழை, போர்வை போர்த்திய உடல்கள் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தது இவருக்குத்தெரியும்! உங்களில் சிலருக்கு தெரியாத செய்தி......... . அது.......இ.பா.வின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் சென்னையில் மேடையேறியபோது, அதில் அசோகமித்திரனும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தான்! 1973-ல் எனது தில்லி நாடகக்குழுவுடன் சென்னைக்கு வந்து, நான்கு நாடகங்களை – அதில் இ.பா. எழுதிய மழையும் போர்வை போர்த்திய உடல்களும் அடக்கம் -- மயிலை ஆர்.ஆர். சபாவில் மேடையேற்றினேன்.. நாங்கள் சென்னையிலிருந்த ஏழு நாட்களும் காலை முதல் இரவு வரை தாமோதர முதலி தெருவில் குடியிருந்த அசோகமித்திரன் என்கிற ஜே. தியாகராஜன் எங்களுடனேயே இருந்து வேண்டிய உதவிகளை செய்தார். அப்போது இவரை சைக்கிள் இல்லாமல் பார்க்கவே முடியாது! இருவரும் இணைபிரியாத தோழர்கள்! இவரது சைக்கிள் ஒரு இலக்கிய வரலாறே சொல்லும்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்து நான் போட்ட நாடகங்களை இள வயது மாலன், சிவசங்கரி, சுப்ரமண்ய ராஜு, பாலகுமாரன், ஜே.டி. ஜெரி, இவர்களோடு சேர்ந்து பார்த்ததாக என் நண்பர் குடிசை ஜெயபாரதி சொல்லியிருக்கிறார்! அது உண்மையாவென்று ஜேடி ஜெரியைத்தான் கேட்கவேண்டும்!

என் மணிவிழா 1997-ல் திருக்கடையூரில் நடந்தபோதும், ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் திருக்கடையூரில் அபிராமி அம்மன்—அம்ருத கடேஸ்வரர் சன்னிதியில் கொண்டாடும் பாக்கியம் கிட்டும் என வாழ்த்தியிருந்தார். அதுவும் இன்லண்ட் லெட்டரில் தான்! 2009-ல் வெளியான என் புத்தகத்துக்கு அறிமுக உரை கேட்டிருந்தேன். அடுத்தநாளே அதையும் ரத்தினச்சுருக்கமாக ஒரு இன்லண்ட் லெட்டரிலேயே எழுதி அனுப்பியிருந்தார்!!

இவர் தில்லி வரும்போதெல்லாம் க.நா.சு.வைப்பார்க்க என் வீட்டுக்கு வருவார். க.நா.சு. இறந்தபிறகும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பது தான் எங்கள் நட்புக்கு சாட்சி! க.நா.சு.வின் மீதும், தி. ஜானகிராமன் மீதும் இவருக்கிருந்த நெருங்கிய மதிப்பும் மரியாதையும் அவர்கள் இறந்தபிறகும் தொடர்கிறது என்பது தான் ஆச்சரியம்! ஒரு சிலரைப்போல தான் வளர்ந்து ஒரு பீடத்தில் அமர்ந்தபிறகு மூத்த எழுத்தாளர்களைப்பற்றிய ஆரம்பகால கணிப்பையும் மரியாதையையும் இவர் மாற்றிக்கொள்ளவேயில்லை! அதனால் தான் இன்று தமிழ் இலக்கிய உலகில் ஒரு வசிஷ்டராகவும், பீஷ்மராகவும் வாழ்கிறார்! இவருக்கு பூஞ்சை உடம்பு.... என்றுமே அதிர்ந்து பேசாதவர்!

இவரிடம் ஆச்சரியமளிக்கும் விஷயம் இந்த வயதிலும் தேங்கிப்போகாமல், புதிதாக வரும் இந்திய மற்றும் உலக இலக்கியப்படைப்புகளில் பரிசயம் கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார். இந்த வயதில் எத்தனை பேர் பிரிட்டீஷ் கெளன்சிலுக்கும், அமெரிக்கன் லைப்ரரிக்கும் அடிக்கடி போய் வருகிறார்கள்?

அசோகமித்திரன் அந்தக்காலத்தில் கணையாழி பத்திரிகை மூலம் தமிழ் இலக்கியத்திற்கு புதுப்புது எழுத்தாளர்களையும், இளம் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி, உற்சாகப்படுத்தியது சரியாக ஆவணப்படுத்தப்படவில்லையென்றே தோன்றுகிறது. அப்போது கணையாழிக்குப் பின்னால் மும்மூர்த்திகள் – கஸ்தூரி ரங்கன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி........, அதில் இருமூர்த்திகள் ரங்கனும் இ.பா.வும் தில்லியில் வாசம். மூன்றாவது மூர்த்தியான அசோகமித்திரன் தான் சென்னையில் இருந்து கொண்டு கணையாழிக்கு வரும் சிறுகதை,கட்டுரை, கவிதைகளை எடிட் செய்து, பிரஸுக்கு நடையாக நடந்து –.....ஸாரி....இவரது இணைபிரியாத சைக்கிளில் அலைந்து – ப்ரூப் பார்த்து, காலம் தவறாது அச்சடித்து, சந்தாதார்களுக்கு அனுப்ப சைக்கிளில் பத்திரிகைக்கட்டுகளுடன் அஞ்சலகம் போய் அனுப்பிவருவார். இதை மாதம் தவறாமல் பல வருடங்கள் செய்துவந்தார். கணையாழியின் இலக்கிய வளர்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. இந்த இளைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! அவர்களுக்கு கணையாழி என்றதும், சுஜாதா மட்டும் தான் ஞாபகத்துக்கு வருகிறார். காரணம் கணையாழி கடைசிப்பக்கங்கள்! கஸ்தூரி ரங்கன் கூட இரண்டாம் பட்சம் தான்!

கணையாழியில் இருந்தபோது இவருக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் இடையே சிறுசிறு ஊடல்கள் அவ்வப்போது ஏற்பட்டதுண்டு. அனேகமாக ஈகோ மோதல்கள் தான்! சமீபத்தில் இ.பா.வின் எண்பதாவது ஆண்டுவிழாவுக்கு வந்திருந்த அசோகமித்திரன் இ.பா.வின் கையைப்பிடித்துக்கொண்டு வெகு நேரம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதை தூரத்தில் நின்று ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். காலம் தான் நண்பர்களை எப்படி கனியவைக்கிறது!

இவரது நீண்டகால இலக்கியப்பணிகளைப்பற்றி பேச இங்கே பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நான் எழுத்தாளனல்ல. அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பே ஏழு வயதில் அரிதாரம் பூசிய நாடக நடிகன் ப்ளஸ் ஒன் புக் ஒண்டர்! எனது ஒரே புத்தகமான பல நேரங்களில் பல மனிதர்களுக்குப்பிறகு இரண்டாவது புத்தகம் சத்தியமாக எழுதமாட்டேன் என்று தமிழிலக்கிய வாசகர்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் அளிக்கிறேன்! என்னையெல்லாம் ஓர் எழுத்தாளன் என்று சொல்வது எழுத்துக்கும் அதை வேள்வியாக கொண்டாடுபவர்களுக்கும் பெருமை சேர்க்காது!! நான் ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன். எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் – நூறுக்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்களுக்கு .......– அது ஒரு பெரிய லிஸ்ட்....... மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜ.ர., தி. ஜானகிராமன், நகுலன், ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா., ஆ. மாதவன், நீல. பத்மநாபனில் தொடங்கி இப்போது எழுதும் பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய் மகேந்திரன் வரை நண்பனாக இருக்கிறேன். அப்ப்பா! நாலு தலைமுறை எழுத்தாளர்கள்!! இந்த கொடுப்பினை வேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை ‘மாப்பிளே....மாப்பிளே என்று தான் வாய் நிறைய கூப்பிடுவார்கள். மாறாக க.நா.சு. என்னை ஒரு தடவை கூட மாப்பிள்ளே என்று அழைத்ததில்லை! அவருக்கு நான் என்றும் மணி தான்! அதில் எனக்கு வருத்தமும் உண்டு! நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தால், புதுமைப்பித்தன், கு.ப.ரா., அழகிரிசாமி, பிச்சமூர்த்தி இவர்களுடனும் நட்பாக பழகியிருப்பேன்! அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! போகட்டும்!

நிறைவாக விழாநாயகன் திரு. அசோகமித்திரனுக்கும், இந்த விழாவை இத்தனை சிறப்பாக நடத்தி என்னையும் பேச அழைத்த ஜேடி ஜெரி இரட்டையர்களுக்கும், பொறுமையாக கேட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி!...........வணக்கம்!!

Friday, February 18, 2011

சாவடி - மதுரை சந்திப்பு

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி “சாவடி” என்கிற
புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய தமிழ்ச்சூழலில்
முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு,
அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான
கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011
அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில் ”சாவடி”யின் முதல்
அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி” என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம்
பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல்
படைப்பாளியாக கலந்து கொண்டார்.

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும்
இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், ந.ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர்,
எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது மனைவி
இந்திராகாந்தி , செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான
எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள்
மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு
மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து
முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால்
தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப்
பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி
என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம்.
அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக
எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக
எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன்
கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல்
சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து
கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து
இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்?
நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும்
இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.
காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள்
சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின்
எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது.
தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது
போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு
தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன்
பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு
செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை
சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள்
ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன
விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை
தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு
ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும்
ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால்
அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற
வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா?
அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக
இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில்
இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப்
படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து
இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும்
பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம்
செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள்,
சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே
சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும்.
மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான்
நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என
இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும்
sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு
வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான்
முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற
விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம்
மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக்
கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய
மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை
சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான்
உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது
வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி
இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும்
பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக்
காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது
என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல
முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த
படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன்.
என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது
என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால்
இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே
சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான்
சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன?
அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி
நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள்
என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால்
பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில்
ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென
என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன்
கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார்.
திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக்
கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும்
நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே
செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக
இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு
அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த
சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே
ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது.
ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம்
சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம்
என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ்
பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து
விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன்.
கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட
விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும்
உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப்
பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த
சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும்
இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை
உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின்
உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள்
நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது.
அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து
வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா?
கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி
உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில
மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு
இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை
வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான
மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது.
குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு
இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை
சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப்
பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு
விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப்
போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக
எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல
முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற
சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க
வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக
செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும்
சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக
நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால்
ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின்
மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது
பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி
வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால்
ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன.
நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு
கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில்
அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது?
மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம்
தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான்
எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக்
கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான்
தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை
சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில்
முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி
செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே
என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு
கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும்
எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக்
கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம்
கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன?
எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக்
கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக
பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா..
ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால்
அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று
வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன்.
வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening)
கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம்
வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த
புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும்
உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை
நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன்
எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய
அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது
எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த
ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது
இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு
முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில்
எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும்
விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே
பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே
இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின்
காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என
காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக
இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும்
தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே
பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது.
ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே
செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு
குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய
விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை
முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும்.

Sunday, February 6, 2011

சுவாரஸ்யமான ஒரு பகுதி

சிங்கப்பூர் இணைய இதழ் தங்கமீனில் வந்த ஒரு மனிதனின் ஒரு நகரம் கட்டுரையில் சுவாரஸ்யமான ஒரு பகுதி இங்கே கொடுக்கிறேன்..
என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது.

அந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. இதற்கு நடுவேதான் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. மருத்துவமனை வாரத்தின் பகல்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. விடுமுறைகளில் மட்டுமே நண்பர்களைச் சந்திக்கிற, இலக்கியம் பேசுகின்ற ஆளாய் மாறிப்போனேன். எழுதுவதும் கணிசமாக குறைந்துவிட்டது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார்.

நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.

நானும், அய்யப்ப மாதவனும், ஒரு கோடைகால மதியப் பொழுதில் திட்டம் ஒன்றைத் தீட்டினோம். அவருக்கும் எனக்கும் நெத்திலி மீன் சாப்பிடும் ஆசை வந்தது. நெத்திலி வறுவல் தி.நகரில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஹோட்டல் விருதுநகரில் பிரபலமான உணவுகளின் ஒன்று. அவரும் நானும் சென்று நெத்திலி மீன் வறுவல் ஆளுக்கு ஒன்றாகப் பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். அறையில் வறுவலைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு பீருடன் சாப்பிடுவது திட்டம். கோடைக்கால மதியத்தில் ரம்மியமாக இருக்கும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் வாரிசுகள் ஹோட்டலினுள் நுழைந்தனர். அவர்கள் ஏஸி அறைக்குள் சென்றனர். நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுறாப்புட்டு, இறாவறுவல், நெத்திலி வறுவல் என அவர்கள் அறைக்குள் சென்று கொண்டே இருந்தது. இருமுறை பில் போடும் இடத்தில் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தது. பொறுமையிழந்து இருவரும் சென்று கேட்டபோது நெத்திலி வறுவல் தீர்ந்துவிட்டதாகவும், வேண்டுமானால் சிக்கன் 65 போட்டுத் தருவதாகக் கூறினார்கள். எங்களுக்கு எடுத்து வைத்ததை அரசியல்வாதி குடும்பத்தினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

"முன்பே சொல்ல வேண்டியதுதானே, இவ்வளவு நேரம் காக்க வைத்தா அநியாயமாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வீர்கள்?" எனக்கேட்டேன்.

“அதான் 65 போட்டுத்தரம்னு சொன்னமே சார்” என்றார்கள்

“அட வெண்ணைகளா, அதுக்கு எதுக்குடா உங்க ஹோட்டல் தேடி வர்றோம்?” என படக்கென்று கேட்டார் அய்யப்பன்.

“பாருங்க வி.எம். சென்னையில் ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் அரசியல் உள்ளே நுழைஞ்சிடுது!” ஆற்றாமையுடன் அய்யப்பன் கூறினார்.

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=196

Wednesday, February 2, 2011

நீரா ராடியாவும், நான் தில்லியில் செய்யாத திருகுதாளங்களும்!






பாரதி மணி



இப்போது எல்லா ஊடகங்களிலும் அடிபடும் நீரா ராடியா டேப்களை கேட்கும்போதும், அவைகளைப்பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும்போதும், இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையாருக்கு அடுத்தபடியாக பாரதப்பிரதமரை மிரட்டி, யார் யாரை மந்திரிசபையில் சேர்ப்பது, அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்குவது போன்ற ‘சிறிய’ விஷயங்களில் முடிவு எடுப்பது நீரா ராடியா அம்மையார் தான் என்ற எண்ணம் நமக்கு மட்டுமல்ல.....மந்திரிப்பதவி வேட்பாளர்களுக்கும், மூத்த பத்திரிகையாசிரியர்களுக்கும் கூட இருந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சம்! எல்லோருமே அதிகாலையில் ராடியாஜியின் தூக்கத்தைக்கெடுத்து, அதற்காக ‘ஸாரி’ சொன்னவாறே அன்றையதினம் யார்யார் பெயர் லிஸ்டில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விருப்பமாக இருந்திருக்கிறார்கள். அவரும் ஒரு ‘குறிப்பிட்ட நபர்’ அந்த லிஸ்டில் இருப்பதற்கான / இல்லாமல் போனதற்கான காரணங்களை தன் நுனிநாக்கு ஆங்கிலத்தில்/ஹிந்தியில் அடுக்குகிறார் அவர்களும் அவற்றை பிரதமர் வாயிலிருந்து வரும் கூற்றாக நினைத்து அடுத்தநாளும் அவர் தூக்கத்தைக்கெடுக்க முடிவு செய்கிறார்கள்!



என்னய்யா நடக்கிறது நம் நாட்டில்? Has our great country become a ‘Banana Republic’? இந்த ‘இரண்டரை அணா’ நீரா ராடியா யார்? இவரைப்போல Names dropping Power Brokers/Lobbyists தில்லியில் முன்பும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; எப்போதும் இருப்பார்கள்! எந்த தொழிலதிபருக்கும் அந்தக்காலத்து, லைஸன்ஸ், பெர்மிட் கோட்டா ராஜ்யத்தில், தில்லியில் சரியான காய்களை நகர்த்தி, காரியங்களை சாதித்துக்கொள்ள இம்மாதிரி ஒர் ஆள் அவசியம் தேவை. ஒரு தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர் தீர்மானிக்கும்போதே, தில்லியில் உத்யோக் பவன் ஏறி இறங்க திறமையானவரை தேட ஆரம்பித்துவிடுவார். ஆதெள கீர்த்தனாரம்ப காலத்தில், தெருவுக்கு ஒரு பெட்டிக்கடை என்கிற சின்ன ரேஞ்சில் ஆரம்பித்து, இப்போது கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப ‘பல்மாடி அங்காடி’களாக பரிணமித்திருக்கிறது. தொழில் துறையில் அரசு குறுக்கீடுகள் இருக்கும்வரை, மனிதனுக்கு பணத்தின் மேல் ஆசை இருக்கும் வரை, இவர்களெல்லாம் அவசியத்தேவைகள். இந்த வர்க்கத்துக்கு Liaison Officers என்பது பெயர். அந்தப்பெயரை யாரும் விரும்புவதில்லை. காரணம் Oxford Dictionary-யில் அந்த வார்த்தைக்கு ‘An illicit sexual relationship’ – தகாத உடல் உறவு’ என்றும் பொருள் சொல்லியிருப்பார்கள்! அதனால் எங்கள் விஸிட்டிங் கார்டில் எங்கள் பதவி Chief Executive என்றே இருக்கும்! சிலர் Public Relations Offiers என்று அறியப்படுவார்கள். இதில் Public என்பதில் L எழுத்தை எடுத்துவிட்டு, அவர்களை Pubic Relations Officer என்று கேலி செய்வோம்!



தினமும் அரைமணி நேரம் செல்போனில் பேசும் என் மகள் அனுஷா, சில மாதங்களுக்கு முன், ‘அப்பா! இன்று நானும் ரிதேஷும் தியேட்டரில் Badmaash Company ஹிந்திப்படம் பார்த்தோம். எனக்குப்பிடிச்சிருந்தது. நீங்க அந்தக்காலத்திலே செய்த சட்டத்தை மீறாத திருட்டுத்தனங்கள்…..அந்த Mutton Tallow Import….. அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. டைரக்டர் சோப்ரா உங்ககிட்டே கேட்டிருந்தா, நீங்க நிறைய உருப்படியான ஐடியா கொடுத்திருக்கலாம். நீங்க செய்யாத திருகுதாளங்களா?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். ‘ஏய்! உங்கப்பன் இன்னி வரை, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் கைகட்டி நின்னதில்லே. எனக்கு வேறே அனுகூல சத்ருக்களே தேவையில்லே. நீ ஒருத்தியே போதும்’ என்று கோபத்துடன் பதிலளித்தேன்.



என் தில்லி தில்லி வாழ்க்கையை இப்பொது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான் தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதை தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஒரே புத்தகமான பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம் வெளிவருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழை திருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பியிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார். என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களை தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்துபோவதை தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார். அவர் கொடுத்த தைரியத்தில் தான் இந்தக்கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!



1991-ல் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகளைத் திறந்துவிடும் முன்வரை, நாம் லைஸன்ஸ் பெட்மிட் கோட்டா ராஜில் தான் இருந்தோம். எதெற்கெடுத்தாலும் அரசின் அனுமதி தேவை. தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் Chief Controller of Imports and Exports (CCI&E) அலுவலகமும் Directorate General of Technical Development (DGTD) காரியாலயமும் இருந்த ‘உத்யோக் பவன்’ தான் எங்களைப்போன்றவர்களுக்கு கோவில். வருடத்தில் ஓரிரு முறையே தில்லி உத்தர சுவாமிமலைக் கோவிலுக்குபோவேன். ஆனால் இந்த ‘கோவிலுக்கு’ தினசரி நாலைந்து தடவையாவது ‘க்ஷேத்திராடனம்’ நடக்கும். அதில் நம்மால் ’கவனிக்க’ப்படவேண்டிய ‘பூசாரிகள்’ நிறைய இருந்தார்கள்! முதல் பூசாரி உத்யோக் பவன்/நார்த் பிளாக், செளத் பிளாக் போன்ற அரசாங்க அலுவலகங்களில் காவல் தெய்வங்களாக உட்கார்ந்திருக்கும் Reception Officers. என் முதலாளி பி.எம். பிர்லா மதியம் மூன்று மணிக்கு வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கிறார் என்றால் 2.30-க்கே அவர் பெயரில் Gate Pass தயாராக இருக்கவேண்டும். அவர் வந்தபிறகு அவரை நிறுத்திவைத்து ரெஜிஸ்டரில் பெயர், விலாசம், பார்க்கவேண்டிய மந்திரியின் பெயர், அப்பாயிண்ட்மெண்ட் உண்டா/இல்லையா?, கூடவரும் நபர்கள் பெயர் எல்லாம் அவரை எழுதவைத்து, கையெழுத்துப் போடச்சொல்வது பிர்லாவுக்கு அவமானமில்லை. அவரைக்கூட்டிப்போகும் என்போன்றவர்களுக்குத்தான் தலைகுனிவு. அதைத்தவிர்க்க, அந்த ‘காவல் தெய்வங்களை’ வருடம் பூராவும் “கவனிக்க”வேண்டும். பிர்லா தன் காரிலிருந்து காரியாலயப்படிகள் ஏறும்போதே இந்த காவல் தெய்வங்கள் எழுந்து நின்று, அவருக்கு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லி, தயாராக வைத்திருக்கும் கேட் பாஸ்களை முறுவல் மாறாமல், என் கையில் கொடுப்பது தான் அவர்களுக்கும் அழகு.....எனக்கும் அழகு!



இப்போது நீரா ராடியா காலத்தில் TRAI அமைப்பின் தலைவர் திரு. பிரதீப் பெய்ஜால் ரிட்டயரானபிறகு ராடியாவிடமே வேலைக்கு சேர்கிறார். எங்கள் காலத்தில், நாங்கள் தினமும் உத்யோக் பவன் போய் சலாம் போட்டு பேட்டிக்கு காக்க வைக்கும், எங்களை ஆட்டிப்படைத்து அலைக்கழிக்கும் ஒரு D.G.T.D. அண்டர் செக்ரட்டரி, ரிட்டயரான ஆறுமாதத்தில் எங்கள் கம்பெனியில் எங்களை ’குட் மார்னிங் சார்’ என்று காலையில் கும்பிட்டு வரவேற்கும் ஊழியராக வேலைக்குச்சேர்வார். நீரா ராடியா ‘இரண்டரையணா’ .......நாங்களெல்லாம் ‘ஓட்டைக்காலணா.....அரையணா’ பேர்வழிகள்! ராடியாவுக்கு Sky is the limit! என்னைப்போன்ற ‘எள்ளுருண்டைகள்” நாங்களாகவே ஒரு லட்சுமண ரேகை போட்டுக்கொண்டு, ‘This far and no further! என்று Delhi Development Authority-யின் அடுக்குமாடி குடியிருப்பிலும், மாருதி-800 காரிலும் சந்தோஷமடைந்தவர்கள்! அந்த ரேகை இல்லாதவர்களுக்கு சத்தர்பூரில் பார்ம் ஹெளஸ்.....BMW கார்! வானமே எல்லை!!



இதற்கு ஒரு சின்ன உதாரணம்: தொழில்துறை அமைச்சரவையில் ஒரு IAS அதிகாரி ஜாயின்ட் செக்ரட்டரியாக இருந்தார். ஒரு புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கான எல்லா காகித வேலைகளும் முடிந்து, அடுத்தநாள் அவரிடமிருந்து கடைசி அனுமதிப்பத்திரம் பெறவேண்டும். முந்தையதினம் அவரை ’குளிப்பாட்ட’ ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன். முதலில் ‘சோமபானம்’ ....பிறகு அங்கேயே பெரிய விருந்து. முடிந்ததும், ‘சரி, நாளை காலையில் சந்திப்போம்’ என்று சொல்லி விடை கேட்டேன். அவர் தன் பஞ்சாபி கலந்த ஹிந்தியில். ‘எங்கே கண்ணா இவ்வளவு சீக்கிரம் ஓடுகிறாய்? முதலில் மனதுக்கு பிடித்தமான ட்ரிங்க்ஸ்.... பிறகு நிறைவான சாப்பாடு.....அடுத்தது என்ன?.......உனக்குத்தெரியாததா?’ என்று இழுத்தார். என்ன கேட்கிறார் என்பது தெரிந்தும், ‘தெரியவில்லை” என்று என்றேன். சுத்த பஞ்சாபியில், ‘இதற்கப்புறம் ‘மனதைக்குளிர வைக்க’ – அவர் சொன்ன வார்த்தை Dil behlaanekeliye -- எங்கே போகவேண்டுமோ.... அங்கே போவோம். Evening is still young!’ என்றவரை ஒருநிமிடம் உற்றுப்பார்த்தேன். ‘மிஸ்டர் சோப்டா! நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதற்கு என்னை துணை சேர்க்காதீர்கள். நாளை காலை உங்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் வாங்கவேண்டுமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்கள் தந்தாலும் தராவிட்டாலும் எனக்கு கவலையில்லை. பணம் தான் உங்கள் பிரச்னையென்றால் இதோ....’ என்று சொல்லி பத்து நூறுரூபாய் நோட்டுகளை – அறுபதுகளில் அதன் மதிப்பு மிக அதிகம் -- அவர் பையில் திணித்துவிட்டு அவரை திரும்பிப்பார்க்காமல் போய்விட்டேன். இரவு தூக்கம் வரவில்லை. ’என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே!’ என்று அடுத்தநாள் காலை சரியாக பத்துமணிக்கு அவர் அலுவலகம் போனேன். சுத்தமாக எனக்கு நம்பிக்கையில்லை. நேராக உள்ளே போனால் என்னைப்பார்க்கவும் அவர் மறுத்துவிடுவாரென்று நினைத்து, அவரது பியூனிடம் என் விசிட்டிங் கார்டைக்கொடுத்து, ‘ஸாப்கோ தே தோ! என்றேன். அவர், ‘என்ன ஸாப் இது புது பழக்கம்?.... உள்ளே அவருடன் பீ.ஏ. மட்டும் தான் இருக்கிறார். நீங்கள் தாராளமாக போகலாம்!’ என்றார். இல்லை......இதை அவரிடம் கொடுத்துவிட்டு வா. நான் காத்திருக்கிறேன்’ என்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். பியூன் உள்ளே சென்ற மறுநிமிடம் சோப்டாவே கையில் என் கார்டுடன் வெளியே வந்தார். என்ன மணி! இன்னிக்கு புது பழக்கம்? உள்ளே வாங்க’ என்று என் தோளில் கைபோட்டு உள்ளே அழைத்துச்சென்றார். அங்கேயிருந்த பீஏவிடம் அப்புறம் பார்க்கலாம் என்று வெளியே அனுப்பி வைத்தார். ஸிட் டெளன் என்றதும் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல், தயங்கி நாற்காலியில் உட்கார்ந்தேன்..... இருநிமிட மெளனம்......அதைக்கலைத்தார் அவர். ‘மிஸ்டர் மணி! நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். மற்றவர்களைப்போல் உங்களையும் நினைத்துவிட்டேன். நீங்கள் வித்தியாசமானவர்..... நேற்று நடந்ததற்கு நான் நாணித்தலைகுனிகிறேன். நேற்று ஒன்றுமே நடக்கவில்லையென்று நினைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம்!’ என்று சொல்லிவிட்டு, மேசையில் கையெழுத்திட்டு தயாராக வைத்திருந்த அனுமதிப்பத்திரத்தை என் கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு எழுந்த என்னிடம் வந்து, “You have taught me a lesson in my life. God bless you!’ என்று சொல்லிக்கொண்டே நேற்று நான் அவர் பாக்கெட்டில் திணித்த அதே பத்து நூறுரூபாய் நோட்டுகளை என் பாக்கெட்டில் திணித்து வாசல் வரை தோளில் கை போட்டுக்கொண்டே வந்து வழியனுப்பினார் அந்த வயதானவர். அதன்பின் அவர் ரிட்டயராகும் வரை இருவரும் இன்னும் நெருக்கமான நண்பர்களானோம். இது தான் எனது லட்சுமண ரேகை!



இப்போதிருக்கும் உயர் அரசு அதிகாரிகள் மிகத்தெளிவாகிவிட்டார்கள். விஞ்ஞானயுகமல்லவா? அவர்களுக்கு இந்த ‘சோளப்பொரி’யெல்லாம் வேண்டாம்’. கொடுப்பதை ‘பெட்டி’யாகவே கொடு. என்ன வேண்டுமென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்’ என்று சொல்லி, ரிட்டயராகுமுன் Disproportionate Income என்ற வகையில் தன் மாமனார், கொழுந்தியாள் வீடுகளிலும் இன்கம் டாக்ஸ் ரெய்டுக்கு ஆளாகிறார்கள். பெரிய மீன் எதுவும் சிக்குவதில்லை. ஏதோ ஒரு சிற்றூரில் கிராம அதிகாரி ஐநூறோ ஐயாயிரமோ லஞ்சம் வாங்கியதாக தீர்ப்பாகி தண்டிக்கப்படுகிறார்! லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜி மந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA – 50 L என்று எழுதி வைத்திருந்ததற்கு, தன் ‘அத்வானி’ என்ற மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத்தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். C.B.I.யும் ஏற்றுக்கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!



அப்போதெல்லாம் நமக்கு வேலை ஆகவேண்டியவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஆராயவேண்டும். நிதித்துறையிலிருந்த ஒரு அதிகாரி ‘ஜெயகாந்தன்-பிரியர்’ அவருக்காக மதுரை மீனாட்சி புத்தகநிலையத்திலிருந்து ஜெயகாந்தன் அதுவரை எழுதிய புத்தகங்களின் கட்டு வரவழைத்து அவர் வீட்டுக்கு அனுப்புவேன். இன்னொரு அதிகாரிக்காக பிராங்க்பர்ட்டிலிருந்து விலையுயர்ந்த டென்னிஸ் ராக்கெட்டில் ஒரு செட் அனுப்பப்படும். மற்றொரு பக்திமானுக்கு மாதம் ஒருமுறை ஹரித்வார் போய்வர கார் அனுப்பவேண்டும். நாலாமவர் கல்கத்தா ரஸகுல்லாவுக்கு அடிமை! இன்னொருவருக்கு மாதத்தில் ஒரு முறை திருப்பதி பிரசாதம்! ஓர் ஆங்கில இலக்கியப்பிரியருக்கு, லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில், இந்தியாவில் கிடைக்காத Mario Puzo எழுதிய Godfather நாவலை சுடச்சுட வாங்கிவந்து கொடுத்தேன்! (க.நா.சு.வுக்கும் இன்னொரு பிரதி வாங்கிவந்தேன்.) எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. அதைக்கண்டுபிடிப்பது தான் எங்கள் வேலை! நான் பிர்லாவில் இருந்த பத்தாண்டு காலத்தில், எல்லா மாதமும் முதல் வாரத்தில் ஐந்து மத்திய மந்திரிகளுக்கு தலா ரூ. 5,000 வீட்டில் கொண்டுபோய் பட்டுவாடா செய்யவேண்டும். அப்போது ரூ. 5,000 மந்திரிகளின் இருமாத சம்பளம்! அதில் அப்போதிருந்த தகவல் ஒலிபரப்பு மந்திரி திரு. சத்யநாராயண் சின்ஹாவும் அடக்கம்! அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி பிரதமராக அறிவிக்கப்பட்டபோது, தன் மந்திரி சபையில் இவரை தவிர்த்துவிட்டு, 50 மந்திரிகளின் பட்டியலை தயார் செய்து, ராஷ்டிரபதி பவன் எடுத்துச்சென்றார். ஆனால் அன்று அதிகாலை வெளியிடப்பட்ட ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் 51-வது பெயராக Shri Satya Narain Sinha – Union Minister Without Portfolio என்று இவர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது! இந்த மாற்றம் எப்படி நடந்ததென்பது எனக்கும், எனது ‘பாஸ்’ மறைந்த திரு. பி.எம். பிர்லாவுக்கும் மட்டுமே தெரியும். என் வாழ்வில் நான் செய்த திருகுதாளங்களில் இதுவும் முக்கியமானது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததென்றாலும், அந்த ரகசியத்தை உங்களுக்கு சத்தியமாக சொல்லமாட்டேன்! காரணம் எனது ’பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தில் ‘காந்திபாய் தேசாய் – தலைவர்களும் தனயர்களும்’ கட்டுரையின் கடைசிப்பாராவில் சொல்லியிருக்கிறேன்! ‘இதைப்போன்ற, இதைவிட ’கனமான’ சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வந்தாலும், அவைகளையெல்லாம் நான் எழுத ஆரம்பித்தால், எனக்குப்பிடித்த தில்லியில், எனக்குப்பிடிக்காத திஹார் ஜெயிலில், நிரந்தரமாக எனக்கு ஓர் இடம் நிச்சயம்! ‘அங்கே......ஏ....ஏ.... எனக்கோர் இடம் வேண்டும்!’ என்று இந்த வயதில் நான் பாடத்தயாரில்லை!’”



அந்தக்காலத்து மூத்த அதிகாரிகளிடம் மந்திரிகளுக்கு வளையாத முதுகெலும்பும், தேவைக்கு அதிகமான நேர்மையும் இருந்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து, சொந்த முயற்சியால் I.C.S. தேர்வில் முதலிடம் பெற்ற இளைஞர்களுக்கு, பணக்காரக் குடும்பங்களிலிருந்து பெண் கொடுக்க முன் வந்தார்கள். உதாரணத்துக்கு எஸ். பூதலிங்கம், ICS (மனைவி எழுத்தாளரான மதுரம் எனும் ‘கிருத்திகா’), டி.எஸ். ஸ்வாமிநாதன், ICS (சுந்தரி ஸ்வாமிநாதன்), சி.எஸ். ராமச்சந்திரன், ICS (மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் சென்னையில் பிரபலமான டாக்டர் திருமூர்த்தியின் மகள். டாக்டர் திருமூர்த்தியின் பெயரில் நுங்கம்பாக்கத்தில் ஒரு நகரே இருக்கிறதாம்!) போன்றவர்கள். எனக்கு ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர் வாரிசுகளில் ஒரு மகள் உட்பட நான்கு I.A.S. அதிகாரிகள். மற்றொரு மகன் I.A.&.A.S. திரு. ராமச்சந்திரன் சிறந்த பக்திமான். அதிர்ந்து பேசாதவர். தினமும் அதிகாலை பூஜை முடித்து, நெற்றி நிறைய விபூதி குங்குமமில்லாமல் வெளியே இறங்கமாட்டார். (தில்லியில் பஜனை சமாஜ், செளத் இந்தியன் சமாஜ் போன்ற அமைப்புகளின் தலைவர்.) அறுபதுகளில் இவர் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தபோது, நேரு தன் காபினெட்டில் லண்டனில் ஹைக்கமிஷனராக இருந்த கிருஷ்ணமேனனை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கிறார். பதவியேற்றபிறகு, மரியாதை நிமித்தம் தன்னை முதன்முதல் பார்க்க வந்த செயலரிடம், கிருஷ்ணமேனன், கையைக்காட்டி, ‘ராமச்சந்திரன், இதென்ன பட்டை பட்டையாக நெற்றியில்? நாளையிலிருந்து நான் இதைப் பார்க்க விரும்பவில்லை!’யென்றதும், ராமச்சந்திரன் பணிவாக, ‘No Sir, You will not see this tomorrow! I promise you!’ என்று பதிலளித்துவிட்டு வெளியேறினார். உடனே அப்போது காபினெட் செக்ரட்டரியாக இருந்த திரு. கே.பி. லால், ICS அலுவலகத்துக்குச்சென்று, அன்று மதியமே பாதுகாப்புத்துறையிலிருந்து விடுபட்டு, வர்த்தக-தொழிற்துறை செயலராக உத்யோக் பவனில் பொறுப்பேற்றார். கிருஷ்ணமேனன் இறக்கும் வரை அவரை சந்திக்கவேயில்லை! இப்படிப்பட்ட செயலர்களிடம் எந்த அரசியல்வாதிக்கு ஊழல் குறித்தோ, லஞ்சம் குறித்தோ பேச தைரியமிருக்கும்?

பல்லாயிரம் கோடி நிறுவனமான ஏர்டெல் (Airtel) அதிபர் சுனில் மித்தலின் தந்தை சத்ய பால் மித்தல் (மிட்டல் அல்ல) காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் பொருளாளராகவும் இருந்தார். அந்தக்காலத்தில் அவர் பெயரில் அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு பதிவானது. அந்த மகானுபாவரும் வழக்குத்தொடங்குவதற்கு முன்னேயே இறந்துவிட்டார். அவர் மீதிருந்த வழக்கும் வாபஸானது. அந்தப்பணம் தான் சுனில் மித்தலின் ஏர்டெல்லுக்கு ஆரம்ப மூலதனம் என்று என் டெல்லி நண்பன் அடித்துச்சொல்லுவான்!



தில்லியில் எங்கள் ‘வியாபகம்’ தொழிற்துறை/நிதித்துறைகளைக் கடந்தும் இருக்கும்/இருக்கவேண்டும். சங்கீத நாடக அகாதெமி, சாகித்ய அகாதெமி, Directorate of Film Festivals, Department of Culture, கலைஞர்களை வெளிநாட்டுக்கனுப்பும் Indian Council of Cultural Relations போன்ற அமைப்புக்களிலும் ‘நம் ஆட்கள்’ இருக்கவேண்டும். சாகித்ய அகாதெமியில் செயலராக இருந்த பிரபாகர் மாச்வே, இந்திரநாத் செளத்திரி போன்றவர்களும் எனக்கு நண்பர்கள். அந்தவருடம் யாருக்கு விருது என்பது நான்கு நாட்களுக்கு முன்பாகவே தகவல் வந்துவிடும். தமிழ்நாட்டில் அவர்கள் Land Line-ஐ தேடிக் கண்டுபிடித்து, எல்லோருக்கும் முன்பாக, ‘ஸார், இந்தவருடம் ஃபைனல் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறது. Congrats!’ என்று சொன்னால், முதலில் நம்ப மறுப்பார்கள். அதிகாரபூர்வமாக தெரிந்தபிறகு, ‘மணி சார்! ரொம்ப நன்றி!’ என்று நாம் செய்யாத வேலைக்கு நன்றி சொல்வார்கள். 1986-ல் க.நா.சு.வுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது பற்றி எனக்கு மூன்று நாட்கள் முன்பே தெரியவந்தது. நான் சொன்னதை அவர் நம்பவில்லை. சென்னை எழுத்தாள நண்பர்களுக்கு போன் போட்டு தெரிந்தபிறகு தான் நம்பிக்கை வந்தது. மறைந்த வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்யநாதன் தனது ‘பத்மஸ்ரீ’ விருதுக்காக ஒரு பெரிய ஃபைலே தயார் செய்து எனக்கனுப்பியிருந்தார். (அதில் அவர் நெற்றியில் வழக்கமாக இருக்கும் – நாம் ஜுரத்துக்குப்போடும் பற்றைப்போல -- பச்சை/கருப்பு/வெள்ளை பற்றுக்களுடன் ஒரு முழு ரூபாய் அளவில் குங்குமப்பொட்டோடு கோட் சூட்டு, டையுடன் இருந்த போட்டோவும் அடக்கம்!) இரு வருடங்கள் முனைந்து பாடுபட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. மூன்றாம் வருடம் நான் முயற்சி எடுக்கவேயில்லை. ஆனால் அந்த வருடம் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைத்தது! அது என் முயற்சியால் தான் என்று அவர் இறக்கும் வரை பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்வார்! இப்போதிருந்தால் அவரிடம் உண்மையை சொல்லியிருப்பேன்!



இப்போது மேலே என் மகள் சொன்ன ’Mutton Tallow ’திருகுதாளம்’ என்ன என்பதைப்பார்ப்போம். பழையகால ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் பற்றி புத்திசாலியான உங்களுக்கு புரியவைப்பதற்கான எழுத்துச்சாதுரியம் என்னிடம் உண்டாவென்று தெரியவில்லை. முயன்றுதான் பார்க்கிறேனே!



அப்போதெல்லாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி எங்களுக்கு மிக முக்கியமான நாள். ‘முட்டாள்கள் தினம்’ என்பதால் மட்டும் அல்ல! அன்று தான் அரசு அந்த வருடத்துக்கான ஏற்று-இறக்குமதிக்கான Export-Import Policy வெளியிடும். பட்ஜெட் தொடர் நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் தான் அந்தப்புத்தகம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அது தான் எங்களுக்கு அந்த வருடத்திய திருக்குறள்-பைபிள்-கீதை எல்லாம்! அடுத்தவாரம் கனாட்பிளேஸிலிருக்கும் ஜெயின் புக் டிப்போவில் ரூ. 20-க்கு வாங்கக்கிடைக்கும் அந்தப்புத்தகத்துக்கு அன்றைய பிளாக் மார்க்கெட் விலை ரூ.2,000க்கு குறையாது. முக்கால் வாசி எம்.பி.க்கள் அதை சுடச்சுட கிடைக்கும் விலைக்கு விற்றுவிடுவார்கள். இரு பகுதிகளாக வரும் அந்தப்புத்தகத்தை வேகவேகமாக, ஆழப்படித்து, புரிந்துகொண்டு பதவுரை-பொழிப்புரையோடு தேவையானவர்களுக்கு விளக்கம் அளிக்க என்னைப்போன்ற ‘பரிமேலழகர்கள்’ தில்லியில் நிறைய இருந்தார்கள்! பகல் 12 மணியிலிருந்து கல்கத்தா, ஜலந்தர், ஜெய்பூர், பம்பாய், அஹமதாபாத், நவ்ஸாரி, சூரத் போன்ற இடங்களிலிருந்து தொழிலதிபர்கள்-இறக்குமதியாளர்கள் தங்கள் துறையில் இந்த வருடம் என்னென்ன மாற்றங்கள், அவை தமக்கு சாதகமா பாதகமா என்றறிய ஆவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். என் வீட்டுத்தொலைபேசிக்கு நள்ளிரவு வரை ஓய்வே கிடையாது. அவரவர்கள் ராசிக்கு (அவர்கள் செய்யும் தொழிலைப்பொறுத்து) அந்த வருடத்திய பலன்களை சொல்லவேண்டும். பல நண்பர்கள் ஓசியிலேயே உபாயம் கேட்பார்கள். எல்லோருக்கும் பொறுமையாக பதிலளிக்கவேண்டும்.



அப்படியான ஒரு ஏப்ரல் மாத முதல்வாரத்தில், ஜெயின் எக்ஸிம் என்ற பெரிய அமைப்பை நடத்திவந்த திரு. ஜெயினைப்பார்க்கப் போயிருந்தேன். வயதில் இளையவரானாலும், மார்வாடிகளுக்கே உரித்தான கூரிய வியாபார மூளையுடையவர். எந்த ரிஸ்க்கும் எடுக்கத்தயங்காதவர். நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கு தட்டுப்பாடிருந்ததோ, அவைகளையெல்லாம் இறக்குமதி செய்து பணம் பார்த்துக்கொண்டிருந்தவர். சிமெண்ட், நியூஸ்பிரிண்ட், சர்க்கரை போன்ற Canalised Items-ஐ STC-க்கு வெளிநாட்டிலிருந்து தருவித்து கொடுப்பவர். அந்த லிஸ்டில் Mutton Tallow (மாமிசக்கொழுப்பு)ம் இருந்தது. அப்போது இதை விலைகுறைந்த சோப் உற்பத்திக்கு மூலப்பொருளாக உபயோகித்தார்கள். (இப்போது இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்). நாம் தினமும் பார்க்கும் தார் ரோட்டுக்கான தார் போல பெரிய பீப்பாயில் வரும். விலை ஒரு டன்னுக்கு நூறு டாலருக்குள்ளாகவே இருக்கும். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஜெயின் ஸாப்! பாலிஸி புத்தகத்தில் வருடாவருடம் எதையாவது கோட்டை விடுகிறார்கள். இந்த வருடம் Exim Policy-யில் மட்டன் டாலோவுக்கான கொள்கலன் பற்றிய விவரணையை மறந்துவிட்டார்கள். பீப்பாய் தகரத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்குப்பதிலாக, Mutton Tallow should be packed in any Metal container of 3 mm thickness and of 500 Kg. net.wt. என்று பொதுவாக விட்டுவிட்டார்கள். என்னிடம் மட்டும் இப்போது இரண்டு கோடி ரூபாய் இருந்தால், அரசாங்க விதிமுறைகளை மீறாமல், ஆறு மாதத்தில் இருநூறு கோடியாக ஆக்கிக்காட்டுவேன்!’ என்று சொன்னேன். ’எப்படி?’யென்று ஆச்சரியத்துடன் கேட்டார். ’Any Metal’ என்று பொதுவாகச்சொன்னால், கொள்கலன் தங்கத்திலும் ஆகலாம்....வெள்ளியிலும் ஆகலாம். தங்கம்...வெள்ளியென்றால் Contraband என்று முடக்கிவிடுவார்கள். நான் என் வெளிநாட்டு சப்ளையர்களிடம் எனக்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 3 mm- 500 Kg. கொள்கலனில் Mutton Tallow அனுப்பச்சொல்வேன். இப்போது இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெள்ளியை விட விலை அதிகம். அதில் வரும் மட்டன் டாலோவை கடலில் கொட்டிவிட்டு எனக்கு கொள்கலன் மட்டும் போதும். நான் அரசை ஏமாற்றவில்லை. அவர்களது வழிமுறைக்கு உட்பட்டே நடக்கிறேன்.! அரசாங்கம் விழித்துக்கொண்டு இதற்கு ஓர் Amendment கொண்டு வருவதற்குள் இருநூறு கோடி பார்த்துவிடுவேன்!’. என்று விளையாட்டாகச் சொல்லி, அவர் கொடுத்த தேநீரை குடித்துவிட்டு வீட்டுக்குப்போனேன்.



இது நடந்தது ஏப்ரல் மாதம். அந்தவருட தீபாவளிக்கு நான்கு நாள் முந்தி ஜெயின் என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னால், மூன்று அலங்கரிக்கப்பட்ட கூடைகளை – ஒன்றில் நிறைய பழங்கள், இரண்டாவதில் உயர்ந்த இனிப்பு வகைகள், மூன்றாவதில் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், அக்ரூட் வகையறா -- தவறாமல் என் வீட்டுக்கு அனுப்புவார். அதற்குத்தான் இருக்குமென்று அனுமானித்துக்கொண்டேன். போனதும் மேசையிலிருந்த என் கார் சாவியை எடுத்து தன் பியூனிடம் கொடுத்து, ‘மணிஸாப் டிக்கியில் எல்லாவற்றையும் வைத்து விடு! என்று சொல்லியனுப்பினார். நான் புறப்படத் தயாரானதும், ஒரு சிறிய பெட்டியை என் பக்கம் தள்ளி, ஹிந்தியில் ‘இது உங்களுக்காக.....’ என்றார். திறந்துபார்த்தால் அதில் இரண்டு லட்சம் நோட்டாக இருந்தது. ‘இது என்ன புதுப்பழக்கம்?’ என்றதற்கு, ‘உங்கள் குழந்தைகளுக்கு என் சார்பில் தீபாவளிக்கு ஏதாவது வாங்கிக்கொடுங்கள்!’ நான் மறுக்கவில்லை.



இரண்டாண்டுகளுக்குப்பிறகு, ஏதோவொரு நாள் மாலையில் என்னைப்பார்க்க ஒருவர் வந்தார். அவரை நான் ஜெயின் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். கும்பகோணத்துக்காரர். உட்காரச்சொன்னேன். ”ஸார்! இப்ப நான் ஜெயின் கிட்டே இல்லே. உங்களிடம் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு....அவன் கிட்டெ வேலை பாத்ததுனாலெ சொல்லமுடியலே .....இன்னிக்குத் தான் வாய்ச்சுது. எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்போ நீங்க குடுத்த ஐடியா பிரகாரம் நாலு ஷிப்மெண்ட் வந்தது. அதுக்குள்ளெ Container Amendment வந்துடுத்து. அஞ்சாவதிலெ மாட்டிண்டான். சின்ன பெனல்டி குடுத்து க்ளியர் பண்ணினான். ஆறு மாசத்திலெ பம்பாயிலெ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வித்தே 250 கோடிக்கு மேலே லாபம்! உங்களுக்கு 2 லட்சம் தான் குடுத்தாங்கிறதும் தெரியும். இதை நீங்க விடப்படாது,,, அவங்கிட்டே கேக்கணும்!”



இது நடந்து நான் சென்னை திரும்பும் வரை இருபது வருடங்களுக்கும் மேலாக திரு. ஜெயினிடம் பழகி வந்தேன். மறந்தும் இதைக்குறித்து அவரிடம் கேட்டதில்லை. என்னைப்பொறுத்தவரையில் நான் போகிறபோக்கில் கொடுத்த ஒரு ஐடியாவுக்கு வரவு ரூ. 2 லட்சம்! ஒரு புது வீட்டுக்கு அச்சாரம் கொடுக்க முடிந்தது! என் வாயளவில் இருந்த ஐடியாவை, தலை நிறைய முடியிருக்கும் திரு. ஜெயின் எனும் சிங்காரி அதை அள்ளி முடிந்துகொண்டால், அதற்கு நான் எப்படி பொறாமைப்பட முடியும்?



இன்றைய பத்திரிகைச்செய்தியில், லண்டனில் ருடால்ஃப் எல்மர் எனும் முன்னாள் ஸ்விஸ் பாங்க் ஊழியர், 2,000-க்கும் மேற்பட்ட கருப்புப்பண முதலைகளின் பட்டியலை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சேயிடம் கொடுத்திருக்கிறார். அந்த லிஸ்ட் வெளிவரும்போது நாம் 2-ஜி ஊழலையும், நீரா ராடியாவையும் சுத்தமாக மறந்துவிடுவோம்!



எனக்கொரு சந்தேகம்! ஒரு நீரா ராடியா எப்படி தொழில்முறைப்போட்டியுள்ள ரத்தன் டாடாவுக்கும், அனில் அம்பானிக்கும் ஒரே சமயத்தில் வலதுகையாக இருக்கமுடியும்? சாத்தியமா? இருவரும் எப்படி ராடியாவை நம்புகிறார்கள்? தில்லியில் ஒரு ஜோக் கேட்டேன்: மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காபினெட் மீட்டிங்கை மந்திரிகள் தவிர்க்கலாம். தப்பில்லை. ஆனால் மாலை வேளை நீரா ராடியா தன் சத்தர்பூர் ஃபார்ம் ஹெளஸில் நடத்தும் பார்ட்டிகளுக்கு அவசியம் போயாக வேண்டும். எல்லாம் காலத்தின் கோலம்! தில்லியில் இதற்கு முன்பும் நீரா ராடியாக்களும், பர்க்கா தத், வீர் சங்வி, பிரபு சாவ்லாக்களும் இருந்திருக்கிறார்கள். அப்போது தில்லியிலிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் எஸ். நிஹால் சிங், ராம்நாத் கோயங்கா, பி.ஜி. வர்கீஸ், கே.எஸ். ஷெல்வங்கர், ஜிகே ரெட்டி, குல்தீப் நய்யர் போன்றவர்களுக்கு தெரியாத அரசாங்க ரகசியங்களா பிரபு சாவ்லாக்களுக்கு தெரியப்போகிறது? ஒவ்வொரு மந்திரிசபை மாற்றத்தின் போதும், நேரு ஹிந்து பத்திரிகையின் மூத்த தில்லி நிருபர் கே.எஸ். ஷெல்வங்கரை தீன் மூர்த்தி பவனுக்கு அழைத்து, சேர்க்கப்போகும் மந்திரிகளின் திறமை, நாணயம் பற்றி விவாதிப்பாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று டாக்டர் மன்மோகன் சிங், பர்க்கா தத்தை 7, ரேஸ் கோர்ஸ் ரோடுக்கு அழைப்பாரா?



அப்போது இரவு நேரங்களில், தில்லி ராய்ஸினா ரோடிலிருக்கும் தில்லி பிரஸ் க்ளபில் ஒரு கிளாஸ் விஸ்கியுடன் ஓரத்து மேஜையில் உட்கார்ந்திருந்தாலே பல ராடியா டேப்களை கேட்கும் பாக்கியம் கிட்டும்! நேரம் ஆக ஆக, உண்மையான கிசுகிசுக்கள் ‘சூடு’ பிடிக்கத்தொடங்கும்!



----0000oooo0000----

Tuesday, February 1, 2011

ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை

எனது ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை, கட்டுரை தங்கமீன் இணையதளத்தில் வந்துள்ளது...இந்த சுட்டியில் கட்டுரையின் முழு பகுதியை வாசிக்கலாம்.

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=196