Wednesday, May 25, 2016

படி அமைப்பின் ''சிறந்த விமர்சகர் விருது''

எதிர்பாராத விருது !
காலையில் போன் செய்து வேடியப்பன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக அளிக்கப்படும் படி விருது 'சிறந்த விமர்சகருக்காக' உங்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார். நான் சற்றும் எதிர்ப்பார்க்காத விருது இது. அவருக்கு நன்றி சொல்லி போனை வைத்து விட்டேன்.பொதுவாகவே  புத்தக விமர்சனம் செய்பவர்களுக்கு தமிழ் சூழலில் பெரிய அங்கீகாரம் கிடையாது. அதை எதிர்பார்த்தும் அவர்கள் செயல்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 முதல் 25 புத்தகங்கள் வரை பேச , எழுத செய்கிறேன். அதை ஒரு கடமையாக தான் நினைக்கிறேன். புத்தகங்கள் படிக்க ஒரு போதும் சோர்வு அடைந்தது கிடையாது.

புத்தகங்களை படிப்பதும் அது குறித்து நண்பர்களிடம் விவாதிப்பதும் ஆரம்பம் முதல் என்னிடம் இருந்து வரும் பழக்கம். இந்த கருத்துக்களை எழுதினால் அந்த குறிப்பிட்ட புத்தகத்துக்கு கவனம் கிடைக்குமே என நண்பர்கள் சொன்ன போது மதிப்புரைகளாக சிற்றிதழ்களில் , இணைய இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். பின் புத்தக வெளியீட்டு  கூட்டங்களில்  விமர்சன உரை நிகழ்த்த சில நண்பர்கள் என்னை கூப்பிட  ஆரம்பித்தனர். கவனம் கிடைக்காத புத்தகங்களுக்கு சின்ன கவனமாவது கிடைக்க வேண்டும் என்று தான் புத்தகங்களை குறித்து முக நூலில் தொடர்ந்து எழுதி வருவதன் காரணம். பல புதிய எழுத்தாளர்கள், அறியப்படாத எழுத்தாளர்கள் என்று கவனப்படுத்தி வநதுள்ளேன். மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறேன்.
நடுவில் இரண்டு ஆண்டுகள் எழுதாமல் இருந்தவனை , தீராநதியில் புத்தக விமர்சனங்கள் எழுத வைத்து மீட்ட  பெருமை கௌதம சித்தார்த்தன் அவர்களையே சாரும். படி விருது கிடைத்துள்ள நேரத்தில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் எப்போதும் ஆதரவாக இருந்து புத்தகங்கள் படிக்கும் ஆசையை தூண்டிக் கொண்டே இருக்கும் நண்பர் விநாயக முருகனுக்கும் எனது நன்றிகள்.
சில புத்தகங்களை அணுகும் போது ஏற்படும் பிரச்னைகளை களைய உதவுபவர் நண்பர் ஆர்.அபிலாஷ் . அவருடனான உரையாடல்கள் பல புத்தகங்கள் படிக்க காரணமாக இருந்துள்ளது. அவருக்கும் நன்றி.
உங்களது தொடர்ந்த செயல்பாடுகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது என வேடியப்பன் குறிப்பிட்டார். தேர்வு குழுவுக்கும் எனது நன்றிகள். இதை எனக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். தொடர்ந்து புத்தகங்கள் குறித்து பேசுவேன். எழுதுவேன். நன்றி நண்பர்களே ...சிறந்த வாசகர்கள் விருது பெற்ற நண்பர்கள் மணிவண்ணன் பார்த்தசாரதி, நாச்சியாள் சுகந்தி இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,