Wednesday, November 24, 2010

தேனீர் கோப்பையில் பெய்த மழை





மதுரை புத்தகத் திருவிழாவிற்குப் போவது என்பது உண்மையில் ஊர்த்திருவிழாவிற்கு போவது போன்ற உற்சாகம் தரும் எண்ணமாகவே கடந்த 4-5 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அழகிரி மற்றும் பூப்புனித விழா கட்- அவுட்டுகள் மதுரையின் நிலக்காட்சியின் ஒரு பகுதியாக மாறிவிட்ட போதும். நுண்மையான கலை இலக்கியச் செயல்பாடுகள் கொண்ட வாசகர்கள், எழுத்தாளர்களின் கேந்திரமாக மதுரை வளர்ந்து வருவதும் அதன் வசீகரங்களில் ஒன்று. கழுத்திலும் கையிலும் ஏராளமான நகை அணிந்த ஆண்களுடன் நவநாகரிக யுவதிகளின் நகரமாகவும் மதுரை மாறிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ‘பாரிÕல் அமர்ந்திருந்தபோது அங்கு பெண்களே இல்லையே என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் சொன்னார், ‘இதன் நவநாகரிக மாற்றங்கள் ஒரு தோற்றம் மட்டுமே. ஆணாதிக்க சாதிய சமூகப் பண்பாட்டின் மூர்க்கம் கொஞ்சம்கூட குறையாத ஊர் இது’ என்று.

புத்தகக் கண்காட்சிகள் எத்தனை எத்தனை வினோதமான வாசகர்களை, மனிதர்களைக் கொண்டுவருகிறது என்பது பார்த்து தீராத வினோதம். ஒருவர் Òஎனக்கு பழனி பாரதி ரொம்ப ‘க்ளோஸ்’ என்று என்னிடமும், ‘மனுஷ்ய புத்திரன் எனக்கு ரொம்ப க்ளோஸ்’ என்று பழனி பாரதியிடமும் வந்து மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார். நானும் சாருவும் உயிர்மை ஸ்டாலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா வந்தார்.

சாருவிடம் ‘நீங்கள் சாருநிவேதிதா தானே.”

‘ஆமா. . .’

‘சார். . . உங்க ஓ. . . பக்கங்கள் சூப்பர்!’

‘அது நான் இல்லை. ஞானி.’

‘ஓ. . . அப்ப ஞானபானு ஸ்டால்ல இருந்த அவர்தான் நீங்கன்னு நினைச்சுட்டேன்.’’

அந்த அம்மா என் பக்கம் திரும்பி ‘மனுஷ்ய புத்திரன் சார் வணக்கம்’ என்றார். சரியான பேர் சொன்னதால் நான் சாருவை நோக்கி ‘உங்களைவிட நான்தான் பாப்புலர்’ என்றேன். அந்த அம்மா அதைக் கவனிக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். ‘ஆனா, உங்க ஒரிஜினல் நேம் நம்பிராஜன் தானே?’ முத்துக்கிருஷ்ணன் சொன்னார், ‘நவீன எழுத்தாளர்களுக்கு கிடைக்கத் துவங்கியிருக்கும் திடீர் பாப்புலாரிட்டி நிறையப் பேரை பதற்றமடைய வைத்திருக்கிறது. நானும் எழுதணும்னா என்ன செய்யணும்னு நிறையப் பேர் கேட்கிறாங்க. . . நம்மளையெலாம் பார்த்தவுடன் இவனே எழுத்தாளன் ஆயிட்டான், நாம ஆக முடியாதா என்று யோசிக்கிறாங்க’ என்றார் விசனத்துடன்.

மதுரை புத்தகக் கண்காட்சியின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளில் ஒன்று கவிதை வாசிப்பு. தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெறும் அந்த நிகழ்வு ‘நவீன கவிதை மொழிக்கு ஆற்றி வரும் பங்களிப்பு’ குறித்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கிறேன். தமுக்கம் மைதானத்தில் நானும் தேவதச்சனும் சமயவேலும் கொட்டுகிற மழையில் டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் நின்றிருந்த கூரை ஒழுகி தேநீர் கோப்பையில் மழை பெய்ய ஆரம்பித்தது (ஜென்). வேறு வழியில்லாமல் கவிதை வாசிப்பு அரங்கிற்குள் ஒதுங்கினோம். ஆனால் அப்படி ஒதுங்கியபோது மழையைப் பார்க்காமல் மேடையைப் பார்ப்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தோம். அப்போது தான் மேடையில் சிறப்புரையாற்றிவிட்டு இறங்கி வந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பிரியத்துடன் வந்து பேசிவிட்டு அவசரமாக விமானத்தைப் பிடிக்க விரைந்தார் (அந்த அவசரத்திலும் உயிர்மை நூல் வெளியீட்டு விழா தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு புகைப்படத்தைப் பற்றி அங்கதம் மிகுந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லி விட்டுச் சென்றார்). கவிதை வாசிப்பில் ஒருவர் தனது சொந்தக் கவிதை, பிடித்த தமிழ்க் கவிஞர் கவிதை, பிடித்த பிறமொழிக் கவிஞர்கள் கவிதை என்று வாசிக்க வேண்டும். உமா மகேஸ்வரி வந்தார், என் கவிதையை வாசித்தார். சக்தி ஜோதி வந்தார், என் கவிதையை வாசித்தார். இந்திரா பிரியதர்ஷினி வந்தார், ‘மூத்த கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கங்கள்’ என்றார். அருகில் இருந்த சமயவேல் ‘போன வருஷமும் இதுதான் நடந்தது’ என்றார். விடுவாரா பூபதி, Ôஎங்கள் மூத்த முன்னோடி கவிஞர்கள் தேவதச்சன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்று சொல்லி மூன்று பேரின் கவிதைகளையும் வாசித்தார். ஒருகணம் நரைகூடி கிழப்பருவமெய்தி கொடுங் கூற்றுக்கிரையென பின்மாயும் உணர்வில் துவண்டேன். தேவதச்சன் அருகில் இருந்து நான் திடீரென அடைந்த முதுமையை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்து அருகில் அமர்ந்துகொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணக்கமான ஒரு மன நிலையில் இருந்த தருணம் அது.

கைலாஷ் சிவன் ததும்பிக்கொண்டிருந்தார். ‘டேய். . . பிரமிள் பேரைச் சொல்லுங்கடா. . . அவன ஏண்டா மறைக்கப் பார்க்கிறீங்க’ என்று இடையிடையே சப்தமிட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் அதைக் கவனிக்காத மாதிரி பாவனை செய்தபடி கவிதைகளில் கவனம் செலுத்த முயன்றது. சுகிர்தராணி கவிதை வாசிக்கத் தொடங்கியபோது, கைலாஷ் சிவனின் குரல் அதிகரித்தது. தன்னுடைய செருப்புகளைக் கழற்றி மேடையை நோக்கி நடந்து செல்லும் பாதையில் எறிந்தார். எனக்குப் பதற்றம் அதிகரித்தது. நான் அருகில் இருந்ததால் என்னுடைய தூண்டுதல் என்று நினைக்க அதிகம் வாய்ப்பிருந்ததால் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடலாம் என்று பார்த்தால் வெளியே ஒரே மழை. நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் கடைசியில் இருந்த கவிஞர் சின்னச்சாமியின் (துணை ஆணையர், சட்டம், ஒழுங்கு, மதுரை மாநகர்) முகத்தை பரிதாபமாகப் பார்த்தேன். அவர் எல்லா எழுத்தாளர்களிடமும் பிரியமும் இணக்கமும் கொண்ட அருமையான மனிதர். யூனிஃபார்மில் காவலர் புடைசூழ பயமுறுத்தும் தோரணையில் இருந்தாலும் குதூகலமான மனநிலையில் இருந்தார். கைலாஷ் சிவனைச் சமாதானப்படுத்த முயன்றார். கைலாஷ், பிரமிள் பெயரை யாரும் சொல்லாதது பற்றி டெபுடி கமிஷனரிடம் தொடர்ந்து புகார் செய்துகொண்டேயிருந்தார். சின்னச்சாமி மேலேயே அவர் தடுமாறி விழுந்தபோது காவலர்கள் பதற்றத்துடன் ஓடி வருவதும் சின்னச்சாமி அவர்களைப் போகச் சொல்லிவிட்டு கைலாஷை சமாதானப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கூட்டம் முடிந்ததும் சின்னச்சாமியிடம், ‘என்ன சார், போலீஸ் பாதுகாப்புடன் புரட்டஸ்டா” என்றேன். ‘இவனோட லெவல் தெரியாம அளவுக்கு மீறி வாங்கிக் கொடுக்கிறானுங்கள்ல.. அவனுங்கள உள்ள போடணும்’ என்றார் சிரிப்பு மாறாமல்.

மதுரை புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் உயிர்மை ஏற்பாடு செய்து வரும் கூட்டங்களின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஹோட்டல் சுப்ரீமில் எஸ். ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்களின் வெளியீட்டுக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். செகாவின் மீது பனி பெய்கிறது, காண் என்றது இயற்கை, குறத்தி முடுக்கின் கனவுகள், இருள் இனிது ஒளி இனிது ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற புதிய சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. பிரபஞ்சன், சாரு நிவேதிதா, பாரதி கிருஷ்ணகுமார், கலாப்ரியா, அருணன் ஆகியோர் நூல்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினர். அருணன் ஆய்வாளருக்கு உரிய பாங்கில் தன் கருத்துகளை முன்வைத்தார். கலாப்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவம் மிகுந்த வரிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பாரதி கிருஷ்ணகுமார் பேசியபோது 2 நிமிடங்களுக்கு ஒருமுறை அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவை வெறுமனே நகைச்சுவை துணுக்குகளால் அல்ல. மிக நுட்பமான வாசிப்பிலிருந்து பெருகும் இன்பத்தை அவர் தனது பேச்சு முழுக்க வாசகர்களிடம் பரவச் செய்தார். பிரபஞ்சன் ஒரு எழுத்தாளனின் கதையைச் சொல்லும்போது அவனுக்கே அதைப் புதிதாகத் தோன்றச் செய்வார். அன்றும் அவரது பேச்சு அத்தனை புத்துணர்ச்சி மிகுந்ததாக இருந்தது. சாரு நிவேதிதா பேசத் தொடங்கிய முதல் கணமே பார்வையாளர்களிடம் மிக நெருக்கமான உறவை உருவாக்கிக் கொள்பவர். அதற்குப் பிறகு அது பேச்சு அல்ல, மனப்பூர்வமான அந்தரங்கமான ஒரு உரையாடல். எஸ். ராம கிருஷ்ணன் ஆன்டன் செகாவைப் பற்றி அன்று நிகழ்த்திய சிறப்புரை அவரது மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்று. செகாவின் நூற்றி ஐம்பதாம் ஆண்டில் மதுரை என்ற ஊரில் அவரைப் பற்றிய பேச்சை மன நெகிழ்ச்சியுடன் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்த காட்சி இலக்கியத்தின் எல்லையற்ற நிலப்பரப்பினை ஒருகணம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

மதுரைக் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் என்னை மட்டுமல்ல, கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரையுமே வியப்பிலாழ்த்தியது. ஏராளமானோர் நின்றுகொண்டும் அரங்கிற்குள் நுழைய இடமில்லாமலும் வெளியிலும் இருந்தார்கள். தொலைதூரங்களில் இருந்தெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். எம்.எஸ். நாகர்கோயிலில் இருந்து வந்திருந்தார். சுரேஷ்குமார இந்திரஜித் சொன்னார், ‘இவர்களில் 90 சதவிகிதம் பேரை மதுரையில் நடக்கும் எந்தக் கூட்டத்திலும் நான் பார்த்ததில்லை. எவ்வளவு இளைஞர்கள், புதிய முகங்கள்... ஒரு புதிய வாசகப் பரப்பு இது.’’ என்று. இந்தக் கூட்டம் நடத்தியதன் மிகப்பெரிய அங்கீகாரமாக, பாராட்டாக இதையே நினைக்கிறேன்.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து சென்னையில் இன்னொரு கூட்டத்தை உயிர்மை ஏற்பாடு செய்திருந்தது. செப்டம்பர் 18 ஷாஜியின் இசையின் தனிமை நூல் குறித்து ஒரு விமர்சன அரங்கினை நடத்தினோம். மதுரைக் கூட்டம் பற்றி சுரேஷ்குமார இந்திரஜித் கூறிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக்கொள்ளும் விதமாக ஃபிலிம் சேம்பர் அரங்கம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறு விதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி Òகவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக... மனுஷ்ய புத்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை’’ என்று வாக்குறுதி அளித்துக்கொண்டிருந்தார் (அருண்மொழி நங்கைக்கு அடுத்த படியாக எனக்கும் ஜெயமோகன் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுரம் இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று. ஜெயமோகன் விளக்கங்களால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சமாதானம் அடைந்திருப்பார்களோ இல்லையோ, உயிர்மையின் எழுத்தாளர்களை அகோரப் பசியுடன் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது புதிய பதிப்பாளர் சிறிய நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். மேலும் மதுரைப் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் என்னிடம் கை குலுக்கியதையெல்லாம் தனது நல்லியல்பின் அடையாளம் என்று வேறு எழுதியிருந்தார் (கடவுளே, அவருக்குத்தான் ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிய எவ்வளவு பெருமைகளை அவர் மனதில் பூக்கச் செய்கிறாய் நீ?). சாரு நிவேதிதா அவருடைய புத்தகத்தைக் கிழித்ததற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்பது ஜெயமோகனுக்கு நன்கு தெரியும். ஜெயமோகனின் தொண்டர்களைப்போல ஜெயமோகன் முட்டாள் அல்ல. ஆனாலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏதாவது ஒரு கற்பனை எதிரி வேண்டுமே. மேலும் அவர் என்னுடன் உறவை முறித்துக்கொள்வதாகத் திரும்பத் திரும்ப அறிவிப்பது அந்த முடிவின் மீதான அவரது தடுமாற்றத்தையே காட்டுகிறது. அந்த முடிவை நானும் அவரு மாகச் சேர்ந்துதான் எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். வாழ்க்கையில் இடம் பெற்ற ஒருவரை எப்படி ஒரு தரப்பாக டைவர்ஸ் செய்யமுடியும்? இதற்கு முன்பும் அவர் பல முறை உறவை முறித்துக்கொண்டிருக்கிறார். நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. இப்போதும் பொருட்படுத்தவில்லை (அவரும் கொஞ்ச நாளில் அதை மறந்துவிடுவார். இப்போது அதை நினைவில் வைத்திருக்கும்படி அவரது தொண்டர்களால் வற்புறுத்தப்படுவதால் சங்கடப்படுகிறார். தொண்டர்கள் விஷயத்தில் ரஜினி எப்படி நடந்துகொள்கிறாரோ அதே விவேகத்துடன் ஜெயமோகனும் நடந்துகொள்வது நல்லது).

மேலும் ஜெயமோகன் ‘நான் இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன்’ என்று வேறு தன் வலைப்பதிவில் அறிவித்தார். நான் ஜெயமோகனின் தீவிர ரசிகன் என்பதால் அவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக நவீன இலக்கிய உலகின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நண்பர் விஜய மகேந்திரனுக்கு போன் செய்தேன். ‘விஜய்... ஒரு முக்கியமான விஷயம்... நாளைக் கூட்டத்தில் ஒரு பெரிய ரகளை நடக்கப்போவதாகத் தகவல். . . இளையராஜா ரசிகர்கள் ஜெயமோகன் தலைமையில் நாளை ஷாஜியை கேரோ செய்யப் போகிறார்களாம்... இதற்கான பிளான் ஊட்டிக் கூட்டத்திலேயே தயார் செய்யப்பட்டு விட்டதாம். அனேகமாக ஷாஜிக்கும் எனக்கும் அடி விழலாம் என்று தோன்றுகிறது. எனவே நான் கூட்டத்திற்கு வரமாட்டேன். எனவே எனக்குப் பதில் சாருவை வரவேற்புரை நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் கேரளாவில் இருந்து விமானத்தைப் பிடித்து வந்துகொண்டிருக்கிறார்’ என்றேன் பதற்றமான குரலில்.

நான் நினைத்தது நடந்தது. அடுத்த 1 மணி நேரத்தில் தொடர்ச்சியாகத் தொலை பேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. Ôநாளைக்குக் கூட்டத்தில் ஏதோ பிரச்சினையாமே’ என்று தொடர்ந்து விசாரிப்புகள். ஷாஜியே லைனில் வந்தார்.

‘என்ன சார்... ஏதோ கேள்விப்பட்டேன்.’

‘ஆமா ஷாஜி, ரொம்ப பதற்றமா இருக்கு.’

‘சார், போலீஸ் புரடக்ஷன் கேட்கலாமா?’

‘கேட்கலாம்.. ஆனா என்னன்னு கேட்குறது?’

‘இந்த மாதிரி இளையராஜா பிரச்சினைன்னு...’

‘ஷாஜி, இளையராஜா பத்தி நீங்க எழுதின கட்டுரை..ஜெயமோகன் கூட்டம் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகள் என எல்லாத்தையும் போலீஸ்கிட்ட எப்படி எக்ஸ்ப்ளெய்ன் பண்றது? அவனுங்க கடுப்பாகி நம்ம மேலயே ஆக்ஷன் எடுக்க வாய்ப்பிருக்கு.’’

‘சார் இந்த கனிமொழி, தமிழச்சி கிட்டயெலாம் ஏதாவது சொல்லி ஏற்பாடு பண்ண முடியாதா?’

‘அதெல்லாம் சரி வராது ஷாஜி. எனக்கு நிறைய டாக்டர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் கூட்டத்துக்கு வரச் சொல்லிடலாம். நமக்கு என்ன நடந்தாலும் அவங்க உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடுவாங்க.’

ஷாஜி போனை வைத்துவிட்டார்.

கூட்டம் மலேசியா வாசுதேவனுக்கு சிறப்புரை செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அவரை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். அவர் பாடிக் கேட்டு என் இளமைக் காலத்தை நிறைத்த எண்ணற்ற பாடல்கள் அந்தக் காலகட்ட நினைவுகளுடன் நெஞ்சில் அலைமோதின. மேடையில் ஜெயமோகன் எனக்குப் பக்கத்தில் தான் அமரவேண்டியிருந்தது. எனக்கு அவரது பெருந்தன்மைக்கு கிடைக்கும் இன்னொரு சந்தர்ப்பம் பற்றி எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது (விதி வலியது என்பதையும், இந்த உறவை முறிக்கும் விவகாரம் எல்லாம் ரொம்ப சிக்கலானது என்பதையும் அவரது தொண்டர்கள் இன்னொரு முறை உணர்ந்துகொண்டிருப்பார்கள்).

பிரபஞ்சன் தனது உரையை ஆரம்பித்தார், ‘தமிழனுக்கு எப்போதும் தொழுவதற்கு ஒரு கால் வேண்டும்.’ கூட்டத்திலிருந்து பெரும் கரகோஷம் எழுந்தது. ஒரு விமர்சகனின் பரிசீலனைகள் நமது கலையனுபவம் குறித்த பொதுவான முடிவுகளை எவ்வாறு மாற்றக்கூடியது என்பதை நௌஷாத் அலி, மதன்மோகன் என்ற தனது அனுபவங்கள் வழியே விவரித்தார். கலை விமர்சனங்களின் வழியே உருவாகி வளர்கிறது என்பதையும் வெறுமனே தொழுபவர்கள் கலைக்கு வெளியே இருப்பவர்கள் என்பதையும் தனக்கே உரித்தான மிக கம்பீரமான குரலில் அவர் அந்த அரங்கத்தில் பரவச் செய்தார். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தப் பேச்சு கூட்டத்தின் மொத்த பாதையையும் தீர்மானித்தது. அடுத்துப் பேச வந்த ஜெயமோகன், மலேசியா வாசுதேவனின் கால்களை தொட்டு வணங்குவதாகக் கூறி தனது உரையை ஆரம்பித்தார். வெகுசன கலையை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஒரு கோட்பாட்டுரீதியான தரப்பினை முன்வைத்து விரிவாகப் பேசிய ஜெயமோகன் மக்களின் உணர்வுகளின் வழியாகத்தான் அக்கலைஞர்களை மதிப்பிட வேண்டும் என்றார். (இளையராஜாவுக்குப் பொருந்தும் இதே விதி வெகுஜன கலைஞர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பொருந்தும்.) இறுதியில் ஷாஜி முன் முடிவுகளற்று தனது கட்டுரைகளை எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேச்சினிடையே, ‘இளையராஜா... இளையராஜா’ என்று பெயர் மட்டும் தொடர்பில்லாமல் அடிக்கடி வந்து போனது. எதற்காக அந்தப் பெயர் சொல்லப்படுகிறது என்று யாருக்கும் புரியவில்லை. (கூட்டம் முடிந்ததும் ஒரு வாசகர் சொன்னார்: இளையராஜாவுக்கு ஜெயமோகன் எவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்று எப்படித் தெரியாதோ அதேபோல ஜெயமோகனுக்கும் இளையராஜா எந்த காரணங்களுக்காக அற்புதமான இசையமைப்பாளர் என்பதும் தெரியாது. இந்தக் கூட்டணியின் பலமே இதுதான்).

அடுத்துப் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், “எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டு மட்டும்தான்” என்று தொடங்கி ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கையை இசை எப்படி இட்டு நிரப்புகிறது என்பதையும் இசை நமக்கு உருவாக்கும் உணர்ச்சிகளையும் மனச்சித்திரங்களையும் பற்றி ஒரு துல்லியமான படிமத்தை தனது பேச்சின் வழியாக உருவாக்கினார்

முத்தாய்ப்பாக இயக்குனர் மணிரத்னம் உரையாற்றினார். இன்று இணையம் எல்லோரும் விமர்சகர்களாகும் ஒரு சூழலையும் வாய்ப்பையும் அளித்திருக்கிறது. இந்தச் சூழலில் கலையைக் கறாராக மதிப்பிடக் கூடிய ஷாஜி போன்ற விமர்சகர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றார்.

ஷாஜி தனது ஏற்புரையில் இசை தொடர்பான தனது செயல்பாடுகள், அணுகுமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தேன். முதன் முதலாக ஷாஜியின் குழந்தையைப் பார்த்தேன். சட்டெனத் தூக்கி அணைத்துக் கொண்டபோது அத்தனை களைப்பும் நீங்கியதுபோல இருந்தது.






Monday, November 22, 2010

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

'அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.' இது மார்க்வெசின் 'நூற்றாண்டு காலத்தனிமை' நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலைப்kalapriya படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

காலமாற்றத்தில் நிலைவுடைமை சார்ந்த செல்வ வளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவுதான் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலின் மையப் படிமம். படிப்படியாக சிதையும் குடும்பம் ஒன்றின் கடைசி குழந்தையாக, படிப்படியாக நேரும் இழப்புகளில் பங்கேற்பவராகவும் நுட்பமான பார்வையாளனாகவும் இந்த நினைவுக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார், கலாப்ரியா.

நிலங்கள் ஒவ்வொன்றாக விலையாகின்றன. குடும்பத்தின் அந்தஸ்துக்கு அடையாளமான நகைகள், பொருட்கள் விற்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாகப் புழங்கப்பட்டு குடும்ப நினைவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட, பழைய கைவினைத் திறனுக்கு சாட்சியாக இருந்த பாத்திரங்கள், ஓவியச் சட்டகங்கள் வெளியே போகின்றன. அக்காலத்தில் செல்வ வளமையின் அடையாளமாய் பாதுகாக்கப்படும் இரும்புப் பெட்டியும் விற்கப்பட்டு அது இருந்த இடமும் வெறுமையாகிறது. இது காலப்ரியாவின் அகத்தில் நடப்பது.

கலாப்ரியா, இச்சிதைவு குறித்து எழுதிச் செல்வது இறந்தகாலம் தொடர்பான ஏக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல பழம் பெருமைகளையும் மரபையும் கிண்டலுடன் சீண்டவும் செய்கிறார். வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்த வெள்ளி நாணயம் ஒன்றை நண்பனுடன் சேர்ந்து விற்றுவிட்டு, புரோட்டா சாப்பிடுவதற்காக செல்லும்போது அவரால் இப்படிச் சொல்ல முடிகிறது. இதை நான் ஒரு கவிதையாக சில வார்த்தைகளை வெட்டி மடித்திருக்கிறேன். இக்காட்சியில் வரலாற்றின் இயங்கியல் போக்கு நிதர்சனமாகப் பதிவாகியுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின்
மேற்குகோபுர வாசல் அது
கழுவேற்றிமுடுக்கு என்று பெயர்
அங்கே எங்கு கழு இருந்தது
எனக்குத் தெரியாது

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள

ஆபிரகாம் ஓட்டலில்

ரெண்டு ரொட்டியும்
சால்னாவும்
90 பைசா.

தனது பழைய வீட்டின் இடிபாடுகளை உதிர்த்தபடி சமூக கலாசார மாற்றங்கள் சுழிக்கும் முச்சந்தி வெளி அவனை வசீகரிக்கிறது. அங்கே பழையவை, கனத்த நினைவுகளுடனும் துக்கத்துடனும் தன்னுடன் சேர்ந்திருக்கும் கதைகளை மிச்சம் வைத்துவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.
கலாப்ரியா என்ற கவிதை ஆளுமையின் நிகழ்வு, தமிழகத்தில் சமூக அரசியல் கலாசாரத் தளங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட எழுச்சி மற்றும் பண்பு மாற்றங்களுடன் தொடர்புடையது. நிலவுடைமை சார்ந்த மதிப்பீடுகளும் உற்பத்தி உறவுகளும் பலவீனப்பட்டு, நவீன மயமாதலும் அதுசார்ந்த மதிப்பீடுகளும் எழுச்சிபெறும் காலம் கலாப்ரியாவினுடையது. சமத்துவத்தை வலியுறுத்தி பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த வெகுமக்கள் எழுச்சியும் அதுபெற்ற அரசியல் அதிகாரமும், சமூகப் பிரிவினைகளைத் தளர்த்தி நவீன கல்வியின் மூலம் கடைப்பட்டோரும் மேம்படும் வழிகள் திறக்கப்பட்ட சரித்திர நிகழ்வு அது. இக்காலகட்டத்தில் தான் பாகுபாடுகள் நிலவிய மரபான பொதுவெளிகள் உணவு விடுதிகள், திரையரங்குகள், பொருட்காட்சிகள், அரசியல் மேடைகள் ஆகியவை உருவாகின்றன. புதிய வண்ணங்களுடன் புதிய துக்கம் மற்றும் பிறழ்வுகளுடன் குறுக்குமறுக்கான உறவுச் சமன்பாடுகள், கொண்டாட்டங்கள், பிரத்யேகச் சடங்குகள் மற்றும் குழுக்குறிகள் தோற்றம் கொள்கின்றன. (அப்போது அறிமுகமான பொருட்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திடத்தன்மை இருந்தது. விநோதத்தின் கண் சிமிட்டலுடன் அவை இருந்ததை உணரமுடிகிறது.) இந்நிகழ்வுகளில் சராசரி பங்கேற்பாளனாகவும் நுட்பமான பார்வையாளனாகவும் ஒரு சாதாரணனாக கலாப்ரியா கரைந்திருக்கிறார். அக்காலத்திய சினிமா, அரசியல், மாணவர் போராட்டம், தெரு அரட்டை தொடங்கி குடி, பெண்கள் உள்ளிட்ட சில்லறைச் சல்லித்தனங்கள் வரை தன் பிராயகால நினைவுகளாக எழுதிச்செல்லும் கலாப்ரியா, ஒரு காலகட்டத்து தமிழ் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராகிறார்.

ஒரு தேவாலயத்தில் பிரார்த்திக்கும் அனுபவத்தைப் போல், கூட்டு மன எழுச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவ பகிர்வையும் சாத்தியப்படுத்தி, பின்பு மொத்தமாக தமிழ் வாழ்வையே நிர்ணயிக்கும் மதமாகவே மாறிப்போன சினிமாவின் வெகுஜனக் கலாசார வரலாறை ஒருவர் இதில் வாசிக்க இயலும். இந்த கூட்டு மன எழுச்சியையும் ஞாபகங்களையும் பொருத்தமான பழைய பாடல் வரிகளினூடாக எழுப்ப முயல்கிறார், கலாப்ரியா. பொதுவாக கவனிக்கப்படாத சினிமா சுவரொட்டி வடிவமைப்பாளர்களின் பெயர்கள் முதல் ஒலிப்பதிவாளர்கள் வரை விஸ்தாரமாக இந்நூலில் சர்ச்சிக்கப்படுகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நினைவு மீது சினிமாவைத் தவிர வேறு எதுவும் இத்தனை தாக்கத்தை செலுத்தியிருக்குமா என்பது கேள்விக்குரியது. இந்தப் பொதுநினைவின் சாராம்சமாக விளங்கும் கலாப்ரியாவின் இந்த நூல் தமிழ் வாசகர்களை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ரயில் நிலையமாகச் சென்று தாரால் இந்திப் பெயர்களை அழித்தபடி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்கள் படிப்படியாக குறைந்து செங்கோட்டை வரும்போது கலாப்ரியாவும் அவரது நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். எங்கு போவது என்று இலக்கில்லாமல், நடக்கிறார்கள். தார்மீக உணர்வும் லட்சியங்களும் தோற்றுப்போய் இலக்குகளற்ற அவநம்பிக்கையின் பாதை அந்த இளைஞர்கள் முன்பு விரிவதை எந்த கூடுதல் அழுத்தமும் இல்லாமல் உணர்த்திச் செல்கிறார்.

பழைய மதிப்பீடுகளும் பழைய உணர்வுகளும் அங்கங்கு கண்ணாடித்தூசி போல் துக்கத்துடன் அனைத்தின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. நிலவுடைமை சார்ந்த குடும்பங்கள் சிதையும் போக்கிலேயே, பாரம்பரிய ஞானம் என்பது போஷிப்பவர்கள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதையே வாழ்க்கை முறையாகவும் அடையாளமாகவும் கொண்ட தொழிலாளர்களும் கைவிடப்படுகின்றனர். கல்தச்சர்கள், கண்ணாடிக்கு ரசம் பூசுபவர்கள், கைமருத்துவம் பார்க்கும் குறவர்கள் தங்கள் சுயத்துவம் கூடிய படைப்பழகு துறந்து காலத்தின் பொது வெயிலில் ஆவியாகின்றனர். அவர்களுக்கேயுரிய புராணிகங்களை வரலாற்றைச் சுமப்பதுபோல் கவிஞன் இந்நூலில் சுமந்து திரிகிறான். ஆடியிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பாதரசத் தூசிகளின் மினுமினுப்பு போல கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூலில் அவை சேகரமாகியிருப்பது அழகானது. ஏனெனில், துக்கம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷங்கள் தனிப்பட்டவை.

இதன் நடுவில் ஆலங்கட்டி மழை வீடுகளுக்கு இடையே பெய்கிறது. அபூர்வமாகப் பெய்யும் ஆலங்கட்டியைப் பகிர்வதில் ஸ்பரிசிக்கவே இயலாத ஆண் பெண் கைககள் தொட்டு உறவாடுகின்றன. ஆலங்கட்டியைப் போன்ற கணநேரக் காதல் புதியதா, பழையதா என்று தெரிவதற்குள் கரைந்துவிடுகிறது. மற்றாங்கே கவிதையில் முழுமையடையாத தாபமாக மழை தகரத்தில் உக்கிரமாகப் பெய்கிறது.

ஒரு புனைவில் கவிஞனின் கண்கள் எங்கு பதிந்திருக்கின்றன. அவை எதை அடிக்கோடிடுகின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நவீன கவிதையில் துல்லியமான நிலவியல் அடையாளத்துடன் சமகால வாழ்வின் உக்கிரமான சித்திரங்களாலான யதார்த்தத்தை தீவிர அங்கதத்துடன் முன்னுரைத்தவை கலாப்ரியாவின் கவிதைகள். புகைதையில் புதுமைப்பித்தனுக்கு சமமான சாதனை இது. மற்றவர்களும் மற்றவையின் இருப்பும் துள்ளத்துடிக்க இவர் கவிதைகளில் தான் முதலில் இடம்பிடித்தன. தன்கால வாழ்வுக்கு எதிர் வினையாற்றி, ரௌத்ரம் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதல் வெளிப்பாடு அது.

மாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறுவிளைவிக்கலாம் என்று பசியற்ற காகங்களைத் தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. பிறரின் துக்கம் தன் அனுபவத்தின் மீது ஏறி கலவரம் புரிய, புறக்கடைகளில் நரகலையும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் மிதித்தபடி சோரங்கள், இழப்புகள், அபத்தங்களை, மறைபகுதிகளை தரிசிக்க நேர்ந்த வலியிலிருந்து ரத்தத்தால் எழுதப்பட்டவை அவர் கவிதைகள்.

நினைவுதான் மரணத்தைவிட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது, கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம், மரண பீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து, சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை. கிட்டத்தட்ட பைத்தியத்திற்கு பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள் இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.

திருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலை வாசித்த அனுபவத்திலிருந்து, புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளை பிணைக்கும் சரடு என்ன? இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.

திருநெல்வேலியின் மனநிலப் பரப்பு கோவிலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இருப்பது. சமயமும் தத்துவமும் சேர்ந்து வீடுகளுக்கு இடையே நெகிழாத சுவர்களை ஏற்படுத்தி, ஒருவரின் தனிமையைக் கூடத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. காமமும், தாபமும் புணராமல் வெயிலில் முறுகிக் கொண்டிருக்கும் இடம் அது. தன் அனுபவமே கற்பிதமோ என்ற மயக்கத்தில் ஆறு இருக்கிறது... இல்லை... தேர் இருக்கிறது... இல்லை... வாழ்வு இருக்கிறது... இல்லை என்ற கயிற்றரவு மனநிலையிலேயே நீடிக்கிறது. லோகாதாயமான கனவுகள் இல்லாத நிலையில், அந்த இடம் படைப்பு என்னும் கனவு வழியாகவே தன்னைத் தொடர்ந்து ஆற்றிக்கொள்ளவும் உரையாடவும் செய்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் பொருளா34838_105318686188593_100001313875575_44080_6688702_nதாரம் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பல நகரங்களுக்கு ஈடாக அது எந்த மாற்றங்களுக்கும் உட்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டுமே திருநெல்வேலியை நிகழ்காலத்துக்குள் வைத்திருக்கிறது. இங்கு கல்விபெற்ற இளைஞர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் நிலையில், அது கோபுரத்தின் பழைய நிழலுக்குள்ளேயே மறைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் படைப்புகளில் விசாரணையாகவும் காதலாகவும் அவலதரிசனமாகவும் கழிவிரக்கமாகவும் வெளிப்படுவது திருநெல்வேலியிலிருந்து மீறத்துடிக்கும் எதிர்வினைதான்.

பண்டிகை காலங்களில் ஏகாந்தத்திற்காகவும் சில நேரம் துக்கத்துடனும் நான் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றிருக்கிறேன். ஊரே பண்டிகையில் திளைத்துக் கொண்டிருக்க, நண்பகலில் குறுக்குத்துறை படித்துறையில் யாரோ ஒருவராவது தனிமையில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருப்பார். வட்டப்பாறையில் துவைக்கும் சப்தம் கோவில் மண்டபத்தில் எதிரொலிக்கும். அங்கே யாராவது துவைத்துக்கொண்டிருந்தால் அது கிழக்கே இருக்கும் ரயில் பாலத்துக்கு எதிரொலிக்கக்கூடும். நட்டநடு வெயிலில் யாருமற்ற ஆற்றில் ஒருவர் துணி துவைக்கும் சப்தத்தில் விளக்க இயலாத தனிமை உள்ளது; அபத்தம் உள்ளது; தீவிரமான தனிமையை உணர நேரும் மரண பிரக்ஞை உள்ளது. இந்த சப்தத்தை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையில் அமர்ந்து புதுமைப்பித்தனும் ஒரு வேளை கேட்டிருக்கக்கூடும். அவரது 'செவ்வாய் தோஷம்' கதையில் ரத்தக்காட்டேரி அடித்து இறந்துபோன நபரின் சடலம் புதைக்கப்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்கிறது. படைப்பென்னும் ரத்தக் காட்டேரியால் தீண்டப்பட்டது இவர்கள் தான் போலும்.


Wednesday, November 17, 2010

ஒரு வாசகரின் கருத்துக்கள்...என் புத்தகம் பற்றி..

நகரத்திற்கு வெளியே







நான் போன தலைமுறை எழுத்தாளர்களையே படிக்காததால் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களை படிக்கவே ஆரம்பிக்க வில்லை. சமீபத்தில் ஒரு புத்தக கடை நண்பரிடம் புதிய எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு பல்ப் வாங்கியது என் மனதில் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் முதல் முதலில் நான் படித்த புத்தகம்தான் நகரத்திற்கு வெளியே. தலைப்புதான் வெளியே படிக்கும் போது நம்மை உள்ளே கொண்டு செல்கிறது புத்தகம்.

10 கதைகள் உள்ள தொகுப்பாக இருந்தாலும் என்ன வெகுவாக பாதித்தகதைகளை மற்றும் இங்கு பகிர்கிறேன். மேலும் இது விமர்சனம் அல்ல, ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தாய்க்கு எல்லா குழந்தையும் அழகுதான் ஆனால் பார்ப்பவர்களின் பார்வைதான் மாறுபடும். கண்டீப்பாக விஜய் மகேந்திரன் கொடுத்தது அவரின் சிறந்த பிள்ளைகளைத்தான் அதில் என்னுடன் அதிகம் உறவாடிய, என்னை எனக்கு நினைவு படுத்திய குழந்தைகள் எனக்கு மிக அழகாக தெரிகிறார்கள் அவர்களைப்பற்றி மட்டுமே நான் எழுத ஆசைப்படுகிறேன். இதை படித்து என்னை விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்கு இல்லை ஏனெனில் இது என் எண்ணம் உங்கள் எண்ணத்தை ஒத்திருக்க வேண்டும் என்பது என் தவறல்ல.

நான் எப்போது எழுத்துக்களை ரசிப்பவன் இல்லை சில நேரங்களில் நமக்கு கருத்துடன் சேர்ந்து எழுத்தும் ரசிக்க கிடைக்கும் போது என் சந்தோசம் மேலும் அதிகமாகிறது. சமீபத்தில் ரெட்டைத்தெரு படித்த போது என்னால் எழுத்தை மட்டுமே ரசிக்க முடிந்தது கருத்துக்கள் காணாமல் போய் ஒரு ஆயாசம் தான் வந்தது. இதில் அந்த ஆயாசத்தை விஜய் மகேந்திரன் எனக்குத் தரவில்லை.

சிரிப்பு நான் இனி எப்போது சிறுகதைகளைப்பற்றி சிந்தித்தாலும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும் ஒரு கதையாக இருக்கும் .

ஒரு வேலையில்லாதவனிடம் சோகம் எப்போதும் இளையோடிக் கொண்டே இருக்கும். எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது அதை அப்பட்டமாக எனக்கு திருப்பி காட்டியது இந்த கதை. நானும் எத்தனையோ நாட்கள் சாப்பாடு இல்லாமல் கோவில் வாசலில் தனிமையில் அழுதிருக்கிறேன். இந்த கதை எனக்கு ஊதிய பலூனில் குண்டூசி ஏற்றியது போல் இருந்தது, படித்த வேகத்தில் என் கண்ணில் நீர் துளிக்க வைத்தது.

அடுத்து ராமநேசன் எனது நண்பன்.. வாழ்க்கையில் சில வேலைகளின் நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்முடன் இருக்கும் சிலரால் நம் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் அப்படிப்பட்ட ஒருத்தன்தான் இந்த ராமநேசன். எனக்கு ராமநேசனைப்போல் நண்பர்கள் கிடையாது ஆனால் நானே ஒருகாலத்தில் ராமநேசனாய் வாழ்திருக்கிறேன்.

இருத்தலின் விதிகள் ஒரு சாமானியனின் வாழ்க்கையை அப்பட்டமாக தோலுரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஒரு வாசிப்பாளனின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. ஒரு சாதரண குடும்பத்தில் வாசிப்பாளனாக இருப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும், 50 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் 100 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இடையில் வரும் பத்திரிகைவெளியீட்டாளரின் பாத்திரம் மூலம் பத்திரிக்கையாளர்கள் மீதான சாயப்பூச்சை தெளிவாக உரித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வியல் விதிகளே இவரின் இருத்தலின் விதிகளாய் இருக்கிறது.

நகரத்திற்கு வெளியே ஆண் எல்லா நிலைகளிலும் ஆண்தான் என்பதை சொல்லும் சிறுகதை இந்த கதையின் முடிவு பாதியிலேயே என்னால் யூகிக்க கூடியதாய் இருந்தது. இதுபோன்ற கதைகளில் சுஜாதா கைதேர்ந்தவராக இருந்தாலும் எழுத்து நடையில் முற்றிலும் வேறுபடுகிறார் விஜய் மகேந்திரன்.

இதுப்போல் ஒவ்வொரு கதைகளும் வேறு வேறு களங்களை கொண்டதே இந்த தொகுப்பின் தனித்துவமாய் கருதுகிறேன்.

விஜயமகேந்திரனின் எழுத்துகள் மென்மேலும் பண்பட வாழ்த்துக்கள்.

-
மதன்செந்தில்


http://madhansendhil.blogspot.com/2010/11/blog-post.html

Sunday, November 14, 2010

” ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்

11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.

2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:
“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “
சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.

நான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.:
திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.
இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,
பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர்
; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப் போகவேண்டும்.

==சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com

Wednesday, November 10, 2010

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


ஆர்.அபிலாஷ்

விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன? வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.



அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல்”. ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?

Monday, November 8, 2010

முதல் ஆணியக் கவிதை-ஸ்ரீபதி பத்மநாபா




எண்பதுகளின் இறுதி வருடங்களில் தமிழ்நாட்டில் முதல் கணினி பட்டப்படிப்பு அறிமுகமானபோது அந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட மவுஸ்களில் அவனும் ஒருவன் - அன்றைய கணினிகளில் மௌஸ்களைக் காண்பது மிக அரிது. மவுஸ் இல்லாமல் கணினியை இயக்க முடியுமா என்று கேட்காதீர்கள். அன்றெல்லாம் அலைபேசியில்லாமல்கூட வாழ்ந்தவர்கள்தானே நாம். அன்றைய கணினி யுகம் பற்றி குறைந்தபட்சம் 386 கட்டுரைகளாவது எழுத முடியும். அது பின்னர் எப்போதேனும். இன்றைய பேசுபொருள் வேறு.

கணினி அறிவியல் மாணவனாக இருந்தபோதும் அன்று கல்லூரியின் பிரதானக் கவிஞனாக அறியப்பட்டவன் அவன்தான். கையில் கணையாழி கொண்டிருக்கும் விசித்திர ஜீவியாக கணினி மாணவிகள் விலகவும் கலை மாணவிகள் அணுகவுமான இயல்பினனாயிருந்தான். அப்போது நடைமுறையிலிருந்த கடைக்கால நெம்புகோல் கவிதைகள் புனைவதில் மட்டுமல்லாது எண்சீர்கழிநெடிலடி விருத்தங்கள் செய்வதிலும் தான் நிபுணன் என்பதாகவும் நினைத்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது மலையாளக் கரையோரம் சென்று வந்து கொண்டிருந்ததால் மலையாளத்தின் 'அக்ஷர ஸ்லோகம்' எனும் கவிதைச் செயல்பாடு பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்.

அக்ஷர ஸ்லோகம் என்பது செய்யுள் சொல்வதற்கான ஒரு போட்டி. சென்ற தலைமுறையில் எந்த கேரள கிராமத்தை போய்ப் பார்த்தாலும் அம்பல மரத்தின் சுவட்டிலோ இல்லத்து முற்றங்களிலோ இப்படிப்பட்ட அக்ஷர ஸ்லோக சபைகள் காணக் கிடைத்திருந்தன. இங்கு ஸ்லோகம் என்பதற்கு மந்திரம் என்பதல்ல பொருள்; செய்யுள் என்பதே.

அக்ஷர ஸ்லோகம் என்பது இன்றைய அந்தாக்ஷரியின் முன்னோடி என்று சொல்லலாம். 4 அடிகளுடைய செய்யுட்கள். தானே இயற்றியதாகவோ பிரபல புலவர்கள் இயற்றியதாகவோ இருக்கலாம். முதல் நபர் ஒரு ஸ்லோகம் சொன்னவுடன் அந்த ஸ்வோகத்தின் மூன்றாவது அடியின் முதல் எழுத்தில் அடுத்த நபர் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்க வேண்டும். அந்த ஸ்லோகங்கள் பூந்தானத்தின் ஸ்ரீகிருஷ்ண கருணாமிர்தத்தில் இருந்தும் இருக்கலாம். எரணாகுளம் ஹோட்டல் சாப்பாடு பற்றி தானே இயற்றியதாகவும் இருக்கலாம்.

எட்டாண்டு எத்திய தயிரும் என் சிவனே சுண்ணாம்பு சோறும் புழுக்
கூட்டம் தத்திடும் ஊறுகாயும் அய்யோ கசப்பேறிய பொரியலும்
கெட்டபலாவில் மோரூற்றியின்னும் கெடவைத்த குழம்பும் இம்
மட்டில் பட்சணமுண்டு வெளிவரலாம் எரணாகுளம் ஹோட்டலில்.

அன்று முதல் தானும் தமிழில் இதுபோன்ற முயற்சிகளைச் செய்யலானான். எது கையில் கிடைத்தாலும் எதுகையாய் மாற்றி ஒரு செய்யுள் புனைந்து விடுவான். உதாரணத்திற்கு இரண்டு:
(முறைப்படி சீர் பிரிக்காமல்)

1. பாடினாள் பின்னாடியும் காட்டினாள் முகம்
ஏந்தியளித்திட்டாள் முத்தம் இதழி னுட்புகுந்து
கூடினாள் தள்ளிப்போய் கல்யாணப் பந்தரின்கீழ்
வாந்தியெடுத்திட்டாள் முட்டாள்.

2. மைக்கேல் ஏஞ்சலோ வைரஸ் புகழ்

ஊஞ்சலாடும் மனது கேட்கின்றதோர் நாள் லீவு
காஞ்சு கிடப்பாள் அனிதா மேட்னிஷோ போவதற்காய்
வாஞ்சையில் பூட்டுதே கம்ப்யூட்டர் - மிக்கயில்
ஏஞ்சலோ வைரசே நீவாழ்.

இப்போது வலையுலகில் தமிழில் மரபுக் கவிதைகளும் மலையாளத்தில் அக்ஷர ஸ்லோகங்களும் உலகமெங்குமிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறன்றன. மேற்கண்டவற்றை விட நவீன பாடுபொருட்களில் மரபுக் கவிதைகள் வகைதொகையின்றிக் கிடைக்கின்றன இணையத்தில்.

ஆனாலும் அக்ஷர ஸ்லோகம் பற்றி எண்ணும்போதெல்லாம் அவனுக்கு மஹாகவி காளிதாஸனோ அல்லது மாடமனை திரிவிக்ரமன் பட்டதிரிப்பாடோ நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. திரிவிக்ரமன் அக்ஷரஸ்லோகத்தில் விற்பன்னர். ஒரு முறை மஹாகவி காளிதாஸன் முதன்முதலில் எழுதிய ஸ்லோகம் என்று ஒரு சாதனத்தை சொல்லிக் காண்பித்தார். அதற்கு முன் அந்த செய்யுள் உருவான இதிகாசத்தையும் சொன்னார்:

காளிதாஸன் தான்தோன்றித்தனமான கற்பனைகளில் திளைத்து எங்கென்றிலாது அலைந்து திரிந்து கொண்டிருப்பார். அவ்வாறு ஒருக்கால் கூரிருட்டினுள் காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தார். நான்காம் யாமம் தாண்டி பொழுது புலரும் வேளையே வந்து விட்டது. அந்த இருட்டுக்குள் ஒரு ஆற்றைக் கண்டார்; ஆனந்தம் கொண்டார். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து வீசி ஆற்றில் குதித்தார். அந்த சமயம் பார்த்து அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஒரு யுவதி அங்கு வந்தாள். எப்போதும் அந்த இருளில் வந்து ஆற்றில் குளிப்பது அவள் வழக்கம். வழக்கம் போல அருகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவளும் ஆடைகள் முழுதும் களைந்து ஆற்றில் இறங்கினாள். நீரில் மூழ்கிக் கிடந்த காளிதாஸன் வெளிவந்து தலையைச் சிலுப்பிப் பார்க்கையில் அவரின் முன்னால் அவள். அதிர்ச்சியில் உறைந்துபோயினர் இருவரும். ஆனாலும் அவர்களின் அனிச்சை உணர்வுகள் விழித்தே யிருந்தன. ஒரு கையால் தன் தனங்களையும் ஒரு கையால் தன் அல்குலையும் மறைத்துக் கொண்டாள் அவள். கையறு நிலையில் காளிதாசனுக்குள் ஒரு கவிதைதான் முகிழ்த்தது:

ஹே பாக்யவதீ நாரீ
ஏக ஹஸ்த்யேன கோப்யதே
நிர்பாக்யம் காளிதாசஸ்ய
த்விமுஷ்டிம் சதுரங்குலம்.

வியாக்கியானம்:

பெண்ணே நீ பாக்கியவதி!
ஒரு கையாலேயே உன் மானத்தை மறைத்துவிட்டாய்
பாவம் இந்த காளிதாசன் துர்பாக்கியவான்
இரண்டு கைகளை உபயோகித்தும்
நான்கு அங்குலம் மீதமிருக்கிறதே!

இதுதான் காளிதாசனின் முதல் கவிதையா அல்லது திரிவிக்ரமன் பட்டதிரி எதாவது மண்டபத்தில் எழுதி வாங்கியதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும் உலகின் முதல் ஆணியக் கவிதை இதுதான் என்று சொல்லாமில்லையா என்று கேட்கிறார்
திரிவிக்ரமன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முதல் ஆணியக் கவிதை

Tuesday, November 2, 2010

நகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள்

நகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள்


தொலைபேசி உரையாடலையே ஒரு கதைச்சொல்லியாக நகர்த்தும் விஜய் மகேந்திரனின் குரல் நடையும், இக்கதைகளின் நடையும் வெவ்வேறு விதமானவை அல்ல. நவீனம் சார்ந்து இயங்குகிற நட்புகளையும் அது தொடர்பான விவரணைகளும் கதைகளில் ஒரு மெல்லிய இழையாய் மின்னுகிறது. அந்த மின்னுதலில் உறுத்தல் இல்லாததும் கவனிப்பு பெறுகிறது. நகரத்து மக்களின் வாழ்க்கையை சொல்கிற நகரத்திற்கு வெளியேகதையாகட்டும், இன்றைய காதலின் நிஜத்தைக் காட்டும் மழை புயல் சின்னம்கதையாகட்டும், ஜரிகை கனவின் உலகத்தைக் காட்டும் ஆசியா மேன்ஷன்ஆகட்டும், ஒரு மனிதனின் அனுபவத்திற்கு மிக நெருக்கமாய் அமர்ந்து எழுதியிருப்பது போலவே, கதைகள் உணர்த்துகின்றன.

நவீனம் என்றாலே மதுவும், கசிவு, மிதத்தல் என்ற சொற்களும் இல்லாத எழுத்துக்கள் மிக மிக குறைவு. விஜய் மகேந்திரனும் விட்டு வைக்கவில்லை. அல்லது அந்த நவீனம் அவரையும் விட்டு வைக்கவில்லை என்றும் சொல்லலாம்.

அண்மைத்தீவில் மக்கள் செத்தொழிந்தாலும் என பொங்குகிற கோபம், தொகுப்பில் நிறைய இடங்களில் தன் பிம்பத்தைக் காட்டுகிறது. இந்த பிம்பம் மழை புயல் சின்னம்கதையிலும் இருக்கிறது. சென்னை மாநகராட்சிதமிழ்ச் சமூகம். அதற்கு புயல் ஒன்றும் பொருட்டல்ல. அருகாமைஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்றே வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்பதாய் சுடுகிறது பிம்பம். இந்த வெப்பம் அதே கதையில் புகை.. புகை சங்கமம் மனித சேகரம்என்றும் காற்றில் மிதக்கிறது. காலத்திற்கு மனிதனை விட்டு வைக்காத நிலைகளை கதைகளாக தந்து இருப்பதால், தொகுப்பும் பயணப்படும் நூலாகவே அமைந்து இருக்கிறது. நகரத்திற்கு வெளியேகதை பெண்களின் நிலையை சொல்கிறதா..? ஆண்களின் அடிமன அழுக்கைச் சொல்கிறதா என்கிற கேள்வியோடுதான் விவரிக்க நேர்ந்தது.

கதைகள் பல்வேறு தளங்களில் பயணம் செய்தாலும் பிறந்த மண்ணை மறக்காத தன்மை கதைகள் முழுவதும் பதிவாகி இருக்கிறது. மதுரைஎன வராத கதை ஒன்றே ஒன்றுதான். அது மண்வாசனை என்றும் சொல்லலாம். மண்ணை மறக்காத ஒரு மனதின் வாசனை என்றும் கொள்ளலாம். விதைநெல்என்பது வயல் அளவு அல்ல கையளவு என்பதை நகரத்திற்கு வெளியேசிறுகதை தொகுப்பு விதை நெல்

நன்றி கனவு,கீற்று இணையம்.