Monday, May 17, 2010

சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு

ஏற்காடு மலை ஒருவழியாய் எங்களை மேலிருந்து உருட்டிவிட்டபோது இரவு இமைகளைத் திறக்கத் தொடங்கியிருந்தது. மலைக்குன்றுகள் மேலிருந்து சேலம் நகரம் ஒளிப்புள்ளிகளாய்த் தெரிந்தன. மனிதர்களும் அந்தப் புள்ளிகளுக்குள்தான் இருக்கிறார்கள். புள்ளியைப் போன்ற மானுடர்கள் நிலத்தில் போடும் ஆட்டம்தான் பூமியின் உருண்டையைவிடப் பெரிதானது. சொல்லித் திருந்துவதில்லை மானுடம். அவனவன் அவனுக்கு பிடித்தமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறான். நான் எழுத்தாளனாய் ஆடிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் சேலம் என்னை அழைத்திருக்கிறது. ஆம் சொற்கப்பல் அஜயன்பாலா தக்கைபாபு இலக்கிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இன்னும் நிறையப்பேர் பங்கெடுத்துள்ளார்கள். அகநாழிகை வாசுதேவன் தடாகம் இணைய இதழின் ஆசிரியர் முகுந்த் ஆகியோர்தான். சேலத்திலும் அந்த மாதிரி ஒரு நிகழ்வொன்று நடக்கவிருந்தது. தமிழில் ஆறு நீண்ட கதைகள் பற்றிய விமர்சனக்கூட்டம் அது. அந்தக் கூட்டத்தின் விளைவுதான் இவ்வளவு எழுத்துகளும் என்னிலிருந்து கிளம்பியுள்ளதற்கு காரணமென்றால் மிகையாகாது.

சேலம் எங்களுக்கு இரவானது. புதுப்புது நண்பர்கள் யார் யாரோ வந்திருந்தார்கள். தக்கைபாபு எங்கள் தேவைக்கேற்ப வசதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் சத்தமில்லாமல். அவர் சத்தமின்மையை வேறு எவரிடத்திலும் நான் கண்டதில்லை என்று சொன்னால் தற்பெருமையாகாது. அவ்வளவு மெல்லிய மனமுள்ள மனிதர். அவர் இதயம் துளிர்க்கும் இலையைவிட மீன்களின் தவிட்டுக்குஞ்சுகளைவிட மிருதுவானதென்று சொன்னால் அதுவும் தற்பெருமையாகாது.

நான் பேசபேச அவர் வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே பூட்டியிருந்தார். இப்படியே போக நான் ஒரு மூலையில் படுத்துறங்கள் அவர் ஒரு மூலையில் படுத்துறங்க சேலத்தில் விடியல் கண்களைக் கசக்கியபடி எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தது. நானும் தக்கைபாபுவும் நித்திரையின் படிக்கட்டுகளில் கால் வைத்தபோது எதிர்பார்த்திருந்த கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் பொன். வாசுதேவனும் முகுந்தும் வந்திருங்கினார்கள். சிறிது உரையாடலுக்குப்பின் சேலத்தில் ஞாயிற்றின் ஒளி காட்டு வெள்ளமெனக் கிளம்பி நகரெங்கும் பிரவகித்துக்கொண்டிருந்தது.
மூன்றாவது மாடி நீண்ட அறை மாறி மாறி நீராபிஷேகம் செய்து ஆடைகள் உடுத்தி கூட்டம் கூட்டமாய்ப் படியிறங்கி காலை உணவு உண்டு வெறுத்து கூட்டம் நடக்கும் பள்ளிக்கூடவளாகத்திற்குள் நுழைந்தோம்.

நிறைய மரங்கள் தாழ்வரங்களாயிருந்தன. அதற்கு கீழ் இருக்கைகள் போட பார்த்த நண்பர்கள் இதுவரை பார்த்திராத நண்பர்கள் பழகிய நண்பர்களென கூடி அமர்ந்திருந்தனர். பழகியவருக்கு பழகியவர் அந்நியோன்யத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர். புதிது புதிதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகங்களில் மூழ்கிக்கொண்டிருந்தனர். எனக்கும் நெருங்கிய நண்பர்களும் நெருங்கமுடியாத நண்பர்களும் அறிமுகமேயில்லாத பெண்களும் வந்திருந்தனர்.

அஜயன் பாலா விழாவைத் தொடங்கினார். சுப்ரபாரதி மணியன் விழாவிற்கு தலைமையெனப் போட்டிருந்தனர். அவரும் முன்னிருக்கையில் சத்தமின்றி அமர்ந்திருந்தார். கையில் கிடைத்த புத்தகங்களைப் புரட்டியபடியே இருந்தார்.

கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி ச.முத்துவேல் பேசினார். அவர் விமர்சித்ததைவிட நாவலசிரியர் தன் நாவல் அனுபவம் பற்றிப் பேசியவிதம் மனிதமூளைகளை மயக்கும்விதமாக இருந்தது. அரசு போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி அவர் அப்படி அழகாக நகைச்சுவையாக வலியாக எழுதியிருப்பாரென்று அவர் பேச்சின் சுவராஸ்யத்திலிருந்தே தெரிந்தது. அந்தக் கிராமத்துக்காரரின் மொழி கேட்பதற்கு தேனாகவும் ரசித்து மகிழ்வதாகவும் இருந்தது.

ஜாகிர்ராஜாவின் துருக்கித் தொப்பியைப் பற்றி இளங்கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அக்கறையோடு எழுதி வந்து நிறுத்தி நிதானமாக வாசித்தார். அவர் வாசித்தது பற்றி எல்லோரும் வியந்தார்கள். நல்ல கட்டுரை என்றார்கள். அகடமிக்காக இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அதை ஆமோதிக்க வேண்டும்போல்தானிருந்தது. ஜாகிர்ராஜா எழுதி வருபவர்களில் முக்கியமானவர் என்பதைச் சபையின் பேச்சுக்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் இன்னும் அவர் தோப்பி முகமது மீரான் அளவிற்கு எழுதவில்லையென்றார்கள். எப்படியோ தமிழில் உரைநடை எழுத்தாளர்கள் அருகிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜாகிர்ராஜா இன்னும் நல்ல நீண்ட கதைகளைப் படைப்பாராகுக.

கவிஞர் கரிகாலனின் நிலாவை வரைபவன் பற்றி கவிஞர் அசதா எழுதி வந்து படித்தார். சுருக்கமாக நிதானமாக தன் வசீகரிக்கும் குரலால் வாசித்தார். நிலாவை வரைபவன் கவிஞர் கரிகாலனின் கவிதைகளின் நீட்சியாக இருப்பதாகச் சொன்னார். உதாரணமாய் சில வாக்கியங்களை அந்த படைப்பிலிருந்து வாசித்துக்காட்டினார். கரிகாலனை நல்ல கவிஞராக இவ்வுலகம் அறிந்திருக்கிறது.


கவிஞர் நேசன் ஆழி வெளியீடான தாண்டவராயன் கதை பற்றி மெய்மறந்து பேசினார். அவர் அந்த கதைகளைப் படித்து அவர் எவ்வாறு அதில் மூழ்கிப்போனார் என்பது பற்றி அதில் வரும் காட்சிகளின் ஊடாய்ச் சொல்லி சொல்லி வியந்துகொண்டே போனார். மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் மகத்தான நாவலெனச் சொல்லி தன் உண்மையான நெகிழ்த்தும் உணர்வுகளைப் பதிவு செய்தார். அதற்கு தூரன் குணா கவிஞர் நேசன் சொல்வதுபோல அது மகத்தான நாவலில்லை. பிரமாதமான நாவலென்று சொல்லலாமென்றார். உம்பர்டோ ஈகோவின் த நேம் ஆஃப் த ரோஸ் என்ற நீண்ட கதையின் பாதிப்புகளுடன் சில பகுதிகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் அந்த நாவலையும் படிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்கு அதைப் படிக்கவேண்டும். அதைப் படிக்கும் காலத்தை இந்தக் காலம் கருணையுடன் வழங்கவேண்டும்.

No comments:

Post a Comment