Wednesday, May 6, 2020

நகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்

நகரத்தின் உள்ளே இருந்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களின் நகரத்திற்கு வெளியே சிறுகதைகளை உற்றுப் பார்க்கிறேன்.

♪ கதை படித்து முடிக்கும் வரை புறச்சூழலுக்கு வாசகர் மனம் சிக்காமல் கதாசிரியர் ஆதிக்கத்தில் இருப்பதை சிறுகதை இலக்கணமாக எட்கர் ஆலன்போ குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட விஜய் மகேந்திரன் அவர்களின் சிறுகதைகள் காலத்தின் கண்ணாடியாகவே பார்க்கப்படுகிறது.
இவரின் எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி படிப்பவரின் மனதில் காட்சியமைப்பை உருவாக்கி விடுகிறது.குதிரைப் பந்தயம் போல தொடக்கம் முதல் இறுதி வரை கதை சொல்லும் உத்தி இவரை சிறந்த கதை சொல்லியாக உயர்த்தி வைக்கிறது.

சனிப்பெயர்ச்சி கதையின் தொடக்கத்தில் தினசரிகளில் வரும் ராசிபலன்கள்,கிசுகிசுக்கள் என்று கதையின் போக்கு பயணப்பட்டு கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளரின் பணி அனுபவங்களை கண்முன் காட்சிகளாக விவரிக்கும் எழுத்து நடையாகட்டும்,வலது கையின் கடைசி மூன்று விரல்களை கட்டை விரலால் மீண்டும் மீண்டும் ஜோசியர் எண்ணினார் என்பதை சொல்லும் விதமும்,நண்பர் நோவாவின் மனைவி அரசியல்வாதியின் முழு தகுதிகளையும் பெற்றிருந்தாள் என்று நக்கல் தொனியில் எழுதுவதாகட்டும் கதை முழுவதும் மட்டுமல்ல..இறுதியிலும் தினசரியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்து விடுகிறார்.

இருத்தலின் விதிகள் கதை வாசிப்பு பழக்கம் உள்ள இருவரை பற்றியது என்றாலும் கதை முடிவில் ஒரு அழுத்தமான பாதிப்பை கொடுத்து விடுகிறது.பழைய புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்புதான் மனிதனுக்கும் என்ற பேருண்மை.வீட்டை மறுக்கப்பட்ட உரிமைகளின் கழகம் என்கிறார்.

சிரிப்பு சிறுகதையில் பூங்காவில் சந்திக்கும் ஒருவனின் சிரிப்பு அமானுஸ்யமாக இருந்தாலும் இவரின் எழுத்துக்களால் மனக்கசப்புகள் அழுகையாக வழிகின்றன.வசைமொழிகளுக்கும் வண்ணங்கள் உண்டு என்று போகிற போக்கில் கருப்பு,சிவப்பு மற்றும் பச்சை என்று வானவில் கூட்டுகிறார்.

ராமநேசன் சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை படிக்கும் வாசகர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்து இருப்பார்கள்.கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளாக வாழ்க்கையோடு விளையாடியவன் சாமியாராக போக நினைத்து போலிச்சாமியாரிடம் சேர்ந்து திரும்பி வருகிறான்.மனநிகழ்வுகளையும் எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தி விடுகிறார்.

மழை புயல் சின்னம் - சென்னை வானிலை அறிக்கை பற்றி மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலித்து கதையின் சம்பவங்கள் மூலம் வாசகர் மனதில் புயலை கிளப்பி விடுகிறார்.காதலியை நினைவுபடுத்தும் சம்பவங்கள் மின்விசிறிக்கு சமமாக சுற்றுகின்றன என எழுத்தின் மூலம் காதல் புயலை மனதில் மையம் கொள்கிறது.

நகரத்திற்கு வெளியே இன்னும் நந்தினி நர்சிங் ஹோம்கள் உள்ளன.இளம்பெண்களின் மனதில் காதல் ஏற்படுத்தும் அதிர்வலைகள்,அதன் பின்விளைவுகள் பற்றி விவரித்தாலும் நகர நாகரிகம் பதை பதைப்பை உண்டாக்குகிறது.நீல நிற ஆடை காதலுக்கு மட்டுமா?

அடைபடும் காற்று-சிறுகதை வடிவம் எழுதுபவரின் மனோதர்மம் என்று கூறுவார் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.பேரடைஸ்ஸா டிரைவ் இன்னில் சந்தித்து நட்பாகும் இரண்டு முதிய தம்பதிகளின் கதை என்றாலும் கடிதங்கள் வழியாக கதையை நகர்த்தும் போக்கு இரசிக்கும் விதமாக இருக்கிறது..கடிதம் ஒன்று...சுபம்..கடிதம் இரண்டு...எல்லாம் சுபமயம்.

ஊர்நலன் - அரசமரத்தடிக்கு வரும் ஊர் விஷயங்கள்,கிராமத்து திருவிழாவின் வழுக்கு மர நிகழ்வு,சாராயம் காய்ச்சுபவனின் கட்டப் பஞ்சாயத்து என நீளும் கதையில் செல்வேந்திரன் வளர்ச்சி வீழ்ச்சி இறந்த பின்னும் செய்தி தாளில் வாழ்கிறது.

காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்- குழந்தைகளுக்கு கருப்பு தாத்தா,இளைஞர்களுக்கு கருப்பசாமி பெரியவர்களுக்கு கருப்பையா என்பவருக்கு 80 வயதிற்கு பின் கண்பார்வை ஔி இழந்து போனாலும் காதுகளால் தன்னை சுற்றி நடப்பதை கிரகித்து கொள்கிறார்.இளம் வயதில் கன்னுக்குட்டி முதல் திருமணப் பெண் வரை மீட்டு வந்தவரின் பேத்தியை மீட்க முடியாமல் போவது பெரும் சோகம்.கட்டிலை கடக்கும் குருவிகளை அடையாளம் காண்பவர்..தன்னை மற்றவர் திட்டுவதை காதால் கேட்பவர் முதல் முறையாக கண்ணில்லை என்று உணரும் இடம் சிறப்பு.

ஆசியா மேன்சன் - சினிமா மோகம் கொண்டு கோடம்பாக்கம் வரும் ராசுவை பற்றியது.வானின் நட்சத்திரம் போல சினிமா நட்சத்திரமாகி விடலாம் என்ற கனவின் மீது எழுதப்பட்ட கதை.ராசுவை சுற்றி நடக்கும் சம்பவங்கள் பய உணர்வை தூண்டி..நகரத்தின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.நுரைக்கும் பீரின் உத்வேகத்தோடு பயணிக்கும் கதையில் ஆசியா மேன்சனை கிழட்டு யானை என வர்ணிப்பது சிறுகதைக்குள் யானை சவாரி.

சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல் புதிய இலக்கிய வடிவத்தை குறிக்கும் தனிச்சொல் என்று கூறுகிறார் பிராண்டர் மாத்யூ.
நகரத்திற்கு வெளியே சிறுகதைகளில் புதிய கதைக்களம்,நம் மனதிற்கு நெருக்கமான இடங்கள்,உரையாடல்களில் தனி கவனம் என நூல் முழுவதும் இலக்கிய இரசனை இதயம் கவர்கிறது.சிறுகதை விரும்பிகள் இவரின் எழுத்தை பிடித்து சென்று வரலாம் நகரத்திற்கு வெளியே..!
பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.

  - வே.மு.ஜெயந்தன்

2 comments:

  1. மிகச் சிறப்பானதொரு விமர்சனம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  2. மிகச் சிறப்பானதொரு விமர்சனம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete