Friday, August 27, 2010

Quotes from a man


Great Quotes ... Hope you enjoy reading & have a laugh as well.


When a man steals your wife, there is no better revenge than to let him keep her.
Lee Majors

After marriage, husband and wife become two sides of a coin; they just can't face each other, but still they stay together.
Al Gore

By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher.
Socrates

Woman inspires us to great things, and prevents us from achieving them.
Mike Tyson

The great question... which I have not been able to answer... is, "What does a woman want?
George Clooney

I had some words with my wife, and she had some paragraphs with me.
Bill Clinton

"Some people ask the secret of our long marriage. We take time to go to a restaurant two times a week. A little candlelight, dinner, soft music and dancing. She goes Tuesdays, I go Fridays."
George W. Bush

"I don't worry about terrorism. I was married for two years."
Rudy Giuliani

"There's a way of transferring funds that is even faster than electronic banking. It's called marriage."
Michael Jordan

"I've had bad luck with all my wives. The first one left me and the second one didn't." The third gave me more children!
Donald Trump

Two secrets to keep your marriage brimming
1. Whenever you're wrong, admit it,
2. Whenever you're right, shut up.
Shaquille O'Neal

The most effective way to remember your wife's birthday is to forget it once...
Kobe Bryant

You know what I did before I married? Anything I wanted to.
David Hasselhoff

My wife and I were happy for twenty years. Then we met.
Alec Baldwin

A good wife always forgives her husband when she's wrong.
Barack Obama

Marriage is the only war where one sleeps with the enemy.
Tommy Lee

A man inserted an 'ad' in the classifieds: "Wife wanted". Next day he received a hundred letters. They all said the same thing: "You can have mine."
Brad Pitt

First Guy (proudly): "My wife's an angel!"
Second Guy: "You're lucky, mine's still alive."
Jimmy Kimmel

"Honey, what happened to 'ladies first'?" Husband replies, "That's the reason why the world's a mess today, because a lady went first!"
David Letterman

"First there's the promise ring, then the engagement ring, then the wedding ring...soon after....comes Suffer...ing!
Jay Leno

Thursday, August 26, 2010

வண்ணதாசன் அனுப்பிய கடிதம்..


வண்ணதாசன் அனுப்பிய கடிதம்..

வண்ணதாசன் எனக்கு பிடித்த முன்னோடி எழுத்தாளர்.அவர் என்ன சொல்வரோ என பயந்து எனது தொகுப்பை நீண்ட நாட்கள் அவருக்கு அனுப்ப விரும்பியும் அனுப்பாமலே வைத்து இருந்தேன்.. சில நாட்கள் முன்பு அனுப்பி வைத்தேன்...இன்று எனக்கு ஒரு கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்,...அந்த கடிதம் ஒரு முன்னோடி எழுத்தாளன் எவ்விதம் இளையவனிடம் உரையாடல் கொள்ள வேண்டும் என்பதன் சாட்சியாக இருந்ததால் இங்கு அதை வெளியிடுகிறேன்..

..அன்புமிக்க மகேந்திரன் ,
வணக்கம்.
உங்களுடைய தொகுப்பிற்கு என் வாசிப்பில், ‘கேட்கக்
கடவன்’ என்று பெயர்.
நீங்கள் இந்திரஜித்திற்குச் சமர்ப்பிப்பதை நியாயம் செய்வது
அந்தக் கதை. காதுகள் உள்ளவன் நேர்த்தியாகச் சொல்லப்
பட்டிருக்கும் கதை.
நகரத்திற்கு வெளியே’யை விடவும் ஆசியா மேன்ஷன் மிக
அசலானது. முன்னுணர முடியாத பாதைகளும், உடனுக்குடன்
நகரம் அழிக்கிற பாதச் சுவடுகளும். தியேட்டர் இருட்டுப்போல சலனங்களை
நோக்கி நகர்த்துகிற தட்டுத் தடவி இருக்கைகளும்
விலக விலக மீண்டும் படியும் குளத்துப்பாசி போன்ற ஒளிந்த
வன்முறையும் நிரவிய நகர முகம் அதில் பதிவாகியிருக்கும்
விதம் கவனத்திற்குரியது.
ஒரு முழு வாழ்வை, புனைவற்று ஆனால் புனைவின்சுழியுடன்
சொல்லி, வெட்டவெளி வெயிலுடன்நம்மை நிறுத்துகிற ஊர் நலன்
கதையும் இத் தொகுப்பின் பொருட்படுத்த வேண்டிய பக்கங்களை
உடையது.
மஹீந்திரன். ஒரு தொகுப்பில் இவ்வளவு நல்ல கதைகள்
இருப்பதே சந்தோஷமாக இருக்கிறது.
அப்புறம் ரமேஷ் ப்ரேதனின் முக்கிய பாத்திரத்தை உங்களால்
உணர்ந்திருக்க முடிந்ததே, அதுவும் எனக்கு முக்கியமானது. அவர்களின்
கட்டுரைகளை, கவிதைகளை, கதைகளை யாரும் தவிர்த்துவிட்டு, நவீன
தமிழிலக்கியம் பற்றி முழுமைகண்டுவிட
முடியாது.
எனக்கு இத் தொகுப்பை அனுப்பத் தோன்றியதற்கும், சமீபத்திய
சில பிற்பகல்களில், என்னுடன் நீங்கள் செயத நீண்ட உரையாடல் களுக்கும் என்
மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகுகிறது.
என் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்,
கல்யாணி.சி.

SIDE EFFECTS of working in the IT sector !!!


* ** ☼ ☼** *SIDE EFFECTS of working in the IT sector !!!*** ☼ ☼*

These are real life anecdotes shared by IT workers.


Bhavik

I once left home to go to the market wearing my Infosys ID card

and did not realize till my friend asked me why I was wearing it !!!!

_____________________________________________________________

Ashok

few days back I slept at 11:30 in the night and woke up in the morning

at 7:00 and suddenly thought that I haven't completed 9.15 hours and

laughed at myself when I realised that.

__________________________________________________________

Jyotsna

One from me too...

Just after our training completion in Mysore and posting to Pune,

me and my friends went out for dinner in one of the best restaurants. .

And as I finished.. I started walking towards the wash basin with plates in
my hand..

___________________________________________________________

Abhijeet

Jus to add...

Once I was on call with my father and mom was not around.

I went on to ask, "why is she not attending the status call?"

_________________________________________________________

Anup

I don't login to orkut, yahoo, gmail, youtube, etc..

at my personal internet connection at home...

thinking it will be blocked any way.

Till I realize - I am at home.

____________________________________________________________

Rohit

Yeah sometimes it do happens with me also........ ....

keeping hands in front of tap for waiting

water to drop by itself is very frequent with me.......... .....

I jus forget that we have to turn on and off the tap......... ..

____________________________________________________________

Nidhi

Once after talking to one of my friends

I ended the conversation saying ...

" Ok bye...in case of any issues will call u back"

___________________________________________________________

Nisha

Sometimes when I mistakenly delete a message

from my mobile, I hope for a second, maybe its in the recycle bin

______________________________________________________________

Farina

I was about to throw my hand towel into the bin after drying my hand..... at
home

_____________________________________________________________

Bhabani

Once I was flashing my ID card instead of unlocking the house door with
keys.

_______________________________________________________________

Nisha

Kinda a same experience for me too..

I gave my office mail id and password to access Gmail and

wondered when they became invalid???

_______________________________________________________________

Sandy

I have a experience to share tooo ..

I was earlier working at the back office of an international Bank.

We used to 'dispatch' lot of Credit / Debit cards and

statements for the customers and track its delivery later.

Once my granma was admitted in a hospital,

my team mate once casually asked me

" howz ur granma doing now ? still in hospital ? " ...

and i replied to her " She is better now ,

she will dispatched from the hospital tomorrow !"

This was followed by a loud laugh in the entire bay !

__________________________________________________________

Sandeep

Once I went to a pharmacy n asked for a tab....

pharmacist asked whether I want 250mg or 500mg.....

I replied 256mb....thank god he didn't notice.

____________________________________________________________

Ashwin

Me getting a thought of doing an Alt+Tab while switching

from a news channel to the DVD while watching TV.

_____________________________________________________________

thanks to meena ramasubramaniam.....

குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்

தமிழில் -ஸ்ரீபதி பத்மநாபா

2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் அவருடைய மனம் போலவே குழந்தைகளுக்கானவை அல்லது குழந்தைப் பருவம் இன்னும் எய்தாத பெரியவர்களுக்கானவை. மலையாளத்தில் நா பிறழும் வார்த்தை ஜாலங்களினூடாகவும் பழமொழிகளினூடாகவும் அழகான எளிமையான அதே சமயம் பிரம்மாண்ட அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருக்கும் அவரது எழுத்திலிருந்து சிலதுளிகள்...



1. பசிக்கும்போதுண்ணுவேன் நான்

தாகமெடுத்தால் குடிப்பேன்

களைத்தால் உறங்குவேன்

உறங்கும்போது எழுதுவேன் கவிதைகள்



2. எழுதுவதென்பதல்லவென்பதுதானெழுத்து



3. பின்னால் மட்டும் மடங்கும் கால்களால் தானே

முன்னால் பாய்கிறான் மனிதன்



4. நானிப்படியில்லாமலிருந்தா

லிப்பேரண்டமுமிப்படியில்லாமல் போகும்!

அடேங்கப்பா நானே!



5. நானொரு கடலுருவாக்கினேன்

நானொரு கரையுருவாக்கினேன்

முடியவில்லை ஒரு நெய்தலுருவாக்க



6. ஒரு சலவைக்காரனிருக்கிறானென்னூரில்

எல்லோரும் அம்மணமாயிருக்குமென்னூரில்

அந்த சலவைக்காரனும் அம்மணன்தான்



7. அதிசயமான பொருள் கொண்டுதானே

இறைவன் என்னைப் படைத்தான்

பின் அதில் மிச்சமிருப்பதை வைத்துத்தான்

பிரபஞ்சத்தைப் படைத்திருப்பானோ!



8. நானெனும் பூவின்

நானெனும் தேனைத் தேடிப்பறக்கும்

நானெனும் வண்டை கை வீசி அழைக்கும்

விளக்காய் எரிகிறேன் நான்



9. டிரைவர் யார் கண்டக்டர் யாரென்று பாராமல் தானே

பஸ் ஏறி பயணிக்கிறோம் நாம்

அம்மையாரப்பனாரென்று பார்க்காமலேயே இம்

மண்ணில் இறங்கிய முட்டாள்கள்தானே நாம்



10. உள்ளே முழுக்க ஆவேசம்

வெளியே முழுக்க ஆகாசம்



11. பொண்ணு பாக்கப் போகையிலே

கண்ணு மட்டும் பத்தாது

கண்ணாடியும் கையில் வேணும்



(இன்னும் இருக்கிறது... அடுத்த பதிவில்...)

Saturday, August 21, 2010

a.r. ரெஹ்மான் வாழ்க்கை சரிதம்


a.r. ரெஹ்மான் வாழ்க்கை சரிதம் குறித்து சமிபத்தில் மூன்று புத்தங்கள் படித்தேன்.தமிழில் இரண்டு...ஆங்கிலத்தில் ஒன்று...இதில் ஆங்கிலத்தில் காமினி மாதாய் எழுதிய a.r rehman a storm of music[penguin books] மட்டும்தான் பொருட் படுத்ததக்கது,தமிழில் வெளியானவை வழக்கம் போல் டௌன்லோட் எழுத்துக்கள்...இந்த மூன்று புத்தகங்களை பற்றி எழுத உள்ளேன்..

Tuesday, August 17, 2010

வி.கெ.என். 'பையன் கதைகள்'

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய சாகித்ய அகாடமி விருது வாங்கியது. இந்த தொகுப்பிலிருந்து 40 கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு சிறுகதையாகவும் மொத்தமாக ஒரு நாவலாகவும் அனுபவபடுகிறது. விரைவில் புத்தகம் வெளியாகும். இங்கே முதல் கதையை பதிகிறேன். நீளமாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமான கதை. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

'பையன் கதைகள்' மலையாள மூலம் : வி.கெ.என். தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

1. கர்னல்

அக்காலம் பையன் டிஃபன்ஸ் காலனியில் வசித்து யமுனையில் குளித்து ஹவுஸ்காஸில் சம்போகித்து வந்தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் காலம். ஒண்ணும் பிரச்னையேயில்ல. டிஃபன்ஸ் காலனின்னு சொன்னாலே ஒரு பந்தாதான். தலைநகரத்தின் மிக மேன்மையான வசிப்பிடமென்றும் மிகவும் அழகான வேசிகளின் கூடாரமென்றும் சௌந்தர்ய ஆராதனையின் தைமூர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகிற இடம் அது. உங்களுக்கு டிஃபன்ஸ் காலனி முகவரியிருந்தால் நகரத்தின் ஃபுல்குடிமகன் ஆகிவிட்டீர்கள் என்றும் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றும் அர்த்தம். ரொம்ப சீக்கிரம் நுழைந்தவர்களில் பையனும் ஒருவன்.

அரைமாடியில் தான் பையன்பட்சி கூடுகட்டியிருந்தான். அரைமாடி என்றால் ஒரு மாடிக் கட்டிடத்தின் மேலிருக்கும் ஒற்றைஅறை என்பது பதவுரை. அறையைச் சுற்றிலும் சிமென்ட் போட்ட விசாலமான தளம். வேனில்காலத்தில் பரமசுகம். சிமென்ட் வெந்து பழுத்து, விடாமல் அனலடிக்கும். அறைக்குள் விசிறிக்குக் கீழே உட்கார்ந்தாலும் படுத்தாலும் கம்பளி போர்த்தி அடுப்புக்கனலில் குந்தியிருப்பதுபோலத்தான் இருக்கும். எழுந்திருக்கவே தோன்றாது. யமுனையைத் தவிர தேசத்திலெங்கும் தண்ணீர் பிரச்னையேயில்லை. கூதிர்காலத்தில் இதைவிட சுகம். பகலும் இரவும் வஜ்ஜிரத்தின் குளிரூசிமுனையில் சுகசயனம் செய்வதைப் போலிருக்கும். பீஷ்மபிதாமகனைக் கண்ணெதிரில் பார்க்கலாம். இருபத்துநாலுமணி நேரமும் ஐஸ் போட்ட தண்ணீர் பைப்பை அடைத்தாலும் தாரையாய் பிரவாகித்துக் கொண்டிருக்கும்.

இத்தனை வசதிகளிருக்கும் வீட்டுக்கு முப்பது நாளுக்கொருமுறை நூற்றியிருபது ரூபாய் வாடகை மட்டுமே பையன் கொடுத்துவந்தான். தண்ணீரும் மின்சாரமும் தனி. எல்லாம் முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். லாபம்தானென்று சொல்கிறான் பையன். மரங்களுக்குக் கீழே வசித்து டிஃபன்ஸ் காலனியின் வீட்டுரிமையாளர்களுக்கு இதை விட வாடகையை வெறுமனே கொடுக்கிற எத்தனையோ பேரை அவனுக்குத் தெரியுமாம். அதைப் பார்க்கையில் லாபம்தானே.

சர்வீசிலிருந்து விலகி வீடுகட்டி வீரசொர்க்கம் பூண்ட ஒரு மேஜருடைய மாளிகை இது. முதல் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் அவர் போர் புரிந்திருக்கிறார். ரொம்மலுடன் போரிட முடியவில்லையே என்பதாயிருந்தது இறக்கும்வரை இருந்த ஒரே துக்கம். இப்போது ரொம்மலிடமே தன் துக்கத்தைச் சொல்லித் தீர்த்திருப்பார் என்று சொல்கிறான் பையன். பையனுக்கு முகவரியைக் கொடுக்கையில் அவர் உயிரோடுதானிருந்தார். பிறகு திடீரென இறந்துவிட்டார். ஆனாலும் கடைசி நிமிடம் வரைக்கும் மரணத்தை இழுத்துக்கொண்டு போன பிடிவாத குணத்துக்காரர் அந்த மேஜர் என்பது பையனின் கருத்து.
எதார்த்த வாழ்க்கையில் சுடலைபத்ரகாளியாகவும் நடிப்பில் மேஜரின் மனைவியாகவும் இருந்த ஒரு பெண்மணிதான் எல்லா முதல்தேதியும் வந்து வாடகை வசூலித்துக்கொண்டிருந்தாள். ஒருமுறைகூட தவறாமல் வந்துகொண்டிருந்ததால் ஒருமுறைகூட தவறாமல் வாடகை கொடுக்கவேண்டியதாயிற்று பையனுக்கு. ஒரு மாதமாவது கொடுக்காமல் அந்த அமௌண்ட்டுக்கு இரண்டு நேரமும் உணவருந்த வேண்டும் என்று பையன் பலமுறைஆசைப்பட்டிருக்கிறான். வெகு காலத்துக்கு எதுவும் நடக்கவில்லை.

அப்படியிருக்கையில் ஒருநாள் கீழே முழுவீட்டில் நன்றாய் உண்டு வசித்து வந்த பெங்காலியும் அவர் குடும்பமும் ஒரு அந்தி நேரத்தில் பெட்டிபடுக்கையோடு தெருவில் இறங்கிப் போவதைப் பையன் பார்த்தான். பிறகு இரண்டு மாத காலம் வீடு காலியாய் விறைத்துப்போய் நின்றது. சரியான ஆள் கிடைக்கவில்லையென்று மேஜரின் விதவை, பையனிடம் சொன்னாள். ஐநூறு ரூபாய் தரும் யோக்யதையிருக்கிறமேல்தட்டு வாழ்க்கை வாழ்கிறவர்கள் வரும்வரை வீடு ஓய்வெடுத்துக்கொள்ளட்டும் என்பதாக இருந்தது காளியின் கணக்கு.
இரண்டுமாதங்கள் கழிந்து ஒருநாள் காலையில் பையன் எழுந்தபோது கீழே வீட்டைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகள் நடப்பதைப் பார்த்தான். ஒரு ராணுவ லாரியிலிருந்து வீரர்கள் சாமான்களை இறக்குகிறார்கள். ஆகாயத்தை நோக்கி மெஷின்கன் பொழிகிறார்கள். வடக்கன்பாட்டு பாடுகிறார்கள். சுழன்று சுவடு வைத்து வாள்வீசுகிறார்கள். பையன் ரகசியமாய் விசாரித்ததில் ஒரு கர்னல்தான் கீழ்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஒன்பது மணியளவில் மூக்குப் பிடிக்க ஜலபானம் செய்துவிட்டு பணியிடத்துக்குச் செல்கையில் அடக்கமுடியாத ஒரு பாதுகாப்புணர்வை அனுபவித்தான் பையன். யுத்தம் வந்தால் கீழே கர்னல் இருக்கிறாரே.

வேலை முடிந்து ஜகத்துக்கே உற்சவத்தை அறிவித்துவிட்டு பறந்து கூடடையும்போது பையன் கீழ்த்தளத்தில் வெளிச்சம் கண்டான். ஒரு சீமைநாயின் குரைப்பைக் கேட்டான். பயங்கரமான ஒரு பெண்குரலையும் கேட்டான். கர்னலின் தர்மபத்தினியாயிருக்கும். யுத்தத்திலும் சமாதானத்திலும் கணவனுக்கு சக்தியளிக்கும் ஏகாதசி நோன்புக்காரி. லாரியும் மெஷின்கன்னும் மறைந்துவிட்டிருந்தன. அடுத்த நாள் காலையில் கர்னலை சந்தித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மீண்டும் சுபிட்சமாக ஜலபானம் செய்து கம்பளி போர்த்தி கனலடுப்பில் உறங்கினான் பையன்.

எட்டு மணியானபோது பையன் ஜலபானம் செய்து உடை உடுத்துக் கீழே இறங்கினான். செயற்கை மார்பிள் கல் பதித்த வராந்தாவில் நடந்து காலிங்பெல் அழுத்தினான். யூனிபார்ம் போட்ட ஒரு வேலைக்காரன் கதவு திறந்தான். கை இரண்டையும் தூக்கி சரணடைந்துவிட்டதாகக் காட்டி பையன் கர்னல்சாப் இருக்கிறாரா என்று கேட்டான். போய்விட்டார் என்று வேலைக்காரன் சொன்னான். அறிக்கையை உறுதிசெய்யும்விதமாக உள்ளேயிருந்து முதல்நாளிரவு குரைத்த சீமைநாய் இரண்டு முறைகுரைத்தது. கையைக் கீழிறக்கி பையன் திரும்பி நடந்தான்.
மாலையில் திரும்பிவந்து பையன் காதைத் தீட்டிக்கொண்டு படுத்தான். பயங்கரமான பெண்குரலும் சீமைநாயின் குரலும் மட்டுமே கேட்டது. அந்தப்பிரதேசத்திலேயே எங்கும் ஆண்குரலே இல்லை. இது என்ன கர்னல்டா இவன்? பையன் தனக்குள் சொன்னான். இருபத்து நாலு மணி நேரமும் யுத்தம் செய்கிற ஒரு வித்துவான். சரி, நாளைக்குக் காலையில போய் அவனைப் பிடிச்சுக்கலாம்.
அடுத்த நாள் காலையில் மணியடித்தபோதும் வேலைக்காரன் முந்தின நாள் கதையையே சொல்கிறான். கர்னல் போய்விட்டார். ஓஹோ, வித்தியாசமான ஒரு ஜாதிப் பறவைதான் இந்தக் கர்னல், பையன் நினைத்துக்கொண்டான். சுற்றுவட்டாரப் பறவைகள் துயிலெழுந்து, பாடுவதற்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் முன்பாகவே பறந்துபோகிற ஒரு பறவை. சுற்றுவட்டாரப் பறவைகள் உறங்கிய பின்னர் மட்டுமே கூடடைகிறபறவை. அப்படியானால், கர்னலின் தர்மபத்தினிக்குத்தான் நாளின் பெரும்பான்மையான பகுதியும் வீட்டின் கமான்ட் என்றாகிறது. இன்னும் ஒரு அடி மார்ச் செய்து சொன்னால், பையன் நினைத்துக்கொண்டான்: கர்னலுக்குத் தன் சொந்த வீட்டில் பெரிய கமான்ட் ஒன்றும் கிடையாது. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தலைவரும் தர்மபத்தினியும் தங்களுடைய கமான்டுகளை எல்லை பிரித்து வைத்தமாதிரிதான். தலைவருக்கு ரெஜிமென்ட். தலைவிக்கு வீடு. போடா மயிரு என்று சொல்லி ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தபடி பையன் நடந்தான்.

ஆனாலும் வெப்பமானியின் பாதரசம் போல எரிச்சலும் பிடிவாதமும் பையனின் மனதில் ஏறிக்கொண்டன. உயிரோட இருந்தா, நாளைக்குக் கர்னலைப் பிடிச்சாகணும். பார்த்துடலாமே, எப்படிப்பட்ட ஆள்னு. இவ்வளவு நேரத்திலேயே போகிறஒரு கிளி உண்டா? அப்படி இருந்தா அதைக் கூட்டில வச்சே பிடிச்சாகணும். நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே கீழ இறங்கி மணியடிச்சு உள்ளே நுழையப் போறேன்.


பகல்போய் இரவு வந்தது. இரவு முக்காலும் போனது. புலர்காலமானபோது உடை அணிந்து பையன் டெரஸ்ஸில் பம்மியிருந்தான். ஒரு வேளை ஏழுக்கு முன்னாலேயே கிளி போவதாயிருந்தால் பிடிக்கும் விதத்தில். ஏழானது. கிளி கீழேதானிருக்கிறது என்பது உறுதியானதும், ஏழு முடிந்து ஒரு நிமிடத்தில் பையன் ஆபரேஷனை ஆரம்பித்தான். கீழேயிறங்கி வராந்தாவை வலம் வந்து மணியடித்தான். சேவகன் கதவைத் திறந்தான். அவன் வசனமேதும் சொல்லத் துவங்கும் முன்பாகவே பையன் உள்ளே நுழைந்தான். சேவகன் சடுதியில் உள்ளே விரைந்தான். என்ன வேணும்னாலும் போய்ச் சொல்லு, பையன் சொல்லிக்கொண்டான். கர்னலைப் பார்க்காமல் ஒரு அடி பின்வாங்க மாட்டேன்.

வரவேற்பறையில் பையன் காலூன்றி நின்றான். சுற்றிலும் பசுமையா யிருந்தது. பச்சை நிறத்தில் சுவர், அதே நிறத்தில் சோஃபா, தரைவிரிப்பு, கர்ட்டன், பூச்செண்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இன்னும் பல. எல்லாம் ஒன்றுக்கொன்று மேட்ச்சாய் இருந்தது. மேட்ச் செய்தது போதவில்லை என்று தோன்றும் இடங்களில் மேட்ச் பாக்சுகள் அடுக்கப்பட்டிருந்தன.

சோஃபாவுக் கீழே குனிந்து, குரைக்கும் சீமை நாய்கள் கடிக்கத் தயாராக பச்சை நிறத்தில் இருக்கின்றதா என்று பையன் பார்த்தான். ப்ளீஸ் டேக் யுவர் சீட், பையன் சொல்லிக்கொண்டான்: இங்கே ஃபார்மாலிட்டி எதுவும் கிடையாது. உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.

சோஃபாவுக்குள் தாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் பயங்கரப் பெண் குரல் கேட்டது:

யெஸ்.

பையன் பார்த்தான். பச்சை நிறக் கதவருகில், பச்சைக் கர்ட்டனை விலக்கி, பச்சை சாரியும் கையில்லா பச்சை சோளியும் அணிந்து, பச்சை லிப்ஸ்டிக் போட்டு, பச்சை நிறமான ஒரு பேரிளம்பெண் தடித்துக் கொழுத்து தளும்பி நின்றுகொண்டிருக்கிறாள். எல்லைப் போரில் முழுசாய் தோற்றுவிட்ட சேலையும் சோளியும் அவளுடைய மத்திய பாகத்திலும் தோள் ஓரத்திலும் கசங்கிப் போய்க் கிடந்தன. கர்னலின் மனைவி!
வெளிப்படையான இந்தத் தூண்டுதலுக்கு எதிர்நின்று பையன் நினைத்துக்கொண்டான்: பையா. நீ அட்டகாசமான ஒரு காளைக்குட்டிதான். உன் வாலை நீ சுருட்டி வைத்துக்கொள்.

பையன் இவ்வாறு சொன்னான்: மேலதான் தொழுவம். கர்னல் சாரைப் பார்க்கலாம்னு வந்தேன்.

அவள் சிரித்தாள்: உட்காருங்க.

சோஃபாவின் ஒரு ஓரத்தில் அவளும் உட்கார்ந்தாள். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பம் அடங்கியவுடன் அவள் கேட்டாள்: எப்படியிருக்கு இடம்?

பரவாயில்லை, பையன் சொன்னான்: ஒரு ரூம்தான் இருக்கு. கல்யாணமாகாததால அப்படியே போகுது.

ஓஹோ அவள் உரக்கச் சிரித்தாள்: நான் இந்த இடத்தைக் கேட்டேன்.

இந்த என்பதிலிருந்த அழுத்தம் பையனை உலுக்கிவிட்டது.
உனக்கு இது வேணும், பையன் சொல்லிக்கொண்டான், உன்னோட இடத்தைப்பத்தி யாராவது கேப்பாங்கன்னு நெனச்சே பாரு உனக்கு இது வேணும்.

ரொம்ப நல்ல வீடு, பையன் சொன்னான்: அருமையா இருக்கு.
சொன்னது சரியல்ல என்று பையனுக்குத் தெரிந்திருந்தது. இனி என்ன செய்ய முடியும், சொல்லிவிட்ட நிலையில்!

ஒருவேளை கர்னலின் மனைவி தான் சொன்னதை எழுதி வாங்கிக்கொள்வாள் என்று பையன் நினைத்தான். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தோட்டக்காரன் வேலை செய்திருந்த முற்றத்தைக் கண்ணாடி ஜன்னலினூடே சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள்:
நான் வந்தபோது முற்றத்தைப் பார்க்க சகிக்கலை. வேணும்னா பார்த்துக்குங்க. ஒரு மாசத்துக்குள்ளே அங்க முழுக்க ரோஜாப்பூக்களாயிருக்கும்.

அழகாயிருக்கும், எதிர்காலத்தில் மலரப் போகிறமலர்களை மனதில் கண்டு பையன் சொன்னான். நினைக்கவும் செய்தான்: நூறு மலர்கள் மலரட்டும், நூறு கர்னல்கள் தங்களுக்குள் வாள்வீசிக் கொள்ளட்டும்!

முதல் கேள்வியைத் தப்பாய்ப் புரிந்துகொண்டதால் தன் பதில் தவறாகிவிட்டது, பையன் நினைத்துக்கொண்டான். இனி என்ன பேச? யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கூந்தலிலிருந்து வீழ்ந்துவிட்ட ஒரு ஹேர்பின்னை எடுப்பதற்காக அவள் குனிந்தாள். அப்போது கழுத்திலிருந்து காதங்கள் கீழே உன்னதமான எல்லைப் பிரதேசங்களைத் தடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்த அவளுடைய சோளியின் தடைகள் கலையவும் மீட்டர் கணக்கில் சொத்து விவரக் கணக்குகள் பேரலைகளாய் உயர்ந்து பிளக்கவும் செய்தன. உத்தண்ட சாஸ்திரிகளுக்குப் பிறகு தோன்றிய மஹாஸ்த்ரீரசிகனான பையன் கண்கள் விரியப் பார்த்தான். எழுந்திரிக்கலாமா? அப்புறம்?

பையா பையா பையா! பையன் சொல்லிக்கொண்டான்: மெதுவா போ. வண்டிய கியர்ல போடு. முன்னால இருக்கறது பெரிய வளைவு!

கர்னல் வந்துட்டார்னா, பையன் நினைத்தான்: எல்லாம் போச்சு! வந்துடாதேடா கர்னல்!
அறையின் ஒரு மூலைக்குச் சென்று பச்சை முக்காலியிலிருந்த புத்தனின் சிலையைக் காட்டி பையன் சொன்னான்: அழகான சிலை. இவ்ளோ சமத்தான புத்தனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.
அவளுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. சேலையில் பொதிந்த ஒரு காலை அநாயாசமாக மறுகாலின்மேல் ஏற்றிவைத்து கையிரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்து சிரித்தவாறு அவள் சொன்னாள்:
அதை நான் வாங்டாக்கில வாங்கினேன்.

தான் பூமியை விட்டு நழுவுவதாகத் தோன்றியது பையனுக்கு. ஆனந்தவல்லி, தடியழகி, திம்மி, லூசுப் பாருக்குட்டி, பஞ்ச கல்யாணி, அதே போஸில், தான் மரிக்கும்வரைக்கும் இருக்கட்டும் என்று பையன் ஏங்கினான். அவள் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எல்லா எல்லைக்கோடுகளும் மறைந்துவிடுகின்றன. அலைகள் பின்னோக்கி அடிக்கின்றன. உன்னதமான ஆழங்களுடைய, பிரம்மாண்டமான புதையல்களைக் கொண்ட, உழுது பிளந்த மண்ணின் மணம் எழுகிற பூமிதேவி கஜம்கஜமாய் அலங்கோலமாய்க் கிடக்கிறாள். பையனின் போதம் ஒரு குடிகாரனைப் போலானது.

கர்னல் வந்துடக் கூடாதே! பையன் மீண்டும் நினைத்துக் கொண்டான். வந்தா அவனைக் கொன்னுடுவேன்.
அவளுடைய லைன் புரிந்துவிட்ட பிறகு ஒரு நிமிஷம்கூட வீணாக்காமல் பையன் தொடர்ந்து சொன்னான்:
ரேடியோகிராம் ரொம்பப் புதுமாடல் போலிருக்கே. இந்த மாடலை நான் முன்னே பார்த்ததில்லை.
ஆனந்தவல்லிக்குப் பரமசந்தோஷமாகி விட்டது. அந்த நிமிடமே அவள் பாய்ந்து தன்னை எதுவும் செய்யாமலிருந்தது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்று சொல்கிறான் பையன்.
காஸாவிலிருந்து ஒரு நண்பர் கொண்டு வந்தார்.
ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகத்துடன் அவள் சொன்னாள்.

பையன் தன்னுடைய மிக நேர்த்தியான அப்பாவித்தனத்தை முகத்தில் நிறைத்துக்கொண்டு, முன்னால் சாய்ந்து உட்கார்ந்து அவளுடைய கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான்:
க்யூரியோஸ் நிறைய இருக்கு போலிருக்கே?

லூசுப் பாருக்குட்டி உருகிப் போனதாய்த் தோன்றியது பையனுக்கு.
அவள் சொன்னாள்: ஒரு புதிய டேப்ரிக்கார்டர் இருக்கு. காமிக்கட்டுமா?
அவள் எழுந்தாள்.
அந்த நேரத்தில்தான் சேவகன் தோன்றிக் கேட்கிறான்: டிபன் வெக்கட்டுமா?

செத்தால் போதுமென்றாகிவிட்டது பையனுக்கு. இப்போது கர்னல் வந்துவிடுவார். அவருடன் உட்கார்ந்து அவள் சாப்பிடுவாள். என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ம்... போகிறேன். இன்னொரு நாள்...
ரொம்ப சந்தோஷங்க. கண்களில் துக்கத்துடன் பையன் சொன்னான். இன்னொரு நாள் வரேன். கர்னல் சாஹிபை அப்போ பாக்கலாம். பை!

கர்னல் சாஹிபைப் பாக்கணுமா? திம்மியின் கண்களில் பிரகாசம் படர்ந்தது:
வாங்க!

அவள் குறுக்கே நடந்து வராந்தாக் கதவைத் திறந்தாள். நடக்கையில் பஞ்சகல்யாணி குலுங்கவும் குலுங்கிச் சிரிக்கவும் செய்தாள். அவளுடைய பாகங்கள் தளும்பித் தெறித்து வீழந்துவிடுமென்று தோன்றியது பையனுக்கு. தெறித்து வீழந்தால், பையன் நினைத்துக் கொண்டான்: நான் அவற்றை வாரியெடுத்துக் கொண்டு ஓடிவிடுவேன். எப்போதும் திருப்பிக் கொடுக்க மாட்டேன்! என்னமோ, கர்னலைப் பற்றி இப்போ சொல்லியிருக்க வேண்டாம். எல்லாம் நாசமாப் போச்சு!

வராந்தாவில் காலிங் பெல்லுக்கு எதிராக கதவின் ஒரு பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சின்ன போர்டைக் காட்டி அவள் சொன்னாள்:

ப்ளீஸ் மீட் தி கர்னல்.

பையன் போர்டிலிருந்த இதிகாசத்தை மனதுக்குள் வாசித்தான்:
லெப். கர்னல். (மிஸ்) ரேணு, எம்.டி.

தன் காலடிக்குக் கீழே பூமி வழுக்கிப் போவதைப் போல் தோன்றியது பையனுக்கு. மீண்டும் கண்களில் நிஷ்களங்கத்தைக் குழைத்து அவளை வணங்கி நிற்கும்போது, சுந்தரிக்குட்டி உள்ளே பார்த்து இவ்வாறு சொல்வதை பையன் கேட்டான்:
டிஃபன் ரெண்டு பேருக்கு வை.

அன்று முதல் பிறகு எல்லாமே சுகம்தானென்று சொல்கிறான் பையன். இரண்டு நேரம் தேய்த்துக் குளியல், மூன்று நேரம் சாப்பாடு, புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோழிமுட்டை, ஆட்டுப்பால், மாத்திரை, தங்கபஸ்பம், உயிரோடு காட்டுப்போத்தின் இறைச்சி. என்னன்னா, பையன் சொல்கிறான், அதுக்குப் பிறகு ஹவுஸ்காஸு*க்கு போகலைன்னு அர்த்தம்.

-----------------------------------------------

*ஹவுஸ்காஸ் : டெல்லியின் பாலியல் தொழில் வீதி

Friday, August 13, 2010

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன் - சுப்ரபாரதிமணியன்

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
- சுப்ரபாரதிமணியன்

தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.

இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.

நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.

முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.

ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.

இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .

நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-

Wednesday, August 11, 2010

சமீபத்தில் படித்த குறிப்பிடதகுந்த புத்தகங்கள்...


சமீபத்தில் படித்த குறிப்பிடதகுந்த புத்தகங்கள்...

பெயர் --ஆசிரியர்-பதிப்பகம்

அமெரிக்ககாரி- அ. முத்துலிங்கம்- காலச்சுவடு -சிறுகதைகள்.


வடக்கேமுறி அலிமா- கீரனூர் ஜாகிர் ராஜா -நாவல்.

மூன்றாம் சிலுவை உமா வரதராஜன் காலச்சுவடு நாவல்..

அனல் காற்று ஜெயமோகன் தமிழினி நாவல்..



தண்ணீர் சிற்பம் சி .மோகன் அகரம் கவிதைகள்.

அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
.
மௌனபணி ரகசிய பணி மொழிபெயர்ப்பு சிறுகதைகள் காலச்சுவடு



ஆட்டுகுட்டிகள் அளிக்கும் தண்டனை ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ காலச்சுவடு.சிறுகதைகள்


நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்த

போது-ஹருகி முரகாமி -சிறுகதைகள் -வம்சி புக்ஸ்..

மரம் G.முருகன் உயிர்மை நாவல்

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் வாமு கோமு நாவல் உயிர் எழுத்து


அத்திமரசாலை என்.ஸ்ரீராம் குறுநாவல் தோழமை

நான் கண்ட மரணங்கள் கானா விஜி கருப்புபிரதிகள் தன்வரலாறு..

Wednesday, August 4, 2010

பாலு மகேந்திராவின் ''அழியாத கோலங்கள்''

பாலு மகேந்திராவின் ''அழியாத கோலங்கள்'' திரைப்படம் டிவிடி யாக ராஜ் வீடியோ விஷன் வெளியிட்டு இருக்கிறது.classic edition.149 ரூபாய் விலை.நண்பர்களுக்கு இந்த செய்தி

Tuesday, August 3, 2010

நகரத்துக்கு வெளியே ஒரு கூட்டம்

என்.விநாயக முருகன்


நன்றி உயிரோசை இணைய இதழ்

சிறுகதைகள் வாசிப்பதும், எழுதுவதும் அருகி விட்ட சூழலில் விஜயமகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே' தொகுப்பின் மீதான விமர்சனக் கூட்டம் கவனம் பெறுகிறது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் ஏற்பாடு செய்திருந்த இந்த விமர்சனக்கூட்டம், மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.

பெருநகரப் பரபரப்புகள் ஏதுமற்ற, மழை வருமா… வராதாவென்றிருந்த ஞாயிறொன்றின் மந்தமான மாலையில் டிஸ்கவரி புக் பேலஸிற்கு சென்றேன். டிஸ்கவரி புக் பேலஸ் எதிரே இருந்த தேநீர்க்கடையில் ஒரு பெண் தோளில் பையுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். கடையருகே நெருங்கும் போதுதான் லீனா மணிமேகலையும், பக்கத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஜெல்ராடையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஊரின் அழகான ‌சில பெண்கள் ஸ்கூட்டியில் தேநீர்க்கடையைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கடை மாடியில் முதல் தளத்தில் இருக்கிறது. மாடி ஏறினேன். பின்னால் தாரா கணேசன் வந்துககொண்டிருந்தார். கடைக்குள் ஏற்கனவே பொன்.வாசுதேவன், யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், ஆர்.அபிலாஷ், பாக்கியம் சங்கர் மற்றும் செல்வப்புவியரசன் இருந்தார்கள். கடந்த ஆண்டுதான் மேற்கு கே.கே. நகரில் இந்தப் புத்தகக்கடையை ஆரம்பித்தார்கள். இன்று இலக்கியக் கூட்டங்கள் குறிப்பாக பதிவர் கூட்டம் என்றால் டிஸ்கவரி புக் பேலஸ் என்று சொல்லுமளவுக்குக் கடை பிரபலமாகியுள்ளது. கடையில் இருந்த புத்தக அலமாரிகளைத் தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டால் ஐம்பது பேர் அமரலாம்.

கடை உரிமையாளர் வேடியப்பனைப் பார்த்து ஒரு ஹலோ ,சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தேன். சிறுகதைத் தொகுப்பா அல்லது கவிதைத் தொகுப்பா என்று ஒருகணம் குழம்பி விட்டது. சி.மோகன், லீனா மணிமேகலை,யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், நரன்,நிலாரசிகன், ச.முத்துவேல்,உழவன் என்று கவிஞர்கள் கூட்டமாக இருந்தது. குறிப்பாக கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர், மணிஜி மற்றும் பல தமிழ் பதிவர்களை அதிகமாக பார்க்க முடிந்தது. முன் வரிசையில் சந்திரா, நிஜந்தன் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஒருவர் முகம் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு வந்தார். அவர் கூத்துப்பட்டறை மாணவர் தம்பிச்சோழன். அவரது கவிதை நிகழ்த்துதலென்ற வித்தியாசமான நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது. பார்க்க உண்மையில் புதுமையாக இருந்தது. சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை தம்பிச்சோழன் அற்புதமாக நிகழ்த்திக் காட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய தாரா கணேசன் "கவிதை வாசிப்பது ஒரு கலை. இதுபோன்ற கவிதை நிகழ்த்துதல் கவிதையின் வீரியத்தை இன்னும் மெருகேற்றி ரசிக்க வைக்கிறது. கவிதை வரிகளுக்கு புதுப்பரிமாணம் கிடைக்கிறது" என்றார்.

தொகுப்பைப் பற்றி முதலில் பேசிய யவனிகா ஸ்ரீராமின் பேச்சு மிக அருமையாக இருந்தது. நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன. பத்திரிகை செய்திகள், அட்டைப்படங்கள், ஏன் மின்சார வயர்கள், ஒரு பேருந்தின் சக்கரத்தைப் பார்க்கும்போது கூட பாலியல் இச்சைகள் கிளறப்படும் காலக்கட்டம் இது என்று குறிப்பிட்டார். விஜயமகேந்திரன் தனது கதைகளில் பெருநகர பாலியல் சிக்கல்களை எப்படி எதிர்நோக்குகிறார் என்று பேசினார். குறிப்பாக ஒரு நகரத்துக்கு வெளியே என்ற கதையில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் முடிவற்ற காமத்தின் சுழலில் மாட்டிக்கொண்டு உழல்வதைக் குறிப்பிட்டார். கவிஞர் ஐயப்பமாதவன் பேசுகையில், "நான் இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். யாருக்கும் எனது பெயர் தெரியவில்லை. சிறுகதை எழுதும் முயற்சிக்கு வந்துவிட்டேன்" என்றார். விஜயமகேந்திரனது தொகுப்பில் நான் படித்த "இருத்தலின் விதிகள்" சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் எதிர்பார்த்தது போலவே ஐயப்பமாதவன் அந்த சிறுகதையைப் பற்றிதான் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்து பேச வந்த தாரா கணேசன் எழுதியெடுத்து வந்த விமர்சனக் கட்டுரையைக் கூட்டத்தில் வாசித்தார். ஓ.ஹென்றி கதைகளில் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். பின்நவீன காலகட்டத்தில் இதுதான் வடிவமென்று எவ்வித நிர்ணயமும் அவசியமற்றுப்போன நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. வாழ்வு நகரும் வேகத்திற்கு ஏற்ப சிந்தனையின் வடிவமும் மொழியின் வடிவமும் இலக்கியத்தின் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதைக்குத் திட்டவட்டமான முடிவு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுகதை இன்னொரு சிறுகதையின் ஆரம்பமாக இருக்கலாம். தொகுப்பிலுள்ள ‘மழை புயல் சின்னம்’ சிறுகதை மற்றும் ‘அடைபடும் காற்று’ சிறுகதைகள் பற்றி குறிப்பிட்டார். பின்னர் பேச வந்த ஆர்.அபிலாஷும் ’மழை புயல் சின்னம்’ கதையைச் சிலாகித்துக் குறிப்பிட்டார். ஆர்.அபிலாஷ் பேசும்போது மிகவும் பதற்றமாக இருந்தார். விஜயமகேந்திரனது சிறுகதையின் வெற்றியே அவரது கதைகளில் இரண்டு முரண்நிலை கதாபாத்திரங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் போக்கு என்று சொன்னவர் "ராமநேசன் எனது நண்பன்" கதையை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

விஜயமகேந்திரனின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம், சிக்கலில்லாத அவரது மொழி நடை. கதைகளை வாசிக்கையில் ரயிலின் தடதடப்பு போன்று வேகமாகக் கடந்து சென்றுவிடுகிறது. சிலவிநாடிகள் அதிர்வுகளை மறக்காமல் விட்டுச்சென்றபடி. நகரத்து வாழ்வின் சிடுக்குகள் அவரது கதையெங்கும் விரவிக் கிடந்தாலும் அவரது மொழியில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. அநேகமாக கலந்து கொண்ட அனைத்துப் பங்கேற்பாளர்களும் இதை சுட்டிக் காட்டினார்கள். கூட்டத்தில் செல்வப்புவியரசன் சொன்னது போல விஜயமகேந்திரன் எழுத்து நடை வெகுஜன பத்திரிகைகளுக்கும் பொருந்துவது போலிருக்கிறது. அதேநேரம் அவரது கவனமும் செயல்பாடுகளும் சிறுபத்திரிகைகளை நோக்கியே இருக்கிறது. தொகுப்பிலுள்ள "நகரத்திற்கு வெளியே" கதை படிக்கும்போது எனக்கு ஏனோ ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா கதை மனதின் மூலையில் லேசாக வந்து சென்றது. பெருநகரப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான உளவியல் மோதல்களை எழுதுவது விஜயமகேந்திரனுக்கு அருமையாக வருகிறது. இதை விஜயமகேந்திரன் தொடரலாம். தொகுப்பிலுள்ள ‘ஊர்நலன்,’ ‘காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன்’ போன்ற சிறுகதைகளில் அவ்வளவாக லயிப்பு ஏற்படவில்லை.

வாசிப்பனுபவம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் அவரவர் ரசனை அடிப்படையில் அவரவருக்குப் பிடித்த சிறுகதையைக் குறிப்பிட்டு பேசினாலும், எல்லோரும் சிலாகித்துக் குறிப்பிட்ட ‘இருத்தலின் விதிகள்’, ஒரு எழுத்தாளருக்கு அல்லது ஒரு இலக்கிய வாசகருக்கு சமூகம் எந்தளவு மரியாதையைத் தருகிறது. சமூகத்தை விட்டு விடலாம். அவனது குடும்ப உறுப்பினர்களிடத்து எந்தளவு மரியாதை கிடைக்கிறது. இந்தக் கதையில் வரும் முகம் தெரியாத அந்தத் தீவிர இலக்கிய வாசகரின் முகம் எப்படியிருக்கும்? அவர் ஏன் இறந்திருப்பார்? இது தொகுப்பின் இன்னொரு அருமையான சிறுகதை. பன்னிரண்டு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இரண்டு மூன்று சிறுகதைகளைத் தவிர மற்ற எல்லாமே அருமையாக வந்திருப்பதே இத்தொகுப்பின் வெற்றி. அநேகமாக விஜயமகேந்திரனது எல்லா கதைகளிலும் புறக்கணிப்பின் வலி இருக்கிறது. பெருநகரப் பரபரப்பில் முகம் தொலைத்த மனிதர்கள் சதாசர்வநேரமும் அந்த வலியை சுமந்தபடியே திரிகிறார்கள். வலியைச் சுமந்தபடியே வேலை செய்கிறார்கள். வலியை சுமந்தபடியே உண்கிறார்கள். வலியைச் சுமந்தபடியே புணர்கிறார்கள்.வலியைச் சுமந்தபடியே உறங்குகிறார்கள். வலியை சுமந்தபடியே செத்தும்போகிறார்கள்.


எல்லா இலக்கிய கூட்டங்களிலும் நடப்பது போலவே இங்கேயும் தம் அடிக்க எழுந்து சென்றபடியும், சென்றவர்கள் வந்தமர்ந்தபடியும் இருந்தார்கள். இருந்தாலும் பெரும்பாலும் கடைசிவரை அமர்ந்திருந்தார்கள்.பலரைக் கூட்டம் முடிந்து கடைக்குக் கீழே சாலையில் சந்தித்து உரையாட முடிந்தது. நேரமின்மையால் சிறுகதைத் தொகுப்பின் மீதான பார்வையாளர்களது கலந்துரையாடலை நடத்த முடியவில்லை. கூட்டம் முடிந்து எல்லாரும் கிளம்ப லேசாக மழை தூற ஆரம்பித்தது. ரம்யமான பெருநகர மழைச்சாரலில் நனைந்தபடி சைக்கிள்காரர்களும், பாதசாரிகளும், துப்பட்டாவைத், தலையில் போர்த்தியபடி ஸ்கூட்டி இளம் பெண்களும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவொருவருக்குள்ளும் சில கதைகள் இருக்கலாம். பெருநகரம் இன்னும் எத்தனைக் கதைகளைத் தன்னுள்ளே வைத்துள்ளதென்று தெரியவில்லை. எல்லாம் தெரிந்தாற்போல மழை கொட்ட ஆரம்பித்தது.

நகரத்திற்கு வெளியே / விஜய்மகேந்திரன்

விலை ரூ:50.00

உயிர்மை பதிப்பகம்

Monday, August 2, 2010

வா.மு. கோமு நேர்காணல்


""பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்!''

- வா.மு. கோமு நேர்காணல்

நன்றி : , இனிய உதயம்

வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், மண்ணின் மக்கள் பேசும் மொழியுடன் நவீன மொழியைக் கலந்து, தனக்கேயுரிய பகடி மூலம் படைப்பின் உன்னதத்தைக் கண்டடைகிறார். கோமு நவீனக் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டு எழுதினாலும், சிக்கனமான வடிவத்தில் எழுதும் சிறுகதைகளில் இவர் பேசும் விளிம்புநிலை மக்களின் அந்தரங்க யதார்த்தம் ஜி. நாகராஜனை நினைவூட்டக் கூடியது. எனினும் தனக்கேயுரிய இலக்கியச் செயல்பாட் டில் பிடிவாதமாக இருக்கும் இந்த இளம் படைப்பாளி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "நடுகல்' என்ற சிற்றிதழை யும், பின்னர் "இறக்கை' என்ற சிற்றிதழையும் நடத்தியவர். "அழுவாச்சி வருதுங் சாமி', "மண்பூதம்', "அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம்', "தவளைகள் குதிக்கும் வயிறு' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தற்போது "உயிர்மை' வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது முதல் நாவலான "கள்ளி' பரவலான கவனத்தையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. தற்போது "கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்' என்ற நாவலை எழுதி வரும் அவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் கதைகளை வாசிக்கிறபோது இசங்களின் பால் ஈர்ப்பு கொண்டு பல கதைகளை எழுதியிருக் கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே இசங்களை முற்றாக நிராகரித்து விட்டு நீங்கள் எழுதியிருக்கும் கதைகள், உத்திகளால் சிதைந்து விடாத படைப்புகளாக வெளிப்பட்டிருக்கின்றன. உண்மையில் இசங்களும் உத்திகளும் படைப்பிலக் கியத்திற்கு வலு சேர்க்கக் கூடியதா? அல்லது படைப்பை பலவீனப்படுத்தக் கூடியதா? உங்கள் எழுத்தனுபவம் வழியாக இதற்கான பதிலைச் சொல்லுங்கள்.

""தொண்ணூறுகளில்தான் இசங்கள் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதுபற்றியான தெளிவு என்னிடம் இல்லை. ஆரம்பம் கொண்டே கட்டுரைகளை நான் வாசிப்பதில்லை. கட்டுரைகள் படிப்பது என்பது எனக்கு ஒவ்வாமையாகி விடுகிறது. எனது தந்தையாரின் சேகரிப்பில் இருந்த "சர்ரியலிசம் ஒரு அறிமுகம்', "எக்ஸிஸ்டென்சியலிசம் ஒரு அறிமுகம்' ஆகிய கனமான தொகுதிகள் இன்னும் என்னிடம் உள்ளன. இன்றுவரை பத்து பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை. தமிழில் மொழிபெயர்ப்பில் வந்த போர்ஹே, மார்குவஸ் சிறுகதைகளைச் சற்று ஆழமாக வாசித்த அனுபவத்தில், நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சோதனை முயற்சியாக எழுதி வெற்றியடைந்த படைப்பு களாக அவை மாறிவிட்டன. அதற்குக் காரணம் நமது மண்ணில் எனக்குத் தெரிந்த மனிதர்களையும் நிலத்தையும் வைத்து மாஜிக்கல் ரியலிசத்தைக் கரைத்துக் குடித்துவிட்டவன்போல எழுதிக்காட்டி... குறிப்பிட்ட வாசகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுவிட்டேன். மிகச் சிரமப்பட்டு எழுதும் கதைகள் பரவலான கவனத்தைப் பெறுவதில்லை என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். இருந்தும் இன்றும் அந்த ஆசை விடுவதில்லை. பத்து கதைகளுக்கு ஒரு கதையை எனக்கே புரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தீவிர வாசகர்கள் எதையோ ஒன்றைக் கண்டுபிடித்து அதைத்தானே சொல்றீங்க என்று விளக்கினால் ஆமாம் என்று கூறிவிடுவேன்.

இசங்கள், உத்திகள் ஆகியவற்றைப் பெருமைக்கு வேண்டுமானால் சிறுகதைகளில் பயன்படுத்தலாம். பெருமைக்கு காக்கா இசி சாப்பிடப் போய், றெக்கையெல்லாம் இசி அப்பிக் கொண்டு வந்ததுபோல் ஆகிவிடாமல் சாமர்த்தியம் செய்வதன் அவசியம் இருக்கிறது! நவீன முயற்சியில் வெற்றி- தோல்வி பற்றிப் பிரச்சினை இல்லை. எப்படியாகினும் தமிழுக்கு லாபம்தான். புரியாத மொழியில் எழுதி மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேனோ என்று போர்ஹே கவலைப்பட்டாராம். எனக்கு அந்தக் கவலை இல்லை.''

தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார இலக்கியம் என்பதாகப் பிரித்து வகைப்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? கொங்கு வட்டார வாழ்வியலை இலக்கிய வழியில் பதிவு செய்த படைப்பாளிகளின் வரிசையில் உங்களுக்கான இடம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

""வட்டார இலக்கியம் என்று வகைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடு இல்லை. வட்டார இலக்கியம் என்று நகரத்தில் அமர்ந்துகொண்டு வட்டார மொழியைத் தங்களது படைப்புகளில் சிலர் உருவாக்குகிறார்கள். பேச்சு மொழியையும் உருவாக்கு கிறார்கள். இன்றுவரை நான் கிராமத்தில்தான் இருக்கிறேன். கிராம மக்களோடுதான் உறவாடுகிறேன். அது என் சில கதைகளில் இயல்பாகவே வந்துவிடும். இது எனது வட்டார பழக்க- வழக்கங்களை எனது கதைகள் வழியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகத் தெரிந்து கொள்கிறார்கள். நான் இங்குள்ள கோவில் விஷேசங்கள், இழவு காரியங்கள், திருமணச் சடங்குகள் என்று எழுதுகையில், கொங்கு வட்டார நிகழ்வுகளைத்தான் பதிவு செய்கிறேன் என்கிற எண்ணத்திலெல்லாம் எழுதுவதேயில்லை.

எனக்கு முன்பாக ஆர். சண்முகசுந்தரம் தனது நாவல்களில் இவற்றைப் பதிவு செய்தார். சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளான கவுண்டர், முதலியார் இனமக்கள் கொங்கு மண்ணில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மட்டுமே நாவல்களில் பதிவாக்கினார். நான் தினமும் உறவாடுவது விளிம்புநிலை மக்களிடம் மட்டுமே. என் எழுத்துகள் விளிம்புநிலை மக்களை மட்டுமே பேசுவது இயல்பான விஷயமாகி விட்டது. இந்த மக்களைப் பற்றி என்னைத் தவிர யாரும் இங்கு பேசவில்லை.

கொங்கு மண் விரிந்து படர்ந்திருக்கிறது. கோவையில் ஒரு மாதிரியாகவும் ஈரோட்டில் ஒரு மாதிரியாகவும் நாமக்கல்லில் ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள். ஏரியாவிற்கு ஏரியா பேச்சு வழக்கு மாறுபடுகிறது. சேலம் மாவட்டத்தில் ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த மு. ஹரிகிருஷ்ணன் கிராம மக்களின் பேச்சுமொழியை அப்படியே சுவீகரித்து எழுத்தில் வார்த்துவிடுவார். கொங்கு மண்ணைப் பதிவு செய்பவர்களில் என். ஸ்ரீராமும், க.சீ. சிவகுமாரும் முக்கியமான வர்கள். இவர்கள் நாவல் எழுத வருகையில் இதுவரை பதிவாகாத விஷயங்கள் வெளிப்படலாம். எனது "கள்ளி' நாவல் வட்டார நாவல் என்கிற வட்டத்துக்குள் சிக்கிவிட்டது. வட்டாரம் என்கிற கிணற்றினுள் இனியும் நீந்த எனக்கு விருப்பமில்லை.''

வட்டார பேச்சுமொழியின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கட்டமைப்பிற்குள் சிக்காத எளிய சொல் அடுக்குகளால் பின்னப்படும் உங்களது நவீன மொழி என்பது, விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவதற்கென்றே உருக்கொண்டதுபோல் தோற்றம் கொள்கிறது. இந்த மதிப்பீடு சரிதானா?

""கடந்த மூன்று வருடங்களாக நான் எழுதியவை அனைத்துமே விளிம்புநிலை வாழ்வியல் கதைகளே! வட்டார மொழி என்பது ஒரு உபகரணம் மட்டுமே. அது நம்பகத் தன்மையைக் கதைக்குள் உயர்த்துகிறது.

வட்டாரப் பேச்சுமொழி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது. இலக்கியம் தீர்மானிப்பது பேச்சுமொழி, உரையாடல் மட்டுமே அல்ல.

இன்னமும் சொல்வதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைத்தான் மதுரை நண்பர் கூறுவார்- சாதாரண கதைகளை சாதாரண மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதி, அதெப்படி அற்புதமாய் வார்த்தெடுக்க முடிகிறது என்று. அதுதான் சாமர்த்தியம். எத்தனையோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?

வட்டாரப் பேச்சுமொழியை என் கதைகளில் வலிந்து நான் திணிப்பதில்லை. அதுவாக வரும்போது மட்டும் பயன்படுத்துகிறேன். "உயிர் எழுத்து' வெளியீடாக வந்த "தவளைகள் குதிக்கும் வயிறு' சிறுகதைத் தொகுதியில், ஒரு ஐந்தாறு சிறுகதைகள் நீங்கள் குறிப்பிட்டது போல் அழகான வடிவத்தில் கச்சிதமாகப் பொருந்தி என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "போதை ஏறிப்போச்சு', "அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', "இந்த தடத்தில் உள்ள அனைத்து இணைப்பு களும் உபயோகத்தில் உள்ளன' போன்றவை அவை.''

கிராமிய வாழ்வைக் களமாகக் கொண்ட உங்கள் கதைகளை மொத்தமாகப் படிக்கிறபோது, ஒரு நாவலைப் படித்த அனுபவம் ஏற்படுகிறது. எனினும் உங்களது "கள்ளி' நாவல் என்று வருகிறபோது கிராமிய அந்தரங்க வாழ்வின் முகத்தை அதிர்ச்சிகரமாக முன் வைக்கிறது. நவீன தமிழ் நாவல் என்பதில் புனைவு முக்கிய செயல் முறையாக மையம் கொள்ளும் காலகட்டத்தில், புனைவை உதறிவிட்டு அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து என்பது எந்த வகையில் அடங்குகிறது?

""பாலுறவு தொடர்பான உறுப்புகள் பற்றியெல்லாம் சாதாரண மாகப் பேசுவதையே பாவமாகவும் ஒழுங்கீனமாகவும் கட்டமைத்துள்ள நீதி நியதிகள் நிலவுகின்ற சமூகத்தில், நான் வைக்கின்ற பாத்திரங்களின் உறவுகள் அதிர்ச்சிகரமானதாகத்தான் இருக்கும்.

அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து புனைவோடு சம்பந்தப் பட்டதுதான். நான் காட்டிய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புனைவை உதறிவிட்டு அந்தரங்கம் பேசும் எழுத்து இல்லை. "கள்ளி' நாவலின் முதன்மையான நோக்கமே ஒழுங்கமைக்கப் பட்டுள்ள நீதி, நியதிகளை உடைத்து நொறுக்குவதுதான்.

ஒவ்வொரு எழுத்தாளனின் முதல் நாவலும் அவனது சொந்த விஷயங்களையே பேசும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே எனது சொந்த விஷயங்கள் பல சிறுகதைகளாக எழுதப்பட்டுவிட்டன. நாவல் என்கிற களம் எனக்கு அறிமுகமில்லாதது. எனது தஞ்சை நண்பன் நட்சத்ரன்தான், "எது வருகிறதோ அதை மட்டும் செய்' என்றான். "சிறுகதை உனக்குப் பிடிபட்ட பிற்பாடு ஏன் அப்படி ஒரு முயற்சி? இருந்தும் கவனமய்யா கவனம்' என்று எச்சரிக்கை பெல் அடித்தான். தலித்தியம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதையும் பேசியாக வேண்டும் என்ற திட்டம் மனதில் இருந்தது.

எனக்கும் முந்தைய படைப்புகளை ஒரு படியேனும் தாண்டிய எழுத்தைத்தான் தமிழுக்குத் தரவேண்டும். பத்து வருடத்திற்கும் முன்பாக இம்மாதிரியான விஷயங்களை அச்சேற்றுவது என்பது சிரமமான காரியம். பாலியலில் எனக்கு நேர்ந்த அனுபவங்களையும் நண்பர்களின் அனுபவங்களையும் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. பாலியலைப் பேச வேண்டுமென்ற காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

பெயர் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதத் துணிவதில்லை. அவர்களுக்குப் பாலியலில் சொல்ல வேண்டிய விஷயங்கள் பல இருக்கலாம். தனக்கென்று உள்ள பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் அதைத் தொடரலாம். இதற்கும் பாலியல் பயிற்சி வேண்டும். அவன் எழுதுறான்; பார், நானும் எழுதுறேன் என்று பயிற்சியின்றி எழுதினால் போர்னோ வாகிவிடும். அதாவது நாய்மேல் ஏறி இசி மேல் விழுந்ததுபோல! நாய் மேல் ஏறுவானேன்; இசிமேல் விழுவானேன்?

எனது எழுத்தில் பகடி, கிண்டல் அதிகம் என்று படிப்போர் அனைவருமே கூறுகிறார்கள். அதுவும் திட்டமிட்டு அமைவதல்ல; என் இயல்பே அப்படி என்கிறபோது அதுவே எழுத்திலும் பதிவாகி விடுகிறது! வாசகர்கள் எனது நாவலோ, சிறுகதையோ பாலியலைப் பேசுகிறது என்று குறிப்பிட்டாலும், உள்ளூரத் தென்படும் வேதனை களையும் குறிப்பிடுகிறார்கள். பகடிகளுக்கும் கிண்டல்களுக்கும் பின்னால் வேதனைகளை மறைத்து வைத்தே எழுதுகிறேன். உதாரண மாக, இரண்டு வருடங்களுக்கு முன்பாக எனது ஊரின் தொலை விலுள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர், தனது மாணவியிடம் பாலியல் நடத்தையில் இறங்கி இப்போது கடுங்காவலில் இருக்கிறார். அப்போது அது வெறும் பேப்பர் செய்தி. அது மறைந்து விட்டது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை. அதை இப்போது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன். இப்படி எனக்குத் தென்படும் விஷயங்களை மட்டும் நான் எனது மொழியில் பேசுகிறேன்.''

மனித வாழ்வின் அந்தரங்கத்தைப் படைப்பிலக்கியம் ஆக்குவதில் இருக்கக்கூடிய ஆபத்துகள் என்ன? அந்தரங்க இலக்கியம் எப்போது போர்னோவாகி விடுகிறது?

""ஆபத்துகளே இல்லை. அந்தரங்கம் என்பது பொது புத்தியில் பாலுறவாக மட்டும் குறிப்பிடப்படுகிறது. அந்தரங்கம் என்பது பாலுறவு மட்டுமே அல்ல. இருந்தபோதிலும் இலக்கியத்தில் பாலுறவை சித்திரிப்ப தென்பது, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறபோது அது போர்னோவாகிவிடுகிறது. பாலுறவை உணர்வுப்பூர்வமாக- இயல்பாகச் சித்திரிக்கும்போது இலக்கியமாகி விடுகிறது.''

உங்களுக்குப் படைப்பூக்கமாக அமைந்த எழுத்துகளில் ஜி. நாகராஜன், கு.ப.ரா., தஞ்சை ப்ரகாஷ், சாருநிவேதிதா ஆகியோரின் எழுத்துகளுக்கு எத்தகைய பங்கு உண்டு? இவர்களின் தொடர்ச்சியாக உங்களைச் சொல்லலாமா?

""நான் எழுதத் துவங்கி நான்கைந்து வருடங்கள் கழித்துதான் ஜி. நாகராஜனையும் சாருநிவேதிதாவையும் படித்தேன். நான் எழுதத் துவங்கிய சமயத்தில் மந்திரவாதி மாண்ட்ரெக், பாலகுமாரன், சுஜாதா, இந்துநேசன், சரோஜாதேவி என்று கலந்துகட்டிப் படித்துக் கொண்டி ருந்தேன். ஜி. நாகராஜனை உணர்ந்து படிக்க மேலும் இரண்டு வருடங் கள் ஆகிவிட்டன. பின்னர்தான் கு.ப.ரா. இவரது எழுத்துக்களைப் படித் திருக்கிறேன் என்றாலும், என்னுள் எந்த பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. தஞ்சை ப்ரகாஷ் தொண்ணூறுகளில் கடிதத் தொடர்பு கொண்டி ருந்தார். அந்தச் சமயத்தில் அவரது சிறுகதைகள் ஆங்காங்கு வாசித்த தோடு சரி. ப்ரகாஷிடம் எனது "நடுகல்' பிரதியைக் கொண்டு சென்றவர் சுகன். வாங்கி வாசித்தவர்... "அருவருப்பை சிறுகதையாக்கி இருக்கிறான். இதை வரவேற்க வேண்டும். அருவருப்பும் ஒரு சுவை என்பதை நம்ம எழுத்தாளனுக ஒத்துக்க மாட்டானுக. எத்தனுக மூக்கப் பொத்திக்கிட்டு அந்தப் பக்கமே போக மாட்டாதவனுகளாட்ட நடிப்பானுக' "என்று சுகனிடம் கூறியவர், பின்பு என் எழுத்தை உற்சாகப்படுத்திக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ப்ரகாஷின் நாவல்கள் மூன்றையும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் படித்தேன். அவரது "மீனின் சிறகுகள்' தமிழில் சிறப்பான நாவல். எனது நண்பர்களுக்கு முதலில் பரிந்துரை செய்யும் நாவல் அதுதான். சாருநிவேதிதாவின் "பேன்ஸி பனியன்' நாவலின் முன்னுரை, இலக்கியம் எப்படி இருக்கணும்? அழகாக- அப்படின்னு இலக்கணமா சொல்லப்பட்டது! உள்ளார நாவல் முன்னுரைல சொன்ன மாதிரி எதுவுமில்ல... முயற்சிதான் தெரிஞ்சுது. மறுவாசிப்பு செஞ்சா பத்து பக்கத்துக்கும் மேல போக முடியல. இப்ப "பேன்ஸி பனியன்' போகி பண்டிகையைக் கொண்டாடப் பயன்படும்.
இவங்களுக்குப் பின்னால நான் எழுத வந்ததால தொடர்ச்சின்னு சொல்லலாம். ஆனா அவுங்களோட களமும் எழுத்தும் வேறு வேறு; என்னுடையது வேறு.

வருங்காலத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளியா நாம் இருக்கோணும். ஈழத்தமிழர்கள்தான், புலம் பெயர்ந்த படைப்பாளிகள்தான் அதைச் செய்வார்கள் என்றால், நாம் ஒன்றுக்கும் உதவாத படைப்பாளிகள் ஆகிவிடுவோம். ""உலக இலக்கியத்தின் வால் நுனியைக்கூடப் பிடிக்க முடியவில்லை- நம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்'' என்று கூவிக் கொண்டு திரிவதைக் காட்டிலும், நம் எழுத்துக்களின் போதாமையை உணர்ந்து படைப்பைப் படைக்க வேண்டும்.''
சாரு நிவேதிதா தன் எழுத்து வாரிசாக உங்களைக் குறிப்பிட்டி ருப்பது பற்றி...!

""பேன்ஸி பனியன்', "ஜீரோ டிகிரி' என்று குப்பைகளை எழுதிப் பழகி "ராஸலீலா' என்கிற நல்ல நாவலைக் கொடுத்தவர், தனது வலைதளத்தில் என்னை வாரிசாக அறிவித்துள்ளதாக நண்பர்கள் பலர் அலைபேசியில் கூறினார்கள். எழுதுகிறவனுக்குக் கூச்சம் வராமல் போனாலும் அவன் எழுதும் பேனாவிற்குக் கூச்சம் வந்துவிடும் நிலையில் எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில், எதைப் பற்றிய சிந்தனையுமின்றி பேனாவில் சாக்கடை நீர் ஊற்றி எழுதும் என்னை அவர் வாரிசாக அறிவித்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. சாருவின் "தினமலர்- வாரமலர்' கதைகளின் ரசிகன் நான். இனி 16 அடி பாய வேண்டியது மட்டும் என்னுடைய பணி. "உயிர் எழுத்து' வெளியீடாக வரவிருக்கும் "கூப்பிடுவது எமனாக இருக்கலாம்' என்கிற எனது இரண்டாவது நாவல் பத்தடி பாயும் வாய்ப்பு இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு நான் வாரிசுதான். நாளைக்கு யாரோ வந்துவிட்டுப் போகட்டும். அன்று நானும் இதேபோல் அறிவித்துக் கொண்டிருக்கலாம்.''
இன்றைய நவீன கவிதை, கதை குறித்தான சொல்லாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆரோக்கியமான சூழலா? நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் எழுத்தாளர்கள் யார்?

""தமிழில் இதுவரை எழுதப்படாத வாழ்க்கையும் மொழியும் தற்போது எழுதப்பட்டு வருகிறது. ஆக தமிழ் இலக்கியம் செழிப்பாகவே இருக்கிறது. பழைய பேர்வழிகள் சிலர்தான் இளையவர்களுடன் போட்டியிட இயலாமல், தானும் இருக்க வேண்டுமே என்று இதழ் களின் பக்கங்களை சிறுகதை என்ற பெயரிலும் கட்டுரை என்ற பெயரிலும் நுழைந்து தடி ஊன்றித் தடுமாறி ஊர்கிறார்கள். கங்குலி மாதிரி ரிட்டயர்டு அறிவிக்கும் யோசனை அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் பெயர்களுக்காக இதழாளர்கள் போடவேண்டிய நிர்பந்தம் வேறு. நல்ல கவிஞனைப் பற்றியோ, நல்ல படைப்பாளியைப் பற்றியோ எந்த இடத்திலும் பெயர் குறிப்பிடாமல், செத்துப் போன எழுத்தாளர் செய்யத் தவறிய பணியைச் சுட்டிக்காட்டி, தன்னையே மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த படைப்பாளிகளின் சமீபத்திய படைப்பு களை வாசிக்கையில் எனக்கு அவர்கள்மீது பரிதாபமே மிஞ்சுகிறது! "எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்' என்பது மாதிரி.

ஒரு இதழில் வெளிவந்திருக்கும் ஒட்டு மொத்தக் கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்தால், ஒரே எழுத்தாளர்தான் வேறு வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளாரோ என்கிற யோசனையைத் தோற்றுவிக்கும் விதமாக கவிதைகள் கூட்டம் கூட்டமாய் தென்படு கின்றன. இங்கு பெயர்களைத்தான் பிரித்தறிய வேண்டியிருக்கிறது! கவிஞர்களில் சிநேகிதன், சிறி. நான். மணிகண்டன், ஷாராஜ் போன்றோர் தீவிரமாக நவீன கவிதை எழுதி வருகிறார்கள். முந்தைய இருவருக்கும் தொகுப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஷாராஜின் "ஜீன்ஸ் ஆண்டாள்' தொகுதி "உயிர்மை' வெளியீடாக இந்த ஆண்டு வருகிறது. தொண்ணூறுகளிலிருந்து என்னோடு இணைந்து எழுதி வந்த ஷாராஜின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 2008-ல் வருவது என்பது... நான் தாமதமாகத் தொகுப்பு வாயிலாக வந்தது போலத்தான். சுகிர்தராணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் என்னை குதூகலப் படுத்துபவை.

படைப்பிலக்கியத்தில் இன்று தீவிரமாக இருப்பவன் கீரனூர் ஜாகீர் ராஜா ஒருவன் மட்டுமே.

நீங்கள் எழுதத் துவங்கியது எப்போது? உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்?

""85-லேயே நான் எழுதிப் பழக ஆரம்பித்துவிட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும் ஞாபகம் இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான் ஒருவன். படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்று விடுவானோ என்று தோன்றும் விதமாக நகர்த்திச் சென்று, அவன் வீடு சென்று பொம்மை ஒன்றைக் குத்திக் கிழித்து வீசுவான்- குழந்தை ஆசையில் மனைவி பொம்மை வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தபடி இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்! நண்பர்கள் அருமை என்றார்கள்.

அப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர் சேமிப்பில் இருந்தன. டேபிள்மீது கிடக்கும் "பிரக்ஞை', "கசடதபற', "ஃ' இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல். ஒன்றும் புரியாது. கதைகள் தென்பட்டால் வாசித்து விடுவேன். கல்லூரி சென்ற சமயம் "ஆனந்த விகடன்' வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின் "தொட்டால் தொடரும்' தொடரைக் கிழித்து பைண்டு செய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.

தொல் படிப்பை உதறிவிட்டு கோவை சென்று விட்டேன். அங்கு "ஊன்றுகோல்' என்கிற கையெழுத்துப் பிரதி ஆரம்பித்து சைக்ளோ ஸ்டைலில் கொண்டு வந்து, பின் அச்சுக்குக் கொண்டு போனேன். அச்சகத்தில் தொழிலையும் கற்றுக் கொண்டேன். உள்ளூர் விளம்பரங் கள் அந்த இதழுக்குத் துணை நின்றன. "தாய்' வார இதழ் அந்த இதழை அறிமுகம் செய்திருந்தது. பரிமாற்றுப் பிரதியாக வந்த ஒரே இதழ் "முன்றில்' - முதல் இரண்டு இதழ்கள்.

அச்சமயத்தில்தான் அப்பா எனக்குத் தனது சேகரிப்பிலிருந்து புதுமைப்பித்தன், அஸ்வகோஷ், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி என்று வாசிக்கக் கொடுத்தார். "அன்பு நண்பர் முத்துப் பொருநனுக்கு' என்று அசோகமித்திரன் கையெழுத்திட்டு அவரது "இன்னும் சில நாட்கள்' தொகுதியை அனுப்பியுள்ளார். அச்சமயத்தில் ஒரே இரவில் மூன்று கதைகள் எழுதுவேன்.

பின்னர் தமிழ்ச் செல்வனின் "வெயிலோடு போய்,' கோணங்கியின் "மதினிமார்கள் கதை', ஜீ, நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே' ஆகியவற்றைப் படித்த பிறகு, என் எழுத்துமுறை தன்னையே மாற்றிக் கொண்டது நிகழ்ந்தது. முன்பாக "மாலைமுரசு' கோவைப் பதிப்பில் 15 ரூபாய் பரிசுக்காக மாதம் ஒருமுறை காதலர்களை ஆள்மாற்றி ஆள் கொன்று, இடங்களையும் மாற்றிக் கொன்று குவித்துக் கொண்டிருந்தேன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் திருப்பூர் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டாக இணைந்து "நடுகல்' என்கிற இதழை ஆரம்பித்தோம். இச்சமயத்தில்தான் "பேன்ஸி பனியன்' ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள், "கர்நாடக முரசும் அமைப்பியல் ஆய்வும்' போன்றவற்றை வாசித்தேன். "நடுகல் ஆறு' இதழ்கள் நண்பர்கள் உதவியோடு வந்து நின்று போனது. பின் தனித்து நானே அதை 21 இதழ்கள் கொண்டு வந்தேன். அச்சக வேலையில் இருந்ததால் கூலியை பிடித்துக் கொள்ளச் சொல்லிவிடுவேன். இதை உங்களுக்காக எழுதுவதில் பழைய நினைவுகள் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. நாமும் என்னமோ பண்ணிப் போட்டுத் தான் வந்திருக்கமாட்டம்ன்னு!

எழுதுவதற்கான விஷயங்கள் ஆரம்பத்தில் எல்லாமே கற்பனையில் உதித்தவைதான். தொண்ணூறுகளில்தான் நடைபெற்ற சம்பவங்களை எழுதத் துவங்கினேன். தஞ்சையிலிருந்து வந்து கொண்டிருக்கும் "சௌந்தரசுகன்' என்கிற சிற்றிதழ் எனது ஐம்பது சிறுகதைகளை வெளி யிட்டு மகிழ்ச்சி கொண்டிருக்கிறது. எனது முதல் தொகுதி "அழுவாச்சு வருதுங் சாமி' தொகுப்பையும் அந்த இதழே கொண்டு வந்தது.

எல்லாரும் எழுதுகிறார்கள், நாமும் எழுதுவோம் என்று எழுதுகையில், ஓரளவு படிப்பறிவு கொண்ட நண்பர்கள் ஊக்குவிப்பால் சரமாரியாக கொலைக்கதை, காதல் கதை, பேய்க்கதை என்று எழுதியவனின் இன்றைய எழுத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தையெல்லாமா எழுதுகிறாய் என்கிறார்கள்.

என் பெயரில்லாமல் ஒரு கதையோ கவிதையோ ஒரு இதழில் வெளிவந்திருந்தால், இவன்தான் எழுதியவன் என்று குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இலக்கியத்தில் என் எழுத்தைக் கண்டறிந்து சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு எழுத்திற்கு வரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது.''
நவீன எழுத்தாளர்கள் பலரும் வெகுஜன இதழ்களுக்கு எழுத வந்துவிட்டார்கள். உங்களுக்கு எழுத வாய்ப்பு கிடைக்கவில்லையா அல்லது ஒதுக்கிவிட்டார்களா?

""வணிக இதழ்களில் எழுதுவதற்கு எந்தத் தடைகளும் என்னிடம் இல்லை. இப்போதுதான் "குங்கும'த்தில் எனது சிறுகதைகள் வெளி வந்துள்ளன. மற்ற பத்திரிகைகளிலும் இனி என் எழுத்தைத் தொடர்ந்து பார்க்கலாம். வணிக இதழோ சிற்றிதழோ எங்கு எழுதினாலும் அது என்னுடைய எழுத்தாகவே இருக்கும்.''
சிற்றிதழ்களில் அரசியல் நுழைந்துவிட்டதாக இன்று திடீரென்று பேசுகிறார்களே? சிற்றிதழ்களுக்கு குழு மனப்பான்மையும் அரசியலும் புதிதா என்ன?

""சிற்றிதழ் என்பதே நிலவுகிற அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்கு எதிரானதுதான். அதில் அரசு, அரசு அதிகாரமும் அடக்கம். அரசியல் தவிர்த்த சிற்றிதழ் என்பதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு அரசியலை சிற்றிதழ் முன்னிலைப்படுத்துகிறது. பண்பாட்டுத் தளத்தில் காத்திரமாக இயங்குபவர்களே இப்படிப் பேசுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.''
தொண்ணூறுகளில் "நடுகல்' சிற்றிதழ் நடத்தினீர்கள்... 2000-ல் "இறக்கை'. எழுத்தாளன் சிற்றிதழ் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது?

"" "நடுகல்' ஆரம்பித்தபோது புதுமையின் பிடியில் சிக்கியிருந்தேன். தமிழில் ஏதாவது புதுமையைச் செய்துவிட வேண்டுமென்ற விடலைத் தனமான ஆசை. ஆனால் அந்த இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் இன்றும் அதில் படைப்புகள் எழுதியதைப் பெருமையாகக் கூறுகிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. "இறக்கை' ஆரம்பிக்கப்பட்டபோது ஜெராக்ஸ் பிரதியாகத்தான் வந்தது. மற்ற எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் தொடர்பில் இருப்பதற்காக மட்டுமே துவங்கப்பட்டது. அதன் 39 இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதி தான். என்னிடம் தேடிவந்து இணைந்த ஹரிகிருஷ்ணன் "இறக்கை'யில் துணை ஆசிரியனாகப் பங்கேற்று அச்சில் கொண்டு வந்தான்.

எழுத்தாளன் ஏன் சிற்றிதழ் நடத்துகிறான் என்றால் படைப்புகளை எழுத மட்டுமே. "இறக்கை' இதழில் வெளிவந்த எனது கதைகள் வேறு இதழ்களில் வெளிவந்திருக்க வாய்ப்பிருக்காது. எழுதி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அவற்றை வெளியிட மற்ற சிற்றிதழாளர்கள் தயக்கம் காட்டி, சால்ஜாப்பு சொல்வர். "இறக்கை' நின்று போனது பலபேருக்கு நட்டம்தான். ஆக்டோபஸ் கவிஞன் ஷாராஜ் தனது முந்தைய குறுங்கவிதைகளைக் கடாசிவிட்டு, வீரியத்தோடு நீள் கவிதைகளை "இறக்கை'யில் எழுதி சக படைப்பாளிகளை மிரள வைத்தான்.
இனி என் வாழ்நாளில் சிற்றிதழ் துவங்கி நடத்தும் ஆசை இல்லை. "இறக்கை' முழுத் தொகுதியாக "உயிர்மை' வெளியீடாக வரவிருக்கிறது.''

ராசமைந்தன் என்கிற புனைப்பெயரில்தான் "இறக்கை' என்கிற- எங்கு வேண்டுமானாலும் பறக்கும் இதழை நடத்தினீர்கள். வா.மு. கோமு என்ற பெயரிலேயே அந்த இதழை நடத்தியிருக்கலாம்தானே. அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா? எப்போது அந்தப் பெயரைச் சூடிக் கொண்டீர்கள்?

""கோவையில் இருந்தபோது "ஊன்றுகோல்' இதழை நடத்தியதாகக் கூறியிருந்தேன். அந்தச் சிற்றிதழில் படைப்பாளர்களின் படைப்புகள் பற்றாக்குறை நிகழ்ந்தமையால் எனது நண்பர் ராஜேந்திரன், கோமகன் என்கிற எனது முழுப் பெயரை தமிழ்ப் பெயராக மாற்றினார். கோ என்றால் அரசன் என்றும், மகன் என்றால் மைந்தன் என்றும் பிரித்து விளக்கி வைத்து, "இன்று முதல் ராசமைந்தன் என்கிற பெயரில் கவிதை எழுதக் கடவாய்' என்றார். அன்றிலிருந்து இன்றுவரை ராசமைந்தன் என்கிற பெயரை கவிதைகள் எழுதப் பயன்படுத்துகிறேன்.

பின்பாக "இறக்கை' இதழை ராசமைந்தன் என்கிற பெயரில் கொண்டு வந்தேன். ஏற்கெனவே "நடுகல்' இதழை வா.மு. கோமு என்கிற பெயரில் நடத்தியிருப்பதால் இதுவும் எனது பெயர்தானே என்கிற எண்ணத்தில்தான் "இறக்கை' இதழுக்கு எனது புனைப்பெயரைப் பயன்படுத்தினேன்.

"சுகன்' இதழில் ராசமைந்தன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் அனைத்தும் நிறைய வாசகர்களின் பாராட்டுகளையும் வசவுகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டன. இருவரும் ஒருவரே என்று புதிதாக அறிந்தவர்கள் தங்கள் ஆச்சரியத்தை "சுகன்' இதழிலேயே பகிர்ந்திருக்கிறார்கள். "வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதைப் பல எழுத்தாளர்களின் கதைகள் கற்றுத் தந்தன என்றால், வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதை ராசமைந்தன்- வா.மு. கோமு எழுத்துகள் கற்றுத் தருகின்றன. "சுகன்' இதழில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' என்றுகூட விமர்சனங்கள் அந்த இதழின் கூர்ப்பகுதியில் வெளிவந்துள்ளன.''

உங்களது கவிதை அனுபவத்திற்கும் சிறுகதை அனுபவத்திற்குமான பொருத்தங்கள் என்ன? எதை எளிமையாக உணர்கிறீர்கள்?

""இரண்டுமே எனக்கு எளிமையான பணிகள்தான். கரு கிடைத்தானபின் நானாக முடிவு செய்வதுதான். எழுதுவதற்கு சிரமமாக இருந்தால் அன்று சிறுகவிதை வடிவிலேயே விஷயத்தை எழுதி முடித்துவிடுவேன். சொல்ல வரும் விஷயம் வாசகனுக்குக் கவிதை வடிவிலோ கதை வடிவிலோ சென்று சேர்ந்தால் சரி. எனது ஏராளமான கவிதைகள் சிறுகதைகளையே தாங்கி நிற்கின்றன. தொகுப்பாக வருகையில்- அவற்றை நீங்கள் வாசிக்கையில் இந்த உண்மை புலப்படும்.

இதேபோல் சிறுகதைகளிலும் தேவையற்ற வர்ணனைகளை இதுவரை நான் வலிந்து திணித்ததில்லை. போகிற போக்கில் காகம் ஒன்று பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து அவனைப் பார்த்தது என்று எழுதினால், வாசகன் காகத்தைக் கவனிக்க ஆரம்பித்து விடுவான். திடீரென பறந்து வந்து அவன் கண்களை ஏதோ ஒரு இடத்தில் கொத்திச் சென்று விடுமோ என்ற யோசனைக்குச் சென்றுவிடுவான். ஆகவே காகங்களோ மற்ற இடைச்செருகல் இடைஞ்சல்களோ அதிகம் என் கதைகளில் இதுவரை இருந்திராது. கதை சொல்கையில் கதைதான் முக்கியம்.''

தலித் இலக்கியம் என்பதை தலித் அல்லாதவர்களும் எழுத முடியும் என்பதற்கு உங்களது பல கதைகள் சாட்சியாக உள்ளன. தற்கால தலித் இலக்கியம் பற்றி உங்கள் பார்வை அல்லது வாசிப்பு அனுபவம் என்ன?

""இது எனக்கு எளிமையான பணி. முன்பே கூறியதுபோல நான் கிராமத்தில் கிடப்பவன். அருந்ததியர் வாழ்க்கை என் கண்முன் நடக்கிறது. எல்லாருமே என் நண்பர்கள். இல்லாதது பொல்லாதது எதையும் என் கதைகளில் எழுதிவிடவில்லை. நீங்கள் குறிப்பிட்ட சில கதைகளோடு தலித் எழுத்தை கைவிட்டு விட்டேன். அதை அவர்களே எழுதட்டும். நான் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு எழுத வந்தவனல்ல; வேறு பணிகளும் எனக்கு எழுத்தில் உள்ளன. நான் செத்துப்போய் பத்து வருடம் கழித்து ஒரு கூமுட்டையன் வா.மு. கோமுவின் எழுத்துகள் தலித் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று எழுதிவிடக் கூடாது என்பதற்காக எழுதியது.

என்னுடைய படைப்புகளில் நான் அறிந்த- பழகிய- என்னோடு கலந்த தலித்துகளின் வாழ்க்கை வருகிறது. அது தலித் வாழ்க்கைதானா என்பதை தலித் விமர்சகர்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாதுதான்.

தலித் இதழில் வந்த நேர்காணல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றை வாசித்தாலே அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம். தவிர தன் வரலாறுகள், சில நாவல்கள் வாசித்த அனுபவம்தான். தலித்தான் தலித் படைப்பை எழுத வேண்டும் என்று கருத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தலித் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் ஏதும் வரவில்லை. பாமா, இமையம் நல்ல படைப்பாளிகள்.''

இன்று பலர் அமைப்பு சார்ந்து இயங்குகிறார்கள். அமைப்பு சார்ந்து இயங்குவது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடுமா?

""அமைப்பு சார்ந்து இயங்குபவர்களிடம் சில முன் முடிவுகள் இருக்கின்றன. அவற்றில் எழுத்து சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும், மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டக்கூடியதாக அமைய வேண்டும், பாலியல் சீர்கேடுகள் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிற தங்களது திட்டமிடலுக்கு ஏற்ப, அமைப்பில் ஈடுபட்டு டோக்கன் பெற்று சமுதாய சிந்தனைக் கதைகள் எழுதி, அமைப்பிடமிருந்து பாராட்டுகள் பெற்று உள்ளம் குளிர்கிறார்கள்.

மறவாமல் அதை எங்கு வேண்டுமானாலும் குறிப்பிடுவார்கள். அமைப்பு எனக்கு கோவில் மாதிரி... எனக்கு பிரசாதம் குடுத்தாங்க... சலாம் போட்டாங்கன்னு! அமைப்பு சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதுமில்லை. அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் வேலையையும் இவர்களே செய்யத் துவங்குகிறார்கள். நாய் பிடிக்கும் வண்டி தெருவில் வருகிறதென்றால் தெருநாய்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்ளுமோ தெரியாது. எங்காவது ஓடிப் பதுங்கிவிடும். அதுபோல இளைய படைப்பாளிகள் ஓடிப் பதுங்கி விடுகிறார்கள்.

ராமுவும் சோமுவும் பள்ளி நண்பர்கள். இருவரும் ஒரு பம்பரத்திற்காக அடித்துக்கொண்டு வீதியில் உருளுகிறார்கள். இதைக் கண்டு ராமுவின் அம்மாவும் சோமுவின் அம்மாவும் உன் பையன்தான் கெட்டவன் என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு முடித்து, ராமுவின் அம்மா ராமுவுக்கு முதுகில் இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... சோமுவின் அம்மாவும் சோமுவிற்கு இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... பம்பரம் வீதியில் அநாதையாகக் கிடந்தது என்கிற மாதிரியான எரிச்சலூட்டும் படைப்புகளை எல்லாம் கடந்து வந்து, ஆற அமர இப்போதுதான் சிறுகதை என்ற ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வுடன் எல்லா கதைகளையும் வாசிக்க முடிகிறது. அநாதையாகக் கிடந்த பம்பரத்தினால் என்ன சமுதாய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை.

நான் எந்த அமைப்பிற்குள்ளும் சேராதவன். சேர்ந்துதான் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை. அதேசமயம் மனிதநேய மேம்பாட்டுக்காகச் செயல்படுகின்ற எந்த அமைப்புக்கும் நான் விரோதி அல்ல. எழுத்தைப் பல வழிகளில் எழுதிப் பார்ப்பவன் நான். அமைப்பானது படைப்பு வீரியத்தைக் குறைத்துவிடும் என்று நானாகவே நம்பிக் கொள்கிறேன். என்னை யாரும் அழைக்கவும் மாட்டார்கள். என் எழுத்து அப்படி.''

வாழ்க்கையைக் கொண்டாட்டமாகவே பார்க்கும் உங்களது "குட்டிப் பிசாசு' என்கிற பாத்திரம் உங்களது வன தேவதையா?

""நகுலனுக்கு சுசீலா, பாரதிக்கு கண்ணம்மா, கலாப்பிரியாவுக்கு சசி, ராசமைந்தனுக்கு சாந்தாமணி என்றிருக்கையில், எனக்குக் "குட்டிப்பிசாசு' இருந்துவிட்டுப் போகட்டும்.''
சமீபத்தில் படித்தவை...

""சைனா கெய்ரெற்சி-யின் "குழந்தைப் போராளி', கென்னத் ஆண்டர்சனின் "ஏலகிரியில் சிறுத்தை வேட்டை', பா. ராகவனின் "ரெண்டு', ஜிம் கார்பெட்டின் "எனது இந்தியா', ஓஷோவின் "மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை'. படியேண்டா என்று புத்தக அடுக்கில் காத்திருப்பவை- யாங்கோவின் "இளமையின் கீதம்', டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா', பரீஸ் பொலெவோயின் "உண்மை மனிதனின் கதை', சுஜாதாவின் "பதவிக்காக', தமிழ்ச்செல்வியின் "ஆறுகாட்டுத் துறை', முத்து காமிக்ஸின் "மஞ்சள் பூ மர்மம்', சிவசங்கரியின் "வேரில்லாத மரங்கள்'.''
தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

""வழக்கம்போல சிறுகதைகள்தான்.

இனி தோழர் பெரியசுவாமி நேரம்.

சிந்தியா சாலினி ரன்ஜித் பெல்லா தான் தங்கியிருந்த அறையிலிருந்து ஓட்டல் மேனேஜருக்கு ஃபோன் செய்தாள். ""நான் இங்கு நானூற்று முப்பதாவது அறையில் இருக்கிறேன். எனக்கு உலக மகா கோபமாய் இருக்கிறது. எதிர் அறையில் ஒருவன் நிர்வாணமாக நடந்தபடியே இருக்கிறான். அவனது இடுப்புக்கும் கீழே ஆபாசமாக இருக்கிறது'' என்று கத்தினாள். ""இதோ இப்போதே வந்து என்னவென்று கவனிக்கிறேன்'' என்று மேனேஜர் கூறிவிட்டு பெல்லாவின் அறைக்குள் வந்தார். ஜன்னல் வழியாக எதிர் அறையைப் பார்த்தார். ""நீங்கள் சொன்னது சரிதான் மேடம். அந்த மனிதன் நிர்வாணமாகத்தான் இருக்கிறான். ஆனால் அவனுடைய ஜன்னல் இடுப்பு வரையில் மறைத்திருக்கிறதே, அவன் அறையில் எப்படி இருந்தாலும் நமக்கென்ன மேடம்?'' என்றார். ""ஆமாம்'' என்று கத்தினாள் பெல்லா. ""இந்தப் படுக்கையில் ஏறி நின்று பார், படுக்கையின்மீது ஏறு.''

முடித்துக் கொள்ளலாமா மனுஷா?''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

*************************************************************************************

Sunday, August 1, 2010

பின் காலனிய சிந்தனைகள்


பின் காலனிய சிந்தனைகள்

எம்.ஜி.சுரேஷ்

பின் காலனியம் என்பது பின் நவீன சொல்லாடலாகும். மேற்கத்திய நாடுகளில் நிலவும் நிலவரம் பின் நவீன நிலவரம் என்றால், காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் நிலவும் நிலவரம் பின் காலனிய நிலவரம் ஆகும். காலனி ஆதிக்கத்தின் போது காலனியாக உள்ள நாட்டின் இனம், மொழி, கலாசாரம் ஆகியவை கலப்புக்குள்ளாகின்றன. காலனி நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடு தனது மொழி, கலாசாரம் ஆகியவற்றை முத்லீடு செய்கிறது. அதன் மூலம் அது தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறது.

இந்தியாவில் வெள்ளையர்கள் வரும் முன் பதினெட்டு வகையான தானியங்கள் தமிழகத்தில் பயிரிடப்பட்டு வந்தன. அந்தப் பதினெட்டு வகையான தானியங்களிலும், சக்தி குறைந்தது அரிசி மட்டுமே. தற்போது அரிசி தவிர்த்து மற்ற தானியங்கள் காணாமல் போயின. அதற்குக் காரணம் யார்? காலனி நாட்டில் இருக்கும் மக்கள் சக்தி குறைந்த உணவான அரிசி மட்டுமே தின்று பலவீனர்களாக இருந்தால் அவர்களை அடக்கி ஆள்வது சுலபம் என்பதால் ஆதிக்க ஆட்சியாளர்கள் தமிழகத்தில் அரிசி உற்பத்திக்கு மட்டும் முதலிடம் கொடுத்தார்கள். அதே போல் ஒரு காலத்தில் வட இந்தியாவில் கறுப்பு நிற அரிசி இருந்ததாகவும் அது உண்பதற்கு அதி அற்புதமான சுவை கொண்டது என்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்த யாத்ரீகர்களின் பயணக்குறிப்புகள் மூலம் அறிகிறோம். நாளந்தா பல்கலைக்கழகத்தில் அந்த கறுப்பு அரிசி உணவாக உட்கொள்ளப்பட்டது அது மிகுந்த சத்து மிக்க உணவு என்றும் சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. அந்த கறுப்பு அரிசி இப்போது பௌத்தம் புலம் பெயர்ந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அது காணக் கிடைக்கவில்லை. இதெல்லாம் காலனியாக இருக்கும் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். விபத்துக்குப் பின் விபத்தில் ஏற்பட்ட காயம் வடுவாக மாறித் தங்கி விடுவது போல், அன்னிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட போதும், ஏற்கெனெவே ஏற்பட்ட் காயங்கள் வடுக்களாகத் த்ங்கிவிடுகின்றன.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை காலனியாக வைத்திருந்தது. அதனால் உலகில் நேர்ந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. அறுபதுகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம், அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையிலே நிகழ்ந்த யுத்தங்கள் இவை எல்லாவற்றுக்கும் காரணம் பிரிட்டிஷ் அரசின் தவறான எல்லைப் பிரிப்புகளே காரணம். இப்படி உலகெங்கும் பின் காலனியம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. எட்வர்ட் சேத்தின் புகழ் பெற்ற நூலான ‘ஓரியண்டலிசம்’ தான் பின் காலனியம் என்ற சொல்லாடலை புழக்கத்துக்குக் கொண்டு வந்தது. சேத் ஃபிரெஞ்சு சிந்தனையாளரான மிஷல் ஃபூக்கோவின் சீடர். அவரைத்தொடர்ந்து, ஹோமி பாபா, காயத்ரி ஸ்பிவாக் பொன்றோர் பின் காலனிய கருத்தியலை வளர்த்தெடுத்தனர்.


ஃபூக்கோவின் தடம் பற்றி நடந்த சேத், ‘அதிகாரமும் அறிவும் பிரிக்க முடியாதவை’ என்றார். மேலும் அவர், ‘கிழக்கைப் பற்றித் தான் கொண்ட அறிவின் மீதான மேற்கின் ஆதிபத்திய உரிமை, கிழக்கின் மீதான மேற்கின் அதிகாரம் செலுத்துவதற்கான உரிமையாக மாறியது’ என்று எழுதினார். இன்னொரு முக்கியமான பின் காலனியவாதி ஃபிரான்ஸ் ஃபனோன். அல்ஜீரியாவில் பிறந்த இவர் ஓர் உளவியலாளர். அல்ஜீரியா ஃப்ரான்சின் காலனி நாடு. காலனி நாட்டில் வாழ நேரும் பிரஜைகள் எந்த விதமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ந்தவர் இவர். ஃப்னோன் எழுதிய முதல் நூல், ‘கறுத்த தோலும், வெள்ளை முகமூடிகளும்.’ இந்த நூல் காலனி ஆதிக்கம் பிரஜைகளை எவ்விதம் அடிமைத்தனத்துக்கு உள்ளாக்குகிறது என்று ஆய்கிறது.

பின் காலனிய இலக்கிய வகைமைகள் எப்படி இருக்க வேண்டும்? அவை, ‘பின்னோக்கி எழுதுதல்’, ‘மறுபடியும் எழுதுதல்’, மற்றும் ‘மறு வாசிப்பு’ பொன்ற தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆப்பிரிக்க எழுத்தாளரான, சினுவா ஆச்சிபெ, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான, இஸ்பெல் அலெண்டெ, மார்க்வெஸ், இந்திய வம்சாவளி எழுத்தாளர்களான வி.எஸ். நைபால், சல்மான் ருஷ்டி ஆகியோரின் எழுத்துகள் பின் காலனிய எழுத்துகளாக அறியப்படுகின்றன.

தமிழில்?

இந்தியாவில் தலித்திய எழுத்துகள் பின் காலனிய எழுத்துகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழிலும் தலித் எழுத்துகள்தான் பின் காலனிய எழுத்துகளாக அடையாளப் படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. இமையத்தின் நாவல்கள், ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், சோ. தர்மனின் கூகை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோரின் கவிதைகள் போன்றவை பின் காலனிய எழுத்துகள் என்லாம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ரவிக்குமார் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ’உலகம் முழுதும் காலனி ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள்தான் பின் காலனியத்தைக் கையில் எடுத்தார்கள். இந்தியாவில் மட்டும் காலனி ஆட்சியில் நேரடியாகப் பாதிக்கப்படாமல் சௌகர்யமாக இருந்த ஒரு சமூகம் அதைத் தன் கையில் எடுத்திருக்கிறது’ என்ற ரீதியில் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி முக்கியமானது.

my id on facebook and twitter

my id on facebook and twitter is
vijaymahindran
thank you friends.....

படித்ததில் பிடித்தது....

படித்ததில் பிடித்தது.....


கண்ணே உன்னை
நான் என் இதய
சிறையில் வைத்தேன்...
நீயோ உன் அண்ணனிடம்
சொல்லி மத்தியசிறையில்
வைத்துவிட்டாய்......