Monday, June 28, 2010

குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்


குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்

ஸ்ரீபதி பத்மநாபா


நான் ஒரு 'நிரீசுவரவாதி' - நாத்திகன் என்றாலும் அம்பலங்களுடனும் பூஜை அனுஷ்டானங்களுடனும் எப்போதும் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. முக்கியமான ஹோமங்களில் வந்து வெறுமனே உட்காருங்கள் போதும் என்று என் நண்பரான தந்திரி ஒருவர் அடிக்கடி அழைப்பதுண்டு. என் வேஷவிதானம் அப்படி. சமீபத்தில் நண்பர் ஜெரால்டு தன் சீரியலில் நடிக்க அழைத்தார். அதுவும் பூசாரி வேடம்தான்.

கட உள் என்ற கருத்தாக்கத்தின்படி பார்த்தால் கோவில்கள் எப்போதும் உள்ளத்தைக் கடக்க வைப்பவைதான். கேரளத்தின் பெரும்பாலான கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் ஒரு தூரத்து உறவினராவது பணியில் இருப்பார். எனவே தங்குமிடம் பெரும்பாலும் கிடைத்துவிடும். உணக்கச்சோறின் ருசியே தனிதான்.

கல்லூரிக் காலங்களில் அடிக்கடி குருவாயுபுரத்துக்கு செல்வதுண்டு. கிருஷ்ணனிடம் கொண்ட ஈர்ப்பு அல்ல; வேறொரு கதையது; இது வேறொரு கதை.

குரு பிரகஸ்பதியும் வாயுதேவனும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் என்பதால் குருவாயுபுரம்; குருவாயூர். அதிகாலை நிர்மால்ய தரிசனம் மிக பிரசித்தி. என் நண்பன் பி.வி.மேனன் சொல்வான்: இந்த அதிகாலை நேரத்தில் வரிசையில் நின்றிருக்கும் எல்லாப் பெண்களின் முகத்திலும் குடிகொண்டிருக்கும் ஒரு கோபிகா பாவம் இருக்கிறதே, இதை தரிசிப்பதற்காகவே இந்த பூலோக வைகுண்டத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.
குருவாயூருக்கு போகிறபோதெல்லாம் மேற்கு நடையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் அந்த முறை பி.வி.மேனன் கூட இருந்ததால் லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று. பனச்சிக்காட் வித்யாதர் மேனனும் நானும் கல்லூரித் தோழர்கள். அவன் எனக்கு ஒரு வருடம் சீனியர். காளிதாஸன் விவரித்த கள்ள சன்யாசி போன்றவன்.


ஒரு சன்னியாசி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டிருந்தார். அதை கவனித்தான் ஒரு வழிப்போக்கன். அவர்களின் சம்பாஷணையை ஒரு செய்யுளாகத் தருகிறார் காளிதாஸன்.

பிக்ஷோ, மாம்ச நிஷேவணம் கிமுசிதம்? கிம் தேன மத்யம் வினா?
மத்யம் சாபி தவப்ரியம்? ப்ரியம் அஹோ வாராங்கனாபிஸ்ஸமம்
வாரஸ்த்ரீ ரதயே குதஸ்தவ தனம்? தியூதேன சௌர்யேண வாம்.
சௌர்யதூத பரிஸ்ரமோடஸ்தி பவத ப்ரஷ்டஸ்ய கான்யா கதி?

சன்யாசியே, இறைச்சி சாப்பிடுவது சரியா?
தவறுதான், மதுவில்லாமல் இறைச்சி சாப்பிடுவது.
ஓ உங்களுக்கு மதுவும் பிடிக்குமா?
பிடிக்குமாவது, வேசிகளைப் போலவே மதுவும் இஷ்டம்தான்.
ஓஹோ, வேசிகளிடம் போக உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?
சூதாட்டமும் திருட்டும்தான்.
சன்னியாசியான நீங்கள் இதெல்லாம் செய்யலாமா?
கதியற்றவனுக்கு வேறு கதி என்ன?

(ஷோலே முதல் மன்மத லீலை வரை பல பெரும் படைப்பாளிகள் இதே போல 'சிந்தித்திருப்பது' உங்களுக்கே தெரியும்.)

காலை தரிசனம் முடிந்த பிறகு அவன் குருவாயூரின் இண்டு இடுக்கான ஒரு இடத்தில் ஓடுபோட்ட ஒரு சிறு டீக்கடைக்கு அழைத்துப் போனான். காலை உணவு இங்கேயா என்று முகம் சுளித்த என்னிடம் ஒரு சாயா மட்டும் சாப்பிடலாம் என்றான். இந்த இடத்தைத் தேடி சாயா சாப்பிட வருகிறான் என்றால் நிச்சயமாக கடைக்காரருக்கு ஒரு மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெண்மணி மட்டுமே. பி.வியைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. 'ரண்டு சாயா இவிடெ, பின்னே ரண்டு ஹோர்லிக்ஸ் டோக்கன்' என்றான் பி.வி. 'ஓ சாய காப்பியெல்லாம் மடுத்து அல்லே...' என்றபடி' ஹோர்லிக்ஸ் வெல கூடி கேட்டோ, ஆயிரம் ரூபா.' என்றாள் அந்தப் பேரிளம்பெண். எனக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவதுபோல இருந்தது. என்ன நடக்கிறது இங்கே? 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே? ஒண்ணும் புரியல' என்றேன். 'பேசாம வா' என்றான். ஒரு டாக்சி பேசினான். சாவக்காடு போய் அங்கே ஒரு மணிநேரம் வெய்ட் செய்து திரும்பி வரவேண்டும் என்றான்.

ஒரு காலத்தில் சவங்களின் காடாக இருந்தது சாவக்காடு. மத்தியின் மணம் வீசும் கடலோர சிறு நகரம். குருவாயூரிலிருந்து பக்கம்தான். ஒரு தனிமையான பங்களாவின்முன் கார் நின்றது. வராந்தாவில் கொம்பன் மீசை வைத்த ஆள் மப்டி போலீஸ் போல இருந்தான். பிவி டோக்கனைக் காண்பித்தான். 'ம்... அகத்து போய்க்கோ' என்றான் அவன்.

உள்ளே மாடிப்படியேறி ஒரு அறை. விசாலமான அறை. அங்கு மூன்று அறைகளுக்கான வழிகள் இருந்தன. இங்கேயும் ஒரு பெரிளம்பெண் தோன்றினாள். பிவியைப் பார்த்து சிரித்தாள். 'சாயயோ காப்பியோ அதோ ஹோர்லிக்சோ' என்றாள். 'ஹோர்லிக்ஸ்' என்றபடி டோக்கனைக் கொடுத்தான். 'ம்... இரிக்கூ' என்றபடி ஒரு அறையை நோக்கிப் போனாள். பிவி அந்தக் கதவுகளைக் காட்டி ஒன்று சாயா 100 ரூபா, இன்னொன்று காபி 500 ரூபா, அது ஹோர்லிக்ஸ் 1000 ரூபா' என்றான். ஹோர்லிக்ஸ் கதவு திறந்தது.... என்ன சொல்ல... கிருஷ்ண கிருபா சாகரம் ! ஏழு கோபிகைகள் நின்றிருந்தார்கள். 'எல்லாரும் கோளேஜ் குட்டிகளாணு...' என்றாள் பேரிளம்பெண். நான் பிவியை முறைத்து 'இதுக்குத்தான்னு முதல்லயே சொல்லிருந்தேன்னா நான் வந்திருக்கமாட்டேன்ல... ஆளை விடு சாமி' என்றபடி கீழே இறங்கினேன்.

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் 'வி.கே.என்'னின் 'பையன் கதைகளின்' ஒரு பகுதி நினைவுக்கு வந்தது:
தங்களின் வேசியிடம் போன அனுபவங்கள் பற்றி மூன்ற பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். பையன் சொல்கிறான்:

என் அனுபவம் வேறு மாதிரி. ஏஜென்ட் என்னிடம் வந்து, சார் மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருத்தி நடுத்தர வயதுக்காரி. ஒருத்தி இருபத்தெட்டு வயதுக்காரி. இன்னொருத்தி கொக்காலையை சேர்ந்தவ. இருபது வயசு. பி.ஏ. பாஸ் பண்ணிருக்கா சார்.

அவளே வரட்டும். வரும்போது மறக்காம சர்டிபிகேட்டையும் எடுத்தாரச் சொல்லு...........!

Sunday, June 20, 2010

என் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்


தமிழில் ஸ்ரீபதி பத்மநபா
தரையில் படுத்தபடி கமலா முன்வாசல்கதவின் அடியிலிருந்த நீளமான இடைவெளியினூடே ஃப்ளாட்டுக்கு முன்னாலிருந்த வராந்தாவில் நகர்ந்துகொண்டிருந்த எண்ணற்ற பாதங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளறியாமலேயே மேலேறியிருந்த அடிப்பாவாடைக்குள் இடம்பெயர்ந்திருந்த ஜட்டி அவளின் பிஞ்சுப் பிருஷ்டத்தில் பள்ளிக் கூடத்தின் மரப்பெஞ்சுகளின் மேடு பள்ளங்கள் பதிந்திருந்த தழும்புகளின் கறுப்புநிறங்களைக் காண்பித்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் எங்கே அவள் தன்னுணர்வு பெற்று பாவாடையைத் திருத்தி, அந்தக் காட்சியின் களங்கமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவாளோ எனப் பயந்து நான் கண்களைப் பின்வாங்கிக் கொண்டேன். நான் கமலாவுக்குத் துணையிருக்க ஆரம்பித்து கொஞ்ச நேரமாகிறது. பக்கத்து ஃப்ளாட்டில் கமலாவின் தோழி ப்ரீத்தியின் அப்பா முந்தின நான் திடீரென்று இறந்து விட்டார். சுபத்ரா அங்கே போக ஆயத்தமானபோது அம்மாவின்கூட வருவேன் என்று சொல்லி கமலா அடம்பிடித்தாளென்றாலும் சுபத்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.
வேண்டாம். நீ இங்கேயே யிருந்தா போதும். ஃப்ளாட்டிலிருந்து வெளியே இறங்கும்போது சுபத்ரா சொன்னாள்.
பத்து வயசாச்சில்ல அவளுக்கு? இன்னும் எத்தனை காலந்தான் இதையெல்லாம் மறைச்சு வக்கிறது? நான் கேட்டேன்.
வேண்டாம். இன்னும் ஆகல. பாடி கொண்டுபோன பிறகு அவ வந்தா போதும்.
சுபத்ராவின் வார்த்தைகளில் அவளுடையதேயான பழமையின் பயங்கள் மின்னிக்கொண்டிருந்தன. பிறகும் ஆசை இழக்காமல் கமலா சிணுங்கியபடி சுபத்ராவின் கையைப் பிடித்தாள்.
அவளும் வரட்டும் சுபத்ரா. குழந்தைக இன்னிக்கு டி.வி.யில பார்க்காததா? நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல? கமலாவின் கையைத் தட்டிவிட்டபடி சுபத்ரா சொன்னாள்.
அவ பார்க்காதது இன்னும் நெறய இருக்கு. மோளே, நீ வானவில் பார்த்திருக்கியா?
இல்லை. குற்ற உணர்வுடன் கமலா சொன்னாள்.
இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லு நீ. வெளியே போவதற்காக சுபத்ரா கதவைத் திறந்தபோது வராந்தாவின் வழியாக மலர்வளையங்களையும் பூக்களையும் ஏந்திய பார்வையாளர்கள் நுழைவதை கமலா உற்றுப் பார்த்தாள்.


டைம் ஆகும்போது சொல்லி அனுப்பறேன். இவளுக்குப் பால் கொடுக்க மறந்துராதீங்க. கதவை சாத்தும் முன்னர் சுபத்ரா சொன்னாள். சுபத்ரா போனபிறகும் எதிர்ப்பைக் காட்டும் குறுகுறுப்புடன் கமலா முன்வாசல் கதவின் அருகே அங்குமிங்கும் அலைந்தாள். இரவு முழுக்க தூக்கம் விழித்ததன் களைப்புடன் நான் படுக்கையில் போய் படுத்தேன். கொஞ்சநேரம் கழிந்தபோது கமலாவும் என் அருகே வந்து படுத்து என் முதுகிலுள்ள ஒரு பெரிய மருவை விரல்களால் திருகிக் கொண்டிருந்தாள். இத்தகைய தருணங்களில் இப்படித்தான் அவள் தன் பாதுகாப்புணர்வைத் தேடிக் கொள்வாள்.
அவள் கேட்டாள். நீங்க நெறைய வானவில் பார்த்திருக்கீங்களா, அப்பா?
சின்னவயசிலே நெறைய பார்த்திருக்கேன். இப்ப கொஞ்ச நாளாச்சும்மா, ஒண்ணுகூடப் பாக்க முடியல.
அது ஏன்ப்பா அப்படி? வானவில்லெல்லாம் தீர்ந்து போயிடுத்தா?
சுத்தி சுத்தி பெரிய கட்டடங்களாச்சேம்மா. அதுவுமில்லாம இந்த தூசியும் புகையும். வானத்தையே சரியாகப் பார்க்க முடியலே. அப்புறமில்லே வானவில்?
மொதமொதோ நீங்க எப்பப்பா வானவில் பார்த்தீங்க? சரியா ஞாபகமில்லம்மா.
ஒருமுறை ரயிலில் போகும்போது பார்த்த வானவிற்களைப்பற்றி நான் இப்போதும் அடிக்கடி நினைப்பதுண்டு. பழனியிலிருந்து பாசஞ்சர் வண்டியில் அப்பாவுடன் திரும்பி வரும்போது, வாளையார் காடுகள் முடிந்தவுடன், தூங்கி விழுந்து கொண்டிருந்த என்னை அப்பா தட்டி எழுப்பினார். ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னார். அப்பா என்னைத் தொடுவது மிக அபூர்வமாக மட்டுமே. ஆகாயத்தில் ஒன்றல்ல. இரண்டு வானவிற்களை நான் பார்த்தேன். இரட்டை வானவில்லை பார்த்த மகிழ்ச்சியில் அதிசயித்துப்போய் நான் விரிந்த கண்களுடன் நிற்கையில் மூன்றாவது வானவில்லைப் போல அப்பாவின் கை என் தோளைச்சுற்றியது.
கமலா எழுந்து அவளுடைய அறைக்குச் சென்றாள். கொஞ்ச நேரம் அவளுடைய அசைவே இல்லை. நான் எழுந்து சென்று பார்த்தபோது அவன் முன்கதவின் முன்னால் தரையோடு படுத்து சின்ன இடுக்கினூடே வராந்தாவில் நுழைகிற கால்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சுபத்ரா அவனுப்பிய ஆள் கதவைத் தட்டியபோது நான் சட்டையை மாட்டி வெளியே இறங்கினேன். திறந்த கதவு வழியாக ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்த கூட்டம் வராந்தாவில் குழந்தை விளையாடும் இடங்களைக்கூட அபகரித்துக் கொண்டு வளர்ந்து நீண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பார்வையாளர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டாலும் கூட அதன் எதிரொலி இடைவழிக்கு மேல் அடைந்து உறைந்து நின்றிருந்தது.
நீ கதவைச் சாத்திக்க மோளே. அம்மாவை இப்ப அனுப்பறேன்.


வெளியே போகும்போது நான் சொன்னேன். ப்ரீத்தியின் அப்பாவின் மரணத்திற்குப் பிறகும் அவளும் அம்மாவும் எங்கள் அண்டை வீட்டார்களாகவே இருந்து வந்தார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் ஆபீசிலேயே வேலை செய்து வந்த அவளுடைய அம்மா பெரும்பாலும் ஆஸ்த்மாவினால் லீவ் எடுத்து வீட்டிலேயே இருந்தார்கள். ப்ரீத்தி சீக்கிரமே பெரிய பெண்ணாகிவிடுவாள் என்று எங்களுக்குத் தோன்றியது.
இந்தக் குழந்தைகளுக்கு அவங்க எதைநோக்கி வளர்றாங்கன்னு தெரியமாட்டேங்குது. இடுப்பு வலியால் அவதிப்பட்டு படுக்கையில் படுத்தபடி ஒருநாள் சுபத்ரா சொன்னாள்.
அப்படீன்னா?
இன்னிக்கு ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் விளையாடறதை கவனிச்சேன். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்திலே அவங்க சின்னக் குழந்தை ஆயிடுவாங்கன்னும், அப்போ முலைப்புட்டியிலே பால் குடிப்பாங்கன்னும் போகுது விளையாட்டு.
எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
இப்படிப் படுத்திட்டிருந்தா எப்படி? நீ போய் சீக்கிரம் சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு கேரியரில வை.
குழந்தைகள் நிகழ் காலத்திடமான இந்த வெறுப்புடன் கூட அவர்கள் மனித குலத்திலிருந்தே அகன்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அவங்க இப்ப பொம்மைகளை வச்சு விளையாடறதில்ல. நான் சமையலறையில் சென்று சுபத்ராவிடம் சொன்னேன்.
சுபத்ரா ஏதும் பேசாமல் உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பொம்மைகளை வச்சு விளையாடினாத்தான் பெரியவங்களாகும்போது மத்த மனுஷங்க கூட சுலபமா பழகமுடியும்.
உம். சுபத்ரா உம் கொட்டினாள்.
இப்பவெல்லாம் ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் எப்போ பார்த்தாலும் துப்பாக்கியும் ட்ரக்கும் வெச்சுத்தான் விளையாடறாங்க. எந்திரங்க மேலதான் அவங்களுக்கு அதிக விருப்பம். சுபத்ரா தலைநிமிராமல் சப்பாத்தி மாவு பிசையத் தொடங்கினாள்.
அது கஷ்டம் இல்லையா? ஒருநாள் நானே முன்வந்து அவங்களை ஒரு வீடு வச்சு விளையாடக் கூப்பிட்டேன்.
நான் கேட்டிட்டுதான் இருந்தேன். கீழே க்ரவுண்டில் பாட்மிண்டன் விளையாடப் போகணும்னு சொல்லி அவங்க கீழே போறதையும் நான் பார்த்தேன். சுபத்ரா தலையுயர்த்திச் சொன்னாள்.


நான் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளால் நிராகரிக்கப்படுவது அவ்வளவு சுகமான அனுபவம் அல்ல.
திடீரென்று சுபத்ரா வேலையை நிறுத்திவிட்டு தலை உயர்த்திக் கேட்டாள்: வீடு வெச்சு விளையாடறது உங்களுக்கு அவ்ளோ இஷ்டம்னா இதோ, சமையல் ரூம். இங்கே சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு விளையாடலாமில்ல? எனக்காவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும்.
சுபத்ராவின் கண்கள் நிறைந்தன. நான் சமையலறையிலிருந்து பின் வாங்கினேன்.
அமாவாசை நெருங்கியபோது ப்ரீத்தியின் அம்மாவுடைய ஆஸ்த்மா அதிகமானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கமலாவைக் கூட்டிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காகப் போனேன். ஜெனரல் வார்டின் நீளமான ஹாலில் கடைசி கட்டிலில் ப்ரீத்தியின் அம்மா படுத்திருந்தார். காலடியில் ப்ரீத்தி ஒரு சித்திரக்கதை வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள். கையிலிருந்த அரை டஜன் சாத்துக்குடியை வெள்ளைப் பெயிண்ட் அடித்த இரும்பு மேசையில் வைத்தேன். மூக்கில் ஆக்சிஜன் ரப்பர் குழாய் வைக்கப்பட்ட ப்ரீத்தியின் அம்மா என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு கமலா ஆஸ்பத்திரியின் வராந்தாவை நோக்கி நடந்தாள். நின்று நின்று கால் வலித்தபோது ப்ரீத்தியின் அம்மாவிடம் விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினோம்.
ப்ரீத்தி என்ன சொன்னா? நான் கேட்டேன்.
பல தடவை தேங்க்ஸ் சொன்னா

எதுக்கு?
வந்ததுக்கு.
சுபத்ராதான் காலையிலும் சாயங்காலமும் தினமும் வர்றாளே.
அம்மாவும் கஞ்சி கொண்டு வர்ற பொண்ணும் மட்டும்தான் வர்றாங்களாம். வேற யாரும் வர்றதில்லையாம்.
நாம நாளைக்கும் வரலாம். நான் சொன்னேன்.
சட்டென்று கமலா என் கையைப்பிடித்து முத்தமிட்டாள்.
வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கலாம் என்று படுத்த போதுதான் ப்ரீத்தியின் அம்மா இறந்துவிட்டார் என்று யாரோ வந்து சொன்னார்கள். இந்த முறை சுபத்ரா கமலாவை ப்ரீத்தியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக எதிர்ப்புக் காட்டவில்லை. வெள்ளை சல்வாரும் கமீசும் அணிந்து கமலா சுபத்ராவுடன் படியிறங்கும்போது தான் கவனித்தேன்: சுபத்ராவின் தோள் வரை வளர்ந்து விட்டாள் கமலா. அவளின் வயிற்றில் ஒரு சின்ன கர்ப்பப் பாத்திரம் மலரக் காத்திருக்கிற தென்பதையும் திடீரென்ற நினைத்துக் கொண்டேன். இரவு முழுக்க மரணவீட்டில் சுபத்ராவும் கமலாவும் அடுத்த ஃப்ளாட்டின் சில பெண்களும் சேர்ந்து கண் விழித்திருந்தார்கள். ஏதோ தூரப் பிரதேசத்திலிருந்து ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணன் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். காலையில் ப்ரீத்தியின் அம்மாவின் ஆபீஸிலிருந்து பத்திருபது பேர்கூட வந்து சேர்ந்தார்கள். இடைவழி பெரும்பாலும் சந்தடியற்றிருந்தது. அதன் மூலையில் அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஓசையில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணனும் சில உறவினர்களும் ப்ரீத்தியின் அம்மாவின் வயதான பி.ஏ.வும் ஆபீஸிலிருந்து சிலரும் நானும் சேர்ந்து மின்மயானத்திலிருந்து திரும்பி வந்த போது இரவாகிவிட்டிருந்தது. கமலா அமைதியாக சாப்பாட்டு அறையின் மேசையின் முன்னால் ஒரு டம்ளர் பால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் நின்று சுபத்ரா அவளுடைய நீண்ட தலைமுடியைச் சீவிப் பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து அன்றைய தினசரிகளை அப்போதுதான் திறந்தேன். அம்மா சாப்பாட்டு அறையில் கமலா அழைத்தபோது செவிமடுத்தேன்:
அம்மா நாம - நானும் நீங்களும் ப்ரீத்தியும் எல்லாரும் சாகும்போது இப்படித்தான் இருக்குமா?


எப்படி? சுபத்ரா கேட்டாள்.
இப்படி. அதிகமா யாரும் வராம, அன்னிக்கு ப்ரீத்தியோட அப்பா இறந்தபோது எத்தனை கால்களை எண்ணினேன் நான்!
சுபத்ரா ஒன்றும் பேசவில்லை. குழந்தைகள் பிறவியிலேயே சோஷலிஸ்ட்டுகள்தான். சமத்துவமின்மை அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. சுபத்ரா படுக்கை அறைக்குச் சென்று இரவு உடை அணிந்து வெளியே வந்தாள். நான் ப்ரீத்திக்குத் துணையாய் படுக்கப் போறேன். சுபத்ரா கமலாவை முத்தமிட்டுச் சென்னாள்: மோளூ, இன்னைக்கு அப்பாகூடப் படுத்துக்கோ.
நான் செய்திகளை ருசித்தபடி கொஞ்சநேரம் இருந்தேன். கமலா பால் குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பாட்டு அறையின் விளக்கை அணைத்து எங்களின் கட்டிலில் போய்ப் படுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து தினசரியை ஓசையுடன் கீழே போட்டு அன்றைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உறங்க நானும் தயாரானேன். படுக்கையறையில் சென்று கட்டிலின் ஓரமாய்ப் படுத்து கமலாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் பழைய ஃப்ரிட்ஜ் அவ்வப்போது திடுமென விழித்துக் கொண்டு புலம்புவதைத் தவிர வீடு மௌனமாயிருந்தது. திடீரென்று வருடங்களுக்கு முன்னால் என் தோள்களை வளைத்துக் கிடந்த அப்பாவின் கைகளின் பாரம்பரியம் எனக்குள் விழித்துக் கொண்டது. எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிற அதே ‘பி’ பாஸிட்டிவ் ரத்தத்தினுடைய பிடிவாதமும் அதுதான் - கமலாவைத் தொடவேண்டும். படுக்கையை சூடாக்கத் துவங்கியிருக்கும் அவளோடு இணைந்து கொள்ள இரட்டை வானவில்களைப் பார்த்தபடி நின்ற பையனின் பாரம்பரியம் என்னை முன்னால் தள்ளியது. என்னையே நான் ஒரு கான்வெக்ஸ் கண்ணாடியில் சிறிய உருவத்தில் படி யெடுத்துக் கிடத்தி யிருக்கிற என் மகளோடு உறவை ஸ்தாபிக்க என் கை நீண்டது. கண்கள் திறக்காமல், இன்னும் மூன்றாம் நம்பர் ஷுவிலிருந்து வளராத பிஞ்சுக் கால்களால், கமலா என்னை நெருங்க விடாமல் மார்பில் உதைத்துத் தள்ளினாள்.--------------------


என். எஸ். மாதவன் 1948 - ல் எர்ணாக்குளத்தில் பிறந்தார்.1975 - ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.கேரள அரசின் வருவாய்த்துறையில் செக்ரட்டரியாக இருந்தார்.இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.1970 - ல் கல்லூரி மாணவர்களுக்காக மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சிசு’ முதல் பரிசு பெற்றது. சூளைமேட்டுச் சவங்கள் (1981), ஹிக்விட்டா (1993) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.சென்ற நூறு வருடங்களில் மிகச்சிறந்த பத்து மலையாளக் கதைகளில் ஒன்றாக ஹிக்விட்டா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஹிக்விட்டாவுக்கு 1994 - ல் பத்மராஜன் விருது அளிக்கப்பட்டது.இந்தச் சிறுகதை ஹிக்விட்டா தொகுப்பிலிருந்து.

Friday, June 18, 2010

விஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமாரநந்தன்

இருத்தலின் விதிகள்

நகரத்து எழுத்தாளர்களின் புரிந்து கொள்ளாத மனைவியரைப் பற்றிய கதை. இந்த வகைக் கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து இது தனித்து அனுபவம் என்பது மாதிரி எதுவும் இல்லை. ஒரு சிறுகதையை நாம் படிக்கும்போது அதில் எதிர் பார்க்கும் ஏதோ ஒரு விசயம் இதில் கிடைக்காமல் போய்விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ராமநேசன் எனது நண்பன்

ராமநேசனின் கேரக்டர் அசடு நாவலின் கணேசன் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. கதையாளரின் கேரக்டரும் ராமநேசனின் கேரக்டரும் ஒத்து வராமல் அவனை வெறுக்கிறார். பிரிதொரு காலத்தில் அவனைப் புரிந்து கொண்டு அவனுடைய திருமணத்துக்குச் சென்று வர முடிவு செய்கிறார். ஒரு செயலையோ அல்லது ஒரு நபரையோ புரிந்து கொள்ள மற்றவருக்கு குறிப்பிட்ட காலமும் அனுபவங்களும் அவசியமாயிருக்கிறது (என்ன காலத்திலும் என்ன அனுபவத்திலும் ஒரு சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் போய்விடுவது வேறு விசயம்) என்பது இந்தக் கதையில் ஓரளவிற்கு வந்திருக்கிறது. ராமநேசன் ஒரு சாமியாரிடம் சீடராக சேருகிறான். ஆனால் அவர் போலி என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து திருச்சி வரை ஒரு வெங்காய லாரியில் வந்து அங்கிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறான். ஆனால் இது அந்த கேரக்டருக்கு ஒத்து வராத செயல். ராமநேசன் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்பவன். யாரையும் எளிதாக தன்வசப்படுத்தி தனக்குப் பிரச்சனை இல்லாமல் செய்து கொள்பவன். நிச்சயமாய் அவன் திருச்சியிலிருந்து மதுரை வரை நடந்து சென்றிருக்க மாட்டான்.



மழை புயல் சின்னம்

கதையின் ஆரம்பமும் அடுத்தடுத்த பத்திகளும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெனாலீனாவை முதன் முதலாகக் கோயிலில் சந்திக்கும் போது அவளுடைய உடைக¨ள் இவர் புகழ்கிறார். அவள் இவரைக் காதலிப்பதற்கு பிப்டி பிப்டி வாய்ப்பு இருப்பதாக சொல்லிச் செல்கிறாள். நகரத்துப் பெண்களைப் பற்றியும் நகரத்தாரின் காதல் பற்றிய புரிதல்களையும் இந்த வரிகள் சிறப்பாக உணர்த்தி விடுகின்றன. ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்ற வரிகள் நகரத்துப் பெண்களின் மிதக்கும் மனநிலை அல்லது அவர்களின் கட்டற்ற சுதந்திர உணர்வை உணர்த்துகிறது.
அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்ற வரிகளைக் கதாசிரியர் பயன்படுத்துகிறார். சக மனிதர்களைப் பற்றி இப்படி ஒரு பட்டவர்த்தனமான அபிப்ராயம் தேவையா என்று நெருடுகிறது. ஜெனாலீனா என்னிடம் தன்து காதலைத் துண்டித்துக் கொள்வதாகச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. காதலை இழக்கும் இடத்திலும் அதைப் பகடியாக்குவது கூட ஒரு நகரத்தின் மனநிலைதான் என்று நினைக்கிறேன். மேல் அதிகாரி போனில் கம் குவிக் என்று மிரட்டுவது கூட வாழ்க்கையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.


கதையின் கடைசியில் சர்மிளாவின் கேரக்டர் அவசர அவசரமாக உள்ளே வந்தாலும் அவர் வந்துதான் இந்த நிகழ்வை ஒரு கதையாக மாற்றுகிறார். சர்மிளாவும் சாரதியும் காதலர்கள். சாரதியின் முன்னிலையிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் குணமாக இருக்கிறது. இவர் ஜெனாலீனாவைக் காதலிப்பதையும் அவளின் நிராகரிப்பையும் அவளிடம்தான் சொல்கிறார். நட்பு காதல் என்று பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் எல்லைகளின் அடி ஆழத்தில் இருக்கும் பொய்மைகளை இந்த இடம் மிகப் பூடகமாகப் பேசுகிறது. ஒரு காதல் ஒன்றுமில்லாமல் போவதற்கும் ஒரு நட்பு காமத்தின் அழைப்பிற்கான அடையாளமாக மாறுவதற்கும் பெரிதாக ஒன்றும் நடக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் போதும் எல்லாமும் கரைந்து எல்லாமும் மாறிவிடுகிறது. ஒரு நகரத்தின் காதலை இந்தக் கதையின் இன்னொரு தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்திவிடுகிறது. அந்த வகையில் இது விஜய மகேந்திரனின் சிறப்பான கதைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே என்ற வரி மீடியாக்களின் முதலைக் கண்ணீர் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறது. அதே சமயம் இந்த வரி கோபிகிருஷ்ணனின் கதை வரிகளை மிகக் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.


காலையில் குளிர் காற்று வீசுகிறது. சித்தாள்கள் வேலைக்குப் போக பஸ்ஸ¤க்குக் காத்திருக்கிறார்கள். நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் புயல் காற்றும் மழையும் ஆரம்பமாகிறது. ஏழு மணி செய்தியில் வெள்ளம் சூழந்த பகுதிகளைக் காட்டுகிறார்கள். பிறகு இவருடைய ஏரியாவிலும் வெள்ளம் வந்து விடுகிறது. அதையும் உடனடியாக டிவியில் காட்டுகிறார்கள் இதையெல்லாம் சற்று நிதானமாக கால அளவை கொஞ்சம் லாஜிக்காக அவதானித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


நகரத்துக்கு வெளியே

மழை புயல் சின்னம் நகரத்து இளம் பெண்களின் மனநிலையைப் பேசுகிறதென்றால் நகரத்துக்கு வெளியே இளைஞர்களின் காதல் வஞ்சகத்தைப் பேசுகிறது. சூரியப் பிரகாஷ் பிரியாவின் மனநிலையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவளை நீலநிறச் சுடிதார் அணிந்து வரும்படி வற்புறுத்துகிறான். அவன் கூப்பிட்ட இடத்துக்கு வர அவள் மறுத்து விடுகிறாள். என்ஜாய் பண்ண அலையுறான் என்ற ஸ்டேட்மெண்ட்டில் பெண்கள் விசயம் தெரிந்தேதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிவிடுகிறார். பிரியா நிராகரித்தவனை அவள் அறையிலேயே தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி ஏற்றுக் கொள்கிறாள். (அவளுக்கு இந்த விசயம் தெரியாது. அவள் அப்பாவித்தனமாய் ஏமாந்து விடுகிறாள்.) பிரியா பாக்கியலட்சுமியை எச்சரிக்கும் முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது.
பிரியா ஏற்கனவே காதலிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்னேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். பாக்கியம் கர்ப்பிணி ஆகிவிடுகிறாள். நகரத்துக்கு வெளியே இருக்கும் நர்சிங் கோமில் பாக்கியம் மீண்டும் பழைய பாக்கியமாக ஆக்கப்படுகிறாள். பிரியா அன்று அணிந்து வரவேண்டிய உடை குறித்து விக்னேஷ் போன் செய்து சொல்கிறான். நீல நிறச் சுடிதாரை ஒரு குறியீடாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அது முழுமையாக வெளிப்படாமல் இருக்கிறது. இந்தக் கதையும் நகரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

அடைபடும் காற்று

கடிதங்களின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியை இந்தக் கதையில் பயன் படுத்துகிறார். முதியவர்கள் நகரில் தனித்திருப்பது. அவர்களின் அசுவாத் தளமான டிரைவ் இன் தியேட்டர் மூடப்பட்டு அங்கே ஒரு ரசாயணத் தொழிற்சாலை வரவிருப்பது. அமெரிக்காவில் வசிக்கும் மகன்கள் நகரத்திலிருக்கும் தங்கள் பெற்றவர்களின் வசிப்பிடங்களை தங்களுடைய வாழ்க்கைக்காக விற்கச் சொல்வது என்று இக்கதை முழுவதும் தற்கால நாகரீக சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது. இதை ஒரு கடித உத்தியில் எழுதாமல் வேறுமாதிரியில் எழுதியிருந்தால் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
விஜய் மகேந்திரனின் கதைகளில் நகரத்தின் உறுத்தல் எளிதாக மூச்சுவிட முடியாத இறுக்கம் பற்றித் தீவிரமாகப் பேசுகிறது. தனிப்பட்ட காதல் நட்பு பற்றிய விசயங்களைப் பேசினாலும் அதிலும் நகரம் தவிர்க்க முடியாத பங்காற்றுகிறது. இவரிடம் தென்படும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது. சிலர் சமூகத்தைப் பாதிக்கிறார்கள். சிலரை சமூகம் பாதிக்கிறது. இவரை சமூகம் எப்படியெல்லாம் பாதித்தது என்பதுதான் கதைகளாக வெளிப்படுகிறது. நிறைய இடங்களில் கோபி கிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார். எடுத்துக் கொள்ளும் கதைகளை முடிந்தவரை மேலோட்டமாகவே சொல்ல முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எந்தக் கதையிலும் எந்தப் பிரச்சனையும் தீவிரமாகப் பேசப்படுவதில்லை. அலங்காரமான கவித்துவமான வாக்கியங்கள் வெளிப்பாடுகளில் பெரிய நம்பிக்கை இல்லாவராகக் காண்கிறார். இந்த வகையான எழுத்து முறையை இவர் இன்னும் செம்மையாக ஆராய்ந்து
கையாண்டால் அதுவே இவருக்கு மிகப் பெரிய பலமாக அமைய வாய்ப்பிருக்கிறது.



Monday, June 14, 2010

நிலாரசிகனின் டைரிக்குறிப்புகள்



அன்புள்ள நிலாரசிகனுக்கு,

விஜய் மகேந்திரன் எழுதிக்கொள்வது. நலமாக இருக்கிறாயா? உன் புது வேலை எவ்வாறு உள்ளது? உன்னை முன்பு போல புத்தக கடைகளிலோ,இலக்கிய விழாக்களிலோ பார்க்க முடிவதில்லை.வலைப்பூவிலும் குறைவாகத்தான் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாய். அலுவலகம் உன் நேரங்களை எல்லாம் விழுங்கிக்கொள்கிறது என நினைக்கிறேன்.
“இருள் விலகும் கதைகள்” தொகுப்பைப் படித்துவிட்டு என்னை நேரில் சந்தித்தது பசுமையாக நினைவிருக்கிறது. உனது வலைப்பூவை அதற்கு முன்னர் படித்திருந்ததினால் எனக்கும் நீ அறிமுகமாகி இருந்தாய்!

ஆச்சரியம் என்னவெனில் சென்னையில் கணிணித்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இலக்கியம் என்றால் எட்டிக்காய் என நினைத்திருந்தேன். ஆனால் உன்னைப் போல சில நண்பர்கள் அங்கிருந்துகொண்டு தன்னாலான பங்கை ஆற்றி வருகின்றனர்.
சென்னைக்கு வந்து பத்தாண்டுகளாகியும் நீ இயல்பு மாறாமல் கவிதைகள்,கதைகள் என்று எழுதிக்கொண்டிருப்பது குறித்த மகிழ்வை உன்னிடமே சொல்லியிருக்கிறேன். நகரத்தின் பற்சக்கரங்கள் இலக்கிய வாழ்வின் நேரங்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது.பிழைப்புக்கு மாரடிக்கவே நமது பொழுதுகள் சரியாகிவிடும்.

உனது சிறுகதைத்தொகுப்பான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” கொடுத்து ஐந்து மாதமாகிறது.இப்போதுதான் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற நம்பிக்கைதான்.
எனக்கு தொகுப்பின் முதல்கதையான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இதன் வடிவமும் என்னைக் கவர்ந்தது. பழைய புத்தகக்கடையில் தேடி எடுக்கும் ஒரு டைரியில் இருந்து கதை ஆரம்பிப்பதாக எழுதி இருப்பது சிறப்பான உத்தி. சிறுமியின் டைரிக்குறிப்புகளை அவளது பாஷையிலே எழுதியிருக்கிறாய்!

இது ஒரு நல்ல சிறுகதைக்கான வித்தை. அது உனக்கு இந்தக் கதையில் கை வந்திருக்கிறது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும்,கடத்தப்பட்டு,விற்கப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படுவதமான கொடுமைகளை இக்கதையில் தோலுரித்துக்காடி இருக்கிறாய். வட இந்தியாவில் இவை அதிக அளவு நடைபெறுகின்றன.பாலியல் வக்கரம் மனிதர்களிடையே நச்சுக்காற்று போல பரவியிருக்கிறது.

டெல்லியில் ரயிலில் சந்திக்கும் பெண்ணுக்கும்,அவளது டைரியிலும் இதே போல் கதை இருக்க இருவரும் ஒருத்திதானா? என்றவாறு கதையை முடித்திருக்கிறாய். எந்த இடத்திலும் விரசம் இல்லாதவாறு நுட்பமாக எழுதியிருக்கிறாய்.
குழந்தைகள் உலகம் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன. பால்ய வயதின் நினைவுகளை அசைபோடும் கதைகளும். அவ்வகையில் “வேலியோரபொம்மை மனம்” என்ற கதையும் “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு “ஏ” பிரிவு” கதையும் என்னைக் கவர்ந்தன.

“வேலியோர பொம்மை மனம்” கதை இலங்கையில் போரால் அநாதைகளாக்கப்படும் சிறுமிகளில் ஒருத்தியைப் பற்றிய உண்மை கலந்த புனைவு எனலாம்.
அப்பா,அம்மாவை வீட்டில் குண்டு விழுந்ததால் இழந்து ஒரே நாளில் அநாதையாகிவிடும் ஜெயா,வேலியோர முகாமில் இருக்கிறாள்.அந்த பிஞ்சு மனத்திற்கு அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கரடி பொம்மைதான் ஒரே ஆதரவு. அகதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அவர்களோடு நின்று சாப்பிடுகிறாள். அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் இராணுவ வீரர்களில் ஒருவன் இவள்மீது வெறுப்பைக் காண்பிக்கிறான்.பொம்மையை பிடுங்கி வைக்கிறான். இறுதியில் ஜெயாவுக்கு அளிக்கப்படும் இரண்டு ரொட்டித்துண்டுகளை வாங்கியவள்,வீரனுக்கு அவற்றில் ஒன்றைக் கொடுக்க அவன் நெகிழ்ந்து உடல் நடுங்குகிறான். மனித உணர்வுகளை நுட்பமாக பேசியிருக்கிறாய்.

இந்தக்கதையை படித்தபோது சிறுமி ஜெயா எங்கிருக்கிறாள் என தெரிந்தால் என் வீட்டிற்கு அழைத்து வந்து விடலாமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கிறது இந்தக்கதை.

சிறுவயதில் நம்முடன் படித்த நண்பர்களை,நாம் இழந்த உறவுகளை,விளையாடிய பொழுதுகளை(உம்.கிளியாந்தட்டு) நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது உனது கதைகள்.
சத்யம் தியேட்டரில் குவாலிட்டு walls வாங்கி சாப்பிடுபவர்களுக்கு “சேமியா ஐஸ்”ஸின் அருமை தெரியுமா? சேமியா ஐஸ் கதையில் வரும் சிறுவன் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடி அவற்றை ஐஸ்காரனிடம் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்கிறான்.
அவனது சித்தியால் அடிபடுகிறான். அதன்பிறகு திருந்தினானா என்றால் ஐஸ் வண்டி வரும் சத்தம் கேட்டவுடன் வாங்கிய அடி மறந்துபோய் சித்தியின் புதுச்செருப்பைக் கண்டு சிரிப்பதாக கதையை முடித்திருக்கிறாய்!

அந்த வயதுக்குள்ள சேட்டைகள் அது! “வால்பாண்டி சரித்திரமும்” அப்படி ஒரு சேட்டைக்கார பையனின் கதையே!
தொகுப்பின் கடைசிக்கதையான “மை லிட்டில் ஏலியன் ப்ரண்ட்” எனக்குப்பிடித்திருந்தது.எடுத்த எடுப்பிலேயே இது fantasy கதை என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தி விடுகிறாய். இதன் வடிவ ஒழுங்கு,கதை கூறல் முறை,விவரணைகள் எல்லாம் துல்லியமாக அமைந்துள்ள கதை. சாரு நிவேதிதா கூட இக்கதையை படித்ததில் பிடித்ததாக அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
50 வருடங்களுக்கு பிறகு வரும் நூலுக்கு ஒருவன் விமர்சனம் எழுதுவதாய் கதையை அமைத்திருக்கிறாய்.அமெரிக்காவில் fantasy நாவல்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் வெளிவரும் முதல் நாளே முன்பதிவு செய்து எவ்வாறு முண்டியடித்துக்கொண்டு வாங்குகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளாய். முழுக்க புனைவாகவே ஒரு கதையை நகர்த்திச்செல்ல நல்ல கற்பனை வளம் தேவை. அது இருக்கிறது உன்னிடம்.

மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் உனக்குள் இருக்கும் நல்ல சிறுகதையாளனை இனம் காட்டுகிறது.தொகுப்பு பற்றி இருக்கும் விமர்சனங்களையும் நான் உனக்கு சொல்லியாக வேண்டும். உதாரணமாக “வேட்கையின் நிறங்கள்” கதையின் கரு வித்தியாசமானது. ஆனால் ஒரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளும் பெண்களின் மன உலகத்தை இன்னும் அழுத்தமாக நீ சொல்லியிருக்க வேண்டும். இது சொல்லப்பட்ட முறையின் கோளாறுதான். சில கதைகளை ஒன்றரை பக்கங்களில் முடித்திருக்கிறாய்.அப்படி எழுதக்கூடாது என்று வரையறையில்லை. ஆனால் விரிவாக எழுத வேண்டிய கதைப்பரப்பை சுருக்கக்கூடாது. உதாரணமாக ‘தூவல்’ என்ற கதையில் இறுதிப்பகுதிகளில்தான் உண்மையாக கதை துவங்குகிறது.ஆனால் சுருக்கமாக அந்தக்கதை முடிவடைந்துவிடுகிறது.
காதலில் தோற்று மும்பை போகும் அவன் பிழைப்பிற்காக ஈடுபடும் குற்றங்களை கூறுகிறாய். அதன்பிறகு கூலிப்படையில் சேருகிறான். அந்த அனுபவத்தை இன்னும் விரிவாக சொல்லி இருந்தால் கதைக்கு வேறு ஒரு தளம் கிடைத்து இருக்கும்.
முதல் தொகுப்பில் பெரும்பாலானவர்களுக்கு நேரும் பிரச்சினைதான் இது. இதை நீ கண்டுணர்ந்து செம்மைப்படுத்தினால் உனது கதைகளின் விகாசம் கூடும்.
பால்ய வயதில் நீ கண்டுணர்ந்த நண்பர்கள்,குழந்தைகள்,அனுபவங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளைத்தான் எடுத்து கதையாக்கி இருக்கிறாயோ? என்று நினைப்பதற்கு ஏதுவாகவே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. புனைவு கலந்த டைரிக்குறிப்புகள் என்று கூடச் சொல்லலாம். உனக்குள் இருக்கும் படைப்பாளியை விட்டுக்கொடுக்காமல் கடந்த பத்தாண்டுகளாக சென்னை என்னும் பெருநகரத்தில் வசித்து வருகிறாய். கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும்,நுகர்வு கலாச்சாரம் மக்களை என்ன மாதிரியான சீரழிவிற்கு கொண்டு செல்கிறது என்பது பற்றியும் என்னிடம் நிறைய விவாதித்து இருக்கிறாய்!

அதைப்பற்றிய கதைகளை எப்போது எழுதப்போகிறாய்? நகரத்தின் மாறிவரும் பண்பாட்டு கூறுகள் பற்றியும் உன்னால் நல்ல கதைகளாக எழுதமுடியும்.
கவிதைகளில் காதலாக கசிந்து உருகும் நீ,ஏன் இன்னும் தீவிரமான காதல்கதைகளை எழுதவில்லை? உன்னுடைய கல்லூரிக்காலங்கள்,தொழிலின் பொருட்டு பார்த்த நகரங்கள்,உனது வெளிநாட்டு அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் உனது புனைவுலகத்திற்குள் எவ்வித மனத்தைகளுமின்றி கொண்டு வர வேண்டும். அப்போது வேறு ஒரு செழுமையான படைப்பாளி எங்களுக்கு கிடைப்பார். இந்தக் கோரிக்கையை மிக உருமையுடன் உன்னிடத்தில் வைக்கிறேன்.
திரிசக்தி பதிப்பகம் முதல் சிறுகதைதொகுப்பு என்று பாராமல் சிறப்பான முறையில் வடிவமைத்து உனது நூலை வெளியிட்டு உள்ளார்கள்.அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்

இணையத்தில் பெற: http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79

விலை: ரூ.70
-விஜய் மகேந்திரன்.

Friday, June 11, 2010

கனவு புதிய இதழ் வந்துள்ளது


கனவு புதிய இதழ் வந்துள்ளது


கனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.
தமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்
இரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.
சம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.


பிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,
சுப்ரபாரதிமணியன்,
8/2635 பாண்டியன் நகர்
திருப்பூர் 641 602.
செல் 94861 01003
email subrabharathi@gmail.com

சென்னையில் உள்ளவர்கள்
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலாம்.

Wednesday, June 9, 2010

அகநாழிகை புதிய இதழ் வந்துள்ளது


நேர்காணல்

''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை
நேர்காணல் : பஃஹிமா ஜஹான்

''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா
நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன்

''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப்
நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை

சிறுகதைகள்

பாவண்ணன்
அய்யப்ப மாதவன்
ரிஷான் ஷெரிப்
ஐயப்பன் கிருஷ்ணன்
மதியழகன் சுப்பையா

கட்டுரைகள்

கலாப்ரியா
ஜெயந்தி சங்கர்
அஜயன்பாலா
நதியலை
ஆர்.அபிலாஷ்


கவிதைகள்

தீபச்செல்வன்
பெருந்தேவி
சாகிப்கிரான்
தூரன் குணா
ஆங்கரை பைரவி
தபவி
செந்தி
வெய்யில்
லாவண்யா சுந்தரராஜன்
விதூஷ்
கௌரிப்ரியா
ரகசியசினேகிதி
மண்குதிரை
ஆதவா
உழவன்
நந்தாகுமாரன்
சி.சரவணகார்த்திகேயன்

அகநாழிகை கிடைக்குமிடங்கள்

சென்னை
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171, 28156006
டிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு, சென்னை. செல் : 9940446650 போன் : 65157525
திரு.குகன், நாகரத்னா பதிப்பகம். செல் : 9940448599

மதுரை
பாரதி புக் ஹவுஸ், 28, வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை-1. செல் : 97893 36277

கோயம்புத்தூர்
விஜயா புத்தக நிலையம், 20, ராஜவீதி, கோவை. போன் : 04222577941

சேலம்
தக்கை வெ.பாபு, சேலம். செல் : 98651 53007

Monday, June 7, 2010

லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''


லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''

நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகம் செய்து அது தந்த உணர்வுகளை எழுத வேண்டும் என்ற ஆசையின் முதல் படியே இந்த பதிவு.இது நிச்சயமாக விமர்சனமோ மதிப்புரையோ இல்லை.
ஒரு பகிர்தலே,

சமீபமாக பல இளம்கவிஞர்கள் என் கவனத்தை கவருகிறார்கள்.இசை,இளங்கோ கிருஷ்ணன்,வெய்யில்,நரன்,அனிதா,முகுந்த் நாகராஜன்,நேசமித்திரன், ஆகியவர்களை சொல்லலாம் .இவர்களின் கவிதைமொழி உரைநடைக்கு வெகு அருகில் அமைந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

இரண்டாயிரத்திற்கு பிறகு எழுத வந்த பெண் கவிகளில் தனது தீர்க்கமான மொழியால் தனித்து தெரிபவர்,லீனா மணிமேகலை.
உரைநடையில் முழ்கி படித்து கொண்டுயிருந்த சமயத்தில்,'''ஒற்றையிலையென ''என்ற தலைப்பால் உந்தப்பட்டு அவரின் அந்த முதல் கவிதை தொகுதியை வாங்கி படித்தேன்.

இலகுவான மொழியில் சரளமான சொற்களை கொண்டு மன உணர்வுகளை பேசும் கவிதைகள் அதில் அதிகம் இருந்தன .

காதலின் நுட்பமான அவதானிப்புகளை சில கவிதைகளில் அவர் எழுதியுள்ள விதம் என்னை மிகவும் கவர்தது.

ஒரு கவிதையில்

மௌனங்கள்
எப்பொழுதும்
செயலற்றவையாகவே
தோன்றினாலும்
கூர்கத்தியின் பதத்தை
தடவிப் பார்க்கும்
நடுக்கத்தை
ஏற்படுத்தவே செய்கின்றன.

காதலின் சலனத்தை இந்த வரி நுட்பமாக கொண்டு வருகிறது.காதலர்களின் போலி பாவனைகளை கலைக்க விழைகிறது.

இன்னொரு கவிதையில்

விடைப்பெற்று கொள்ள வேண்டிய
நேரம்
அறிந்திருக்க வில்லை
அப்பொழுதும்
நாம் பேச ஆரம்பித்து இருந்தோம்
என்பதை.

தனது சுயத்தை தொலைக்காத பெண்ணின் காதல் வரிகளாகவே இவற்றை நான் எடுத்துகொள்ள வேண்டும்.


தீர்ந்து போயிருந்தது காதல் என்னும் கவிதையின் பேசு பொருள் காதலனின் வருகைக்காக காத்து இருக்கும் இளம்பெண்ணின் அக உணர்வுகள்.
பெருநகரத்தின் புற நெருக்கடிகள் தரும் மன அவசங்களும் அதில் ஒன்றிணைந்து வேறு ஒரு தளத்திற்கு கவிதையை கொண்டு சென்று இருப்பது இதன் சிறப்பு.

தீடிரென்று உன் நினைப்பு
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ

அலுவலகம் உமிழ்ந்த
மாலை மிச்சங்களை
அவசரமாய் அள்ளியபடி

டிராபிக் கின் காத்திருப்புகளில்
உன்னை ஒத்திகை பார்த்துக்கொண்டே

இரைச்சலில் ஏனோ இன்று
எதற்கோ கட்டுப்பட்டது போல்
விரல்கள் தாளமிட்டியிருந்தன

வியர்வைக் காசுகள்
பிசுபிசுத்த காய்கறி பழங்கள்
பேரம் தோற்ற பெருமூச்சுகள்
பார்க்கிங் சண்டைகள்

தினமும் திரும்பும்
அறைகளில் அடர்ந்த மௌனம்

'இதோ வந்து கொண்டே இருக்கிறேன் '
உன் தொலைபேசிக்குரல்
திரும்ப திரும்ப ஒலித்ததில்
இன்னும் எஞ்சியிருக்கிறது
என் தாபம்.

சமைத்ததில் எல்லாம்
நேரம் எரித்த நெடி

தொலைக்காட்சி பிம்பங்கள்
உதிர்த்துப் படர்ந்த தூசி

வீட்டின் சுவரெங்கும்
களைப்பின் கேவல்கள்

இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக்கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்.


காத்திருத்தல் பெண்களுக்கு வெகு காலமாகவே விதிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வு .திருமணம் ஆனவுடன் இதே பெண் கணவனுக்காக காத்திருக்க வேண்டும்.
காதலனின் நினைவு வந்தவுடன் அவனைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.அவள் அன்றாடம் சந்திக்கும் காட்சிகள் அவளது வெறுமை மனநிலையை அதிகரிக்கிறது.அலுவலகம் சலிக்கிறது.டிராப்பிக் கின் காத்திருத்தல், பார்கிங் சண்டைகள்,இதுக்கு நடுவே கூட இதோ வந்து விடுகிறேன் என்ற காதலனின் குரல் அவளை ஆசுவாசம் அடையச் செய்கிறது.அறைக்கு திரும்பியவுடன் கூட சமைக்கப் பிடிக்கவில்லை,தொலை காட்சி பார்க்கப் பிடிக்கவில்லை.

வீட்டின் சுவர்களில் கூட தனிமையை உணர்கிறாள்.வெகுநேரம் கழித்து காதலன் வருகிறான் இவளை அணைத்துக் கொள்கிறான்.அவள் முன்பிருந்த மனநிலையில் இல்லை.தீர்ந்து போயிருந்தது காதல் என முடிக்கிறாள்.
இறுதியில் காதலனின் மீது கவிதை கசப்பாய் முடிகிறது.ஊடலும்,கூடலும் காதலின் பகடையாட்டமே.
காதலியின் மென் உணர்வுகளை பெரு நகரங்களின் சந்தடிகளுக்கிடையே காட்சிபூர்வ்மான சித்தரிப்பில் லீனாவின் இந்த கவிதை வெற்றி பெறுகிறது.

முதன் முதலில் இந்த கவிதையை படித்த போது அடைந்த அதே உணர்வை இப்போது படிக்கும் போதும் அடைகிறேன்.
வெறுமை நிறைந்த சுழலில் இந்த கவிதையை படிக்கும் போது கூட நல்ல மன நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இதுவே நல்ல கவிதையின் அடையாளமாக நான் கருதுகிறேன்.

பெருநகரப் பெண்ணின் காதலின் வலியை செறிவான மொழியில் சொல்லும் இந்த கவிதை பிறகு ,லீனாவே இயக்கி குறும் படமாக LOVE LOST என்ற பெயரில் தயாரித்துள்ளார்.அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

Wednesday, June 2, 2010

கதை திரைக்கதை வசனம் மற்றும் ...

ஸ்ரீபதி பத்மநாபா


சில வாரங்களுக்கு முன் 'காளிதாசன் விவரித்த கள்ள சந்நியாசி' பி.வி.மேனன் பற்றி சொல்லியிருந்தேன். நான் கணினியியல் படித்துக்கொண்டிருந்தபொழுது அவன் எனக்கு சீனியர். அவன் இளங்கலை மேலாண்மையியல் படித்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் எல்லோரிடமும் என்னை பார்த்து ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. இவன் எப்படியேனும் சினிமாவில் பெரியாளாகிவிடுவான் என்று எல்லோருக்கும் பயம். வகுப்பறைக்கு வரும்போதே ஒரு குவார்டர் பாட்டிலோடுதான் வருவான். ஆனால் முதல் பெஞ்சில்தான் உட்காருவான். இரண்டு முறை சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி திரும்பி வந்தவன். ஆனால் பாடத்தில் சுட்டி. சிஸ்டம் அனாலிசிஸ் பேப்பரில் மூன்று மணி நேரத்தில் எண்பத்தெட்டு பக்கங்கள் எழுதி எண்பத்தெட்டு சதமானம் மதிப்பு எண்கள் வாங்கியவன். உழைப்பின் விஷயத்தில் ஒரு குட்டி ஜெயமோகன் என்றே சொல்லலாம்.

பட்டப்படிப்பு முடிந்தபிறகு என் நெருங்கிய நண்பர்கள் முடிவு செய்தபடி திருப்பூரில் கணினி சம்பந்தமான தொழில் செய்வது என முடிவெடுத்தோம். என் நண்பர்கள் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால் கணிப்பொறியியல் இறுதியாண்டில் என் ப்ராஜெக்ட் தான் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தது. நுண் மென் சாளரங்களும் மூஷிகனும் இல்லாத அந்த காலத்திலேயே ஆர்டிபிசியல் இண்டல்லிஜன்சில் ப்ராஜெக்ட் செய்திருந்தேன். நுண் மென் சாளரங்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் , மூஷிகன் என்றால் மௌசிகன் என்கிற மௌஸ்.

நண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய தயார். ஒரே ஒரு நிபந்தனை. நான் சென்னை இருக்கும் திசையில் தலை வைத்து படுக்க கூடாது. ஐந்து நண்பர்கள் சேர்ந்து திருப்பூரில் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம் துவங்கினோம். மூன்று நண்பர்கள் பிரபல கணினி நிறுவனத்தின் வன்பொருள்களை விநியோகம் செய்வது என்றும் நானும் இன்னொரு நண்பனும் மென்பொருள் துறையை கவனித்துக்கொள்வது என்றும் தீர்மானமானது. மென்பொருள்துறை தற்காலம் போல ஏற்றம் பெற்ற துறையாக அப்போது இருக்கவில்லை.

திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு எக்ஸ்போர்ட் டாகிமேண்டஷன் என்பது சிம்ம சொம்மனப்பாயிருந்தது. Proforma, Bill of Lading, Shipping Bill இப்படி ஐம்பதுக்கும் மேலான ஆவணங்கள் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மில்லிமீடர் பிழை இருந்தாலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் நிராகரித்துவிடும். அதனால் அதற்கான மென்பொருள் தயார் செய்வது என்றும் அதன் மூலமாக மென்பொருள் துறையில் ஒரு அடி கல்லாகவோ ஒரு மைல் கல்லாகவோ மாறிவிடுவது என்றும் முடிவு செய்தோம்.

ஆறு மாதங்கள் அதற்காக உழைத்து ஒரு பிரபல நிறுவனத்திடம் செய்முறை விளக்கம் அளிப்பதற்கான நாள் நெருங்கிகொண்டிருக்கும்போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

எங்களுக்கு முன்பே திருப்பூருக்கு வந்து ஒரு பின்னலாடை நிறுவனம் நடத்திகொண்டிருக்கிறான். என்னை தேடி கண்டுபிடித்து அழைத்துவிட்டான். அவன் அலுவகத்துக்கு போனபோது மலையாளத்திலேயே பேசினான். தீவிரமான விஷயங்கள் என்றால் என்னிடம் மலையாளத்தில் பேசுவது அவன் வழக்கம்.

இரிக்கு... சாப்ட்வேர் இலானோ இப்போ களி? என்றான்.

அதே என்றேன்.

சினிம எல்லாம் மதியாக்கியோ என்றான்.

போகணம். சமயம் வரட்டே என்றேன்.

நமுக்கு ஒரு சினிமா செய்தாலோ? என்றான்.

நான் அவனை கூர்ந்து பார்த்தேன். எதாவது 'கம்பி' படத்துக்கு அடிபோடுகிரானோ கள்ள சந்நியாசி என்று யோசித்தேன். கம்பி படம் என்றால் பலான படம்.


நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு பெமினிஸ்ட் பிரயோகம் ஆயால் நன்னு என்றான்.

இன்னும் உறைந்து போய்விட்டேன். குருவாயுவூர் கிருஷ்ணன் அருள் புரிகிறானா?

நல்ல ஒரு கத உண்டல்லோ பி.வீ! என்றேன்.

ஒரு நல்ல ஹீரோயின் சப்ஜெக்ட். 'ஒரு யுகம்' என்னானு டைட்டில். ஒரு வேசியுடே ஒரு நாள். அன்னு நடக்குன்ன சம்பவங்களானு.
பக்ஷே கிளைமாக்சில் மாத்ரமானு ஒரு பெட்ரூம் சீன் வருன்னது.
வீட்டு சிலவினு வேண்டி ஆரே என்கிலும் கிட்டான் வேண்டி அவள் அலையுன்னு. பக்ஷே ராத்ரி வரே ஆரேயும் கிட்டுன்னில்ல. ஆ அலைச்சலானு படம் முழுவன். ஒடுக்கம் (கடைசியில்) அவளுடே விகலாங்கனாய (ஊனமுற்ற) பர்தாவுமொத்து (கணவனுடன்) குறச்சு கஞ்சி கழிச்சு சுகமாய் கிடன்னு உறங்குன்னு...

கிரேட் என்றான். ஆரானு ஹீரோயின் என்று கேட்டான். மலையாளத்தில் அப்போது ஓரளவு பிரபலமாயிருந்த அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

'சுவீதா!'
'வெரி குட்' என்றான்.

அடுத்த வாரம் 'அந்த புரத்தில்' உள்ள அவளுடைய வீட்டுக்கு கதை சொல்ல சென்றேன். அவளுக்கு வளரே இஷ்டமாயி. களைத்து போய் ஆயுதம் இழந்து நிற்கும் நிலையில் 'இன்று போய் நாளை வா' என்று கருணை கூர்ந்தாள்.

அதற்கு அடுத்த வாரம் எர்ணகுளத்தில் ப்ரொடியூசர் பி.வி.மேனோனுடன் சந்திப்பு. நான் எர்ணகுளத்தில் காத்திருந்தேன். பி.வீ. ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னான். பல ஆயிரம் நட்சத்ரங்கள் பெற்ற ஹோட்டல். அங்கு லானில் பி.வீயும் கருணையுள்ளம் கொண்ட சுவீதாவும் தவிர வேறொரு கதாபாத்திரமும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அந்நியன், விதேசி. மூவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுவீதா என்னை கண்டதும் வரூ கதாகிருத்தே என்றாள். அந்நியன் பி.வீயின் கஸ்டமர். மொராக்கோ விலிருந்து வந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனிடம் சுவீதா எதோ செவியோதினாள். இருவரும் கிளம்பி சென்றார்கள். நானும் பிவீயும் அப்சொலயுட் வோட்காவை மிக சரியாக சுவைத்துகொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து பேரர் வந்து பிவீயின் செவியோதினான். வாடா போலாம் என்றபடி ஆயிரம்
நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திர அறைக்கு அழைத்து போனான்.

அறைக்குள் ஒரு அரைக்கால் சராயோடு அமர்ந்திருந்தான் அந்நியன். அவளை காணவில்லை. பீவீயிடம் 'உனக்கு ஆர்டர் கொடுத்த டி ஷர்டை அணிந்து வர சொல்லியிருக்கிறேன் அவளிடம்' என்றான் அந்நியன். அவள் குளியல அறையிலிருந்து வெளியே வந்தாள். ஆங்கில எழுத்துக்களை கலைத்து போட்டு அதன் மேல் ஒரு நாய்குட்டியின் முகம் அச்சிடப்பட்ட ஒரு டி ஷர்ட். கீழே ஜீன்ஸ். அந்நியனுக்கு புராடக்ட் பிடித்து விட்டது போல. முகத்தில் மகிழ்ச்சி தெறித்தது. கூடவே கையில் பிடித்திருந்த வோட்காவின் குறும்பும் கொப்பளித்தது. டி ஷர்டை சுட்டி காட்டி கொஞ்சம் மேலே தூக்கமுடியுமா டியர் என்றான். சுவீதா டி சாடை கொஞ்சம் சுருட்டி மேலே உயர்த்தினாள் - தொப்புள் தெரிந்தது. அந்நியன் என்னை திரும்பி பார்த்து ஹவ் ஈஸ் இட் என்றான். வெரி குட் என்றேன். நோ நாட் குட் என்ற படி இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்த சொன்னான். இப்போது பீவீயை பார்க்கிறான். அவன் வெரி குட் சொன்ன போதும் திருப்தியாகவில்லை அந்நியனுக்கு. சுவீதா பொறுத்து பார்த்து மார்புகளில் பாதி தெரிவது வரை உயர்த்தி நிறுத்தினாள். அந்நியனுக்கு இப்போதுதான் வெரி குட்.

நண்பர்கள் என்னை கடுமையாக வைது கொண்டிருந்தார்கள் - தொழிலில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்காக. நான் அவர்களை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் பீவீயின் அலுவலகத்துக்கு போனேன். புதிதாய் ஒரு கார் நின்றிருந்தது. பீவீ பிசியாயிருந்தான். காத்திருந்து அறைக்குள் போனேன்.

வாடா ஸ்ரீ ! நானே கூப்படும்னு இருந்தேன். அந்த டி ஷர்ட்ல நல்ல லாபமடா. நீயும் சுவிதாவும் நல்ல ஹெல்ப் பண்ணீங்க. முதல்ல முழு டி ஷர்டுக்குதான் ஆர்டர் குடுத்து அக்ரீமென்ட் போட்டிருந்தான் அந்த பையர். சுவிதாவ பாத்து ஜொள்ளு விட்டு கால் வாசியா குறச்சிட்டான். விலைய மாத்தவே இல்ல. அவ்வளவு துணி நமக்கு லாபம்.
என்றபடி ஒரு நோட்டுக்கட்டை மேசையிலிருந்து எடுத்து 'பத்தாயிரம் இருக்கு, செலவுக்கு வச்சுக்கோ' என்றான்.

அப்போ 'ஒரு யுகம்?' என்று கேட்டேன்.

சினிமாதானே, எடுக்கலாம்டா, இன்னும் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நடக்கட்டும். என்றான்.

கதை திரைக்கதை வசனம் நான் எழுதினேன் என்றாலும் 'இயக்கத்தில்' அவன் தான் பெரிய ஆள் என்று உணர்ந்து கொண்டேன், மட்டுமல்லாமல், இயக்குனர் ஆவதற்கு கலையுடன் கூடவே பிசினஸ் மேநேஜ்மன்ட்டும் அவசியம் என்பதையும்.