Monday, May 8, 2017

ரஜினி கதாபாத்திரமாக வாழ்ந்த 'மூன்று முடிச்சு'





இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் சிவாஜிராவ் கெய்க்வாடை ரஜினிகாந்தாக அறிமுகப்படுத்தினார். ரஜினிகாந்த் அவர் மேஜர் சந்திரகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு வைத்த பெயர். அந்த பெயரை தான் ரஜினிக்கு வைத்தார். ரஜினிகாந்த்தை ஒரு படத்தில் அறிமுகப்படுத்தியதோடு பாலச்சந்தர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து ரஜினி தன்னை நிரூபிக்கும் படியான கதாபாத்திரங்களைக் கொடுத்து செத்துக்கினார். அபூர்வ ராகங்களில் ரஜினி அறிமுகமானார் அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்று. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பழைய மனைவியான ஸ்ரீவித்யாவை காணவருவார். கமல்ஹாசன் அவரை தனது பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்று விவாதிப்பார். நிறைய காட்சிகள் இந்தப்படத்தில் ரஜினிக்கு கிடையாது.ரஜினியின் நடிப்பு திறமையை காட்ட முதல் படத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லை. ரஜினியின் இரண்டாவது படம் கன்னடத்தில் புட்டண்ணா கனகல் இயக்கிய கதா சங்கமம். மூன்றாவது படம் தெலுங்கில் அவள் ஒரு தொடர்கதையை பாலச்சந்தரே ரீமேக் செய்த 'அந்துலேணி கதா'. இந்த படத்தில் ஜெய் கணேஷ் தமிழில் செய்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். நான்காவது படம் தான் மூன்று முடிச்சு. கமல்ஹாசன் அப்போதே பெரிய ஸ்டார். அவர் கெஸ்ட் ரோல் செய்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவும் என்றும் , பாலச்சந்தரின் படங்களில் அவர் வரிசையாக நடித்து வந்ததால் இதில் பாலச்சந்தர் கமலை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தார் எனவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்த படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று ஐகான்கள்களை தவிர வேறு யாரையும் யோசிக்கக் கூட முடியாது. இந்த கதையை பல வருடங்கள் கழித்து இந்தி , பெங்காலி போன்ற அரைகுறையாக திருடப்பட்டு படமாக்கப்பட்டது. இவர்களில் பத்தில் ஒரு பங்கு நடிப்பைக் கூட வட இந்திய நடிகர்களால் நடிக்க முடியவில்லை. அந்த படங்களும் தோல்வியுற்றன. பல மொழிகளில் அதிகம் ரைட்ஸ் வாங்காமல் உல்டா செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படங்களில் ' மூன்று முடிச்சு' படமும் ஒன்று. இந்த படத்தை கதையைக்கொண்டு பின்னால் ஒரு தொலைக்காட்சி சீரியல் கூட எடுத்தார்கள்.



கமலும், ஸ்ரீதேவியும் காதலர்கள் ஆனால் இந்த விஷயம் ரஜினிக்கு பிடிக்காது. ரஜினி ஸ்ரீதேவியின் அழகை கண்டு அடைய மட்டுமே நினைப்பார். இருவரையும் பிரிக்க எல்லா நாடகங்களும் நடத்துவார். ரஜினியின் குணம் பற்றி கமலுக்கு என்ன சொல்லியும் நம்பமாட்டார். படத்தின் முக்கிய கட்டத்தில் கமலையும், ஸ்ரீதேவியையும் வைத்து படகை ஒட்டிக்கொண்டு போகும் தான் கமலை வேண்டுமென்றே தள்ளிவிடுவார். காப்பாற்ற முயற்சிக்க மாட்டார். கமல் மூழ்கிய பின் மெதுவாக பாடிக்கொண்டே துடுப்பை ஓட்டுவார். அந்த காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் மொத்த வெறுப்பும் ரஜினி மீது விழும் படி நடித்திருப்பார். அடுத்து ஸ்ரீதேவியின் நிலை என்ன? என்ற பதைபதைப்பை தனது ரியாக்சன் மூலம் உருவாக்கி இருப்பார் ரஜினி. போலீஸ் கேட்கும் போது எனக்கு நீச்சலே தெரியாது என்று பொய்யாக சாதிப்பார். இரண்டாம் பாதியில் எந்த பெண்ணை அடைய நினைக்கிறாரோ அவளே அவரது அப்பாவை கல்யாணம் செய்து கொண்டு சித்தியாக வந்துவிட இருவருக்கும் போராட்டம் நடக்கிறது. ரஜினி இறுதியில் என்னாவாக ஆகிறார் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ். மிக பெரிய வெற்றியை அடைந்து ரஜினியின் நடிப்புக்கு முதன்முதலில் கைததட்டல்களை பெற்றுக்கொடுத்த படம் இது. படம் முழுக்க எதிர்நாயகனாக நடித்தாலும் அவர் மீது தான் கதை பயணிக்கிறது. ரஜினியின் முழுத்திறமையை காட்டி நடிக்க பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பு இது. ரஜினியின் சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைலை உதவியாளர் ஒருவர் பாலச்சந்தரிடம் சொல்ல அதை படத்திலும் செய்யச் சொல்லி பயன்படுத்தியிருக்கிறார். பாலச்சந்தரின் முன் சிகரெட் குடித்து நடிக்க முதலில் ரஜினி , தயங்க அந்த கதாபாத்திரத்துக்கு தேவை என சொல்லி பாலச்சந்தர் நடிப்பை வாங்கியிருக்கிறார். இவர் தூக்கி போட்டு பிடிக்கும் சிகரெட் ஸ்டைலை படமாக்க சிறப்பான ஹை ஸ்பீட் கேமராவை பயன்படுத்தியாக பாலச்சந்தரே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.



ஆரம்ப காலப் படங்களில் ரஜினியின் மீது ஸ்டைல் இமேஜ் விழ இந்தப்படம் பெரும் காரணமாக அமைந்தது.. ரஜினியின் கதாபாத்திரம் மூலம் எதிர்பாராத திருப்பத்தால் திரைக்கதையில் வித்தியாசம் காட்டினார் பாலச்சந்தர். ரஜினியின் உண்மையான முகம் வெளிப்படும்போது கதை வேறு தளத்தில் பயணிக்கும். மூன்று முடிச்சு 'ஓ சீதா கதா' என்று கே.விஸ்வநாத் தெலுங்கில் இயக்கிய படத்தை முறையாக ரைட்ஸ் வாங்கி எடுத்தாலும் மூன்று முடிச்சின் திரைக்கதை பாலச்சந்தரின் பாணியில் நிறைய புதுமைகள் புகுத்தப்பட்டே எடுக்கப்பட்டது. இதே படம் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. அதில் ரஜினி நடித்த வில்லன் கதாபாத்திரத்தை கமல் ஏற்று நடித்தார்.



இந்த படத்தில் கமல், ரஜினி தங்கியிருக்கும் மொட்டைமாடியும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் இப்போது எல்டாம்ஸ் ரோடில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பின் இடைவேளைகளில் ரஜினியும் , கமலும் நிறைய பேசிக்கொள்வார்களாம். அப்போது ஒரு நாள் கமலிடம் பின்னால் படங்களில் பயன்படுத்திய தனது ஸ்டைல்களை செய்து காட்டியிருக்கிறார் ரஜினி. இதை எல்லாம் நடிக்கப்போகும் படங்களில் செய்யப்போகிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். கமல் அதற்கு சொன்னாராம் ஒரே வகையான ஸ்டைலை எல்லா படத்திலும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஸ்டைலை பிடித்து கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் 'இது ரஜினி ஸ்டைல்' என்ற பஞ்ச் வசனத்தை அடிக்கடி சொல்லுவார். அன்று அவருடன் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் ஒரே மாதிரி நாடகத்தனமாக வசனம் பேசிக்கொண்டிருந்த கால கட்டத்தில் ரஜினி தனது நடிப்பில் புகுத்திய புதுமைகள் தனித்துவமானவை. இவை எல்லாவற்றுக்கும் மூன்றுமுடிச்சு படம் ஒரு தொடக்கப் புள்ளி. இன்று வரைக்கும் கிளாசிக் வரிசையில் இருக்கும் படமும் கூட.


ரஜினி கீழ் வீட்டில் குடியிருக்கும் கேரளப் பணிப்பெண்ணை உறவு கொண்டு கைவிட்டு விடுவார். அவர் ஒரு பெண்பித்தர் என்பதை மிக சிறிய அசைவுகளின் மூலம் நடிப்பில் சொல்லிவிடுவார்.
இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக முன்பே நடித்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் கொடுத்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கு அப்போது ஒரு லட்சியம் கமல் போல ஸ்டார் ஆக வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் அம்மாவிடம் 'ஏம்மா ஒரு நாள் நானும் இவர் மாதிரி முப்பதாயிரம் சம்பளம் வாங்குகிற ஸ்டார் ஆகணும், என்னால் முடியுமா? என்று கேட்பாராம். உங்களால் கண்டிப்பாக முடியும், பெரிய ஸ்டாராக வருவீங்க பாருங்க என்று ஸ்ரீதேவியின் அம்மா உற்சாகம் கொடுப்பாராம். சொன்ன மாதிரியே சாதித்து காட்டினார் ரஜினி என்று ஸ்ரீதேவி சொல்லியிருக்கிறார். கருப்பு வெள்ளை படங்களில் கருப்பாக இருந்தாலும் கலையான முகமாக ரஜினியை தமிழ் மக்கள் ஆரம்ப படங்களிலேயே ஏற்றுக்கொண்டார்கள். ரஜினியின் இளம் வயது படங்கள் கருப்பு வெள்ளையில் தான் பாதி எடுக்கப்பட்டவை என்றாலும் முக்கால்வாசி படங்கள் மறக்க முடியாத படங்களாக திகழ்கின்றன. அவர்கள், ஆடு புலி ஆட்டம், தப்புத்தாளங்கள், புவனா ஒரு கேள்விக்குறி ஆகியவைகளை முக்கிய படங்களாக சொல்லலாம்.



ரஜினியும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். படத்தின் இடைவேளைக்கு மேல் ரஜினி ஸ்ரீதேவியின் மீது கோபப்படவும் முடியாமல், தான் காதலித்த பெண்ணே தன்னை பழிவாங்க அப்பாவை மணந்து சித்தியாகிவிட அவரை மதிக்கவும் முடியாமல் இயலாமையை நிறைய இடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தை இன்று பார்ப்பவர்களுக்கு கூட ரஜினியின் அபார நடிப்பு புரியும். இது ரஜினியின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. அவருக்கு மூன்று முடிச்சு நான்காவது படம் தான். படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக தமிழில் நடித்த முதல் படம். ரஜினியின் தனிதத்துவ ஸ்டைல் ஆரம்பித்த படம். சிகரெட்டை பல வித்தியாசமாக சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைலை இந்த படத்தில் தான் முதன் முதலில் செய்தார். பிற்காலத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக மாற அவருக்கு இருந்த தகுதிகளை இந்த படத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இந்த படத்தின் பின்னால் ரஜினி எதிர்நாயகனாக வந்த படங்களில் இதில் செய்துள்ள விஷயங்களை சற்று விரிவு படுத்தி செய்திருப்பதை அறிய முடியும். மூன்று முடிச்சு அந்த விதத்தில் ரஜினிக்கு பலவகைகளில் முக்கியமான டிரெண்ட் செட்டர் படம்.
- விஜய் மகேந்திரன்