Thursday, March 31, 2011

டாய்லெட் கிடைக்குமா ப்ளீஸ்?-பிரியா தம்பி


என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வெளியில் இருக்கும் பலமணி நேரங்கள் சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் ‘பியா பாத்ரூம்’ எனக் கேட்பாள். அவள் பாத்ரூமுக்கு ஓடும் வேகம் அவளது பலமணி நேர அவஸ்தையை எனக்கு உணர்த்தும்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் பற்றி நமக்குத் தெரியும். அது அவளுக்கு புதிதாக ஏதாவது நோயை வரவழைத்து விடக்கூடாதே என அங்கு அழைத்து செல்வதே இல்லை. திறந்த இடங்களில் சிறுநீர் கழிக்க அவள் ஒத்துக் கொள்வதே இல்லை. குழந்தையே ஆனாலும் பொது இடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூடாது, சிறுநீரை அடக்கித்தான் ஆக வேண்டும் போன்ற விஷயங்கள் அவளது ஜீனில் வந்தவையாக இருக்கக் கூடும்.

நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாலோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ ‘’இங்கே பாத்ரூம் இருக்கா’’ என்று கேட்பாள். இருக்கு என்று சொன்னால் அவளது முகம் அப்படியே மலர்ந்து விடும். அந்த நேரங்களில் மிக வேதனையாகவும், கோபமாகவும் இருக்கும்.

பொதுக்கூட்டங்களில் பெண்கள் வரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நம் தோழர்களிடம் இந்த கழிவறை பிரச்னையை காரணம் காட்டியே பலமுறை கோபமாக சண்டை இட்டிருக்கிறேன். இரவு முழுக்க நடக்கும் கலை இரவுகளில், நேரம் பன்னிரண்டை தாண்டும்போதே அங்கிருக்கும் தோழிகளும், நானும் அவஸ்தைப்பட ஆரம்பிப்போம். பல நேரங்களில் அதற்காகவே நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பும்படியும் ஆகியிருக்கிறது.

பயணங்களில் இந்த அவஸ்தையை பற்றி சொல்லவே வேண்டாம். 15 மணி நேர பயணத்தில் ஏதாவது ஒரு மோட்டலில் தான் பேருந்து நிற்கும். அந்த இடத்தின் சுகாதாரம் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே முடியாது. சர்க்கரை நோயாளிகள், வயதான பெண்கள் எனில் அவஸ்தை அதிகம். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் சாலைப் பயணத்தில் தண்ணீர் குடிப்பதேயில்லை. சுகாதாரமற்ற இடங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது இரண்டும் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்னைகளும் நாம் அறியாததல்ல.

பேருந்து ஓட்டும் பெண்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர்கள் இவர்கள் இந்தப் பிரச்னையை தினம் தினம் சமாளித்தாக வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமே இல்லையாம். கிராமங்களில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு சரியான கழிப்பிட வசதி இல்லாதது முக்கியக் காரணம். மாதவிலக்கு போன்ற நாட்களில் அந்தக் குழந்தைகளின் அவஸ்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிரச்னை இப்படியிருக்க...

அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை.

அரசுகளை எல்லாம் திட்டிக் கொண்டு எழுத்தில் புரட்சி பேசும் நாம் ... ஆண், திருமணம், காதல், காமம், படுக்கையில் எப்படி நடந்து கொள்வது... இதெல்லாம் தாம் பெண்களின் பிரச்னையென பேசிக் கொண்டிருக்கிறோம்.

தோழர், இங்கே எங்கியாவது டாய்லெட் இருக்குமா? உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா? என பதட்டங்கள் இல்லாமல் பொது இடங்களுக்கு பெண்கள் வரமுடிந்தாலே பாதி விடுதலையை எட்டிவிட முடியும் என நினைக்கிறேன்..

Friday, March 25, 2011

குற்றமும் தண்டனையும்


அருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் அருணாவுக்குக் கூடுதல் சந்தோஷம். திருமண வாழ்க்கை, கணவன், குழந்தைகள் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தார்.

1973-ம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் வார்ட் பாயாகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அருணாவுக்கு நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. சோஹன்லால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும், பார்க்க முடியவில்லை. அவரால் பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த 38 ஆண்டுகளாக அவர் வேலை செய்த கெம் மருத்துவமனை படுக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருணா.

உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் பலாத்காரம் வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. (என்ன கேவலமான சட்டம்! பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டாலே அது குற்றம்தானே?) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

தண்டனை முடிந்த பிறகு சோஹன்லால் டெல்லி சென்று விட்டான். இந்த முப்பது வருடங்களில் அவனுக்குத் திருமணமாகி இருக்கலாம். அவனுடைய குழந்தைகளுக்கும் திருமணம் நடந்திருக்கலாம். பேரன், பேத்தி பிறந்திருக்கலாம். அவனுடைய வாழ்க்கையில் அந்த ஏழு ஆண்டுகள் மட்டுமே இயல்பு வாழ்க்கை சற்று மாறியிருந்திருக்கும். அதன் பிறகு அவனும் மற்றவர்களைப் போல இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருப்பான்.

ஆனால் அருணா? உயிர் மட்டுமே இருக்கிறது உடலில். வேறு எந்த அசைவுகளோ, சிந்தனைகளோ இன்றி இருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பெற்றோர் இறந்து போன விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோன விஷயம் தெரியாது. ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்ப்பதில்லை என்பது தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. அவன் சந்தோஷமாக எங்கோ வாழ்ந்து

கொண்டிருப்பதும் தெரியாது. தனக்கு வயது 58 என்றும் தெரியாது. தன்னுடய உருவம் எப்படி உருமாறியிருக்கிறது என்பதும் தெரியாது. வெளி உலகில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன, இப்போது பகலா, இரவா எதுவும் தெரியாது.

குற்றம் செய்தவன் குறைந்த தண்டனை அனுபவித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். ஆனால் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு வாழ்நாள் முழுவதும் எத்தனை கொடூரமான தண்டனை?

அருணா அனுபவித்தது போதும், அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கருணைக்கொலைக்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அவர் உயிர் பிரிவதற்கு உதவி செய்யலாம் என்று புதிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

ருச்சிகா கிர்ஹோத்ரா

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. அப்பா, பாட்டி, தம்பியுடன் சண்டிகரில் வாழ்ந்து வந்தார். ருச்சிகாவும் அவர் தோழி ஆராதனாவும் டென்னிஸ் வீராங்கனைகள். தினமும் பயிற்சிக்காக டென்னிஸ் அசோசியேஷன் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவர் ரத்தோர் என்ற ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய மகளும் ருச்சிகாவுடன் படித்து வந்தார்.

ஒருநாள் பயிற்சிக்குச் சென்றபோது, தோழி ஆராதனாவை விரட்டிவிட்டு, ருச்சிகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார் ரத்தோர். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆராதனா அதிர்ந்துபோனார். இருவரும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளும் ரத்தோரின் கொடுமை தொடர்ந்தது. இருவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று ருச்சிகா, ஆராதனா குடும்பங்கள் மிரட்டப்பட்டன. ருச்சிகாவின் தம்பியை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ரத்தோர். ருச்சிகாவின் அப்பா மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்படியும் வழக்கு வாபஸ் பெறாததால், நடத்தை சரியில்லாதவள் என்று சொல்லி ருச்சிகாவை பள்ளியிலிருந்து நீக்க வைத்தார் ரத்தோர். அடுத்தடுத்து இன்னல்களைச் சந்தித்த 14 வயது ருச்சிகா, தன்னால்தானே இத்தனை துன்பங்கள் தன் அப்பாவுக்கும் தம்பிக்கும் என்று நினைத்து, 1991-ம் ஆண்டு விஷம் சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

விஷயம் கேள்விப்பட்ட ரத்தோர் அன்று இரவு பார்ட்டி வைத்து, கொண்டாடியிருக்கிறார். வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் வழக்கு மூடப்பட்டது. சில மாதங்களில் ரத்தோரின் சேவையைப் பாராட்டி, அரசாங்கம் கூடுதல் டிஜிபி பொறுப்பு அளித்தது.

அநியாயமாகத் தன் மகள் சாகடிக்கப்பட்ட விஷயம் கிர்ஹோத்ராவை நிம்மதி இழக்கச் செய்தது. தவறு செய்தவர் எந்தக் குற்றவுணர்வும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்க, தன் மகளின் இறப்பு மன உளைச்சலைத் தந்தது. மீண்டும் வழக்கு போடப்பட்டது. ஏராளமான தொல்லைகள். போராட்டங்கள். அவமானங்கள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தோர் செய்த குற்றத்துக்காக 6 மாத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் சிரித்துக்கொண்டே பெயிலில் வெளியே வந்துவிட்டார் ரத்தோர்.

ஆருஷி தல்வார்

ஆருஷியின் பெற்றோர் பிரபலமான பல் மருத்துவர்கள். வசதியானவர்கள். பங்களாவில் வாசம். ஒரே பெண். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆருஷி, ஒருநாள் இரவு அவருடைய அறையில் கொல்லப்பட்டார். மறுநாள் அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமந்த் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலையில் இதுவரை சரியான துப்புக் கிடைக்கவில்லை. மிகவும் புத்திசாலித்தனத்துடன், மருத்துவம் தெரிந்த ஒருவரால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணமும் தெரியவில்லை. எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, ஆருஷியின் பெற்றோர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிபிஐ. புரியாத புதிராக இருக்கிறது ஆருஷியின் வழக்கு.

பத்மினி

1992-ம் ஆண்டு சிதம்பரத்தில் பத்மினியின் கணவரை, திருட்டுக் குற்றத்தில் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். கணவருக்கு உணவு எடுத்துச் சென்ற பத்மினியை அவருடைய கணவரின் கண் முன்னே பல காவலர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் பத்மினியின் கணவர் தூக்கில் தொங்கியதாக உடலை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.

**

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்காக ஏராளமான கதைகள் வந்து சேர்ந்தன. அதில் முதல் பரிசு பெற்ற கதையை எழுதியவர், ஆயுள் தண்டனை கைதி. அவர் தொடர்ந்து கதைகள் எழுதி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை முடிந்து, அலுவலகத்துக்கு வந்தார். ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக அவர் தண்டனை அனுபவித்தார் என்பது மட்டும்தான் அதுவரை எங்களுக்குத் தெரிந்த விஷயம்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. சாந்தமான முகம். நிதானமான நடை. சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியிருப்பாரோ என்று நினைத்தேன். சற்று நேரம் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்ற பிறகு இந்த விஷயம் தெரிய வந்தது.

’நீங்க எதுக்காக கொலை செய்தீங்க?’

‘ம்… அவ நல்லா தளதளன்னு இருப்பா. ஆசைப்பட்டுத் தொட்டேன். பயங்கரமா போராடி உயிரை விட்டுட்டா…’

‘அதை நினைச்சு இப்ப வருத்தப்படறீங்களா?’

’அவ செத்ததுலயோ, எனக்குத் தண்டனை கிடைத்ததிலேயோ வருத்தமே இல்லை. ஏதோ நடந்து முடிஞ்சிருச்சு…’

ஆறு ஆண்டுகள் தண்டனை முடிந்த சோஹன்லால் சக மனிதர்களைப் போல சுகமாக வாழ்கிறான். தன் மகள் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலை செய்ய வைத்த ரத்தோர், அரசாங்கத்தால் பதக்கம் பெற்று, பதவி உயர்வுகள் பெற்று, சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். குற்றவாளி யார் என்றே சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாமல் ஆருஷியின் வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொலையையும் குற்றமாக நினைக்காமல், தண்டனைக்கும் வருத்தப்படாமல் ஒருவரால் வாழ முடிகிறது.

அப்படியென்றால் மனத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, உயிரை விட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனைக்கு அர்த்தம்தான் என்ன?

மனம் திருந்தி வாழ்ந்தால் பரவாயில்லை. ஆனால் சில ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, அல்லது செல்வாக்கை வைத்து தப்பி விட்டு, நாட்டில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்டு மேலும் குற்றங்கள் பெருகாதா?

இந்தியாவில்தான் பெண்கள் அதிக அளவில் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள். ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள். பணியிடங்களில் அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நாடு முன்னேற முன்னேற குற்றம் குறைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களில் பெரும்பாலும் புகார் செய்யப்படுவதில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை அவமானமாகக் கருதுவதால் வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். ஒன்றிரண்டு குற்றங்களே பெரிய அளவில் வெளியே தெரிந்து, வழக்குகள் தொடரப்படுகின்றன.

அந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியே பதிவு செய்தாலும் அந்த வழக்கு நியாயமாக நடப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பணம், செல்வாக்கு, பதவி என்று பல விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றிவிடுகின்றன. அப்படியும் சளைக்காமல் வழக்கைத் தொடர்ந்தால், தீர்ப்பு வருவதற்குள் இருபது வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இவ்வளவு நீண்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உடல்நிலை எவ்வளவு தூரம் வைராக்கியத்தோடு போராட வைக்க முடியும்? சில வழக்குகள் நடத்த பணம் இல்லாமல், தெம்பு இல்லாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. எல்லாம் கடந்து நீதி கிடைக்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனை அற்பமாக அமைந்துவிடுகிறது. இல்லையென்றால் அந்தத் தண்டனைக்கு மேல் முறையீடு, பெயில் என்று வெளியே வந்து, மிகக் குறைந்த கால தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள்.

இங்கு குற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அருணா, ருச்சிகா, ஆருஷி… இன்னும் பெயர் தெரியாத பாதிக்கப்பட்ட பெண்கள் நியாயம் கேட்டு நம் முன் நிற்கிறார்கள். அவர்கள் நியாயம் கேட்பது அவர்களுக்காக மட்டுமில்லை, இனி இதுபோன்று எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.
note
இந்த கட்டுரையை என் கவனத்திற்கு கொண்டு வந்த தோழி ரேவதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி,,
courtesy http://www.tamilpaper.net/

Sunday, March 13, 2011

மெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ராமசாமி




மெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ராமசாமி


1992 ம் வருடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி திரைப்படக்கழகம் திரையிட்ட முள்ளும் மலரும் என்ற திரைப்படம் என் வாழ்வில் ஒரு புதிய திசையை திறந்தது. அதுவரை இலக்கியம் படிப்பவனாக இருந்த என்னுள் ஒரு முழுநீள திரைப்படம் ,நீக்கமறக் கவிதை நூலாக நிறைந்தது. படம் முடிந்து மதுரையிலிருந்து 7 கி.மீ நடந்தே பனியிரவில் வீடு வந்து சேர்ந்தேன்.

என் இரண்டு தங்கைகள் மீதும் என்னையறியாமல் அவர்களுக்காக உள்ளார்ந்த கண்ணீர் என்னுள் சுரக்கத் தொடங்கியது. மென்மேலும் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மோலோங்கியது. ஒரு அண்ணனாக முழுமையாக உணர்ந்த தருணமது. பெண்மையின் பேச்சற்ற கணத்தின் பின்னனியில் இருக்கும் மெளனத்தின் அர்த்தம் புரியத்தொடங்கியது. பின்பு அவரின் அத்தனை படங்களும் உதிரிப்பூக்களாக என்னுள் நிறைந்தது.

ஏகலைவத் தவம் தொடங்கியது, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் , அதன் மூலமே அறிமகமாக வேண்டும் என்ற தவிப்பு இருந்தது. ஜானி மாதிரி ஏன் முயலக்கூடாதென கூடல்நகர் திரைப்படத்தை முயன்றேன். ஆயினும், அவரை சந்திக்கும் துணிவு வரவில்லை.

தென்மேற்கு பருவகாற்று அத்திசையின் கதவுகளை திறந்தது. படத்தை அவர் பார்த்துவிட்டார் என்பதை அறியாமலே, என் படத்தை பார்க்குமாறு தொலைபேசியில் அவரை கேட்டுக்கொண்டேன். அவரோ “மிஸ்டர் ராமசாமி, உங்க படம் பார்த்தேன், நல்லாயிருக்கு, எனக்கு புடிச்சிருக்கு” என்றார்.
மலைச்சரிவில் ஓடும் சிறுவனைப் போல பரவசம் தொற்றிக்கொண்டது.

கூடல்நகர் திரைப்படத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சஞ்சலத்தில் என் உறுதி சரியத் தொடங்கி மசாலா கதைகளை உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணமும் வந்தது உண்மை. ஒரு வயது பெண்குழந்தையுடன் மாநகரம் அன்றாட வாழ்வுக்கு திசை விரட்டிய கலை வாழ்வில், அமைதியற்ற நேரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவரின் முள்ளும் மலரும் `காளி` எனக்கு நம்பிக்கையூட்டினான்.

சென்னை பள்ளிக்கரனை நோக்கி எனது காரில் அவரை சந்திக்க சென்றேன். புறநகர் குடியிருப்பொன்றில் செட்டிநாடு வீடு வகைகளை நினைவுறுத்தும் பேரமைதியான இல்லத்தின் முன் ஜப்பானிய மொழியில் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ”வாங்க, மிஸ்டர் ராமசாமி” என்னை அழைத்தவர் இயக்குனர் மகேந்திரன். வெள்ளுடையில் இருந்தார். புருவம் சுருக்கி பேசினார் . தென்மேற்கு பருவகாற்றில் சில காட்சிகளைக் குறிப்பிட்டார். பட விழா, விருதுகளுக்கு இதை அனுப்ப சொன்னார். சினிமா பற்றிய எனது அபிப்பிராயங்களை கூர்ந்து கவனித்தார். அவரது அபிப்பிராயங்கள் எனக்கு இணக்கமாகவும் , நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

இயக்குனர் சீனு ராமசாமி என கையழுத்திட்டு அவரின் புத்தகங்களை தந்தார். அப்பெரிய வீட்டிலிருந்து வெளிவந்து யாருமற்ற அத்தெருவில் வெயிலில் நின்று வழியனுப்பினார். என் தந்தையை அறிந்த மன நெகிழ்வில் நெஞ்சில் கைவைத்து நன்றி சொல்லி விடை பெற்றேன்.

வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். நதிக்கரையில் ஓடும் உதிரிப்பூக்கள் குழந்தைகளும். ஷோபாவின் பொட்டு வைத்த சிரிப்பும், சுடு தண்ணீரை தூக்கச் சொன்ன தங்கையின் முன் கையிழந்த அண்ணனின் முகமும், பூட்டாத பூட்டுகளாக திறந்த கார்க் கதவின் வழியாக மனக்கண்ணில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

ஜான் ஆபிரகாம்- கலகக்காரனின் திரைக்கதை (புதிய பதிப்பு)


'ஜான் ஆபிரகாம்- ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இதனை தொகுத்துள்ள ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களின் சிரத்தையும், அர்ப்பணிப்புணர்வும்- இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திலும், அது செம்மையாக தொகுக்கப்பட்ட விதத்திலும் புலப்படுகிறது. ஜான்'னின் திரைப்படங்களைத் தாண்டி அவரது ஆளுமையை நுட்பமான புரிதலோடு கவனப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு திரைக் கலைஞனுக்கான மிகச் சரியான மரியாதையை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா சூழலை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு ஆச்சர்யமான, முக்கியமான பணி. சினிமாவில் ஆர்வம்கொண்ட இளையசமூகம் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும். ஜானை போல் நாம் வாழ இயலாது..ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் -அவரின் 'மாற்று சினிமா' குறித்த கருத்துக்கள், அதற்காக அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான காரியங்கள் நமக்கு உற்சாகத்தையும் துணிச்சலையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

-மாமல்லன் கார்த்தி


தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர்.சீனிவாசன்
வெளியீடு: வம்சி புக்ஸ்
விலை: 200 /-

அசையும் படம் - சி.ஜெ. ராஜ்குமார் (புத்தக அறிமுகம் )


ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை அன்போடு அளித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதே நிகழ்வு 2003 'றில் நடந்திருந்தால் இரண்டே நாட்களில் புத்தகத்தை படித்து முடித்திருப்பேன், அப்போது தாய் மொழியின் வழியே கேமரா தொழில்நுட்பத்தை கற்க எனக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது சினிமாவை ஒரு ஆரம்பக்கட்ட மாணவனாக கற்றுகொள்வதைத் தவிர வேறு வேலையும் இல்லாமல் இருந்தது . இன்று ஒரு முழுநீள திரைப்படம் எடுக்க முயன்று வரும் இருத்தல் சார்ந்த அலைகழிப்புகளுக்கு மத்தியில் இருக்கும் என் நிலை வேறு. அதனால் தான் இந்த தாமதம்.

ராஜ்குமாரை போல் தொழில் நுட்ப்ப அறிவும், செய்முறை அனுபவமும் ஒரு சேர பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய புத்தகத்தை கொண்டு வர இயலும். நடைமுறைக்கு தேவையான விடயங்கள் என்னவென்று அவர் அனுபவத்தில் கற்ற பாடங்களை மிகவும் அக்கறையோடு எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனர்களின் பிரத்யேக தன்மையில் இல்லாமல், சினிமா மீது ஆர்வம் கொண்டிருக்கும் எல்லோருக்குமான புத்தகமாக இருப்பதன் காரணம் இது தான்.

இந்த புத்தகம் சினிமா என்ற ஊடகத்தின் துவக்கத்தில் இருந்து, இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் சினிமா வரை, அதன் தொழில்நுட்பதை மையமாக கொண்டிருக்கிறது. வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் பரிமாணத்தை, முக்கியமாக ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படை கூறுகளை எளிய வரைபடங்களின் மூலமும் எளிய சொல்லாடலின் மூலமும் விளக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களில் தமிழ் படுத்துதல் என்பது கடினமானது, அந்த காரியத்தை எந்த குழப்பமும் தராமல் கடந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திரைப்பட கல்லூரிக்கு சென்று சினிமா கற்க வாய்ப்பில்லாதிருக்கும் பல தமிழ் மாணவர்களுக்கு, தங்களது தாய் மொழியில் இப்படி ஒரு எளிமையான புத்தகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தரக் கூடியது.. தொழில்நுட்பப வார்த்தை ப்ரோயோகங்களை கண்டு அவர்கள் இனி அஞ்சத் தேவையிலை. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எடுக்கும் 'notes' போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிப்பட்டறைகள் என்று பன்முகத் தன்மை கொண்ட ஒருவராய் இருக்கிறார். இப்படிப்பட்டவர்களை நம் சூழலில் காண்பது அரிது. இவர்களை போன்றவர்கள் தான் சினிமாவை பற்றிய வெறும் கனவுகளை மட்டும் அளிக்காது, நமக்கு அதன் நடைமுறைத் தன்மையை, அது இயங்கக்கூடிய யதார்த்தத்தை தெளிவுடன் அடையாளம் காட்ட முடியும். சினிமாவின் அடிப்படைகளை அறியாது ஒரு விபத்தை போன்று ஒரு நல்ல படத்தை யாரும் எடுத்துவிடலாம் ஆனால் அந்த வெற்றியை தொடர்வது என்பது இயலாது , சாயம் வெளுத்துவிடும். என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக கூறுவார், "தமிழில் தற்போது இரண்டு வகையான இயக்குனர்கள் தான் உள்ளார்கள், ஒரு வகையினர் சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் , இன்னொரு வகையினர் சினிமா எடுக்க தெரிந்தது போல் நடிப்பவர்கள்". இந்த நிலை ஒருவகையில் உண்மை என்றாலும் இது தொடராமல் இருக்க வேண்டும். ராஜ்குமாரை போன்றவர்கள் மேலும் இது போன்ற ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இந்த புத்தகத்திற்கு பின்பான உழைப்பு என் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 'டிஜிட்டல் சினிமா' குறித்து அவரது நடைமுறை அனுபவங்களை இதே எளிமையோடு விரிவாக புத்தகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்குமாரிடம் முன்வைக்க விரும்புகிறேன், இன்றைய சூழலில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். -மாமல்லன் கார்த்தி-

ஆசிரியர்: சி.ஜெ. ராஜ்குமார்
பதிப்பாளர்: தி. திருநாவுக்கரசு
வெளியீடு: கீற்று பதிப்பகம்
விலை: 150 /-

Thursday, March 10, 2011

அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு


கடந்த வருடத்தின் அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு என்ற பெருமையை '' நகரத்திற்கு வெளியே ''பெறுகிறது.மொத்தம் 15 மதிப்புரைகளை பெற்று இருக்கிறது..முதல் விமர்சனம் எழுதிய நிலாரசிகன் முதல் சமீபமாக எழுதிய ஹவி வரைக்கும் எனது நன்றிகள்.அதிகமாக விற்ற சிறுகதை தொகுப்பும் கூட.ஒரு எழுத்தாளனின் முதல் தொகுப்புக்கு இந்த வெற்றியை அளித்த நண்பர்கள் ,வாசகர்கள்.அனைவருக்கும் நன்றி...விஜய் மகேந்திரனின் புத்தகத்தை கொண்டுவரக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லியும் எனது புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்த
மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் ,பரவலாக நூலை எடுத்து சென்ற உயிர்மை பதிப்பகத்திற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

Monday, March 7, 2011

ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை


சென்னையைப் பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவை அரக்கோணத்திற்கு மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழநாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு வருவது அல்லது நாங்கள் சென்னைக்கு செல்வது வழக்கமாயிருந்தது.

சென்னை என்பது புதிய சினிமாக்கள் பார்க்கும் இடமாகவே அப்போது எனக்கு இருந்தது. ஆல்பர்ட், உதயம் அப்போது அருமையாகப் பராமரிக்கப்பட்ட திரையரங்குகளாகும். உதயம் தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்க்க நேர்ந்திருக்கிறது. அஞ்சலி, சத்ரியன், மைக்கல் மதனகாமராஜன், கோபுர வாசலிலே.. போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியவை அந்த ஆண்டுகளில்.

அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பெட்டிதூக்கி வேறு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வழியாகக் கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தார், அப்பா. படிப்பு முடிந்ததும் சென்னை சென்று செட்டிலாகி விட வேண்டும் என்ற அப்பார்ட்மெண்ட்வாசிக் கனவுதான் எனக்கும் இருந்தது. அந்த சாதாரண கனவு அவ்வளவு எளிதானதல்ல என்பது சென்னைக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 2005-ல் அப்பாவிற்கு ஓய்வு பெற மூன்று வருடங்கள் இருக்கும்போதுதான் சென்னைக்கு மாற்றினார்கள். அதுவரை அடிக்கடி வந்து செல்லும் ஊராகவும், ஒரு சுற்றுலா பயணியின் மன நிலையோடுதான் வந்து சென்று கொண்டிருந்தேன். 2000 முதல் 2005 வரை சென்னையில் தங்கிப் பணியாற்ற என் வீட்டினர் ஒத்துக்கொள்ளவேயில்லை.

ஒரு கட்டத்தில் மதுரையில் வேலையில் முன்னேற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நான் பணியாற்றும் பிஸியோதெரபி துறையின் வேலைகளும் மிகக்குறைவாக மதுரையில் இருந்தன. நானே சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த போது தான் இந்த மாற்றல் வந்து தலைநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

குவார்ட்டர்ஸ் கிடைத்த இடம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை. இங்கு வந்து இறங்கிய போது எனக்கும் இந்தப் பகுதிக்கும் ஏதோ ஒரு தொடர்பு முன்னரே இருப்பது போல உணர்ந்தேன்.

வேலையில்லாமல் ஓரிரு மாதங்கள் இருக்க நேர்ந்தது. சாதாரணமாக ஒருவர் சென்னையில் வேலை தேட ஆரம்பித்தால் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்பது என் கணிப்பு. நகரம் பிடிபடவே இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

அந்த காலத்தில் எழுத்தாளர்களை நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். சென்னை குறித்து நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லித்தருவார். புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடக்கும் இடங்கள், பிலிம் சேம்பர், புக் பாயிண்ட், ருஷ்யன் கலாச்சாரமையம், தேவநேயப்பாவணர் நூலக அரங்கம் என உரையாடலின் வழியே அறிமுகப்படுத்தினார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் பழைய புத்தகக் கடைகள் பற்றியும் அறிந்து கொண்டேன். அதில்தான் சம்பத்தின் “இடைவெளி” போன்ற மறுபதிப்புக் காணாத புத்தகங்களை வாங்கினேன். கிடைப்பதற்கரிய, தற்போது பதிப்பில் இல்லாத புத்தகங்களை அங்குதான் காண முடிந்தது. “குட்டி இளவரசன்”, “கரம் சேவ் சகோதரர்கள்”, சார்த்தர் எழுதிய புத்தகங்கள் என்று பல அரிய நூல்கள் மலிவான விலையில் கிடைத்தன.

உயிர்மை நடத்தும் பெரும்பாலான கூட்டங்களுக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுப்பார். இத்தனைக்கும் அப்போது நான் இலக்கிய வாசகன் மட்டுமே, பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நேரம் கிடைக்கும் போது அவர் வீட்டிற்கு செல்வேன். பெரும் வேலைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி இலக்கியம் குறித்தும், புதியதாய் உயிர்மையில் வரப்போகும் புத்தகங்களை குறித்தும் பேசுவார்.

இப்போதைய சென்னையின் வெறுமைத் தோற்றத்தை நினைத்துப் பார்க்கிறேன். எந்த நண்பரின் வீட்டுக்குள்ளும் நுழையவே முடியவில்லை. அப்படி நுழைந்தாலும் இலக்கியம் குறித்துப் பேச முடியாது. பொது இடங்களில் சந்திப்பதோடு சரி. ஆனால் மனுஷ்யபுத்திரனும், ராமகிருஷ்ணனும், அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது அமரவைத்து மணிக்கணக்கில் பேசியது எங்ஙனம் என யோசிக்கையில் வியப்பே மேலோங்கியது. இன்று வரைக்கும் இலக்கியம் தேடி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது.

அந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. இதற்கு நடுவேதான் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. மருத்துவமனை வாரத்தின் பகல்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. விடுமுறைகளில் மட்டுமே நண்பர்களைச் சந்திக்கிற, இலக்கியம் பேசுகின்ற ஆளாய் மாறிப்போனேன். எழுதுவதும் கணிசமாக குறைந்துவிட்டது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார்.

நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.

நானும், அய்யப்ப மாதவனும், ஒரு கோடைகால மதியப் பொழுதில் திட்டம் ஒன்றைத் தீட்டினோம். அவருக்கும் எனக்கும் நெத்திலி மீன் சாப்பிடும் ஆசை வந்தது. நெத்திலி வறுவல் தி.நகரில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஹோட்டல் விருதுநகரில் பிரபலமான உணவுகளின் ஒன்று. அவரும் நானும் சென்று நெத்திலி மீன் வறுவல் ஆளுக்கு ஒன்றாகப் பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். அறையில் வறுவலைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு பீருடன் சாப்பிடுவது திட்டம். கோடைக்கால மதியத்தில் ரம்மியமாக இருக்கும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் வாரிசுகள் ஹோட்டலினுள் நுழைந்தனர். அவர்கள் ஏஸி அறைக்குள் சென்றனர். நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுறாப்புட்டு, இறாவறுவல், நெத்திலி வறுவல் என அவர்கள் அறைக்குள் சென்று கொண்டே இருந்தது. இருமுறை பில் போடும் இடத்தில் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தது. பொறுமையிழந்து இருவரும் சென்று கேட்டபோது நெத்திலி வறுவல் தீர்ந்துவிட்டதாகவும், வேண்டுமானால் சிக்கன் 65 போட்டுத் தருவதாகக் கூறினார்கள். எங்களுக்கு எடுத்து வைத்ததை அரசியல்வாதி குடும்பத்தினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

"முன்பே சொல்ல வேண்டியதுதானே, இவ்வளவு நேரம் காக்க வைத்தா அநியாயமாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வீர்கள்?" எனக்கேட்டேன்.

“அதான் 65 போட்டுத்தரம்னு சொன்னமே சார்” என்றார்கள்

“அட வெண்ணைகளா, அதுக்கு எதுக்குடா உங்க ஹோட்டல் தேடி வர்றோம்?” என படக்கென்று கேட்டார் அய்யப்பன்.

“பாருங்க வி.எம். சென்னையில் ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் அரசியல் உள்ளே நுழைஞ்சிடுது!” ஆற்றாமையுடன் அய்யப்பன் கூறினார்.

இங்கு வேலை, பதவி, சம்பளம், கவனிப்பு, மரியாதை, உடை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அதாவது கண்ணுக்குத் தெரியாத நுண் அரசியல். ஏதாவது ஷாப்பிங் மால்களிலோ, வரவேற்பு கூடங்களிலோ குறிப்பிட்ட இனத்தை அதாவது வட இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்களை மட்டும்தான் பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்துகின்றனர். இவற்றில் ஒரு கருப்பான பெண்ணைக்கூடக் காண்பது கடினம். அதேபோல ஐ.டி. கம்பெனிகளுக்கும் வேலைக்கு அமர்த்தும் பெண்களுக்கும் நிறம், உடை கோட் (Code) உண்டு என்று ஒரு நண்பர் கூறினார்.

இவ்வளவு நாட்களாக இங்கிருந்தும் என்னால் நகரத்தின் சூழ்ச்சிகளில் ஒன்றைக் கூடக் கற்றுக் கொள்ளவோ பயன்படுத்தவோ முடிந்ததே இல்லை. சாட்சியாக எல்லாவற்றுக்கும் இருந்து கடந்து சென்றதன் விளைவே எனது கதைகள்.

சென்னையின் லாப நோக்கற்ற சந்திக்கும் இடங்கள், ஒவ்வொன்றும், ஷாப்பிங் மால்களாக மாறிவருகின்றன. தனித்த வீடுகள் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகாளக மாறியிருகின்றது. செங்கல்பட்டின் எல்லைவரை சென்னை விரிந்திருக்கிறது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி சாலையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமல் மேம்பாலங்களில் ஏறிக் கொண்டு இருக்கின்றது. ஒரு காப்பி வாங்கிக் குடித்துக் கொண்டு மணிக்கணக்கில் நண்பர்களோடு கதை பேசிய உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இன்று அடைக்கப்பட்டு விட்டது. இதன் பாதிப்பால் எழுதியதே “அடைபடும் காற்று” என்றொரு கதை. தந்தையாரின் வீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் புத்தக சேகரிப்புகளை பழைய பேப்பர்கடைக்கு போட்ட புத்திரன்களின் மனநிலையைப் பார்த்து எழுதியதே “இருத்தலின் விதிகள்” மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் செய்ய வரும் திருமணமாகாத இளம் பெண்கள் சிலரின் கதையே “நகரத்திற்கு வெளியே” இப்படிநான் சிலவற்றுக்கு சாட்சியாக இருந்து எழுதியிருக்கிறேன். மாநகரின் சில காட்சிகளை பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்யாமல் போனவையே அதிகம், இன்று அய்யப்பமாதவனின் அறை ஹபிபுல்லாரோட்டில் இல்லை. அவர் ராயப்பேட்டை சென்றுவிட்டார். விசுவநாதன் கணேசன் வளசரவாக்கம் போய்விட்டார். இன்று இந்த தி.நகரில் நான் மட்டும் இருக்கிறேன். தேநீர் கடையில் பேசிய பேச்சுக்கள், சந்திப்புகள், நண்பர்களின் இலக்கிய உரையாடல்கள் எதுவும் ஹபிபுல்லா ரோட்டில் இல்லை. வெற்றுத் தனிமை என்னைச் சூழ்ந்து இருக்கிறது.


இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள் தானே தவிர, சென்னை நகரத்தின் ரங்கநாதன் தெருவில், சரவணா ஸ்டோர்ஸில் துணி எடுக்கும் கூட்டம் 365 நாட்களும் அலை மோதுகிறது. ஜாய் ஆலுக்காஸ், ஜி.ஆர்.டி என தீபாவளி, அக் ஷயா திதி ஸ்பெஷல் என்று நகைகள் வாங்க வரும் கூட்டமும் குறைவதேயில்லை. பாண்டிபஜார் கடைகள் சனி, ஞாயிறுகளில் நிரம்பியே வழிகின்றன. சரவணபவனில் க்யூ கட்டி நிற்கிறது. முருகன் இட்லி கடையில் நாள் முழுவதும் காத்திருந்து டோக்கன் வாங்கி சாப்பிடுகிறார்கள், வட இந்தியர்கள். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாக் வியாபாரம் கோலாகலமாகவே நடக்கிறது. யாருக்கும் எந்தக் குறையுமில்லை, வெளியே இருந்து சென்னையைப் பார்த்தால், கொண்டாட்ட நகரமாகவே தெரியும். கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன்.

6 comments:
Chakkaravarthi said...
வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்....எத்தனை உண்மையான வரிகள் .. இல்லை இது வாழ்கையின் நிதர்சனம் .. கண்ணனுக்கு தெரியாத கயிறு மாநகரம் எல்லோரும் அதன் பிடியில் சிக்கி .. சிக்கலை அவிழ்க்க முயன்று தோற்று .. ஜெயிக்கும் .. விளையாட்டை அழகாய் பதிவு செய்திருக்கிறார் .. விஜய் மகேந்திரன் ..
Uma Varatharajan said...
//வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது.//மிகவும் யதார்த்தமான வரிகள்.எந்த ஒரு மனிதனும் சற்று பக்குவமடைய,சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள மன முதிர்ச்சியடைய ' நகர் வாசம்' என்பது இன்றியமையாதது. விஜய் மகேந்திரனின் எழுத்தில் தெரியும் அந்த 'விலகி நின்று வேடிக்கை பார்க்கும்' தன்மை புலப் படுவதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம்.
vijay mahendran said...
சக்ரவர்த்தி,உமா வரதராஜன் சார்..உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,,,
Aravind said...
Where i can find your stories/can you please mention the book and the publisher name
vijay mahendran said...
நன்றி அரவிந்த் ,''நகரத்திற்கு வெளியே'' தொகுப்பின் பெயர்,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
Lavanya Rajalakshmi said...
" கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன். " - மிகவும் நிதர்சனமான வரிகள். நம்மைப்போல் வேற்று ஊர்வாசிகளுக்கு சென்னை போன்ற பரபரப்பான, சுலபத்தில் ஒட்டிக்கொள்ள முடியாத lifestyle உள்ள ஒரு நகரம் எப்பொழுதுமே கண்ணாடித் தொட்டியின் வண்ண மீன்தான்.. மிகவும் நல்ல பதிவு.. நன்றி விஜய்..
thanks to...
http://www.thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=196&iid=33

Saturday, March 5, 2011

அய்யப்ப மாதவனின் ''நதியோடிய கவிதாவின் முகம் ''


இரவு

சுமார் 2.00 மணி முன்புவரை

கவிதா விழித்துக்கொண்டிருந்தாள்

நிம்மதி இழந்திருந்த பாபு

குடித்து முடித்து வாந்தியெடுத்து தூங்கிவிட்டான்.

ஆட்டியவளின் இதயத்துடன்,

தொட்டிலில் குழந்தை அசைந்தது பலவாறு

துணியை நீக்கியவள்

குழந்தையை ஆசை தீர பார்த்துக்கொண்டாள்

சண்டைபோட்டு குடித்து தூங்கிய பாபுவையும்

வானத்துள் இடிமின்னல்

அவளுக்குள்ளும் மழை

வாழ்ந்திருந்த வீட்டைப் பார்க்கிறாள்

சத்தமிட்டு அழமுடியதாவள்

உள்ளுக்குள் குமுறிச் சிதறினாள்

நதியோடிய முகத்தை துடைத்தவள்

சப்தமிழந்த நாற்காலியில் ஏறினாள்

நிறுத்தப்பட்ட மின்விசிறியில்

உடலைச் சுற்றியிருந்த சேலை

குரல்வளைக்குள் ஒளிந்திருந்த

கவிதாவின் உயிர்

தொங்கவிட்ட நாக்கின் வழியே ]

போய்விட்டது

கண்கள் வெளிவந்த

கவிதாவின் தலைமாட்டில்

மூர்ச்சையற்று கிடந்த பாபு

கவிதா என்ற பெயரையே

முணுமுணுத்தான்

குழந்தை

புரியாத மரணத்தில்

விளையாடிகொண்டிருந்தது.



நன்றி நவீன விருட்சம்.ஜூலை 2007.இதழ்.

அய்யப்ப மாதவனின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கவிதை.துரதிஸ்டவசமாக இந்த கவிதையை அவர் எந்த தொகுப்பிலும் சேர்க்காமல் விட்டு இருக்கிறார்.அப்போது அவர் அறைக்கு பக்கம் உள்ள வீட்டில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாள்.அது அவரை மிகவும் பாதித்தது.அதன் விளைவே இந்த கவிதை.இந்த கவிதையின் முதல் வாசகனும் நான்தான்.இந்த கவிதை நன்றாக இருக்கிறது என விருட்சம் அழகிய சிங்கரிடம் கொடுத்தேன்.இம்மாதம் உயிர்மையில் வந்த வா.மணிகண்டனின் கவிதை எனக்கு அய்யப்பமாதவனின் இந்த கவிதையை நினைவுபடுத்தியது.இந்த கவிதை முடியும் இடத்தில மணிகண்டனின் கவிதை ஆரம்பிக்கிறது.கவிஞர்களுக்குள் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்ச்சி நடந்து வருவதை நான் அறிந்தேன்.இருவருக்கும் என் நன்றி..

Friday, March 4, 2011

முப்பத்தி நான்காவது சென்னை புத்தகக் காட்சி: சில நினைவுகள் சுதீர் செந்தில்

முழுமையாக 13 நாட்கள் ஒரு புத்தகக் காட்சியில் செலவழித்தது இந்த முப்பத்தி நான்காவது புத்தகக் காட்சியில்தான். முதல்முறையாக உயிர் எழுத்து புத்தகக் காட்சியில் கலந்து கொண்டதுதான் காரணம். ஒவ்வொரு முறையும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கலந்து கொள்வதுதான் வழக்கம். அதற்குமேல் செலவழிப்பதற்கு பணிகள் அனுமதித்தது இல்லை.

ஆனால், நிலைமை இன்று அப்படி இல்லை. கிட்டத்தட்ட உயிர் எழுத்து துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. இடைப்பட்ட புத்தகக் காட்சியில் உயிர் எழுத்து வாசகர்கள் உயிர் எழுத்து ஏன் ஸ்டால் போடவில்லை என்று குறைபட்டுக்கொண்டே இருந்தார்கள். கடந்த ஆண்டு தோழர் சைலஜா என்னிடம் "தோழர் அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஸ்டால் போடுங்க. நிறைய இளைஞர்கள் வர்றாங்க. உயிர் எழுத்து பதிப்பக புத்தகங்கள் வந்திருக்கிறதான்னு தினமும் கேட்கிறாங்க. இருக்கிற உயிர் எழுத்து புத்தகங்களை வாங்கிட்டுப் போறாங்க" என்றார். அவ்வார்த்தைகள் இந்தாண்டு புத்தகக் காட்சியில் கலந்து கொள்வதற்கான மனநிலையையும் உத்வேகத்தையும் அளித்தன.

கடுமையான பணிகளுக்கிடையே புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதைப் பற்றி மறந்துபோயிருந்தேன். ஒருநாள் தோழர் சைலஜா சொன்ன அதே விசயத்தை ஹமீது என்னிடம் நினைவூட்டியபோது அதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. புகைவண்டி பச்சை வண்ணம் ஒளிர நகர்ந்துகொண்டிருந்தபோது ஓடிச் சென்று கடைசிப் பெட்டியில் ஏறிவிட்டேன். ஒருவழியாக உயிர் எழுத்தின் புத்தகக் காட்சி விஜயம் நிகழ்ந்தேறியது.

புத்தகக் காட்சியில் முதல் நாள். ஏதேதோ பழைய நினைவுகள் என்னை அலைக்கழித்தவாறு இருந்தன. எட்டு ஆண்டுகளுக்கு முன் உயிர்மை பதிப்பகம் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டபோது மூன்று நாட்கள் இருந்தேன். அப்பொழுது உயிர்மை இதழ் ஆரம்பிக்கப் பட்டிருக்கவில்லை. புத்தகக்காட்சியில் முழுமையாக கலந்துகொண்ட எந்தவொரு அனுபவமும் இன்றி குறைந்த அவகாசத்தில் உயிர் எழுத்து ஸ்டாலை நிர்மாணித்தோம். நேருவும் அவனுடைய நண்பர்களும் அதைப் பார்த்துக்கொண்டார்கள்.

காலையில் உயிர் எழுத்து ஸ்டாலிற்கு முதல் நபராக ஒருவர் வந்தார். வெகுநேரம் புத்தகங்களை எடுத்துப் புரட்டியவண்ணம் இருந்தார். அந்நேரம் நாஞ்சில் நாடன் ஸ்டாலுக்கு வந்தார். சாகித்திய அகாதமி விருதால் உற்சாக மனநிலையில் இருந்தார். முதலில் வந்தவர் ஒரு புத்தகத்தை எடுத்து வாங்கியபடி "நான் உயிர் எழுத்து வாசகன். ஊட்டியிலிருந்து வருகிறேன்" என்றவர், புத்தகத்தை நீட்டி என்னிடம் கையெழுத்து போட்டுத் தரும்படி கேட்டார். முதல் புத்தகத்தை வாங்கியவர் உயிர் எழுத்தின் வாசகர். நாஞ்சில் நாடனிடம் இருந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது. நான் நாஞ்சில் நாடனை ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் அவ்வாறே செய்தார். நாஞ்சில் நாடனிடம் இருந்து அந்த உயிர் எழுத்து வாசகர் பத்மநாபன் ஊட்டிலிருந்து வந்திருந்து புத்தகத்தை வாங்கி, முதல் விற்பனையைத் துவக்கிவைத்தார்.

உயிர் எழுத்து ஸ்டாலுக்கு இளைஞர்களும் படைப்பாளிகளும் வந்தவண்ணம் இருந்தனர். புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்ட புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் வந்தபடி இருந்தன. பொதுவாக, கடந்த மூன்றாண்டுகளும் புத்தகச் சந்தையை ஒட்டி உயிர் எழுத்து பதிப்பக வெளியீட்டு விழாக்கள் இருக்கும். இம்முறை புத்தகக் காட்சியில் கலந்துகொண்டதால் நூல் வெளியீட்டு விழாக்களை நடத்துவதற்கான அவகாசம் இல்லை. எனவே, புத்தக ஸ்டாலிலேயே எளிமையான முறையில் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தத் தீர்மானித்தேன்.

நாஞ்சில் நாடன் அங்கு இருந்ததால் அவருடைய பச்சை நாயகி கவிதைத் தொகுப்புடன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கலாம் என நினைத்தேன். மனுஷ்ய புத்திரனுக்கும் எனக்கும் இருந்ததாக நம்பப்பட்ட பிணக்கு முடிவுக்கு வந்திருந்தது. நான் ஹமீதிடம் பச்சை நாயகி கவிதைத் தொகுப்பை வெளியிடுமாறு கேட்டேன். "அதற்கு என்னடா, வந்திர்ரேன்" என்றவன், "அவர் ஒன்னும் நெனச்சுக்க மாட்டார்ல" என்றான். நான் அவன் குசும்பை ரசித்தபடி "போன் பன்றேன் வந்துரு" என்றேன். அங்கு வந்திருந்த நண்பர்களிடம் தகவல் தெரிவிக்க படைப்பாளிகளும் வாசகர்களும் நண்பர்களும் உயிர் எழுத்து ஸ்டாலில் கணிசமாகக் கூடிவிட்டனர். ஹமீதை அழைத்துவர நானே செல்லவேண்டியதாயிற்று. நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அவனை வீல் சேரில் அமர்த்தித் தள்ளியபடி ஸ்டாலுக்கு வந்தேன்.

மனுஷ்ய புத்திரன் வெளியிட பச்சை நாயகி கவிதைத் தொகுப்பை ஷோபா சக்தி பெற்றுக்கொண்டார். ஷோபா சக்தியை கடந்த புத்தகச் சந்தையில்தான் சந்தித்திருந்தேன். எளிமையான நகைச்சுவை தளும்பும் குறும்புக்காரராக எனக்குத் தெரிந்தார். எழுத்துக்கும் தோற்றத்திற்கும் மிகுந்த இடைவெளிகொண்ட மனிதன். நான் ஷோபா சக்தியிடம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னபோது, "நான் ஒன்னும் பேசவேண்டியது இருக்காதே" என்றார். நிகழ்ச்சி முடிந்தபிறகு நாஞ்சில் நாடனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் "இனி பத்தாண்டுகளுக்கு என்னால் கவிதை எழுத முடியாது" என்றார். எப்படி இவ்வாறு ஒரு படைப்பாளி சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டேன். கடந்த வாரம் என்னிடம் பேசும்பொழுது மேலும் சில கவிதைகளை எழுதி இருப்பதாகச் சொன்னார்.



இலக்கியம் என்பது என்னை எப்பொழுதும் செழுமைப்படுத்தியே வந்திருக்கிறது. அது எனக்கு எவ்வாறு அன்பு செலுத்துவது என்பதை கற்றுத் தந்திருக்கிறது. அன்பின் ஒளியின் மூலமாகவே நான் சகலத்தையும் கடந்து சென்றவாறு இருக்கிறேன். என்னை நான் எவ்வாறு நேசிக்காமல் இருக்கமுடியாதோ அதேபோல்தான் நான் ஒருவரையும் வெறுக்க இயலாதவனாக இருக்கிறேன். வாழ்க்கையில் நான் தரிசிக்கும் இருண்மையை, நான் எதிர்கொள்ளும் வாதைகளை ஒருபோதும் என் நண்பர்களுக்குப் பரிசளிக்க மாட்டேன். நான் ஒன்றில் தோல்வியுற்றேன் என்றால் அது என் அன்பின் பலவீனத்தால்தான்

இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிற பல நண்பர்களிடம் நான் இந்த அன்பை தரிசிக்கவே இயலவில்லை. அறம் என்பது சார்பான விஷயம் என்பதை நான் அறிவேன். ஆனால், அந்தச் சார்பான அறம்கூட ஒருவரிடமும் இல்லை. நான் மனுஷ்ய புத்திரனிடம் சமரசமாகப் போய்விட்டேன் என்று சில நண்பர்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டனர். சிலர் எச்சரிக்கையாக இருக்கும்படி என்னை வலியுறுத்தினர். நான் மனுஷ்ய புத்திரனுடன் இணைந்து உயிர்மையைத் துவக்கியபோது எவ்வாறு இருந்தேனோ அவ்வாறே இன்றும் இருக்கிறேன். மனுஷ்ய புத்திரன் அவ்வாறு அல்ல. இலக்கிய அரசியலில் கைதேர்ந்தவனாக இருந்தான். அவனை அடிப்பவர்களுக்கு பதிலாக அதையே திருப்பிக் கொடுத்தான். இலக்கியத்தில் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின் இருக்கும் அரசியல், ஒவ்வொரு படைப்பாளிகளுக்குள்ளும் இருக்கும் அரசியல், மட்டுமல்லாமல் ஒவ்வொன்றைப் பற்றியும் திடமான கணிப்புகள் அவனுக்கு இருந்தன. ஏனெனில், அவன் காலச்சுவடில் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு உதவியது. நான் இப்பொழுது அதை உணர்கிறேன். எளிமையாக மனம் திறந்து சொல்லப்பட்ட ஒரு சொல்கூட எவ்வாறு அரசியல் ஆக்கப்பட்டு ஏவப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். 'இலக்கியத்திற்கு வெளியே உள்ளவர்கள்' என்று அடிக்கடி மனுஷ்ய புத்திரன் சொல்வது எனக்கு இப்பொழுதுதான் உரைக்கிறது.

அன்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்த அந்த தமிழின் மிக மிக முக்கியமான படைப்பாளி, தமிழச்சி தங்கபாண்டியனின் புகைப்படத்தை உயிர் எழுத்து இதழின் அட்டையில் பிரசுரித்ததற்காகவும் அவருடைய நேர்காணலை வெளியிட்டதற்காகவும் என்னை நிறைபோதையில் வசைமாறி பொழிந்தார். "ஏன்டா ரோட்ல போடவேண்டிய குப்பைகளை எல்லாம் வீட்டுக்குள்ள கொண்டுவந்து போடுறீங்க. அழிஞ்சுறிவீங்கடா நீங்க. அவ இலக்கியத்துல யாருடா... நாயே உன்னை சபிச்சுருவேண்டா" இவ்வாறும் இன்னும் எழுதமுடியாத வசைச் சொற்களோடும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் பொறுமையாக "சரி நாளைக்கு பேசிக்கொள்ளலாம் மணிவண்ணன்" என்று பலமுறை சொல்லியும் சமாளிக்க முடியாமல் போனை துண்டித்தேன். தொடர்ந்து லஷ்மிமணிவண்ணன் எண்ணிலிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது. நான் செல்போனை அணைத்துவிட்டு அன்றைய என் விஸ்கியை அருந்தத் தொடங்கினேன்.

லஷ்மிமணிவண்ணனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செய்துவருகிறார் என்பதை நான் அறிவேன். தமிழச்சி தங்கபாண்டியனுடைய இலக்கியச் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாகவே அவருடைய நேர்காணல் வெளிவந்தது. தமிழச்சி தங்கபாண்டியனின் இலக்கிய செயல்பாடுகளில் லஷ்மிமணிவண்ணனுக்கு கருத்து முரண்பாடு இருந்தால் அதை உயிர் எழுத்துக்கு எதிர் வினையாக எழுதி அனுப்பியிருக்கலாம். தமிழச்சி தங்கபாண்டியனிடமேகூட விவாதித்திருக்கலாம். விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்குபவர் அல்ல தமிழச்சி தங்கபாண்டியன். இந்தச் சம்பவம் நடந்த மறுதினமே தமிழச்சி தங்கபாண்டியனிடம் லஷ்மிமணிவண்ணன் உதவி கேட்டு நிற்கும் காட்சியையும் நான் பார்த்தேன். போகட்டும், தமிழச்சி தங்கபாண்டியனின் இலக்கிய ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டாம். சக தோழியாய் தனக்கு அவர் செய்த உதவிகளுக்காகவாவது உயிர் எழுத்து அட்டையில் தமிழச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டாமா? நான் எனக்கு வந்த சில கடிதங்களைப் பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறேன். அவைகளில் ஒன்று லஷ்மிமணிவண்ணன் எனக்கு எழுதிய ஒரு கடிதம். அது தமிழ் எழுத்தாளனின் வாழ்வைப் பற்றிய சித்திரத்தை விளக்கும்படி அமைந்துவிட்ட கடிதம். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு அழுதேன். ஆனால், அவர் செய்துகொண்டிருப்பதுதான் என்ன?

இங்கு இலக்கிய மதிப்பீடுகள் என்னவாக இருக்கின்றன? நாம் வாழும் வாழ்க்கையை, நாம் வாழும் சமுதாயத்தை, நாம் உணர்ந்த தருணங்களை பிரதிபலிப்பதுதானே இலக்கியம். வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு நேர் எதிராக எவ்வாறு ஒருவர் இலக்கியம் படைக்க முடியும். மனச்சாட்சி பிளவுண்டுவிட்டாலும்கூட இலக்கியம் படைக்க இயலுமா?

மனுஷ்ய புத்திரனைப் பற்றி அவதூறாக எழுதப்பட்ட கட்டுரைக்கு நான் எதிர் வினையாற்றினேன். இதே நிலை அந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பட்டிருந்தால்கூட நான் அந்தக் கட்டுரையாளரின் பக்கமே இருந்திருப்பேன். இலக்கியம் என்பது நபர் சார்ந்து அல்ல. இலக்கியம் சார்ந்தே மதிப்பிடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. ஆனால், இங்கு எல்லாம் உருவாக்கப்படுகிறது. மதிப்பீடுகள் போலியானவைகளாக, உண்மைக்கு நேர் எதிராக கட்டமைக்கப்படுகின்றன.

உயிர் எழுத்தில் இதுவரை எந்த இலக்கிய அவதூறுகளும் வம்புகளும் வந்ததில்லை அல்லது உருவாக்கப்பட்டது இல்லை. என் நண்பன் ஹமீது என்னை கடுமையாகச் சாடி உயிர்மையில் ஒருமுறை எழுதினான். அதற்குப் பதிலுரையாக ஆதவனின் 'புதுமைப்பித்தனின் துரோகம்' என்ற சிறுகதையை அனுமதி வாங்கி மறுபிரசுரம் செய்தேன். அதில்கூட ஹமீதை நான் இழிவுபடுத்திவிடவில்லை.

தொடர்ந்து வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தவண்ணம் இருந்தன. திருச்சியிலிருந்து சுமதி என்ற வாசகரும் அவருடைய தம்பி செந்தில் குமரனும் ஸ்டாலுக்கு வந்திருந்தனர். இருவராலும் தூக்கிச் செல்லமுடியாத அளவுக்கு புத்தகங்கள் இரண்டு பெரிய பைகளில். என்னிடம் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர். "எவ்வளவுக்கு புத்தகங்கள் வாங்கினீர்கள்" என்று கேட்டதற்கு 15,000க்கு வாங்கியதாகச் சொன்னார்கள். அவர்களை வணங்கத் தோன்றியது எனக்கு. அப்படி நிறையப் பேர்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றதை நான் பார்த்தேன். அவர்கள் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்துவிட்டுச் சென்றார்கள். சென்னையிலும் மதுரையிலும் நடப்பது போன்று, திருச்சியிலும் ஒரு நல்ல புத்தகக் காட்சியை நடத்த நான் முயற்சி செய்யவேண்டும் என்பதுதான் அது. "சரி. நடத்துவோம்" என்றேன். அதைப் பற்றி நண்பர் தேவேந்திரபூபதியிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறேன். மதுரைப் புத்தகக் காட்சி இந்த அளவு பிரபலமாவதற்கு கவிஞர் தேவேந்திரபூபதியும் ஒரு முக்கியக் காரணம். ஒரு செயலைச் செய்ய நினைத்துவிட்டால் அதை செய்து முடிப்பதற்கான கடுமையான உழைப்பை செலுத்துபவன் என்கிற முறையில் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறேன். ஹமீதும் நண்பர் ந.முருகேசபாண்டியனும் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். திருச்சியில் நல்ல புத்தகக் காட்சி நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

சகோதரி தமிழ்ச்செல்வி, கரிகாலன் குழந்தைகளோடு வந்திருந்தனர். சமீபகாலத்தில் கரிகாலன் உடனான நட்பு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. தொடர்ந்து கரிகாலன் உயிர் எழுத்து இதழை நடத்துவதற்கான தார்மீக பலத்தை கொடுத்தபடி இருக்கிறார். என்னை நேரில் சந்திக்கும்போதும் சரி; தொலைபேசியில் உரையாடும்போதும் சரி; அவர் காட்டும் அன்பும் அக்கறையும் என்னை நெகிழ வைக்கின்றது. அவருடைய தையலலைப் போற்றுதும் என்னும் நூல் அவர் ஒரு சிறந்த பெண்ணியவாதி என்பதை சுட்டிக்காட்டும். பாராட்டவும் ஒரு மனம் வேண்டுமே!

என்னுடைய 'யாருடைய இரவெனத் தெரியவில்லை' கவிதை நூலை பெற்றுக்கொள்வதற்காக என் மகன் சுதீர் மணி வந்திருந்தான். புத்தகத்தை வெளியிடுவதற்கு நண்பர் மிஷ்கினை வரவழைப்பதுகூட அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. சுதீர் மணியை வரவழைக்க பெரும்பாடு பட்டுவிட்டேன். விடுமுறை கிடைக்கவில்லை என்றான். திருநெல்வேலியில் அலுவலராக இருக்கும் அவன் எப்படியோ என்னுடைய தொந்தரவுக்குப் பணிந்து ஒரு விமானத்தைப் பிடித்து வந்து சேர்ந்தான். மிஷ்கின் என் கவிதைத் தொகுப்பை வெளியிட சுதீர் மணி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டான். லீனா மணிமேகலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். லீனாவின் முதல் கவிதைத் தொகுப்பிற்கு திருச்சியில் ஒரு விமர்சனக் கூட்டத்தை நடத்தினேன். அதற்குப் பின்பு பெரிய அளவில் அவருடன் எனக்குத் தொடர்பில்லை. ஆனால், அவர் ஒரு நல்ல தோழி என்பதையும் நட்பைப் போற்றுபவர் என்றும் அறிவேன். இப்பொழுது அவருடைய கவிதைகள் மொத்தமும் தொகுக்கப்பட்டு உயிர் எழுத்தில் வந்திருக்கின்ற சூழ்நிலையில் எங்கள் நட்பு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. நண்பர்கள் லிபி ஆரண்யா, ஸ்ரீஷங்கர், யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஸன், விஸ்வநாதன் கணேசன், குமார் அம்பாயிரம், விஜயமகேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். வாழ்த்துரை வழங்க வந்திருந்த மனுஷ்ய புத்திரன் என் கவிதைகளைப் பற்றி கூறும்போது, "நான் தொடர்ந்து கவிதையை பின்தொடர்வதாகவும் நான் கவிதையை அடையும்போது கவிதை ஒரு அடி முன்நகர்ந்து சென்றுவிடுவதாகவும்" சொன்னார். அவர் சென்றபின்னர் என் நண்பர்கள் என்னை பிடிபிடி என்று பிடித்துக்கொண்டார்கள். ஹமீது மீது பெருத்த கோபம்கொண்டபடி, எனக்கு ரோஷமே வராதா என்று கடிந்துகொண்டார்கள். மறுநாள் ஹமீது "தான் வேறு ஏதோ பேச வந்து எதையோ பேசிவிட்டதாகச் சொல்லி, நான் ஏதும் உன்னை புண்படுத்தி விட்டேனா" என்று கேட்டான்.

மனுஷ்ய புத்திரன் என் கவிதைகள்மீது வைத்திருந்த விமர்சனத்தை நான் சரி என்றே கருதுகிறேன். இதற்கு வருத்தப்படுவதற்கோ கோபப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. இது சுதீர் செந்திலின் கவிதைகளின் மீதான விமர்சனம் அல்ல. சிறந்த கவிதைகளுக்கான விமர்சனம். இது மனுஷ்ய புத்திரனுக்கும் பொருந்தும். யவனிகா ஸ்ரீராமுக்கும் பொருந்தும். வேறு எந்த ஒரு படைப்பாளிக்கும் பொருந்தும். கவிதை நகர்ந்து செல்லாவிட்டால் எவ்வாறு ஒரு கவிஞனால் கவிதையைப் பின்தொடர்ந்து செல்லமுடியும். கவிதை முன்னகர்ந்து செல்லும்போதுதானே மொழி இன்னும் ஒரு அடி நகர்கிறது அல்லது வளர்கிறது அல்லது மாறுகிறது. இது நண்பர்களுக்குப் புரியவில்லை; அவர்கள் கோபித்துக்கொண்டார்கள். ஹமீது அறிந்திருக்கவில்லை; என்னை சமாதானப்படுத்தினான்.

நான் தங்கி இருந்த இடத்தை இம்முறை வெகு ரகசியமாக வைத்திருந்தேன். அய்யப்பமாதவன் போன்ற நண்பர்கள் 'நண்பா எந்த குகைக்குள் பதுங்கியிருக்கிறாய்' என்று எஸ்.எம்.எஸ் கொடுத்தவண்ணம் இருந்தனர். இலக்கிய நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவது பெரும் மனநெருக்கடிக்கு ஆளாக்கிவிடுகிறது. இலக்கிய நண்பர்கள் சந்தித்தால் வேறு வழி இல்லாமல் குடிக்கவேண்டியதாகிவிடுகிறது. குடித்தபிறகு அவர்கள் வால்ட் விட்மன், மாயோ காவுத்ஸ்கி, பாப்லோ நெருடா, ரோலன் பார்த், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, நீட்சே, தெரிதா, ஃபூக்கோ ஆகியோர்கள்போல் மாறிவிடுவதுகூட பிரச்சினையில்லை. ஆனால், திடீரென சக்கரவர்த்திகளாக மாறி நம்மை குருநிலமன்னர்களாக்கி விடுகிறார்கள் அல்லது கடுமையான தண்டனையைப் பரிசளிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அங்கு ஒரு குருக்ஷேத்திர யுத்தமே நடந்து முடிந்துவிடும். ஒரு பதினைந்து நாள்கள் நான் முழுமையாக என்னை காப்பாற்றிக்கொள்ளவே பதுங்கி இருந்தேன்.

சுதீர் மணி வந்திருந்த இரவு என் நேரு, ரமேஷ் என்னுடன் இருந்தார்கள். இரண்டுபேரும் சினிமாக்கார பசங்கள். நாங்கள் பிளாக்லேபிலை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக, என் நண்பர்களோடு இருக்கும்போது சுதீர் மணி இருந்தால் அவனை பேசவிட்டு நான் அமைதியாக இருப்பேன். அன்றும் அவ்வாறே இருந்தேன். சினிமாக்கார பசங்க சினிமாவைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். சுதீர் மணியும் சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே நேருவும் ரமேஷூம் சுதீர் மணியின் பேச்சை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு மணிநேரத்திற்குமேல் நீடித்த அந்த உரையாடல் உலக சினிமாவையே சுற்றிச் சுற்றி வந்தது. நான் நினைத்துக்கொண்டேன்: "மிஷ்கின் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றா இருக்கும்" என்று. சுதீர் மணி சினிமாவைப் பற்றி அவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறான். அவன் புத்தகச் சந்தையில் வாங்கிய ஒரே புத்தகம் Dan Brown னின் The Lost Symbol .

காலச்சுவடு அரங்கிற்குச் சென்று நரனுடைய கவிதை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டேன். கவிஞர் இசை புத்தகத்தை வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். நண்பர் தேவிபாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இளையதலைமுறை தமிழ்க் கவிஞர்களில் நம்பிக்கையூட்டும் கவிதைகளை எழுதுபவராக நரன் உள்ளார். நரனுடைய அதிகமான கவிதைகளை உயிர் எழுத்து பிரசுரித்துள்ளது. அதை நரன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். இசை உயிர் எழுத்தில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர். அவர் புத்தகத்தை வெளியிட நான் பெற்றுக்கொண்டது பொருத்தமானதுதான். காலச்சுவடு அரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் எழுத்தாளர் அம்பையை சந்தித்தேன். எப்பொழுதும்போலவே உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். காலச்சுவடுகண்ணன் எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அங்கலாயித்தார். 'என்னதான் இருந்தாலும் ஒரு நண்பரை இப்படி எழுதலாமா' என்று சொன்னவர் 'என்னதான் இருந்தாலும் என்னாலெல்லாம் அப்படி முடியாது' என்றார். அவர் இன்னும் ஒரு படைப்பாளியாக இருந்துகொண்டிருப்பதற்கு இந்தக் குழந்தை மனம்தான் காரணம் என நினைத்துக்கொண்டேன்.

எப்பொழுதும்போல் உற்சாகமாய் இருந்த பவா செல்லதுரையை பார்த்தேன். எவ்வாறு ஒரு மனிதர் எப்பொழுதும் பிறரை பாராட்டிக்கொண்டே இருக்க முடிகிறது என்று பவாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதெல்லாம் யோசிப்பேன். எப்பொழுதும் அவரிடம் யாரைப் பற்றியாவது ஒரு புகழுரை தயாராக இருக்கும். வியப்புக்குரிய மனிதர். அவரை ஒரு நேர்காணல் செய்யச்சொன்னேன் அப்பணசாமியிடம். ஒரு வருடம் ஆகப்போகிறது. பவா இன்னும் முடித்தபாடில்லை. ஏனென்றால், பவாவுக்கு தன்னைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாது. தோழர் சைலஜா என்னிடம் கேட்டார் "தோழர் ஸ்டாலில் சேல்ஸ் எப்படி போகுது". நான் புரிந்துகொண்டு முதல் நாள் விற்பனையான தொகையைச் சொன்னேன். "சரிதான் தோழர். எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. ஆனா, ஒவ்வொருத்தரும் சொல்லுற தொகையைக் கேட்டா நம்பமுடியல" என்று ஆதங்கப்பட்டார். மனித மனம் புனைவுகளால் நிரம்பியது. புத்தகக் காட்சி என்றால் அதிகபட்ச விற்பனைதான் கௌரவம் என்று நினைக்கின்ற மனம். ஒவ்வொரு வருடமும் புத்தகச் சந்தையில் விற்பனையான தொகைபற்றிய புள்ளிவிவரங்கள் எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

உயிர்மை பதிப்பித்த ரசிகமணியின் கடிதங்கள் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டேன். இந்தாண்டு உயிர்மை பதிப்பித்த பல சிறந்த புத்தகங்களில் அது முக்கியமான நூல். அந்த புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்த ஹமீது "எப்படி இருக்கு" என்றான். வெகுநாட்களுக்குப் பின்பு அவன் கண்களில் அந்த ஒளியை மீண்டும் கண்டேன். ஒரு சிறந்த வேலையை செய்து முடிக்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியாலும் பெருமிதத்தாலும் தோன்றுவது. அந்தச் சில வினாடிகளுக்காக அவன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான் என்று எனக்குத் தெரியும். நூலை வெளியிடுவதற்காக கி.ரா வந்திருந்தார். பலமுறை பார்த்திருக்கிறேன். சிலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். ஆனால், எனக்கும் அவருக்கும் நேர் பரிச்சயம் கிடையாது. கே.ஏ.ராதாகிருஷ்ணன் என்னை கி.ரா.வுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். என் கரங்களைப் பிடித்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணனை தினமும் பார்க்க முடிந்தது உயிர் எழுத்து ஸ்டாலுக்கு வந்திருந்தார். உயிர் எழுத்து ஆரம்பிக்கப்பட்டபொழுது எனக்கு நம்பிக்கையை அளித்தவர். என்னுடைய நல்ல நண்பர். அவர் மதிப்பு மிக்க எழுத்துகளை தொடர்ந்து எழுதுபவராக உள்ளார். உயிர் எழுத்து வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சாரு பழைய மாதிரி என்னிடம் பேசத் துவங்கியிருக்கிறான்.. அவனுக்கு என்மீது அடங்கா கோபம் 'ராசலீலா'வை நான் விமர்சித்தது அவனை மிகவும் புண்படுத்தியிருக்கும்போல. ஆனால், சாருவை தொடர்ந்து எத்தனையோ பேர் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அவன் பொருட்படுத்துவது இல்லை. நான் அவனுடைய நெருங்கிய நண்பனாக இருந்த காரணத்தினால் அவனுக்குத் தாங்கிக்கொள்ள முடியவில்லைபோலும். நான் சிலமுறை அவனிடம் பேச முயற்சித்தும் அந்தச் சமயத்தில் என்னிடம் பேச மறுத்துவிட்டான். அவனும் இலக்கியத்தையும் நட்பையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். அவன் ஒரு எழுத்தாளன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால், அவன் எழுதும் விசயங்கள் மிகவும் ஆரோக்கியமற்றவையாக இருக்கின்றன என்பதை ஒரு நண்பனாக நான் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆட்டோகிராஃபிற்காக எத்தனை கையெழுத்துதான் போடுவான் பாவம்! உயிர்மை அரங்கில் அமர்ந்துகொண்டு யார் கையெழுத்து கேட்கிறார்கள் என்பதைக்கூட பார்க்காமல் எழுத்துகளுக்கு வலிக்க வலிக்க கையெழுத்து போட்டுகொண்டிருப்பதை பார்க்க என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "என்னடா சாரு, நோட்டை என்னுறமாதிரி கையெழுத்து போட்டுகிட்டே இருக்க" என்று கேட்டேன். அவன் அந்தப் பேனா வாங்கிய கதையைச் சொல்ல ஆரம்பித்தான் (பேனாவின் விலை ரூ.10,000).

உயிர் எழுத்துடன் சம்பந்தப்பட்ட நிறைய வாசகர்களையும் படைப்பாளிகளையும் தினமும் சந்திப்பது புதிய அனுபவமாக இருந்தது. விஜயமகேந்திரன் உயிர்மை ஸ்டாலுக்கும் உயிர் எழுத்து ஸ்டாலுக்குமாக அலைந்துகொண்டிருந்தான். விஜயமகேந்திரனின் முதல் சிறுகதையை நான் பிரசுரித்தேன். அவனுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை ஹமீது கொண்டுவந்தான். இப்பொழுது விஜயமகேந்திரன் எங்கள் இருவருக்கும் செல்லப் பிள்ளையாகிவிட்டான். நாங்களும் போட்டிபோட்டுக்கொண்டு அந்த வைரஸ்கிருமியை சாத்தானாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் (என் கவிதை சிலவற்றில் வரும் சாத்தான் விஜயமகேந்திரன் என்று அதற்கு அர்த்தமல்ல.). நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஒரே இலக்கியவாதி விஜய் மட்டும்தான் அன்றைக்கு திருவள்ளுவர் தினம். டாஸ்மாக் இல்லை என்பது எனக்குத் தெரியாது. நான் தங்கி இருந்த ஹோட்டலில் பார் வசதி இருந்தது. மட்டுமல்லாமல் என்னுடைய நண்பர் எனக்குத் தேவையான பானங்களை ஒவ்வொருநாளும் பரிசளித்துக்கொண்டிருந்தார். அன்று அவரும் இல்லை. ஹோட்டலில் பாரும் இல்லை. விஜயை அழைத்தவேளை இத்தனை துரதிருஷ்டவசமாகவா இருக்க வேண்டும். மனத்திற்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அதிர்ஷ்டம் விஜயமகேந்திரன் பக்கம் இருந்தது. அவனுக்கு தெரிந்த ஒரு கடையில் ரெமி மார்ட்டின் அதிர்ஷ்டவசமாக இருந்ததை நானும் அவனும் சென்று வாங்கி வந்தோம்.

அடுத்தநாள் காலையில் ஒரு துர்செய்தி எனக்காகக் காத்திருக்கப் போகிறது என்பதை அறியாமல் பின்னிரவு வரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். "சார், ரெமி மார்டினை இப்பொழுதுதான் முதன்முதலாக சாப்பிடுகிறேன்" என்றான் விஜய். யார் யாரைப் பற்றியோ எதை எதையோ சொல்லிக்கொண்டே இருந்தான். எப்பொழுதும்போல் ராமேஷூம் நேருவும் உடன் இருந்தனர். அதிகாலை ஆறு மணிக்கு என் செல்போன் அந்த துக்கச் செய்தியை சொன்னது. எனது மாமனார் ஐம்பத்திரண்டு வயதில் காலமாகிப் போயிருந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திடீரென்று என்னிடமிருந்து வெளிப்பட்ட கதறல் நேரு, ரமேஷ் ஆகியோரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. ஹமீதை அழைத்தேன். அதிசயமாக போனை எடுத்தான். செய்தியைச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நடக்கவேண்டிய உயிர் எழுத்து வெளியீட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தேன். புத்தகக் காட்சியில் எல்லா நாட்களும் என்னுடன் இருந்து பல உதவிகளைச் செய்த, என்னை எப்பொழுதும் வாஞ்சையோடு அப்பாவென அழைக்கும் சந்திராவிடம் தகவலை தெரிவித்து ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னேன். தோழர் அய்யாக்கண்ணிடமும் இந்திராணியிடமும் தகவலைத் தெரிவித்தேன். அவர்கள் செய்த உதவி அளப்பறியது. நன்றி சொல்லி மாளாது. அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து என்மீது பேரன்பு செலுத்துபவர்கள். உயிர் எழுத்து ஸ்டாலை அவர்களே முழுக்க முழுக்க பார்த்துக்கொண்டார்கள். கூடவே இருந்து உணர்வுப்பூர்வமாக உதவிகளைச் செய்த நண்பர்கள் தினேஷ், மணி, சரவணன் ஆகியோருடன் கடைசிநாள் இரவைக் கொண்டாட நினைத்திருந்தது நினைவிலாடியது. எஞ்சியிருந்த ரெமி மார்ட்டினை அருந்திவிட்டு திருச்சிக்குக் கிளம்பினேன். தன்னந்தனியனாக காரை ஓட்டியபடி ஐந்து மணிநேரம் நான் செய்த அந்தப் பயணம் என் வாழ்நாளிலேயே மிகத் துயரமானது.

மேல்மருவத்தூரை கடக்கும்போது தேவேந்திரபூபதி எதிரில் வந்துகொண்டிருந்தார். அன்று அவருடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இருந்தது. செய்தி கேள்விப்பட்டு, தானும் திருச்சி வருவதாகச் சொன்னார். நான் வேண்டாம் என மறுத்து புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். நட்பை மிக நேசிக்கும் மனம் கொண்டவர். அவரால் பயனடையும் படைப்பாளிகள் ஏராளம். தமிழச்சி தங்கபாண்டியன் என்னை அழைத்து ஆறுதல் சொன்னார். எப்பொழுதும்போல் "சுதீர் நான் எதாவது செய்யனுமாப்பா" என்று கேட்டார். நாஞ்சில் நாடனிடம் செல்போனில் செய்தியை தெரிவித்தபோது, அவர் எனக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தடுமாறியதை உணரமுடிந்தது. இத்தகைய தருணங்களில் ஆறுதல் வார்த்தைகளை எவராலும் சொல்லிவிட முடியாது நீராலானது தொகுப்பில் துஷ்டி கேட்கப்போயிருந்த ஓர் அனுபவத்தை ஹமீது ஒரு கவிதையாய் எழுதியிருப்பான். அது நினைவுக்கு வந்தது.

சம்பிரதாயம்
மனுஷ்ய புத்திரன்
06.03.2001

தாமதித்து அறிந்த மரணத்திற்கு
...துஷ்டி கேட்கப் போனேன்

குழந்தைகள் ஒடுங்கிய வீட்டின் மௌனம்
நெடுந்தொலைவு கேட்கிறது

'ஒரு வார்த்தை
சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா?'
என்றேன் நண்பரிடம்

'தோன்றாமலில்லை
ஒரு வேளை அது உங்களை
கட்டாயபடுத்தியதாகிவிடும்'

இதமான தேநீரின் மணத்தில்
கரைந்து கொண்டிருக்கிறது
இந்த மாலை.

(நீராலானது தொகுப்பிலிருந்து)




நன்றி: உயிர் எழுத்து மார்ச் இதழ்

Wednesday, March 2, 2011

வாமு கோமுவின் விமர்சனம்


விஜய் மகேந்திரனின் முதல் சிறுகதைத்தொகுப்பு பத்துகதைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. எனது மண்பூதம் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்த சமயத்தில் படிக்கிறமாதிரி யார் இப்போ எழுதறாங்க கோமு? திரும்பத் திரும்ப படிச்சாலும் உங்களோட கதைகள் சலிக்கவே இல்லை என்று பேசி நணபரானவர் விஜய் மகேந்திரன். பார்த்து பழகு விஷம் அது என்று பெருசு எச்சரிக்கை செய்தது ! இப்போது பெருசுக்கு நாந்தான் விஷம் என்று புரிந்து இருக்கும் . இலக்கிய சூழலில் யார்தான் விஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எல்லோரிடமும் விஷம் இருக்கிறது! யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.அடுத்த நாள் உயிருடன் இருப்போமா மாட்டோமா? என்று உறுதியின்மையில் இருக்கவே, இந்த சூழலில் சண்டைகள் சர்ச்சைகள் !



நகரத்திற்க்கு வெளியே தொகுப்பில் இருக்கும் ஊர்நலன் என்ற‌

சிறுகதை இதெ கருத்தைத்தான் முன் வைக்கிறது, நாயக பிம்பம் வில்லனாகி நாட்டாமையாகி அழிவைத் தேடிக்கொள்கிறது. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் சிறுகதையில் கண்களை இழந்த பெரியவர் கருப்பய்யா தன் பேத்தி ஓடிப்போய்விட்டாள் என்றதும் கிளம்பும் வேகம்.. வெற்றி பெறட்டுமே? என்று நம்மை முன்பே யோசிக்க வைக்கிறது! ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தோற்றுப்போகிறார். வாழ்க்கை எந்த நேரங்களிலும் வெற்றியையே தந்து கொண்டிருப்பதுமில்லை. தொகுப்பில் முதல் கதையாக சனிப்பெயர்ச்சி கதை இடம்பெற்றுள்ளது. இது உயிர் எழுத்து இதழில் வந்த சமயமே எல்லோராலும் பாராட்டப்பட்ட கதை! கதைகளை எனது அறையை பார்ப்பதற்க்கு துயரம் கூடுவதாக உள்ளது என்று நேராகவே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அந்த கூறல் முறையில் தங்குதடையே ஏற்ப்படுவது இல்லை. தொகுப்பில் நகரத்திற்க்கு வெளியே சிறந்த கதையாக இருக்கிறது! கதை சமகாலத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது, வாசிப்போர் சூரிய பிரகாஷாக இருக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ! ஆசியா மேன்சன் , அடைபடும் காற்று என்கிற கதைகள் இரண்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அது சொல்லப்பட்ட முறையில் கோளாறாகக் கூட இருக்கலாம். மழைபுயல்சின்னம் அகநாழிகை இதழில் வந்தது. இதழில் படிக்கும்போதே சென்னை சூழலையும் காதல் என்ற சொல் நகரங்களில் கற்பழிக்கப்படுவதும் .. இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் ? இப்படியேதான் வாழ்ந்து தீரவேண்டுமா ? என்றெல்லாம் தோன்றியது.



வாழப்பழகிக் கொண்டவர்களுக்கு வருத்தங்கள் பெரிய விஷயங்கள் இல்லைதான் என்பதை அழகாகச் சொன்ன படைப்பு. ராமநேசன் என்கிற கதை நண்பனைப்பற்றிய தகவலில் இருக்கிறது, பின் அட்டையில் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப்பிறழ்வை உருவாக்குபவை. என்கிற வாசகம் பயமுறுத்தினாலும் நகரங்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு இந்த தொகுப்பு அவசியமாகப்படுகிறது!



பாக்கியம் சங்கர் இந்த தொகுப்பு பற்றி என்னிடம் பேசுகையில் சாருவாகன்,ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் வாழ்வின் தரிசனங்களை தம் எழுத்தில் பதிய வைத்தது போல் விஜயும் வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். வசவச கசகசவென மொழியைத் திருகி பிசைந்து கொண்டு இருந்த திருச்செந்தாழை, லஷ்மிசரவணகுமார்,எஸ் செந்தில்குமார் சிறுகதைகளுக்குள் நுழையவே அவ்வளவு சங்கடம் பிறந்துவிடுகிறது! தான் எழுதிய கதைகளை வாசிக்க வைத்த சாமார்த்தியமே இத்தொகுப்பின் வெற்றி என்கிறார். தொடர்ந்து மேலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்றெ குறிப்பிட்டார்.



இந்த தொகுப்பின் வெற்றியை இங்கேயிருந்தே பாட்டிலை நீட்டி சியர்ஸை சொல்லி தனியாக நாளை கொண்டாட வேணும்.தொடர்ந்து இயங்குவது சிரமமான இந்த சூழலில் மிக முக்கியம் நண்பரே ! உங்கள் நாவல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் !



நகரத்திற்கு வெளியே -விஜய்மகேந்திரன்

உயிர்மை பதிப்பகம் விலை 50.00