Saturday, May 15, 2010

அய்யப்ப மாதவன் : சொற்கப்பல்- தக்கை தமிழ் நீண்ட கதைகள் விமர்சனம் பதிவு 3

நிரம்பிச் சூழ்ந்திருந்த வெயிலின் ஊடாய் வளைந்து நெளிந்து முபாரக் தன் கை வித்தைகளால் ஒரு பழையவீட்டின் முன்பு நிறுத்தினார். உள்ளே கூட்டிபோனார். அமரச்சொன்னார். அந்த வீட்டினுள் தங்கப்போகிறோமென ஆவல் மிகுதியிலிருந்தேன். வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டேன். மேற்கூரை மூங்கில்களால் அடைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் என்னவோ வெயிலில் காய்ந்த வீடும் குளிர்ந்திருந்தது. மூங்கில்கள் அரக்குநிறத்தில் தெரிந்ததினால் கண்கள் பரவசத்தில் ஆழ்ந்தன. அந்த நிறம் என்னவோ என்னை அவ்வளவு வசீகரித்தது. நண்பனுக்கு எப்படியோ தெரியவில்லை. அவனும் அறிமுகமில்லாத புதிய வீட்டினுள் மனம் ஒவ்வாத நிலையில் உட்கார்ந்திருந்தான். புதிய வீடு புதிய நட்பு புதிய தொடர்பென்றாலே இவ்வாறான் ஒவ்வாமை வருவது சகஜம்தான்.

எனை நோக்கி ஒரு மனிதர் ஐந்து அடிக்கு சற்று கூடுதலான சற்றே குண்டான உருவில் வந்தார். அவர் வரும்பொழுதே கணித்துவிட்டேன் அவர்தான் தக்கைபாபுவாக இருக்கவேண்டுமென. தன்னை பாபுவென அறிமுகம் செய்துகொண்டார். நான் அய்யப்பமாதவன் என்றேன். அவனை பால்நிலவன் என அறிமுகம் செய்தேன். நீங்கள் எந்தப் பால்நிலவன் என்று ஆழ்ந்த வியப்பில் கேட்டார். அவனும் எழுத்தாளர் பால்நிலவன் எனச் சொன்னார். உங்கள் பெயரில் ஒருவர் எழுத்தாளர் எனச் சொல்லி ஒரு பெண்ணிடம் பழகியதாகவும் அதனால் அந்தப் பெண்ணிற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். அந்தப் பெண் பாவுவைத் தொடர்புகொண்டு பால்நிலவனின் கைபேசி எண்ணைக் கேட்டபோது பாபுவும் என்னுடன் வந்திருக்கும் நண்பன் பால்நிலவனின் எண்ணைக் கொடுத்திருக்கிறார் விவரம் அறிந்திராமல்.

அந்தப் பெண்ணும் உண்மையான பால்நிலவனும் பேசி முடித்ததும் அந்தப் பெண் இந்தப் பால்நிலவன் வேறு என்றும் பால்நிலவன் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் பயன்படுத்தி அந்தப் பெண்ணை வசியப்படுத்த முயன்றவனின் கீழ்த்தரமான எண்ணங்களையும் புரிந்துகொண்டாள். ஒருவரின் பெயரை அந்தப் பெயரின் புகழை இன்னொருவர் பயன்படுத்தி பலனைடையும் கொச்சையான செயல்களை என்னவென்று சொல்வது. அவனைப் போன்ற கேவலமான மனிதர்களால் நல்ல உள்ளம்கொண்ட பால்நிலவன் போன்ற எழுத்தாளர்கள் பாதிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாததாகத்தானிருக்கிறது.
இந்தக் கதையாடல் முடிந்து சாப்பிட கூப்பிட்டுபோனார். சிக்கனா மட்டனா என்றார். சிக்கன் என்றோம். பசியாறிவிட்டு மலையேறும் திட்டத்தை பாவுவிடம் சொல்ல பாபுவும் அதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வித தடங்களுமில்லாமல் சத்தமின்றி செய்தார். சிவா என்கிற தங்கும் விடுதிக்கு அழைத்துப்போய் சற்று ஓய்வெடுங்கள் எனச் சொல்லிவிட்டு அவர் போய் ஒரு நண்பரை ஏற்காடு மலைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

நானும் படுத்தவுடன் தூங்கிப்போனேன். ஏற்காடு மலைபோகும் ஆசையிருந்தும் தூக்கத்தின் முன் அது தவிடுபொடியாகிவிட்டது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த சமயம் நண்பன் எழுப்பினான். அவன் மலைக்குப் போவதில் திண்ணமாக இருந்திருக்கிறான். அவன் எழுப்பியிருக்காவிட்டால் நானும் ஏற்காடை தவறவிட்டிருப்பேன்.

பாபு அனுப்பிய இன்னொரு பாபு வந்திருந்தார். கூடவே அவருடைய பையன் வந்திருந்தான். அவனும் மொழுமொழுவென்று துருதுருவென்றிருந்தான். நால்வரும் ஓட்டுநரும் ஊர்தியில் ஏறி பயணமானோம். அடங்காத அபிலாஷையில் எப்போது மலையின் தொடக்கம் ஆரம்பிக்குமென்று பாவுவை கேட்டேன். இன்னும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் என்றார். போகின்ற வழியில் இளநீர் வேண்டுமென்றேன். அப்புறம் நொங்கு வேண்டுமென்றேன். கேட்டதெல்லாம் வாங்கித் தரும் நல் மனிதராக இருந்தார் பாபு. இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களென்றால் என்னால் புளகாங்கிதமடையாமல் இருக்கமுடியாது. ஆனால் ஊர்தியிலிருந்து எரிவாய் திடீரென காலியாக ஊர்தியை எரிவாயு நிலையத்திற்கு ஓட்டினார்கள்.

ஊர்தியின் சாளரத்தின் வழியே பற்பல வாகனங்கள் ஓடிச் செல்வதைப் பார்த்தேன். எதிரே இருந்த சிறுவன் அப்பாவின் கைபேசியை வாங்கி அதை நோண்டிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் நானும் பால்நிலவனும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தோம். அந்தச் சிறுவனும் எங்களுக்கு சிறுகச் சிறுக நண்பனாகிக்கொண்டிருந்தான்.


எரிசக்தி நிரப்பபட்டு நீண்ட பெருமூச்சுடன் ஊர்தி மலைகளின் அடிவாரத்தை சீறித் தொட்டது. மலை தொடங்கியதுமே மலை என் கண்களில் வளர ஆரம்பித்தது. வானை நோக்கி சீறிப் பாயும் மரங்களை வியப்பில் தத்தளித்து கண்ணுற்றேன். மலைக்காடுகளைப் பார்த்து பல வருடங்களாயிற்று. மலைகளில் நுழைவதே ஒரு சாகசம்தான் மற்றும் மலைக்குள்ளிருப்பது உலக சுகதுக்கங்களிலிருந்து மறைந்துபோவதாகவும் உணர்வேன். வளைந்து வளைந்து மலையின் ஆகிருதியின் உடலுக்குள் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மலையின் உள்ளீடான தரிசனத்தில் அமைதியின் சலனமற்ற இதயத்தைக் காண்கிறேன். மலையின் தியானத்தில் பிறந்த அமைதியினிடையே என் மனம் மட்டும் என்னைவிட்டு பறந்திருந்தது. உள்ளிருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எதை எதையோ. நான் மலைக் கனவிலிருந்து மீள உள் உரையாடலுக்குள் வந்தேன். சேலம் பாபு ஏற்காடின் பெருமைகளை விவரித்துக்கொண்டு வந்தார். ஏழைகளின் ஊட்டி இதுதானென உலகம் சொல்வதைச் சொல்லிவந்தார். எங்களுடைய கோடை வாசஸ்தலமென்றார். வாரமொருமுறை மலை ஏறிவிடுவோமென்றார். இங்குவருவதுதான் அவர்களுடைய தீர்ந்துவிடாத ஆவலென்றார். இப்படியே பேசி பேசி ஏற்காடின் சமதளத்தை அடைந்துவிட்டோம்

No comments:

Post a Comment