Thursday, May 13, 2010

அய்யப்ப மாதவன்: சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு


சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு சென்றுவந்தேன். சேலத்தில் நடந்தேறிய ஒரு நாள் நிகழ்வில் பல்வேறு அனுபவங்கள் நாவல் விமர்சனம் படிக்கப்பட்டதின் வழியாகவும் கலந்துகொண்டவர்களின் வழியாகவும் அடையப் பெற்றேன்.

அதிகாலையில் கண்விழித்தேன். விடியலுக்கு சற்று முன்பாக விழித்தலென்பது இதுமாதிரியான பயணங்கள் நிகழும்போதுதான் நடந்தேறுகிறது. அதுவும் அதிகாலை ரயிலுக்கு முன்பதிவு செய்வதின் வழியாகத்தான் இது சாசுவதமாகிறது.

என்கூட அந்நேரத்தில் என் மனைவியும் அவள் திட்டமிட்டபடி விழித்துக்கொண்டாள். அவள் மாங்காடு மாரியம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம் போட்டிருந்தாள். நான் பல் துலக்க அவள் பல் துலக்க விடியலைப் போல சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தோம். கொட்டை வடிநீரை அந்நேரத்தில் சூடாகப் பருக காலை இன்னும் விருவிருப்பானது.

தேவையானவற்றை அடைத்து ஒரு தோள்பையைத் தயாராக வைத்திருந்தேன். ஆடையுடுத்தி வெளிக்கிளம்பியபோது நண்பன் எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் அவ்விடத்தின் அடையாளங்களையும் கூறினான். நானும் கிளம்பிவிட்டதாகவும் இன்னும் ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாகவும் அவனுக்குப் பதிலளித்தேன்.

மாடிப்படிகளில் இறங்கி வெளியேறியபோது மனைவி மாடியிலிருந்து பிரியா விடை கொடுத்துக்கொண்டிருந்தாள். எனக்கோ விருப்பமான பிரிவாக இருந்தது. எப்பொழுதும் அவளுடன் இருந்து ஒருவித சங்கோஜம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து இரு நாட்களுக்கு விடுதலையென நினைத்தபோது மனம் அல்லோல கல்லோலப்பட்டது.
முதுகில் வலியுடன் கொண்டு சென்ற சுமையைத் தோள்களில் தொங்கவிட்டுக்கொண்டேன். இடதுபக்கம் அது என்னை ஒரு பக்கமாகச் சாய்த்து சுமையின் வலியை உணரச் செய்தது. போகின்ற வழிகளில் அன்றைக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னமே ஓட்டிப்பார்த்துக்கொண்டே சென்றேன். நண்பனும் சொன்னவிடத்தில் நின்றுகொண்டிருந்தான் எழுத்தாளரின் பாவனையுடன் அதாவது ஒரு ஜோல்னா பையுடன். அவனை நான் விசாரிக்க என்னை அவன் விசாரிக்க அப்பொழுதின் தேவைக்கான சொற்றொடர்களை உதிர்த்துக்கொண்டோம்.

அரசாட்சி புரியும் முதல்வனைப் போல சரியான நேரத்திற்கு அரசு பேருந்து வரவில்லை. அரசனே அப்படியிருக்கும்போது அரசு பேருந்து அவ்வாறு திமிர்கொண்டு நடந்துகொள்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ரயில் போய்விடும் பயத்தில் ஒரு மூவுருளியை வாடைக்கு அமர்த்திக்கொண்டு சென்னை ரயில்நிலையத்தை அடைந்தோம். நண்பனிடம் ஒரு தேநீர் அருந்தவேண்டுமென்றும் ஒரு வெண்சுருட்டைப் புகைக்கவேண்டுமென்றும் கூறி இருவரும் ஒரு தேநீரைக் கடையைக் கண்டுபிடித்து பருகினோம். இல்லை இல்லை. அவன் கொட்டை வடிநீரைப் பருகினான். நான் தேநீரைப் பருகினேன். இப்படித்தான் எழுதும்போது நிறைய விசயங்கள் பொய்யாகிவிடுகின்றன. பொய்க்கு இடம்கொடுக்க விரும்பாமல் இந்தக் கட்டுரையை முடிந்தவரை பதிவுசெய்வதென ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.

அப்புறம் நான் ஒரு வெண்சுருட்டை ரயில்நிலையத்தின் அருகில் வந்து பிடித்தேன் ரயிலை விட்டுவிடக்கூடாதென்ற முன் ஜாக்கிரதை உணர்வில். ஒருவழியாய் நாங்கள் போகும் ரயில் பெயரைச் சுமைதூக்கும் தொழிலாளியிடம் சொல்லி நடைமேடை எண்ணை பதினொன்று என்று அறிந்துகொண்டு அம்மேடையை நோக்கி மனித நெரிசலுக்குள் புகுந்து அடைந்தோம். ரயிலும் பயணிகளின் சுமையுடன் நின்றுகொண்டிருந்தது. ரயிலின் வெற்றுடலுக்குள் இருவரும் ஏறிக்கொண்டோம். ரயிலுக்கு இதயம் தோன்றியது. ஏனெனில் ஏறிய நாங்களிருவரும் கவிஞர்கள் இல்லையா. ரயிலின் வெற்றுடலுக்கு இதயத்தைத் தோற்றுவித்தோம்.

ரயில்பெட்டிகள் சரியான நேரத்திலிருந்து பிசாகமல் தங்களை அசைத்துக்கொண்டு இரைதேடும் பாம்பின் உடலென புறப்பட்டது. நாங்கள் ஒரு மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருப்பதைப்போல இருந்தோம். ஆனாலும் நாங்கள் சென்ற பாம்பின் உடலில் சாளரங்களிருந்தன. அதன் வழியே வெளியுலகின் பரவசத்தோடும் அருகிருக்கும் மனிதர்களின் அரவத்தோடும் சேலம் மாநகரை நோக்கிய எங்கள் பயணம் அவ்வளவு அருமையாய் எவ்வித சஞ்சலங்களுமற்று தொடங்கியிருந்தது.

இந்தக் கட்டுரையை எழுதுகிறபோது இன்றைய மதியம் குறுக்கிட்டுவிட்டது. மீதியை நாளை தொடரலாமென மனம் இயம்பிவிட்டது.

2 comments:

  1. அட! பின்னூட்டப்பகுதியில் நேசனும் நானும் ​தொற்றிக்​கொள்ள....... :))))

    ReplyDelete