Tuesday, July 5, 2011

அதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்


[விஜய மகேந்திரன், ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, வேடியப்பன், விநாயக முருகன்]

ஜீலை இரண்டாம் தேதி, ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் என பேஸ்புக்கில் நண்பர் வினாயகமுருகனும், விஜயமகேந்திரனும் அழைத்திருந்தார்கள். சினிமா மீதான கூர்மையான ரசனையோ, உத்திகள் குறித்த அறிவோ இல்லையென்றாலும், கலந்து கொள்வது இரண்டையும் கொஞ்சம் வளர்க்கும் என்ற நம்பிக்கையில்தான் கலந்துகொள்வதாய் தீர்மானித்திருந்தேன். முன்னதாக என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு ஈர்ப்பும் ஆரண்யகாண்டம் படத்தின் மீது இருந்தது. சுப்பு, சிங்கப்பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி, பெயர் தெரியாத சப் இன்ஸ்பெக்டர், வாழ்ந்து கெட்ட ஜமீன் என வெவ்வேறுவித மனிதர்கள் கலந்து கோர்க்கப்பட்ட திரைக்கதையும் அதன் காட்சிக்கோணங்களும், இதனை மனதில் கருவாக வரித்து அலைந்த படைப்பாளியை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் இன்னொரு காரணம்.

நிகழ்வு மணி ஆறுக்கு ஆரம்பித்தது. கலந்துரையாடலுக்கு முன்னதாக பீப்பிள்ஸ்தியேட்டரின் ‘ நீங்களே சொல்லுங்க’ எனும் ஓரங்க நாடக நிகழ்வு. நிகழ்த்தியவர் தம்பி சோழன். இன்னும் மனதின் ரகசிய ஓரங்களில் சிறு அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது.
[பீபுள்ஸ் தியேட்டர் சார்பாக “ நீங்க சொல்லுங்க” - என்ற நாடகத்தை அரங்கேற்றும் தம்பி சோழன்.]

கூட்டத்தின் நடுவில் வந்தவர் தன் பெயர் நீலகண்டன் என்றும் மனநிலை காப்பகத்தில் மன நிலை ஆலோசகராகப் பணிபுரிவதாகவும், தன்னிடம் ஆலோசனைக்கு வந்த இருவரின் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இரண்டுகதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.
முதல் கதை திரைப்படவெறியில் மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணைப்பற்றியது. தன்னை நடிகர் அஜீத்தின் மனைவியென்றும், சிறு மனஸ்தாபத்தினால் அஜீத்தைப்பிரிந்து அப்பாவீட்டில் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இதற்காக அப்பாவும் மகளும் அழுதுகொண்டிருப்பதாக மன நிலை ஆலோசகர் சொல்கிறார். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார். தன் பெயர் நீலகண்டன், மன நிலை ஆலோசகர். கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்து உக்காருகிறேன். எதையோ சொல்லவருகிறார் என. இரண்டாவது மனநிலை பிறழ்வாளரின் கதை. ஒரு பூங்கா ஒன்றில் சந்தித்த நபர், தனக்கு யாரைபார்த்தாலும் கொல்லத்தோன்றுகிறது. இதற்கான காரண்ம் என்ன என ஆலோசனை கேட்கிறார். அவர் கதையைச் சொல்லும்போதே மறுபடியும் சுய அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். விளக்குகள் அணைகிறது. ஸ்ரீ நேசனின் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்குகிறார். ( விளக்குகள் அணையும்பொழுது மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொள்ளும்படியும், கவிதை வாசிக்கப்படும்பொழுது உடன் சேர்ந்து வாசிக்கும்படியும் துண்டுப்பிரசுரம் கொடுக்கப்ப்ட்டிருந்தது.)

கவிதைக்குள் மூன்றாவது கதை வருகிறது. ஒரு குடும்பம் வழக்க்ம்போல் துயிலெழுகிறது. இருக்கும் பாலைக்காய்ச்சி டீ போட்டுக்குடிக்கிறார்கள். கடைத்தெருவிற்குப்போகிறார்கள் (கவிதையை கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களும் பின்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்)

ஆர்ப்பாட்டமான கடைத்தெரு வழக்கத்திற்கு மாறான
அமைதியாக இருந்தது.

ஆர்ப்பாட்டமான எங்கள் குழந்தையும் வழக்கத்திற்கு
மாறாக அமைதியாக இருந்தது.

ஆறு முழ நீளத்திற்கு நைலான் கயிறு வாங்கிக்கொண்டோம்
குழந்தைக்கு ஒரு ஐஸ்கிரீமும்

கவிதையின் இந்த இடத்தை இருட்டில், 20-30 குட்டி மெழுகுவர்த்தி வெளிச்சங்களுடன் கோரஸாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட அற்புதமான உன்மத்த மன நிலை அது.

வீட்டிற்கு வந்து
தூக்கிட்டுக்கொண்டோம்
நாஙக்ள் தூக்கிட்டுக்கொண்டதற்கான காரணத்தை
இந்த உலகத்திடம் சொல்வதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை

கூட்டம் மொத்தம் ஒரு பித்து நிலையில் பின்சொல்லிச் சொல்கிறது இந்த வரிகளை அடையும் போது கட்டியங்காரனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. “இந்த உலகத்திடம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” . திடீரென இரு மருத்துவமனை ஊழியர்கள் இருவர் நடுவில் நுழைந்து பேசிக்கொண்டிருப்பவனை இழுத்துச் செல்கிறார்கள். ‘ இவன் ஒரு மன நோயாளி, இவன் பேசசைக் கேட்டதின் மூலமாக நீங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்’ என மருத்துவமனை ஊழியன் சொல்கிறான். இரு ஊழியர்களும் மையபாத்திரத்தை இழுத்துச் செல்லும்போதே ஓங்கிய குரலில்
கத்துகிறான் கவிதையின் கடைசி வரியை “ நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”. நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”.

விளக்குகள் எரிகின்றன. கூட்டத்தின் பெரும்பாலான முகங்களில் புயல் கடந்த கலக்கம். சில வினாடிகள் தாமதித்து கைதட்டல் காதைப் பிளக்கிறது. அற்புதமான நிகழ்வு. ஸ்ரீ நேசனின் கவிதை, மருத்துவர் ஆனந்தனின் ஒரு பதிவு, மற்றும் கோபிகிருஷ்ணனின் ஒரு சிறுகதை மூன்றையும் பிணைத்த கதை என பிரசுரத்தில் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அந்த நிகழ்வில் ஊறிப்போய்க்கிடக்கிறேன். தற்கொலைக்காரணத்தைத் தெரிந்து கொண்ட குழந்தை இந்த மனபிறழ்ந்தவனின் நினைவில் எப்படி வருகிறது? நடிகரின் மீது கொண்ட பித்தால் பிறழ்வடைந்த பெண், எல்லாரையும் கொலைசெய்யும் வெறி கொண்ட ஆண், மனப்பிறழ்வைடைந்த இளைஞன், தற்கொலையின் காரணத்தைத் தெரிந்த ஒரே ஒரு குழந்தை எல்லாம் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன? சில கேள்விகளுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். சில கேள்விகளுக்கு பதிலே இல்லை என்பதுதான் உண்மை.

o

பிறகு ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக காலச்சுவடு அரவிந்தன் ஆரண்யகாண்டம் குறித்த தனது கருத்துக்களைக் கட்டுரையாக கொண்டுவந்திருந்து வாசித்தார். (யாராவது இந்த கூட்டங்களில் கட்டுரை வாசிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்யுங்களேன் பிளீஸ். தம்மடிக்கும் இடைவெளியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் :( ) அடுத்து கவிதா முரளிதரன். தனது கருத்துக்களை குறிப்புகளாகக் கொண்டுவந்து விளக்கமாக சொன்னார். பெரும்பாலான கருத்துக்கள் சுரேஷ்கண்ணனின் இந்த விமர்சனத்தையொட்டியோ, அதை மேற்கோள் காட்டியோதான் இருந்தது. ஒரு கடை நிலை சினிமா ரசிகை இடத்திலிருந்து தான் ரசித்த இடங்களை, ரசித்த பாத்திரங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு வெளி ரங்கராஜன். ( தனிப்பட்ட முறையில் மற்ற இருவரையும் விட ரங்கராஜனின் விமர்சனம் அல்லது கருத்து கொஞ்சம் கூர்மையாக இருந்ததாக கருதினேன் ) மூவர் பேசியதின் ஒரே சாராம்சமாக தொகுத்துச் சொன்னால் இப்படி வரும்.

“ ஆரண்யகாண்டம் குறிப்பிடத்தகுந்த முதல்-வகை முயற்சி. நிறைய லாஜிக் ஓட்டைகள். சுப்பு இறுதிக்காட்சியில் மரணமடையாமல் தப்பித்தது வரவேற்கத்தகுந்த வித்தியாசம். ” இது போக சப்பை, சுப்பு, ஜமீந்தார் மற்றும் சிறுவனின் பாத்திரப்படைப்பு.

o

கலந்துரையாடல் என்ற அர்த்ததில் வந்தவர்களைவிட க்லந்துரையாடலைக் கவனிக்க வந்தவர்கள்தான் அதிகம் போன்ற ஒரு உணர்வு எழுந்தது. சுமார் 50-60 நபர்கள் வந்திருக்கலாம். அதில் குறிப்பிட்ட 5-6 பேர் தொடர்ந்து கேள்விகள் கேட்க அதற்கு இயக்குனர் குமாரராஜா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். குமாரராஜாவின் பதில்களைப்பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயமாக நான் கருதுவது, அவர் பதில்களும், ப்டத்தைப்போலவே எதிர்பபாராத முடிவுகளை விட்டுச்செல்வதாகத் தோன்றியது. நண்பர்கள், குறிப்பிட்ட காட்சியை அதீத கவனத்துடன், “ இப்படி ஒரு காட்சி இருக்கிறது. இதன் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் அ எதைக்குறிக்க இந்த காட்சி வைத்தீர்கள்” என கூர்மையான கேள்விகள் வைக்கப்படும்போதெல்லாம் குமாரராஜா “ எதோ எனக்கு அந்த இடத்தில் அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனவே வைத்தேன். பெரிதாய் எந்த உள் நோக்கமும் இல்லை என பலூனை உடைக்கிறார். சில கேள்விகள் “ இந்தக் காட்சி தேவையேயில்லையே ரகமான எளிய கேள்விகளை வைக்கும்போது “குறிப்பிட்ட காட்சி எப்படி படத்தின் போக்கை மாற்றுகிறது அல்லது அதன் குறியீட்டு அர்த்தம் என்ன என வித்தியாச கோணங்களை முன்வைக்கிறார். படம் பார்க்கும்போது சீரியஸ் காட்சி நகைச்சுவையாகவும், நகைச்சுவை காட்சி சீரியஸாகவும் முடியும் உத்தி இந்த இடத்தின் நினைவுக்கு வந்தது.

பெரும்பாலானவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை நண்பர் விஜயமகேந்திரனே தொகுத்து வைத்திருந்து, வரிசையாக கேட்டது நிகழ்ச்சியை கொஞ்சம் சரியான பாதையில் கொண்டு சென்றதாகத்தோன்றியது. இருந்தாலும் “ சிங்கப்பெருமாளின் ஆடையில்லாத காட்சி எதற்காக, விருதுவிழாக்களுக்குப்போகும் எல்லாத் திரைப்படங்களிலும் ஒரு ஆடையில்லாத காட்சி இருப்பதைப்போலவா” போன்ற அபத்த கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

o

யாரைப்பார்த்து இன்ஸ்பையர் ஆனீர்கள்? அடுத்த படம் என்ன? இந்த படத்தின் காட்சிகளை மாற்றவேண்டும் என ஆசைப்பட்டீர்களா போன்ற வழக்கமான கேள்விகள் கொஞ்சம் சலிப்பூட்டின. அவற்றையும் சமாளித்து, பொறுமையாக நேர்மையாக குமாராராஜா பதிலளித்தவிதம் அருமை. அதிலும், ‘புரியாத காட்சிகள் வைப்பது அதைப்பார்ப்பதற்காவது இரண்டாவது முறை தியேட்டர்க்கு வருவீர்கள் தானே” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னது நச்.

o

புதிய முயற்சிகளுக்கான வேட்கைகளுடன் படைப்பாளி எல்லா காலகட்டத்திலும் தயாராகத்தான் இருக்கிறான். அதற்கான வரவேற்பும் அது மக்களிடையே கிளப்பும் விவாதங்களும் மட்டுமே அந்த முயற்சிகளை நோக்கிய பயணத்தை நோக்கி படைப்பாளியைச் செலுத்துகிறது. என்னைப்போன்ற புதியவர்களுக்கு படைப்பைப்பற்றிய புதிய பரிணாமங்களைக் காட்டுகிறது. இப்படி ஒரு நிகழ்வை முன்னின்று செலுத்தியதற்காக நன்றிகள் வினாயகமுருகன், விஜயமகேந்திரன்.

o

-லதாமகன்