வெளிவரக் காத்திருக்கும் எழுத்தாளர், நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களின் நாவல் "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்"... சில நாட்களுக்கு முன்பு எனக்கு அனுப்பியிருந்தார். சமூகத்தின் வெளிவராத பக்கங்களைத் தொட்டிருந்தார்... அது... ஆசைகள் எதிர்பார்ப்புகள் நடைபெறாத போது, கைவிடப்படுதல் நடக்கிறது. சில நேரங்களில் ஒரு நாடே மக்களை கைவிட்டு விடுவதும் உண்டு... சிறுவர்கள், வயது மீறிய ஒருவருடன் தகாத காரியங்களில் சேர்ந்து ஈடுபடுவது என்பதும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலை தான் இந்த நாவலில் வரும் சிறுவன் மணி போல... சிவாவின் கொலை முயற்சிக்கு அவன் மனசாட்சியே தடையாயிருக்கும் என்று சிறுவன் மணியையும், போதையையும் துணைக்கு அழைத்து, அந்த செயலை திட்டமிடுவது, கைவிடப்பட்டவர்கள் வரிசையில் சேர ஒத்தி பார்க்கும் ஒரு செயல் தான்.. செயலுக்கு ஒருவனின் மனமே தடையாயிருந்தால்...? தண்டனை நிச்சயம். அதை தான் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களின் இந்த சிறிய பதிவு கோடிட்டு காட்டுகிறது... அதே போல் சமூகத்தின் உயரத்தில் பதவியில் அவர்கள் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் கூட இருந்தாலும்... மறைமுகமாக கொடுஞ்செயல் புரியும் தயங்க மாட்டார்கள்... என்பது போன்ற கசப்பான உண்மைகளை கூண்டில் ஏற்றி பேச வைத்து இருக்கிறார்... இயல்பாக உயிரோட்டமான வார்த்தைகளை பேச வைத்து இருக்கிறார்... பின்னுரையில், என் எழுத்துக்களில் துயரம் அதிகம் படிந்த நாவல் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்... துயரம் அதிகம் எழுத்தில் படிந்திருக்கிறது என்றால், மக்களையும், சமூகத்தையும் அதிகம் படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்... இந்த நேரத்தை உங்களுக்கு வழங்கி சிந்திக்க தூண்டிய கொரானாவுக்கு நன்றி சொல்லுங்கள்... இந்த நாவல் தங்களின் "கடல்" பதிப்பகத்தின் மூலமாக வருவதாக அறிந்தேன்... அதற்கும் வாழ்த்துகள் . "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்"உங்களை கைவிடாது... உயர்ந்த, உன்னத இடம் தொடவும் வாழ்த்துகள் விஜய் மகேந்திரன்.... GA. சிவசுந்தர், ஒளிப்பதிவாளர் கைவிடப்பட்டவர்களின் கூடாரம் (நாவல்) விஜய் மகேந்திரன் பக்கங்கள் 130 விலை ரூ 160 கடல் பதிப்பக வெளியீடு முதல் பதிப்பு ஜூன் 2021
|
Friday, June 25, 2021
கைவிடப்பட்டவர்களின் கூடாரம்
Wednesday, June 16, 2021
குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’
குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’
எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய நண்பர்கள் ஆனோம். என்னிடம் அவர் சொன்ன கதைகள், சம்பவங்களை வைத்தே குறைந்தது மூன்று செறிவான புதிய கதைக்களன் கொண்ட பெரிய நாவல்களை அவர் இந்நேரம் எழுதியிருக்க முடியும். சினிமாவும், சினிமா எடுப்பதற்கான கடுமையான பிரயத்தனமும் மட்டும் அவரது படைப்புகள் முற்றிய நாட்களில் பெரும்பகுதி எடுத்துக்கொண்டது உண்மை. ஆனாலும் அவருக்குள் இருக்கும் தீவிர படைப்பாளியை அவ்வப்போது சிறுகதைகளாக வெளிபடுத்தினார்.தமிழு, நிறமற்றவளின் கண்கள், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஒரு சைக்கிளின் கதை போன்ற அவரது கதைகள் யதார்த்த தளத்தில் அமைந்த துள்ளிய காட்சி சித்திரிப்பை அளித்து தெரிந்த விளம்புநிலை மக்களின் தெரியாத வாழ்க்கையை கூறின. கதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் அவர் மெனக்கெடவில்லை. பின்னர் நண்பர்களின் தொடர்ந்து நச்சரிப்பும், யாவரும் பதிப்பக ஜீவகரிகாலன்,வேல்கண்ணன் போன்ற நண்பர்களின் தொடர் முயற்சியால் மோகினி என்ற பெயரில் தொகுப்பு 2017 ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளிவந்து பரவலான கவனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் அவரது படப்பிடிப்புகள், கதை விவாதம், லொகேஷன் பார்க்க போதல் என்று சினிமா அவரின் பெரும்நேரத்தை எடுத்துக் கொண்டது. அவருடன் இரவு நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பெரிய நாவலான ‘’குமரி’’ குறித்து என்னிடம் விவாதிப்பார். அதன் காட்சிகளை கேட்கும் போது, ‘’ விரைவில் எழுதி முடியுங்க தோழர், நீங்க சொல்லும் போதே விரைவில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’’ என்பேன். ஒரு சிறிய புன்னகையை பதிலாக கொடுப்பார். யாவரும் சிறுகதைப் போட்டியில் கொரோனா காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக அவரது ‘’ சதுரங்க வட்டம்’’ தேர்வு பெற்றது. பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறந்த கதை இது. விரைவில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து யாவரும் பதிப்பகம் புத்தகமாக கொண்டு வர இருக்கிறது. அந்த தொகுப்பில்‘’ சதுரங்க வட்டம்’’ இடம் பெறுகிறது. போன வருட(2020) கொரனோ லாக் டவுனில் குறுநாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து இருப்பதாக கூறினார். அதுதான் ‘’பாரி ஆட்டம்’’ குறுநாவல். இந்த ஆண்டு பிப்ரவரி 2021 இல் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சியில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரவலான வாசகர்களால் விரும்பியும் வாங்கப்பட்டது. முக்கியமாக திரைப்படத் துறையை சேர்ந்த பல நண்பர்கள் வாங்கிப் போனார்கள். கதைப்போக்கில் அமைந்திருந்த ஒருவகையான திரில்லர் தொனி அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் வெகுஜன நாவல் வகைமைக்குள் பாரி ஆட்டத்தை சேர்க்க இயலாது. தீவிரமான மன உணர்வுகளை அளிக்கும் வாழ்க்கை முறையையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார். பின்நவீனத்துவம் கொடுத்திருக்கும் கதை சொல்லலின் சுதந்திரம், கதையின்றி கதை மொழிதல், சில வரிகளில் ஒரு கதாபாத்திரங்களை வரையறுத்தல், தேவையற்ற விளக்க உரைகளை தவிர்த்தல் ஆகிய நுட்பங்கள் அனைத்தும் பாரி ஆட்டத்தில் துணிந்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார் வ,கீரா. இந்த நுட்பங்கள் எதுவும் வாசகனை உறுத்தாமல் சீரான கதை சொல்லலால் தடையின்றி வாசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் குறுநாவல் வடிவத்தில் தான் அதிகமும் சாதனைகள் நிகழ்த்திருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தி.ஜானகிராமனின் அடி, அசோகமித்திரனின் இன்று, கி.ராஜாநாராயணனின் கிடை, ஆர்.சண்முகசுந்தரத்தின் அறுவடை , லா சாராவின் புத்ர, வண்ணநிலவனின் கம்பாநதி, ஜெயமோகனின் டார்த்தீனியம், சு. வேணுகோபாலின் கூந்தப்பனை போன்ற இன்னும் பல வரிசையில் உள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்( நீல. பத்மநாபனின் தமிழ் மொழிபெயர்ப்பு) மலையாள மொழிபெயர்ப்பு என்றாலும் குறுநாவலின் உச்சபட்ச சாதனைக்கும் வடிவத்துக்கும் துல்லியமான எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
போன வருடம் குற்றப் பின்னணியில் அமைந்த இரண்டு குறுநாவல்களை படித்தேன். ஒன்று சீரியல் கில்லர்( தொடர் கொலைகாரன்) யாரென்று கண்டுபிடிக்கும் வகையில் அமைந்த நந்தன் ஸ்ரீதரனின் படுகளக் காதை, அவரின் திரைக்கதை ஒன்றை குறுநாவல் வடிவில் மாற்றி எழுதியிருந்தார். ஒரு மனிதனின் வாழும் சூழல் எவ்விதம் குற்றப் பின்னணியில் சிக்க வைக்கிறது என்பதை மெல்லிய நீரோட்டமாக எழுதியிருந்த என்.ஸ்ரீராமின் அத்திமரச்சாலை. இந்த இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது பாரி ஆட்டம்.
முப்பது வருடங்களுக்கு முன் நடக்கும் யாரும் சொன்னாலும் நம்ப முடியாத கிராமிய கதை, இன்னொருபுறம் சமகாலத்தில் கொடைக்கானலில் வயதுப்பெண்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் பற்றி எந்த துப்பும் கவலர்களுக்கு கிடைக்காமல் அலைகிறார்கள். இவ்வாறு இரண்டு கால கட்டங்களில் கதை சொல்லப்பட்டு ரயில் பாதையின் இரு வேறு தண்டவாளங்கள் இணைவது கதையின் முடிவை நோக்கி கோர்த்திருக்கிறார் கீரா. கடந்த காலத்தின் கதைக்கு வாய்மொழி கதைமொழியின் கூறல் முறையையும், நிகழ்காலத்தின் கதைக்கு விறுவிறுப்பான மர்ம நாவலின் கூறல் முறையையும் பயன்படுத்தி எழுதியிருக்கிறார் கீரா. ஆனால் கதாபாத்திரங்களின் மன ஒட்டத்தை மிக துல்லியமாக சித்தரித்து எழுதியிருப்பது நாவலை மிகுந்த நம்பகத் தன்மைக்குள் கொண்டு வந்துவிடுகிறது.
மாச்சாப்பு, வெள்ளையன், மாரியாயி என்ற மூவரை மையமாக வைத்து கடந்த கால கதை நகர்கிறது. சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் அண்ணன், தம்பிகள். மழை வந்தால் விவசாயம், இல்லையென்றால் ஆடுகளை மேய்த்து அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். அண்ணனுக்கு எந்த இடத்திலும் பெண் அமையவில்லை. அதனால் தம்பி வெள்ளையனுக்கு திருமணம் செய்துவிட முடிவெடுக்கிறான். ஆனால் தம்பி வெள்ளையன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான், சில சம்பவங்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் மாரியாயியை மணந்து கொள்ளும் சூழல் வருகிறது. ஊரார் கேலி பேசினாலும் மாரியாயி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரையும் தீர்க்கமான முடிவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். குடிசை வீட்டின் கூரையை மாற்றி, அவர்கள் நிலத்தில் கடன் வாங்கி கிணறு தோண்டி, அறுவடை செய்து புகுந்த வீட்டை கரை ஏற்றிவிடுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் மகிழ்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டம் தனது மகன் படக்கூடாது என தங்களின் வசதிக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். செட்டிக்குளம் என்ற கிராமத்தில் இந்தக்கதை நடக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராமிய வாழ்வை அப்படியே அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு இரு ஆண்களை திருமணம் செய்யமுடியும் என்கிற இடத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலை மிகுந்த துல்லியத்துடன் எழுதியிருக்கிறார். மாரியாயி அவளின் அம்மா எடுக்கும் முடிவுகளும் அதை இயற்கையாக நகர்த்திச் சென்ற விதமும் எழுத்தாளனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இப்படி நிகழுமா? என்கிற போது நிகழும், நிகழ்த்திருக்கிறது என்று ஒரு கதையை நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் நிலத்தில் கிணறு வெட்ட நீர்ப்பிடிப்பு பார்க்க வரும் சன்னாசி, துண்டில் தேங்காயை போட்டு முறுக்கிக் கொண்டு பார்க்கிறார். அந்த நிலத்தில் இருக்கிற கரையான் புற்று தான் நீரை கண்டுபிடித்து தருகிற வித்வான் என்கிறார். கிணறு தோண்டி நீர் கசிய ஆரம்பித்ததும் மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டு முதல் நீரை அருந்தக் கொடுப்பது போன்ற மறைந்து போன அல்லது மறந்து போன நாட்டுப்புற சடங்குகள் அனைத்தையும் நுட்பமான விவரணைகள் மூலம் நினைவு படுத்தியிருக்கிறார் கீரா.
நிகழ்காலத்தில் நடைபெறும் கதையில் கொடைக்கானலில் தொடர்ந்து இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்குகளை விசாரிக்கும் இளம் ஆய்வாளன் கார்த்திக் எந்த துப்பும் சரியான முறையில் கிடைக்காமல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேலதிகாரிகளிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். சினிமாவுக்கு முயற்சி செய்து தோற்று வேறு வழியில்லாமல் கொலையுண்டவர்களை காவலர் தரப்பின் சாட்சிகளுக்குக்காக படம் பிடிக்கும் முருகனின் கதையும் சொல்லப்படுகிறது. இப்படி நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைத்து விளையாடும் ஆட்டத்தை பாரி ஆட்டம்(கிராமங்களில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டு) குறுநாவலில் அந்த விளையாட்டைப் போலவே குற்றங்களின் தோற்றுவாயை துல்லியமாக சொல்லியிருக்கிறார் கீரா.
பொதுவாக குறுநாவல் எழுத்தாளருக்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வடிவம்! சிறுகதைக்குரிய வேகமும், நாவலுக்குரிய களமும், சிக்கலும் இருந்தாக வேண்டும். ஆனால் நாவலுக்குரிய இடம், பக்கங்கள் இங்கு இருக்காது. 70, 80 பக்கங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும். இதை எந்த நுட்பமும் குறையாமல் எண்பது பக்கங்களில் அனாசயமாக சாதித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வ.கீரா. மிக புதிய களம், நுட்பமான விவரணைகள், இரு விதமான கதை சொல்லல் என ஒரே அமர்வில் படிக்க வைத்து புதிய அனுபவத்தை தருகிறது பாரி ஆட்டம் குறுநாவல். இந்தப் பிரதி இன்னும் இவரிடம் இருந்து வீரியமான படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கிறது.
பாரி ஆட்டம் (குறுநாவல்)
ஆசிரியர்: வ.கீரா
பக்கங்கள் 88
விலை ரூ120
பதிப்பகம் புலம் வெளியீடு
முதல் பதிப்பு பிப்ரவரி 2021
சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
விஜய்
மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை
நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு
ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார்.
திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த
நூலின் உள்ளடக்கத்தை மூன்றாக வகுக்கலாம். ஸ்ரீதேவி, ரேகா, ரஹ்மான்,
பிரசன்னா, எடிட்டர் லெனின், களஞ்சியம், ராம்பால், கேபிள் சங்கர், கீரா,
சாம்ஸ், மீரா கதிரவன் என பல திரைத்துறையினரை பற்றிய தன் அவதானிப்புகளையும்
அவர்களுடனான உறவையும் பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறார். இவைத்
தவிர்த்து ‘மூன்று முடிச்சில்’ வெளிப்பட்ட ரஜினியின் நடிப்பு,
முருகேசபாண்டியனின் சினிமா நூல் குறித்த அறிமுகம், யுவ கிருஷ்ணாவின்
நடிகைகள் பற்றிய நூல் அறிமுகம் என சினிமாவின் வெவ்வேறு தளங்களை பற்றிய
குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
விஜய் மகேந்திரனின் வாசிப்பு வேட்கையை
பறைசாற்றுவதாகவும் இத்தொகுப்பு உள்ளது. இளங்கோ கிருஷ்ணன், நரன்,
குமரகுருபரன், ஷோபா சக்தி, நிலா ரசிகன், லீனா மணிமேகலை, கிராபியன் ப்ளாக்,
பிரியா தம்பி, விஜயபத்மா, அனிதா, சுதேசமித்திரன் என பல்வேறு
எழுத்தாளர்களின் ஆக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். கவிதைகள் தேர்வும்
அது குறித்து அவர் எழுதும் குறிப்புகளும் சிறப்பாக உள்ளன.
இவையிரண்டும்
தவிர்த்து வாழ்வியல் பற்றிய கட்டுரைகள், குறிப்பாக சென்னை நகரத்தின்
சூழ்ச்சி மிகுந்த வாழ்வு வசப்படாமல் போகும் புதிர்களை விவரிக்கும் கட்டுரை
அபாரமானவை. மொழி ரீதியாகவும் தனித்து விளங்குபவை. ஆட்டுக்கால் சூப்பு
பற்றிய கட்டுரை ஒரு சிறுகதைக்கு உரியது. உப்புக்கண்டம், முருங்கைக்கீரை,
ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவை அவருடைய மருத்துவ பின்புலத்துடன் சேர்ந்து
துலங்குகிறது. மொத்தத்தில் இவை ஒரு அமர்வில் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்கதாக
வடிவம் கொண்டுள்ளது.
- சுனில் கிருஷ்ணன்
நூல்:
சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
வெளியீடு: புலம் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021 ( மூன்றாம் பதிப்பு)
பக்கங்கள் : 120
விலை : 130
தொடர்புக்கு: 98406 03499
Wednesday, May 6, 2020
நகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்
♪ கதை படித்து முடிக்கும் வரை புறச்சூழலுக்கு வாசகர் மனம் சிக்காமல் கதாசிரியர் ஆதிக்கத்தில் இருப்பதை சிறுகதை இலக்கணமாக எட்கர் ஆலன்போ குறிப்பிடுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட விஜய் மகேந்திரன் அவர்களின் சிறுகதைகள் காலத்தின் கண்ணாடியாகவே பார்க்கப்படுகிறது.
இவரின் எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி படிப்பவரின் மனதில் காட்சியமைப்பை உருவாக்கி விடுகிறது.குதிரைப் பந்தயம் போல தொடக்கம் முதல் இறுதி வரை கதை சொல்லும் உத்தி இவரை சிறந்த கதை சொல்லியாக உயர்த்தி வைக்கிறது.
♥சனிப்பெயர்ச்சி கதையின் தொடக்கத்தில் தினசரிகளில் வரும் ராசிபலன்கள்,கிசுகிசுக்கள் என்று கதையின் போக்கு பயணப்பட்டு கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளரின் பணி அனுபவங்களை கண்முன் காட்சிகளாக விவரிக்கும் எழுத்து நடையாகட்டும்,வலது கையின் கடைசி மூன்று விரல்களை கட்டை விரலால் மீண்டும் மீண்டும் ஜோசியர் எண்ணினார் என்பதை சொல்லும் விதமும்,நண்பர் நோவாவின் மனைவி அரசியல்வாதியின் முழு தகுதிகளையும் பெற்றிருந்தாள் என்று நக்கல் தொனியில் எழுதுவதாகட்டும் கதை முழுவதும் மட்டுமல்ல..இறுதியிலும் தினசரியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்து விடுகிறார்.
♦இருத்தலின் விதிகள் கதை வாசிப்பு பழக்கம் உள்ள இருவரை பற்றியது என்றாலும் கதை முடிவில் ஒரு அழுத்தமான பாதிப்பை கொடுத்து விடுகிறது.பழைய புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்புதான் மனிதனுக்கும் என்ற பேருண்மை.வீட்டை மறுக்கப்பட்ட உரிமைகளின் கழகம் என்கிறார்.
♦ சிரிப்பு சிறுகதையில் பூங்காவில் சந்திக்கும் ஒருவனின் சிரிப்பு அமானுஸ்யமாக இருந்தாலும் இவரின் எழுத்துக்களால் மனக்கசப்புகள் அழுகையாக வழிகின்றன.வசைமொழிகளுக்கும் வண்ணங்கள் உண்டு என்று போகிற போக்கில் கருப்பு,சிவப்பு மற்றும் பச்சை என்று வானவில் கூட்டுகிறார்.
♦ராமநேசன் சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை படிக்கும் வாசகர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்து இருப்பார்கள்.கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளாக வாழ்க்கையோடு விளையாடியவன் சாமியாராக போக நினைத்து போலிச்சாமியாரிடம் சேர்ந்து திரும்பி வருகிறான்.மனநிகழ்வுகளையும் எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தி விடுகிறார்.
♦மழை புயல் சின்னம் - சென்னை வானிலை அறிக்கை பற்றி மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலித்து கதையின் சம்பவங்கள் மூலம் வாசகர் மனதில் புயலை கிளப்பி விடுகிறார்.காதலியை நினைவுபடுத்தும் சம்பவங்கள் மின்விசிறிக்கு சமமாக சுற்றுகின்றன என எழுத்தின் மூலம் காதல் புயலை மனதில் மையம் கொள்கிறது.
♦நகரத்திற்கு வெளியே இன்னும் நந்தினி நர்சிங் ஹோம்கள் உள்ளன.இளம்பெண்களின் மனதில் காதல் ஏற்படுத்தும் அதிர்வலைகள்,அதன் பின்விளைவுகள் பற்றி விவரித்தாலும் நகர நாகரிகம் பதை பதைப்பை உண்டாக்குகிறது.நீல நிற ஆடை காதலுக்கு மட்டுமா?
♦அடைபடும் காற்று-சிறுகதை வடிவம் எழுதுபவரின் மனோதர்மம் என்று கூறுவார் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.பேரடைஸ்ஸா டிரைவ் இன்னில் சந்தித்து நட்பாகும் இரண்டு முதிய தம்பதிகளின் கதை என்றாலும் கடிதங்கள் வழியாக கதையை நகர்த்தும் போக்கு இரசிக்கும் விதமாக இருக்கிறது..கடிதம் ஒன்று...சுபம்..கடிதம் இரண்டு...எல்லாம் சுபமயம்.
♦ஊர்நலன் - அரசமரத்தடிக்கு வரும் ஊர் விஷயங்கள்,கிராமத்து திருவிழாவின் வழுக்கு மர நிகழ்வு,சாராயம் காய்ச்சுபவனின் கட்டப் பஞ்சாயத்து என நீளும் கதையில் செல்வேந்திரன் வளர்ச்சி வீழ்ச்சி இறந்த பின்னும் செய்தி தாளில் வாழ்கிறது.
♦காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்- குழந்தைகளுக்கு கருப்பு தாத்தா,இளைஞர்களுக்கு கருப்பசாமி பெரியவர்களுக்கு கருப்பையா என்பவருக்கு 80 வயதிற்கு பின் கண்பார்வை ஔி இழந்து போனாலும் காதுகளால் தன்னை சுற்றி நடப்பதை கிரகித்து கொள்கிறார்.இளம் வயதில் கன்னுக்குட்டி முதல் திருமணப் பெண் வரை மீட்டு வந்தவரின் பேத்தியை மீட்க முடியாமல் போவது பெரும் சோகம்.கட்டிலை கடக்கும் குருவிகளை அடையாளம் காண்பவர்..தன்னை மற்றவர் திட்டுவதை காதால் கேட்பவர் முதல் முறையாக கண்ணில்லை என்று உணரும் இடம் சிறப்பு.
♦ஆசியா மேன்சன் - சினிமா மோகம் கொண்டு கோடம்பாக்கம் வரும் ராசுவை பற்றியது.வானின் நட்சத்திரம் போல சினிமா நட்சத்திரமாகி விடலாம் என்ற கனவின் மீது எழுதப்பட்ட கதை.ராசுவை சுற்றி நடக்கும் சம்பவங்கள் பய உணர்வை தூண்டி..நகரத்தின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.நுரைக்கும் பீரின் உத்வேகத்தோடு பயணிக்கும் கதையில் ஆசியா மேன்சனை கிழட்டு யானை என வர்ணிப்பது சிறுகதைக்குள் யானை சவாரி.
சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல் புதிய இலக்கிய வடிவத்தை குறிக்கும் தனிச்சொல் என்று கூறுகிறார் பிராண்டர் மாத்யூ.
நகரத்திற்கு வெளியே சிறுகதைகளில் புதிய கதைக்களம்,நம் மனதிற்கு நெருக்கமான இடங்கள்,உரையாடல்களில் தனி கவனம் என நூல் முழுவதும் இலக்கிய இரசனை இதயம் கவர்கிறது.சிறுகதை விரும்பிகள் இவரின் எழுத்தை பிடித்து சென்று வரலாம் நகரத்திற்கு வெளியே..!
பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.
- வே.மு.ஜெயந்தன்
Saturday, May 2, 2020
ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம்
வணக்கம் ...
இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம் என்ற நூல் குறித்து ...
இந்த நூலின் முதல் மூன்று பதிப்புகள் மின்னம்பலம் பதிப்பகம் மூலமும் நான்காவது பதிப்பு புலம் பதிப்பகம் மூலமும் வெளிவந்துள்ளது
விலை 150/-
கரிமாவின் கருணையில் விளைந்த நவீன இசை
********************************************
ஒரு கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் மனைவியை இழந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
உலகமே கொண்டாடக்கூடிய இசைத்துறையில் ஆஸ்கர் நாயகனாக வளம் வரும் திலீப் என்ற ஏ. ஆர். ரகுமான் அவர்களை குறித்த இந்த நூலை வாசிக்கும்போது தன் கணவனை இழந்து தனது ஒன்பது வயது மகனுடன் வாழ்க்கையை மீட்க போராடிய ஒரு அன்னையின் வலிகளும் அந்த வலிகளுக்கு கிடைத்த மருந்தாகவே ஏ .ஆர் ரகுமான் அவர்களின் சாதனைகளையும் பார்க்கிறேன்.
இயக்குனர் விஜய் மகேந்திரன் மின்னம்பலம் டாட் காமில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கும் இந்த நூல்
ஏ .ஆர் ரகுமானின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடிய ,நம்பிக்கையை அளிக்கக் கூடிய ஒரு நூலாக இடம்பிடிக்கும்.
தனது பதினோரு வயதில்குடும்பத்தின் தலைமை ஏற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஒரு சிறுவன் தன் தாயின் வழிநடத்துதலோடு தன் தந்தை விட்டுச் சென்ற இசைக்கருவிகளின் துணையோடு இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பது சாதனை படைக்க எதுவுமே தடையில்லை என்பதை ஆழமாக புரிய வைக்கிறது
இந்த நூலில் பதினாறு பகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரைத் தொகுப்பில் சில துளிகளை மட்டும் நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
ஏ.ஆர் . ரகுமான் தன் தந்தை இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு குடும்ப சூழல்களை எதிர்கொண்டு வந்த நேரத்தில்தான் ரகுமானுக்கு அவரது அன்னை இசைக்கருவிகளைக் கற்றுக் கொள்ளும்படி ஊக்கம் அளிக்கிறார் . அவ்வாறு கற்றுக்கொண்ட இசையை வைத்து ரகுமான் தனது இளம் வயதிலேயே பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றுகிறார் .அந்தவகையில் அவர் இளையராஜாவிடம் பணியாற்றிய முதல் பாடலின் போது ரகுமான் சில நோட்டுகளை தவறாக வாசிக்க அதை பார்த்த இளையராஜா தன் கரங்களால் ரகுமானின் விரல்களைப் பற்றி சரியாக இசைக்க உதவியதாகக் குறிப்பிட்டிருப்பது இளையராஜாவின் பெருந்தன்மையையும் ஏ ஆர் ரகுமனின் திறமையையும் எடுத்துரைக்கிறது .
மேலும் இயக்குனர் விஜய் மகேந்திரன் இந்த கட்டுரையில் ஏ ஆர் ரகுமான் பற்றி அறியாத பல தகவல்களை தொகுத்து கொடுத்திருப்பது ஒரு இசையமைப்பாளர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த ஒட்டுமொத்த வலிகளையும் ,இனிமையான தருணங்களையும், தேடல்களையும் கண் முன்னே நிறுத்துகிறது. முதல் படமான ரோஜாவில் ஏ ஆர் ரகுமானின் இசையை நான் அறிந்து கொண்ட தருணத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். ரோஜா படம் 1992 ல் வெளிவந்தபோது எனக்கு ஒன்பது வயது
எனது அப்பா ரேடியோ, டேப் ரெக்கார்டர் ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் பணியை ஓய்வு நேரத்தில் செய்து வந்ததால் எங்கள் வீட்டில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும் . பெரும்பாலும் எம்எஸ்வி பாடல்களும் இளையராஜாவின் பாடல்களும் அப்பாவின் விருப்பமாக இருக்கும் .இந்த சூழல்தான் எனக்கு பாடல்களை கேட்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நான் எப்போதும் விடுமுறைக்குப் பெரியப்பா வீட்டிற்கு செல்வது வழக்கம். அங்கு எனது அண்ணன் புதிதாக வரும் அனைத்து இசைகளையும் விரும்பிக் கேட்கும் பழக்கம் உடையவனாக இருந்தான். அவன்தான் எனக்கு விடுமுறை நாட்களில் கர்நாடக சங்கீதத்தை
அறிமுகப்படுத்தியிருந்தான். மேலும் பழைய பாடல்களை அவன் விருப்பமாகக் கேட்கும்போது நானும் ரசித்துக் கொண்டிருப்பேன் இப்படித்தான் நித்யஸ்ரீ மகாதேவன் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் குரல்களை நான் கேட்டுப் பழகியிருந்தேன். அந்த முறை விடுமுறைக்கு சென்றிருந்தபோது ரோஜா படத்தில் வெளிவந்த "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது "என்ற பாடல் தொடர்ந்து வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது .எம்எஸ்வி இளையராஜா இசையைக் கேட்டுப் பழகியிருந்த காதுகள் ஒரு புது இசையை உணர்ந்தன . ஆனால் அந்த வயதில் அதை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த பாடலின் மேல் இருந்து கொண்டே இருந்தது .
பிறகு பள்ளியின் ஆண்டுவிழாவில் நடனமாடத் தேர்வு செய்யப்பட்ட பாடலான "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே " பாடல் நடன விரும்பியாக இருந்த என் கால்களுக்குத் தீனியாக இருந்தது. அதைத்தொடர்ந்து வந்த இந்தி படமான ரங்கீலா படத்தில் வரும் பாடல்களைக் கேட்கும்போது எனக்குள் ஏதோ பிடித்து என்னை ஆட்டுவிப்பது போல ஆடிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். பிறகு வந்த நாட்களில் நடனமாடத் தேர்வு செய்த பாடல்கள் அனைத்துமே ஏ.ஆர் ரகுமானுடையதாகவே இருக்கும். அந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த துள்ளல் இசை ஒரு போதையைப்போல் எங்களுக்குள் இறங்கியிருக்க வேண்டும் சில சமயங்களில் கேசட் டேப்ரெக்கார்டரில் சிக்கித் தேய்ந்தே போகுமளவு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியிருந்தது. அதன் பிறகான தேடல்களில் தான் ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசையை முழுமையாக அடையாளம் கண்டேன் .பம்பாய் படத்தில் வெளியாகியிருந்த "அந்த அரபிக்கடலோரம்'' பாடலுக்கான நடனத்தில் முதல் பரிசு பெற்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். விஜய் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளதைப் போல "வந்தே மாதரம்" ஆல்பம் வெளியானபோது ஒரு இனம்புரியாத உணர்வு தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாட்டுப்பற்று மேலோங்கியதை மறுக்கவே முடியாது . இசை என்பது ஒருவருக்குள்ள உணர்வுகளை மகிழ்ச்சியாகவும்,சோகமாகவும் ,வீரமாகவும், வெளிப்படுத்திவிடும் அல்லது தூண்டிவிடும் என்பதற்கு ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு மிகப்பெரிய உதாரணம் .
இந்த நூல் ஆர் ரகுமான் பணியாற்றிய அனைத்து மொழிகளிலான திரைப்படங்களைப் பற்றியும் ,இயக்குனர்களை பற்றியும் ,பாடல் ஆசிரியர்களைப் பற்றியும் ,பாடகர்களை பற்றியும் என அவரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தொட்டுச் சென்றிருப்பதை எழுத்தாளரின் ஆர்வத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. இதனால் ரகுமானைப் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கூட இந்தத் தொகுப்பை படிப்பதன் மூலம் அவருக்கு நெருக்கமானவர்களாக தங்களை உணர முடியும். இந்த நூலில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள சில பாடல்கள் நம் அனைவர் மனதிலும் தேசியகீதங்களைப் போலவே இன்னும் இருக்கின்றன. " சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை " என்ற பாடல் இசையைக் கேட்டவர்கள் சிறகை விரிக்காமல் இருந்திருக்கவே முடியாது . "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைக் கேட்ட யாரும் அழுகாமல் இருந்திருக்க முடியாது .
கவிப்பேரசு வைரமுத்து , வாலிபக் கவிஞர் வாலி ஆகியோர் வரிசையில்
ஏ .ஆர் ரகுமானுக்காக வரிகளைச் சமைத்தளித்த பழனிபாரதி அவர்கள் எழுதிய சில பாடல்களில் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" பாடல் இன்றும் நம் விருப்ப பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர்கள் தேன்மொழி தாஸ் ,கபிலன் ஆகியோரின் அனுபவப் பகிர்தலும் ரகுமானிடம் இருந்த தேடல் மனப்பான்மையையும் புதியவர்களை அங்கீகரிக்கும் பண்பையும் நமக்குச் சொல்லிச் செல்கின்றன.
ஏர்ஆர்.ரகுமானின் இசைப்பயணத்தில் அவர் அறிமுகப்படுத்திய மற்றும் அவருடன் பணியாற்றிய அவரது ஆர்கெஸ்ட்ராவில் அனைத்து இசைக்கலைஞர்களும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை
ஏ.ஆர்.ரகுமான் வேலைகளுக்கு நடுவிலும் பாலசந்தர் அவர்களின் "பார்த்தாலே பரவசம்" படத்திற்கு இசை அமைத்த நினைவுகளை பாலச்சந்தரே பாராட்டி நினைவு கூர்ந்திருப்பது ஏ ஆர் ரகுமானின் நன்றி உணர்வை
ஆளுமைகளிடம் அவர் கொண்டிருந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
அடுத்தடுத்து பல படங்களில் அமைந்த பிரபுதேவா ஏ .ஆர். ரகுமான் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்திருந்தன. மின்சார கனவு படத்தில் ரகுமான் இசையில் வெளிவந்த "தங்கத் தாமரை மகளே" என்ற பாடல் இசைக்காகவும், எஸ்பிபி அவர்களின் குரலுக்காகவும், காட்சிகளுக்காகவும், பெரிதும் ரசிக்கப்பட்டது.
இசைத்துறையில் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய மின்மினி, உண்ணி மேனன் ,சுரேஷ் பீட்டர்ஸ் ,ஷாகுல் ஹமீத் மால்குடி சுபா ,ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன் நரேஷ் ஐயர், நித்யஸ்ரீ மகாதேவன் அனுபமா ,வசுந்தரா, சங்கீதா சஜித் சுக்விந்தர் சிங், சங்கர் மகாதேவன் ஆகிய பாடகர்களின் குரல்கள் ரகுமானின் இசையோடு சேர்ந்து நம்மை மயக்கி வைத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
ரகுமான் எப்படி தமிழ் ரசிகர்களைத் தனது இசையால் மயக்கினாரோ அதேபோல இந்தியிலும் இவரது இசைக்கு மயங்காதவர்கள் இல்லை சொல்லப்போனால் இந்தியில் இளையராஜா அவர்கள் தவறவிட்ட இடத்தை ரகுமான் சரியான தனது திட்டமிடலாலும் உழைப்பாலும் சாத்தியப்படுத்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும் .
ரகுமான் இந்தியில் அறிமுகமான ரங்கீலா படத்தின் பாடல்களை கேட்டு நடனமாடாதவர்கள் இருந்தால் அதிசயமே. சக கலைஞர்களை பாராட்டுவது, கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்ப்பதும் ,நன்றியை மறக்காமல் இருப்பது, பாராட்டுகளையும் வெற்றிகளையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்து வருவது,புதிய திறமைகளைத் தேடி வாய்ப்பளிப்பது போன்ற செயல்களே ரகுமானின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணிகள். ஆம் அதுதான் இந்தியாவை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த ஒரு தருணம் ஸ்லம்டாக் மில்லினருக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய ரகுமான் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மேடையில் தமிழை உயர்த்திப் பிடித்தார். இத்தனை புகழ்பெற்ற ரகுமான் பொதுவாக இசை அமைப்பதற்கு இரவையே தேர்ந்தெடுத்தார் என்று விஜய் மகேந்திரன் குறிப்பிடுவது ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்குவதற்கான சரியான தருணமாக தேர்ந்தெடுப்பது இரவைத்தான் என்பது புலப்படுகிறது.
மேலும் தனது பல வெற்றிகளுக்குப் பிறகு தான் தனது அப்பாவுடன் வாழ்ந்த பழைய வீட்டிற்கு சென்ற ஏ ஆர் ரகுமான் அங்கிருந்த தனது நண்பரின் தாயாரிடம் நடந்த உரையாடலுக்குப் பிறகு இசையை தேர்ந்தெடுப்பவர்களுக்கான ஒரு தனிஅங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட சொல்லப்படும் கே எம் மியூசிக் கன்சர்வெட்டரி மூலம் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது ரகுமானின் தொலைநோக்கு மனதிற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது .
இப்படியாக தனது இளம் வயது கடினங்களை, வலிகளை தனது தாயான கரிமாவின் துணையுடன் வெற்றிப்பாதையாக மாற்றிக்காட்டிய
ஏ .ஆர். ரகுமான் இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருப்பார் என்பதிலும் மேலும் உலகெங்கிலும் இந்தியாவின் புகழை எதிரொலிக்கச் செய்வார் என்பதிலும் எந்த விதமான ஐயமுமில்லை.
இப்படியாக ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக இந்த சமூகத்திற்கு அளித்திருக்கும் இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
- அம்பிகா குமரன்.
நகரத்திற்கு வெளியே - விமர்சனம்
தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒரு படைப்பு வாசிக்கப்படும் போது அது வாசிப்பர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த தாக்கம் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வில் நடந்து ஏதோ ஒரு நிகழ்வின் நினைவுகளுக்கு நிச்சயம் அழைத்து செல்லப்படுவார்கள்....
நகரத்தின் வெளியே சமகால மனிதர்களின் இத்தியாதிகளை மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார் அண்ணன்...
ஒரு புத்தகம் படிக்க நேரும்போது
அவை நம்மை எந்த வகையில் பாதிக்கிறது என்பதிலேயே படைப்பின் வெற்றி இருக்கிறது...
அவ்வகையில் அண்ணன் விஜய் மகேந்திரன்
படைப்பு ஏக நிகழ்வுகள் என்னை மட்டுமல்ல மிகுதியான மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்தவையாக தான் இருக்கும்...
பெரும்பான்மை மனிதர்கள் தனது வாழ்வின்
இளமைக்காலங்களை
(குறிப்பாக 1990, 2000, 2010களில் ) நகரவாழ்க்கை அனுபவித்தவர்களாக தான் இருப்பார்கள்...
நகர வாழ்வு பெரும்பாலும் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோருக்கு
நரக வாழ்வாகவே இருந்திருக்கிறது
தனியாக இந்த படைப்பு வாசிக்கும் போது தனிமையில் உங்கள் உதடுகள் மவுனமாக புன்னகைக்க நேரும் அனேகமான இடங்களில் படைப்பாளியின் அனுபவம் அவரது வெற்றியை அநேக வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்து விடும்....
ஒரு படைப்பாளியின் வெற்றி,
தனது அனுபவத்தை வாசிப்பவரின் அனுபவத்தோடு ஒருங்கினைக்கவும் அந்த ஒரு வினாடியில் வாசகரின் முகத்தில் ஒளிரும் புன்னகை தான்.... அந்த வகையில் அநேக இடங்களில்
புன்முறுவல், வாய்விட்ட சிரிப்பு, சோகம் என பல்வேறு உணர்வுகளை என்னால் தன்னிச்சையாக(அனிச்சையாக ) வெளிப்படுத்த முடிந்தது....
#நகரத்திற்கு_வெளியே....
#விஜய்_மகேந்திரன்
வாசிக்க வாய்ப்பளித்த
அண்ணன்
விஜய் மகேந்திரன்
அவர்களுக்கு என நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 #லெனின்பழனியாண்டி
Sunday, November 19, 2017
பிட்டாக இருக்க செய்ய வேண்டியவை!
உடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கை சூழல், வேலை பார்க்கும் இடத்தின் சூழல் என்று எல்லாமே உடல் ஃபிட்னஸுக்குள் பங்கு பெறுகிறது என்பதுதான் உண்மை. அதற்காக ஃபிட்னஸ் சென்டர் சென்று உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. இயற்கையாகவே உடலை பருமனாகாமல் அழகான வடிவமைப்புடன் வைத்திருக்கும் பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், உடலை எடையைக் குறைக்க மாத்திரை, மருந்து, மூலிகைச்சாறு என்று பல தேவையில்லாத விஷயங்களை தேடிப்போய் பணத்தை தேவையின்றி செலவழிப்பவர்களும் இன்று அதிகமாகி விட்டனர். இயற்கையில் உடலை அழகுடன் ஃபிட்டாக பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
முக்கியமாக பின்பற்ற வேண்டியவை
தினமும் எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்ய வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் அடங்கிய புத்தகங்கள் கிடைக்கிறது. அதில் படம் போட்டு எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கியிருப்பார்கள். சைக்கிள் ஓட்டுவதையும் வழக்கமாக கொண்டால் இதய நோய்கள் வராது என்கிறார்கள் மருத்துவர்கள். கை, கால் தசைகளும் வலுவுடன் இருக்கும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருவதையும் சைக்கிள் ஓட்டுவது குறைக்கும். எடை குறைப்புக்கு முயல்பவர்கள் தாராளமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை காலை, மாலை என இரு வேளையும் செய்யலாம்.
அடுத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்புகளை ரத்தநாளங்களில் சேர விடாது. மீன், மீன் எண்ணெய், முட்டை, செரல்ஸ், சோயா பீன்ஸ், சோயா பால், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது போதுமான அளவில் உள்ளது. சாலமன், டூனா ஆகிய மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தேவையான அளவு உள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு இதய ரத்தநாளங்களில் கெட்ட கொழுப்புகள் அடைப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளும்.
போதிய புரதச்சத்து உடலில் இருந்தால்தான் தசைகள் ஆரோக்கியமாக செயல்படும். கோழி இறைச்சியில் போதுமான புரதம் இருந்தாலும் அதிக மசாலா சேர்த்து எண்ணெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்துவிடும். ஆகவே தந்தூரி, கிரில் முறையில் நேரடியாக சிக்கனை வெப்பத்தில் வாட்டி சமைக்கும் முறையில் தயாரிக்கப்படும் சிக்கனை மட்டும் சாப்பிடுவது நல்லது.
அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்புகள், பாலக்கீரை, பிராக்கோலி ஆகியவற்றை அவித்து சாப்பிடலாம்
தினமும் இரண்டு கப் கிரீன் டீ அருந்துங்கள். உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் இருக்க செய்யும். மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியுடன் இயங்க ஆன்டி ஆக்சிடென்டுகள் அவசியம். ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமுள்ள வாழைப்பழத்தையும் தினமும் சாப்பிடுவது நல்லது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
காலை உணவை எக்காரணம் கொண்டு தவற விடாதீர்கள். காலை உணவுகளை தவற விடுவதால்தான் நீரிழிவு, உடற்பருமன், புத்துணர்ச்சி இல்லாமை, வீண் எரிச்சல் ஆகிய பிரச்னைகள் எல்லாம் ஏற்படுகின்றன. காலையில் சாண்ட்விச், அவித்த காய்கறிகள், பிரெட் ஆம்லெட், பழங்கள், சோயா பால் என சத்தான உணவுகளை காலைப்பொழுதில் சேர்த்துக்கொண்டால் நல்ல எனர்ஜியுடன் இருக்கலாம். இதனால், தேவையற்ற நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.
சிறு தானிய உணவுகளை முடிந்த மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கம்பு தோசை, கேழ்வரகு ரொட்டி, குதிரைவாலி சாதம், கொள்ளு துவையல் என உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் உங்களுக்குத் தேவையான அளவு கிடைக்கும்.
இரும்புசத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்பு சத்து அவசியம். அசைவ உணவுகளில் ஆடு, மற்றும் கோழி ஈரலில் இரும்பு சத்து உள்ளது. பாலக் கீரையில், முருங்கைகீரையில், பேரீச்சம் பழத்தில் போதுமான இரும்பு சத்து உள்ளது. உருளைக்கிழங்கை வறுக்காமல் அவித்து சாப்பிட்டால் போதுமான அளவு இரும்பு சத்து கிடைக்கும்.
அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
சமச்சீரான உணவு உடலுக்கு அவசியம். அதை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு தட்டில் சிறிதளவு பழங்கள், அவித்த காய்கறிகள், அவித்த சிக்கன் அல்லது மீன் இரண்டு துண்டு, கொஞ்சம் பருப்புகள் என்று எல்லா உணவுகளும் சமஅளவில் இருப்பதுதான் சமச்சீரான உணவாகும். உடலுக்கு எந்த சத்தும் குறைபாடில்லாமல் கிடைக்குமாறு உணவுகளை தயாரிப்பது அவசியம்.
தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியம். உடலில் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு உடற்பயிற்சிகள் உதவும். உடலை ஃபிட்டாக வைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும். தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர், உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களை கழிவுகளின் மூலம் வெளியேற்றி விடும். இதனால் உடல் ’டீடாக்ஸ்’ ஆகிறது. தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்கக்கூடாது. தேவைப்படும்போது அவ்வப்போது எல்லாம் தண்ணீரை குடிக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு பிழிந்த மிதமான சூட்டில் தண்ணீரை அருந்தினால் உங்களது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள ‘வைட்டமின் சி’யானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவதும் நல்லது. வைட்டமின் சி கிடைக்கும். உடலில் உள்ள பித்தத்தையும் குறைக்கும்.
சாப்பாடு சாப்பிடும்முன் இரண்டு தம்ளர்கள் தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்க்காதீர்கள். அவ்வப்போது எழுந்து சிறுநடை பயிலுங்கள். போன் பேசும்போது உட்கார்ந்து கொண்டு பேசாமல் நடந்து கொண்டே பேசுங்கள். இதனால் தேவையற்ற கலோரிகள் குறையும்.
உங்கள் டயட் மெனுவில் சத்து குறைந்த உணவுகள் இருந்தால் அதை இரக்கமின்றி தூக்கி விடுங்கள். சத்துகளை அடிப்படையாக கொண்ட டயட் பட்டியலை எழுதி அதை பின்பற்றுங்கள். முக்கியமாக உணவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிபுணரை கேட்டால் அவர்கள் உங்களுக்கான டயட் சார்ட்டை தயாரித்து கொடுப்பார்கள். உங்களுக்கு எந்த சத்து குறைபாடாக இருக்கிறதோ அதை ஈடுசெய்து கொடுத்தால்தான் உடல் ஃபிட்டாக இருக்கும்.
சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரத்தை தள்ளிப் போடக்கூடாது. அது உங்களது உடம்பில் அதிக கொழுப்புகளை தங்க செய்து உடற்பருமனை உருவாக்கும். சின்ன இடைவெளிகளில் ஆரோக்கியமான சிறு உணவுகளை சாப்பிட்டுக் கொள்வது உடலை எப்போதும் எனர்ஜியாக வைக்கும். அவித்த சுண்டல், கொள்ளுப்பயிறு, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இதுபோன்ற இடைவேளைகளில் சாப்பிடலாம்.
பிடிக்காத விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்யுங்கள். அதில் வரும் சவால்களை சமாளியுங்கள். ஆனால், அந்த டென்ஷனை அலுவலகத்திலேயே விட்டு விடுங்கள். வீட்டுக்குக் கொண்டு போகாதீர்கள். அது உங்கள் உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிக்கும்.
மன அழுத்தம், அதிக நொறுக்கு தீனிகளை சாப்பிடச் செய்து பருமனை உருவாக்கும். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளை போதிய அளவில் தவிர்ப்பது உடல்நலத்துக்கு நல்லது. மனதை அமைதிப்படுத்த யோகா, தியானம் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் நாள் முழுவதும் புன்னைகையுடன் வேலை செய்ய முடியும்.
எட்டுமணி நேர நிம்மதியான தூக்கமும் உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். சரியான நேரத்துக்குத் தூங்க செல்ல வேண்டும். பெரியவர்களுக்கு எட்டுமணி நேர தூக்கமும், பதின்பருவத்தினருக்கு 10 மணி நேர தூக்கமும் அவசியம். அப்போதுதான் மூளையில் இருக்கும் செல்களும் புத்துணர்வு அடையும். சரியான தூக்கம் இல்லையென்றால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எனவே தூக்கம், உடற்பயிற்சி, சத்தான உணவுகள் அனைத்தும் சேர்ந்துதான் உங்களை ஃபிட்டாக வைக்கும்.
- விஜய் மகேந்திரன்
முருங்கை கீரை
பழங்காலத்தில், எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீட்டில் ஒரு முருங்கை மரம் அவசியம் இருக்கும். ஆனால், இந்த காலத்தில் ‘வாஸ்துபடி முருங்கை வைக்கக்கூடாது. வீட்டின் முன் முருங்கை இருந்தால் அவ்வீட்டு ஆணுக்குத் தீங்கு நடக்கும்’ என்று வதந்தி பரப்பி முருங்கையை வீட்டில் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், நம் முன்னோர் நம்மை விட அறிவியல் அறிவு நிறைந்தவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பின்பக்கம் ஒரு முருங்கை மரமேனும் இருக்கும். பொதுவாகவே, மரங்கள் பகலில் நமக்குத் தேவையான ஆக்சிஜனையும், இரவில் நமக்குத் தேவை இல்லாத கார்பன் டை ஆக்சைடையும் வெளியேற்றும். இரவில் யாரும் பின்பக்கம் போகாததால், தோட்டமும் மரங்களும் பின்பக்கமே அமைத்திருந்தனர். முன்பக்கம் நட்பு வளர்க்க திண்ணை அமைத்திருந்தனர்.
ஆனால் இன்றோ, திண்ணையும் இல்லை முருங்கையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை…
நாம் அனைவரும் பள்ளி புத்தகங்களில் படித்திருப்போம், 300க்கும் மேற்பட்ட நோய்களை முருங்கை குணப்படுத்தும் என்று. வேரில் இருந்து பூ வரை உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதன் மருத்துவப் பயன்களைப் பற்றியும், உணவில் சேர்த்துக்கொள்ளும் முறையையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன். ‘இருக்கவே இடம் இல்லை, குடிக்கவே தண்ணீர் இல்லை என்று பல காரணம் சொல்லுகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் பின் பக்கம் ஒரு 2 X 2 இடம் இல்லாமலா போய்விடும்? முருங்கை மரம் ‘சாகா மரம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆகவே வெயிலோ, மழையோ, தண்ணீர் பஞ்சமோ, முருங்கை அனைத்தையும் தாங்கும். ஏன் ஒடித்தாலுமே நன்கு தழைக்கும்.
முருங்கையின் சில பயன்களை இங்கு குறிப்பிட்டால் முன்பு போல் பல முருங்கை மரம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.
முருங்கைக்கு பல பயன்கள் உள்ளன. சுருக்கமாக அற்புதமான அழகும் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கியமும் முருங்கையால் நமக்குக் கிட்டும்.
வேரிலிருந்து ஆரம்பிக்கலாமா?
வேர்: ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கிறது முருங்கை வேர். வாய் புண்ணுக்கு, முருங்கை வேரை தண்ணீரில் 5 – 7 நிமிடம் கொதிக்க வைத்து அந்த தண்ணீர் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
2007இல் கொல்கத்தாவில் நடத்திய ஆய்வு ஒன்றில் முருங்கை வேரில் கருப்பைப் புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதுபோல் பல ஆய்வுகள் வெளிநாடுகளிலும் முன்னரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சூடானில் 2010இன் ஆய்வுப்படி ரத்தப் புற்றுநோய்க்கும் முருங்கை வேர் நல்ல பயன் அளிப்பதாக கண்டு பிடித்துள்ளனர். இது தவிர, மலேரியா, ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மகப்பேறு சமயத்தில் வெளியேறாத நஞ்சுக்கொடி அகற்றவும் முருங்கை வேர் பயன்படுத்தப்படுவதாக அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வேரைப் பொடித்து குப்பியில் அடைத்து விற்கவும் செய்கிறார்கள்.
விதை: முருங்கை விதையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். முருங்கை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் முஃபா (MUFA) எனப்படும் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் அது உடலுக்கு, குறிப்பாக ஈரலுக்கு மிக நல்லது. மேலும், இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் இருக்கிறது. ஆகவே, செல் உடையும் நோய்கள் (cell degeneration) வராமல் தடுக்கும். அப்படி தடுப்பதால் நம் உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
குடிநீரில் தொற்றுக்கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுவதாக இந்தியாவில் 2012இன் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறுவது தவறு. ஆகவே வலுவான எலும்புக்கு அனைவருக்கும் தேவை. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் தேவை. இவை இரண்டும் முருங்கை இலையில் அதிகம் உண்டு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைச் சரி செய்யும். பூ மற்றும் இலையில் நோய் எதிர்ப்புசக்தி (antibiotic effect) உள்ளது.
இக்கீரையைப் பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும்போது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்த பொரியலை தினமும் ஒருவேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகும், பலமும் கொடுக்கும். முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் யாவும் நீங்கும்.
ஆண்களுக்கு முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்மை பிரச்னை பெருமளவு குறையும்.
தாது விருத்தியும் உண்டாகும். இதை உணவுடன் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும். தினமும் உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகையைத் தடுக்கலாம். இக்கீரை ரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு வயிற்றுநோயும் அடி வயிற்று வலியும் நீங்கும். எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாயுவால் ஏற்படும் மார்பு வலி நீங்கும்.
-விஜய் மகேந்திரன்
பேச்சிலர் பிரெட் ஆம்லெட்!
குடும்பத்துடன் இருப்பவர்களுக்கே காலை உணவு சாப்பிட முடியாமல் அலுவலகம் ஓடுவது வாடிக்கையான செயல். இதில் அறைவாசிகளாக தங்கி ஹோட்டலில் சாப்பிடும் இளைஞர்களின் நிலையை பற்றி விளக்க வேண்டியதில்லை. அலுவலகம் கிளம்பும் முன் இன்றும் அதே பொங்கல் அல்லது உப்புமாவா? என்று சலிப்பவர்கள் சில எளிய பொருட்களை வைத்தே காலை உணவை அவர்களே செய்து சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஆரோக்கியமாக செல்லலாம். இப்படி பேச்சிலர் சமையல் செய்பவர்களுக்கு பெரிதும் உதவுவது பிரெட். பிரெட்டை வைத்து மட்டும் 78 விதமான உணவுகளை செய்யலாம் என்கிறது சமையல் கலை புத்தகம். அதில் மிக எளிமையானது பிரெட் ஆம்லெட். கடையில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பிரெட் ஆம்லெட்டை எளிய முறையில் இருக்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.
செய்யும் முறை:
தோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் வெண்ணையை விட்டு லேசாக உருக்கவும். அதில் கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி போட்டு மிதமான சூட்டில் தாளிக்கவும். அதில் தேவையான அளவு உப்பை தூவவும். ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் தாளித்த வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின்பு, அதில் சிறிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை போட்டு நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றையும் போட்டு கலக்கவும். அதில் பிரெட் துண்டுகளை தோய்த்து எடுக்கவும். தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் வெண்ணையை வெட்டி எடுத்து மறுபடியும் போடுங்கள். உருகும் போது முட்டையில் தோய்த்த பிரெட்டுகளை ஒவ்வொன்றாக அதன் மீது போட்டு இரு பகுதிகளும் நன்றாக வெந்தவுடன் எடுங்கள். சுவையான கொத்தமல்லி பட்டர் பிரெட் ஆம்லெட் ரெடி. இந்த பிரட் ஆம்லெட் வைட்டமின், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகிய முக்கிய சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை புதினா சட்னிக்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். உங்கள் காலை வேளையை சுறுசுறுப்பு நிறைந்ததாக மாற்றும்.
சரி இந்த பொருட்களில் பாதி உங்கள் அறையில் இல்லை என்றால் எளிதான முறையில் பிரெட் ஆம்லெட் செய்யும் இன்னொரு முறை. மூன்று முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி கலக்கவும். தேவையான அளவு மஞ்சள்பொடி, மிளகுப்பொடி, உப்பு ஆகியவற்றை முட்டை கலவையில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.பிரெட் துண்டுகளின் முனைகளை சீவி முட்டை கலவையில் முழுதாக தோய்த்து எடுக்க வேண்டும்.பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வெகு எளிதாக செய்து சாப்பிட ஏற்ற டிஷ். இப்படி எளிமையான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சத்தாக சாப்பிடுங்கள்!
- விஜய் மகேந்திரன்
Monday, November 13, 2017
’ஐரீஷ் ஸ்டுவ்’
காலை உணவை சரியாக சாப்பிடாமல் போவதால் தான் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சத்தான உணவுகளை காலையில் சாப்பிடாமல் போவது, சாப்பாடு சாப்பிடும் நேரத்தை தள்ளி போடுவது ஆகியவை இளமையிலேயே நீரிழிவு பிரச்சனையை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க காலை உணவை சத்தாகவும் சுவையாகவும் சாப்பிட சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அயர்லாந்து நாடு இங்கிலாந்தின் லண்டனுக்கு அருகே அமைந்துள்ளது. இயற்கையாக தாவரங்களை வளர்த்து காய்கறிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள ஒரு நாடு. அவர்களுக்கு தக்காளி மட்டும் ஸ்பெய்ன் நாட்டில் இருந்து வருகிறது. இயற்கையாக பண்ணைமுறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளும், கோழிகளும் இங்கே பிரபலம். ஐரிஷ் கோட், ஐரிஷ் சிக்கன் என உலக அளவில் பிராண்டுகளாக மதிக்கப்படுகின்றன. இத்தனை புகழ் உடைய அயர்லாந்து நாட்டில் பல வகை உணவுகள் பிரபலமாக இருந்தாலும், அவர்களுக்கான காலை உணவில் மிகவும் விரும்பி உண்ணப்படுவது ஐரீஷ் ஸ்டுவ்( Irish Stew). இதை செய்வதும் எளிது. புரதம், வைட்டமின், தாதுச்சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
இதை செய்வதற்கு கொஞ்சம் எலும்புடன் சேர்த்த மட்டன் துண்டுகளை வேக வைக்க வேண்டும். அதனுடன் உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். கேரட்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு சூப்பாக வரும் வரை வேக வைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து தயார் செய்தால் ஐரீஷ் ஸ்டுவ் ரெடி. இந்த உணவு சூப்பாகவும் இருக்கும். மட்டனும் இருக்கும். காய்கறிகளும் இருக்கும். இப்படி எல்லாம் கலந்த கலவையை காலையில் ஒரு கிண்ணம் சாப்பிட்டு கிளம்பினால் அந்த காலை வேளையை மிகவும் எனர்ஜியாக கழிக்கலாம். இந்த உணவை தான் அயர்லாந்து நாட்டில் வீட்டிலும், உணவகங்களிலும் காலை உணவாக விரும்பி சாப்பிடுகிறார்கள். மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டு இதை தயாரிக்க முடியும். சைவ உணவுப்பிரியர்கள் மட்டனுக்கு பதிலாக காளான் போட்டு தயாரித்து சாப்பிட்டு மகிழலாம்.
- விஜய் மகேந்திரன்
முடக்கத்தான் ஆம்லெட்
முடக்கத்தான் கீரை உடலுக்கு நல்ல பலன்களை தரக்கூடியது. முக்கியமாக கை, கால் வலி, வாதங்களை நீக்கக்கூடியது. உடல் சோர்வாக இருந்தாலும் இந்த கீரையை அவித்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும். சூப்பாக இந்த கீரையை குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாய்வு பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த கீரை அருமருந்தாக வைக்கிறது. இந்த கீரை கிடைக்க பெறாத இடத்தில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. முடக்கத்தான் பொடி இப்போது நாட்டு மருந்து கடைகளில், சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தினமும் இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பயன்களை பெறலாம். இந்த முடக்கத்தான் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆம்லெட் நல்ல எனர்ஜி தரும் உணவு. இளைஞர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து பேச்சிலர் சமையல் போல வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
- விஜய் மகேந்திரன்
ஆட்டுக்கால் சூப்பும் , அரைடவுசர் பையனும்...
இன்று அசைவ உணவுகளை மையமாக வைத்து சர்ச்சைகள் செய்வது சமூக வலைதளங்களில் அதிகமாகிவிட்டது. நான் சொல்லும் சம்பவம் நடந்தது எட்டு வருடங்களுக்கு முன்பாக. ஒரு தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட் ஆக நான் வேலை பார்த்து வந்தேன். அணு தினமும் ஏதாவது வலியைச் சுமந்து வருபவர்களைப் பார்க்க வேண்டும். கழுத்து வலி, முதுகு வலி உள்ளவர்கள் அதிக அளவில் வருவார்கள். பொதுவாக மூட்டு தேய்மானம் வயதானவர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கு கால்சியம், இதர தாது சத்துக்கள் மிக குறைவாக இருக்கும். மூட்டுகளில் சிறிய மின் காந்த அலைகளை (shortwave diathermy) வைத்து வலியை குறைத்து அனுப்புவோம்.
அன்று நான் பார்த்த பையனுக்கு வயது 12 தான். இரண்டு மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம் இருந்தது. அம்மாவை விசாரித்தபோது அவன் சத்தான உணவுகளை சாப்பிடுவது இல்லை என்று ஒப்புக்கொண்டார். வெறும் பருப்பு சாதமும், தயிர் சாதமும் சாப்பிடுவான். காய்கறிகள் கூட பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நான், அந்த பையனின் அம்மாவிடம், “அவனுடைய இப்போதைய மூட்டு வலியை தற்காலிகமாக குறைத்து அனுப்பலாம். சில மூட்டு பயிற்சிகள் சொல்லியும் தருகிறேன். ஆனால், நிரந்தரமாக இந்த பிரச்னையை நீக்க வேண்டும் என்றால் உணவு முறையை மாற்றி நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். கால்சியம் சத்தை அதிகப்படுத்த வேண்டும். முருங்கை கீரை, பால், மீன், முட்டை இவற்றில் கால்சியம் அதிகமுள்ளது” என்றேன். அவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நியாயப்படி கீரை மட்டும்தான் அவர்களால் கொடுக்க முடியும். ஆனால், பையன் நடக்கவோ அல்லது படியேறவோ மிகவும் சிரமப்பட்டான்.
“எங்க மதுரையில இப்படி பையன் வீக்கா இருந்தா, ஆட்டுக்கால் சூப்போ அல்லது குழம்போ வைத்து கொடுப்பார்கள். உடம்பு வலியெல்லாம் பறந்து போயிரும்” என்று பேச்சு வாக்கில் சொன்னேன். அந்தம்மா அதை பிடித்துக் கொண்டார்கள். “ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் இது சரியாயிடும்னா வேலைக்காரம்மாவை செய்யச் சொல்லி கொடுக்கிறேன். இது ஒரு மெடிசின் மாதிரிதானே” என்றார்.
“கால்சியம், சில தாதுக்கள், வைட்டமின் என முக்கிய சத்துக்கள் ஆட்டுக்கால் சூப்பில் உண்டு. அதை குடித்தால் மட்டும் போதாது. நான் கொடுக்கும் பயிற்சிகளையும் வீட்டில் செய்து வர வேண்டும்” என்றேன். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சாப்பிட வேண்டிய உணவுகளை ஒரு லிஸ்ட் எழுதியும் கொடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து பையன் அம்மாவுடன் வந்திருந்தான். நல்ல சுறுசுறுப்பாக இருந்தான். பரிசோதனை செய்தபோது மூட்டு வலி பெருமளவு அவனுக்கு குறைந்து இருந்தது. படிகள் ஏறி, இறங்க சொல்லி பார்த்தேன். எந்த பிரச்னையும் இல்லை. அவனது அம்மா, “நீங்க சொன்ன ஆட்டுக்கால் சூப் நல்லாவே வேலை செய்யுது. ரொம்ப நன்றி” என்றார். “நான் சொன்னாலும் உங்க பையனுக்கு சரியாகணும்னு எடுத்த உங்க முடிவுதான் முக்கிய காரணம்” என்றேன்.
“என்ன சஞ்சய் இப்ப ஓகேவா?” என்றேன். “சார், வஜ்ஜிரம் ஃபிஷ் வறுவல் டேஸ்டா இருக்கும்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. சாப்பிட ஆசையா இருக்கு” என்றான். “பையன் புல் நான்-வெஜ்ஜாக மாறிவிடுவான் போல” என்றேன். உடனே அவங்க அம்மா, “சார் வளர்கிற பையன் சாப்பிடட்டும். நல்ல நான்-வெஜ் ரெஸ்டாரண்ட் கூட்டி போகத்தான் அவனுக்கு ஆள் இல்லை. நானும், என் வீட்டுக்காரரும் கூட போக முடியாது. தப்பா நினைக்கலைன்னா நீங்க கூட்டிப்போய் அறிமுகப்படுத்துங்க. சண்டே கார் அனுப்பிடறேன். எந்த ரெஸ்டராண்ட், எவ்வளவு செலவுனாலும் சரி” என்று சொல்லி விட்டார். ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 12 மணிக்கு என் வீட்டு முன் காரும், பையனும் வந்து விடுவர். தலப்பாக்கட்டி, வேலு மிலிட்டரி என்று ஆரம்பித்து எல்லா சிறந்த அசைவ உணவகங்களுக்கும் அவனை டூர் கூட்டிப் போக வேண்டும். இது மூன்று வாரம் தொடர்ந்தது. பையன் இப்ப அமெரிக்காவில் கல்லூரி படித்து வருகிறான் . “சுறா புட்டெல்லாம் இங்கே டேஸ்டா இல்லை” என்று போனவாரம் போனில் அலுத்துக் கொண்டான். ஆகவே, ‘உணவே மருந்து’ என்பதை உணர்ந்தால் போதும். சைவம், அசைவம் எல்லாம் அவரவர் மனதில்தான் இருக்கிறது.
- விஜய் மகேந்திரன்
Monday, November 6, 2017
மீரா கதிரவனின் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?
அவர் அறைக்கு சென்ற நாட்களில் அவரே சமைத்து பரிமாறுவார். ஒருநாள் சிக்கன் எடுத்து சமைத்தார். அற்புதமான சுவையான குழம்பு இன்னும் நினைவில் உள்ளது. தன்னை காண வந்த நண்பர்கள் சாப்பிடாமல் போகக்கூடாது என நினைப்பார் . ' அவள் பெயர் தமிழரசி' பிறகு 'விழித்திரு' படத்தை முறையான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் அவரே தயாரித்து இயக்கினார். அதன் பொருட்டு அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அருமையான திரைக்கதை பிரதி. அவர் திறமையின் பால் நம்பிக்கை கொண்ட நடிகர்கள் அவருக்கு கை கொடுத்து உதவினார்கள். கிருஷ்ணா, விதார்த்,வெங்கட்பிரபு, தன்ஷிகா, ராகுல், எரிகா என்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் பக்க பலமாக அமைந்தது. படத்தை வெளியீட்டிற்கு சில மாதங்கள் முன்பே அவரின் அழைப்பின் பெயரில் சிறப்புக் காட்சியில் பார்த்துவிட்டாலும், நேற்று ஐநாக்ஸ் திரையரங்கில் ஒளிப்பதிவாள நண்பர் சிவசுந்தருடன் போய் பார்த்தேன். முற்றிலும் புதிதாக இருந்தது. ரசிகர்களின் கைதட்டலும், சிரிப்பும் ஆங்காங்கே வந்து கொண்டேயிருந்தது.
'விழித்திரு' படம் மொத்தத்தில் அதிகார வர்க்கத்துக்கு எதிரான படம். அடித்தள மக்களுக்கு சாதகமான படம். முத்துக்குமார் (கிருஷ்ணா) என்னும் அப்பாவி இளைஞனை போலீஸ் எவ்வாறு செய்யாத குற்றத்தில் சிக்க வைக்க பாடுபடுகிறது என்பதை மிக விரிவாக பேசியிருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகளும், காவல்துறையும் ஒன்றிணைந்து எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் ஆவணப்படுத்தியிருக்கிறார் மீரா. இந்த ஓரிரவில் நடக்கும் கதையில் திருடர்களாக வந்தாலும் அறத்துடன் செயல்படும் விதார்த், தன்ஷிகா பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். பணக்கார பையனாக வரும் ராகுல் பாஸ்கரன், எரிகாவிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறார். அதுவும் தனது பர்ஸை தொலைத்துவிட்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் ஒரு ரூபாய் வாங்கி போன் செய்யும் காட்சியில் திரையரங்கை சிரிப்பால் அதிரவைக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெங்கட்பிரபு கண் தெரியாத டப்பிங் கலைஞராக வந்து, அவரது மகள் சாராவை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் மனதை கனக்க செய்கிறார். இந்த நான்கு கிளைமேக்சில் ஒன்றாக சேரும் இடம் அருமையாக வந்திருக்கிறது. அதுவே உண்மையான திரைக்கதையின் வெற்றி. படத்தின் இறுதிக்காட்சி கடந்த வருடங்களில் நடந்த பல உண்மை சம்பவங்களை நினைவூட்டுகிறது.
முதலில் இத்தனை நடிகர்களை கொண்டு படம் முழுக்க இரவில் படமாக்கியிருக்கும் திறமைக்கே மீரா கதிரவனை பாராட்டவேண்டும். அவ்வளவு எளிதான காரியமல்ல. படம் எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட ஏற்படாமல் விறுவிறுப்புடன் செல்கிறது. நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு காட்சியில் வருபவர் கூட கதையை உணர்ந்து கவனமாக நடித்துள்ளது படத்திற்கு பெரிய பலம். தன்ஷிகா நடித்த சிறந்த படங்களில் 'விழித்திரு' கண்டிப்பாக இடம் பெறும். திறமையாக நடித்துள்ளார். வெங்கட்பிரபுவை இந்த மாதிரி இதுவரை சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்து இருக்க மாட்டோம். அச்சு மற்றும் சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசையும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. மீரா கதிரவன் போன்ற படைப்பு திறமையுள்ள இயக்குநர்களை வெற்றியடைய செய்வதன் மூலமாகவே சிறந்த தமிழ் படங்களை பெற முடியும். 'விழித்திரு' படத்தை இந்தி, தெலுங்கு என்று எந்த மொழியில் எடுத்தாலும் பெரிய வெற்றி பெறும். அத்தனை சாதகமான விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது. எனவே குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இந்த படத்தை பாருங்கள். நல்ல சினிமா பற்றிய விவாதத்தை முன்னெடுங்கள் நண்பர்களே...
- விஜய் மகேந்திரன்
Monday, May 8, 2017
ரஜினி கதாபாத்திரமாக வாழ்ந்த 'மூன்று முடிச்சு'
இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக முன்பே நடித்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் கொடுத்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கு அப்போது ஒரு லட்சியம் கமல் போல ஸ்டார் ஆக வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் அம்மாவிடம் 'ஏம்மா ஒரு நாள் நானும் இவர் மாதிரி முப்பதாயிரம் சம்பளம் வாங்குகிற ஸ்டார் ஆகணும், என்னால் முடியுமா? என்று கேட்பாராம். உங்களால் கண்டிப்பாக முடியும், பெரிய ஸ்டாராக வருவீங்க பாருங்க என்று ஸ்ரீதேவியின் அம்மா உற்சாகம் கொடுப்பாராம். சொன்ன மாதிரியே சாதித்து காட்டினார் ரஜினி என்று ஸ்ரீதேவி சொல்லியிருக்கிறார். கருப்பு வெள்ளை படங்களில் கருப்பாக இருந்தாலும் கலையான முகமாக ரஜினியை தமிழ் மக்கள் ஆரம்ப படங்களிலேயே ஏற்றுக்கொண்டார்கள். ரஜினியின் இளம் வயது படங்கள் கருப்பு வெள்ளையில் தான் பாதி எடுக்கப்பட்டவை என்றாலும் முக்கால்வாசி படங்கள் மறக்க முடியாத படங்களாக திகழ்கின்றன. அவர்கள், ஆடு புலி ஆட்டம், தப்புத்தாளங்கள், புவனா ஒரு கேள்விக்குறி ஆகியவைகளை முக்கிய படங்களாக சொல்லலாம்.
Thursday, January 5, 2017
ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு பயணம்
முதல் படத்திலேயே அவ்வளவு பெயர், புகழ், தேசிய விருது எல்லாம் கிடைத்தாலும், அதுகுறித்த பெருமையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர் மேற்கொண்ட நிதானமான இசைப் பயணம், இசையை விரும்பும் இளைஞர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியதாகும். ரோஜா வரும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றுமுதல் அவர், ஏதாவது பத்திரிகைக்கு பேட்டியளித்தால் வாங்கிவிடுவேன். எந்த தொலைக்காட்சியில் பேசினாலும் தவறவிடாமல் பார்ப்பேன். அவருடைய இசையும் ஆளுமையும் அந்தளவு எனக்குள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. என்னையறியாமலே அவர் பற்றிய பல தகவல்களை சேர்த்துவைத்திருந்திருக்கிறேன் என்பதை இதை எழுதும்போது உணர்ந்தேன்.
சிறு வயதில் அப்பாவை இழந்து, படிப்பைத் துறந்து, குடும்பப் பொறுப்புகளுக்கென சிந்தசைசர் போன்ற எலெக்டரானிக் இசைக்கருவிகளை சுமந்து ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு அலைந்த பத்து வயது சிறுபையனின் சித்திரம், ரஹ்மான் பல்வேறு உயரங்களை அடையும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும். அந்தவிதத்தில், இளைஞர்களுக்கான பெரிய ஊக்கசக்தியாக அவர் விளங்குகிறார். எந்தத் துறையிலும் இருக்கக்கூடிய இளைஞர்கள், ரஹ்மானை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டவர்கள் அவர்கள் துறையில் முன்னேறுவதை கண்ணால் கண்டிருக்கிறேன்.
அவர் படங்களின் கேசட் வரும்போதெல்லாம் கடைகளுக்கு ஓடிச்சென்று வாங்கி அதை ஆர்வமாகக் கேட்டு ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இப்படி, ஒரு ரசிகனாக அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன், அவரைப்பற்றி இப்படி ஒரு தொடர் எழுதமுடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ரஹ்மானை ஒரே ஒருமுறை நேரில் பார்த்தும் இருக்கிறேன். 'விண்ணைத்தாண்டி வருவாயா'படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொட்டுவிடும் தூரத்தில் அவர் நின்றிருந்தார். அப்போது, அவர் ஆஸ்கார் வாங்கிய புதிது. அவரைச் சுற்றியிருந்த செக்யூரிட்டிகளால், அவரைப் பார்த்தும் பேச முடியாமல்போனது.
பின்பு, ரஹ்மான் பற்றி ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஏனோ, அந்த விஷயம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மின்னம்பலம்.காமில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஹ்மான் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதுவதாக ஒத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அந்தக் கட்டுரை முடியாமல் நீண்டபடியிருந்தது. இரண்டாவது பகுதியை அடுத்த நாள் எழுதினேன். அப்படியும் முடியவில்லை.
பிரசுரமாகியிருந்த அந்த இரண்டு பகுதிகளுக்கும், பல இடங்களிலிருந்து வந்த வரவேற்பு எங்களை வியப்படையச் செய்தது. நண்பர் அரவிந்த் யுவராஜ், முதல் பகுதி வந்த நாளன்றே எனக்கு போன் செய்து, இதை தொடராக எழுதுங்கள் என்றார். உங்களால் முடியும் என நம்பிக்கையும் கொடுத்தார். நண்பர்கள் விநாயகமுருகன், ஜீவ கரிகாலன், விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் எனப் பலரும்,ரஹ்மான் தொடரை விரிவாக எழுதச் சொன்னார்கள். என்னால் முடியுமா? என்று உள்ளுக்குள் குரல் கேட்டாலும் பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பித்தேன். ரஹ்மான் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வந்திருக்கின்றன. முடிந்தளவு தெரியாத விஷயங்களை, அபூர்வ நிகழ்வுகளை அதிகம் எழுத வேண்டும் என முடிவு செய்தேன். எழுதினேன். கடலில் ஒரு கைப்பிடியளவு எடுத்த நீர் மட்டுமே இந்தப் புத்தகம். அவர் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் எழுதுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. இதை ஏன் விட்டுவீட்டீர்கள் எனக் கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்.
இந்த தொடர் எழுதிக்கொண்டிருக்கும் போது இசை பற்றிய எந்த சந்தேகங்கள் வந்தாலும், ஏதாவது தகவல் என்றாலும் போன் செய்து இசையமைப்பாளர் சி. சத்யா அவர்களை கேட்பேன். சரியான விஷயங்களை சொல்லி தெளிவு படுத்துவார். அவரும் இந்த தொடரை தொடர்ந்து படித்து 'நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க' என்று அவரது பல இசைப்பணிகளிடையே எனக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார். அவருக்கு இந்த புத்தகம் வரும் வேளையில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருடங்களை உறுதிப்படுத்திக்கொள்ள, சில தகவல்களை சேர்ப்பதற்கு நண்பர் அரவிந்த் யுவராஜ் உடனான உரையாடல் மிகவும் கைகொடுத்தது. காமராஜ் திரைப்படத்தின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் ரஹ்மானின் ஆங்கில சுயசரிதை புத்தகத்தை கொடுத்து உதவினார். அவர் கொடுத்த புத்தகத்தை ஓர் இரவே முழித்த படித்த பின் ரஹ்மான் பற்றிய தொடரை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவருக்கும் நன்றி.
புதன்கிழமை தோறும் மின்னம்பலம்.காமின் காலைப் பதிப்பில் ரஹ்மான் தொடர் வெளிவந்தது. வெளிவந்த சில மணிகளில் படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து உற்சாக அழைப்புகள் வரும். எங்கேயாவது பார்க்கும் நண்பர்கள் ரஹ்மான் தொடர்பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
மின்னம்பலம்.காமில் என்னை இணைத்த மின்னம்பலம்.காமின் இணை ஆசிரியர் டி.அருள் எழிலனுக்கு அன்பான நன்றி. ரஹ்மான் தொடருக்கு பொருத்தமான படங்களைத் தேர்வுசெய்து இணைத்த கலை பகுதியின் இணை ஆசிரியர் சிவா, ரஹ்மான் தொடரை எழுதும்போது என்னுடன் விவாதித்தும், அதற்கான மெய்ப்பு பார்த்தும், தொடர்களை சரி செய்து, எளிதாக வாசகர்கள் படிக்கும்வண்ணம் செய்த ஸ்ரீஷங்கர் ஆகிய இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்தத் தொடரை முழு சுதந்திரத்தோடு மின்னம்பலம்.காமில் எழுத அனுமதித்ததோடல்லாமல், சிறப்பாக புத்தகமாகவும் கொண்டுவரும் மின்னம்பலம் குழுமத்தின் தலைவரும், ஆசிரியருமான திரு. அ.காமராஜ் அவர்களுக்கு என் பிரத்யேக நன்றி.
என்றும் அன்புடன்
விஜய் மகேந்திரன்
சனவரி 6 - 19, 2017
செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம்
(பச்சையப்பா கல்லாரி எதிரில்)
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை,
அமைந்தகரை (செனாய் நகர்),
சென்னை 600030



















