Sunday, November 19, 2017

முருங்கை கீரை


பழங்காலத்தில், எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீட்டில் ஒரு முருங்கை மரம் அவசியம் இருக்கும். ஆனால், இந்த காலத்தில் ‘வாஸ்துபடி முருங்கை வைக்கக்கூடாது. வீட்டின் முன் முருங்கை இருந்தால் அவ்வீட்டு ஆணுக்குத் தீங்கு நடக்கும்’ என்று வதந்தி பரப்பி முருங்கையை வீட்டில் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், நம் முன்னோர் நம்மை விட அறிவியல் அறிவு நிறைந்தவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பின்பக்கம் ஒரு முருங்கை மரமேனும் இருக்கும். பொதுவாகவே, மரங்கள் பகலில் நமக்குத் தேவையான ஆக்சிஜனையும், இரவில் நமக்குத் தேவை இல்லாத கார்பன் டை ஆக்சைடையும் வெளியேற்றும். இரவில் யாரும் பின்பக்கம் போகாததால், தோட்டமும் மரங்களும் பின்பக்கமே அமைத்திருந்தனர். முன்பக்கம் நட்பு வளர்க்க திண்ணை அமைத்திருந்தனர்.
ஆனால் இன்றோ, திண்ணையும் இல்லை முருங்கையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை…
நாம் அனைவரும் பள்ளி புத்தகங்களில் படித்திருப்போம், 300க்கும் மேற்பட்ட நோய்களை முருங்கை குணப்படுத்தும் என்று. வேரில் இருந்து பூ வரை உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதன் மருத்துவப் பயன்களைப் பற்றியும், உணவில் சேர்த்துக்கொள்ளும் முறையையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன். ‘இருக்கவே இடம் இல்லை, குடிக்கவே தண்ணீர் இல்லை என்று பல காரணம் சொல்லுகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் பின் பக்கம் ஒரு 2 X 2 இடம் இல்லாமலா போய்விடும்? முருங்கை மரம் ‘சாகா மரம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆகவே வெயிலோ, மழையோ, தண்ணீர் பஞ்சமோ, முருங்கை அனைத்தையும் தாங்கும். ஏன் ஒடித்தாலுமே நன்கு தழைக்கும்.
முருங்கையின் சில பயன்களை இங்கு குறிப்பிட்டால் முன்பு போல் பல முருங்கை மரம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.
முருங்கைக்கு பல பயன்கள் உள்ளன. சுருக்கமாக அற்புதமான அழகும் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கியமும் முருங்கையால் நமக்குக் கிட்டும்.
வேரிலிருந்து ஆரம்பிக்கலாமா?
வேர்: ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கிறது முருங்கை வேர். வாய் புண்ணுக்கு, முருங்கை வேரை தண்ணீரில் 5 – 7 நிமிடம் கொதிக்க வைத்து அந்த தண்ணீர் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
2007இல் கொல்கத்தாவில் நடத்திய ஆய்வு ஒன்றில் முருங்கை வேரில் கருப்பைப் புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதுபோல் பல ஆய்வுகள் வெளிநாடுகளிலும் முன்னரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சூடானில் 2010இன் ஆய்வுப்படி ரத்தப் புற்றுநோய்க்கும் முருங்கை வேர் நல்ல பயன் அளிப்பதாக கண்டு பிடித்துள்ளனர். இது தவிர, மலேரியா, ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மகப்பேறு சமயத்தில் வெளியேறாத நஞ்சுக்கொடி அகற்றவும் முருங்கை வேர் பயன்படுத்தப்படுவதாக அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வேரைப் பொடித்து குப்பியில் அடைத்து விற்கவும் செய்கிறார்கள்.
விதை: முருங்கை விதையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். முருங்கை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் முஃபா (MUFA) எனப்படும் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் அது உடலுக்கு, குறிப்பாக ஈரலுக்கு மிக நல்லது. மேலும், இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் இருக்கிறது. ஆகவே, செல் உடையும் நோய்கள் (cell degeneration) வராமல் தடுக்கும். அப்படி தடுப்பதால் நம் உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
குடிநீரில் தொற்றுக்கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுவதாக இந்தியாவில் 2012இன் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறுவது தவறு. ஆகவே வலுவான எலும்புக்கு அனைவருக்கும் தேவை. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் தேவை. இவை இரண்டும் முருங்கை இலையில் அதிகம் உண்டு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைச் சரி செய்யும். பூ மற்றும் இலையில் நோய் எதிர்ப்புசக்தி (antibiotic effect) உள்ளது.
இக்கீரையைப் பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும்போது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்த பொரியலை தினமும் ஒருவேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகும், பலமும் கொடுக்கும். முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் யாவும் நீங்கும்.
ஆண்களுக்கு முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்மை பிரச்னை பெருமளவு குறையும்.
தாது விருத்தியும் உண்டாகும். இதை உணவுடன் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும். தினமும் உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகையைத் தடுக்கலாம். இக்கீரை ரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு வயிற்றுநோயும் அடி வயிற்று வலியும் நீங்கும். எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாயுவால் ஏற்படும் மார்பு வலி நீங்கும்.

-விஜய் மகேந்திரன்

No comments:

Post a Comment