Monday, November 6, 2017

மீரா கதிரவனின் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

மீரா கதிரவன் எனது வாழ்நாளில் ஒன்றாகி போன நண்பர்! அசலான படைப்பாளி! அவருக்கும் எனக்குமான நட்பை விவரிக்க ஒரு தனி கட்டுரை ஒன்றை தான் நான் எழுத வேண்டும். 2005 டிசம்பரில் ஒருநாள் இயக்குநர் லோஹிததாஸ் முன்னிலையில் மீராவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர் எனக்கு செய்த நல்ல விடயங்களில் அது முக்கியமானது. மீரா அப்போது நெசப்பாக்கத்தில் இருந்தார். எனது முதல் கதை எழுத அவர்தான் தூண்டினார். 'சிரிப்பு' என்ற கதை கணையாழியில் வந்த போது நண்பனாக மிகவும் சந்தோஷப்பட்டார். நிறைய இலக்கிய படைப்பாளிகளை புத்தகத்திலும் , நேரிலும் அறிமுகப் படுத்தியவர் அவரே...காலக்குறி,கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் நல்ல சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். இப்போதைய பல நண்பர்கள் அவரது எழுத்தாளர் முகத்தை அறிய மாட்டார்கள் என்பதால் இந்த தகவல்.

அவர் அறைக்கு சென்ற நாட்களில் அவரே சமைத்து பரிமாறுவார். ஒருநாள் சிக்கன் எடுத்து சமைத்தார். அற்புதமான சுவையான குழம்பு இன்னும் நினைவில் உள்ளது. தன்னை காண வந்த நண்பர்கள் சாப்பிடாமல் போகக்கூடாது என நினைப்பார் . ' அவள் பெயர் தமிழரசி' பிறகு 'விழித்திரு' படத்தை முறையான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் அவரே தயாரித்து இயக்கினார். அதன் பொருட்டு அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அருமையான திரைக்கதை பிரதி. அவர் திறமையின் பால் நம்பிக்கை கொண்ட நடிகர்கள் அவருக்கு கை கொடுத்து உதவினார்கள். கிருஷ்ணா, விதார்த்,வெங்கட்பிரபு, தன்ஷிகா, ராகுல், எரிகா என்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் பக்க பலமாக அமைந்தது. படத்தை வெளியீட்டிற்கு சில மாதங்கள் முன்பே அவரின் அழைப்பின் பெயரில் சிறப்புக் காட்சியில் பார்த்துவிட்டாலும், நேற்று ஐநாக்ஸ் திரையரங்கில் ஒளிப்பதிவாள நண்பர் சிவசுந்தருடன் போய் பார்த்தேன். முற்றிலும் புதிதாக இருந்தது. ரசிகர்களின் கைதட்டலும், சிரிப்பும் ஆங்காங்கே வந்து கொண்டேயிருந்தது.

'விழித்திரு' படம் மொத்தத்தில் அதிகார வர்க்கத்துக்கு எதிரான படம். அடித்தள மக்களுக்கு சாதகமான படம். முத்துக்குமார் (கிருஷ்ணா) என்னும் அப்பாவி இளைஞனை போலீஸ் எவ்வாறு செய்யாத குற்றத்தில் சிக்க வைக்க பாடுபடுகிறது என்பதை மிக விரிவாக பேசியிருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகளும், காவல்துறையும் ஒன்றிணைந்து எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் ஆவணப்படுத்தியிருக்கிறார் மீரா. இந்த ஓரிரவில் நடக்கும் கதையில் திருடர்களாக வந்தாலும் அறத்துடன் செயல்படும் விதார்த், தன்ஷிகா பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். பணக்கார பையனாக வரும் ராகுல் பாஸ்கரன், எரிகாவிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறார். அதுவும் தனது பர்ஸை தொலைத்துவிட்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் ஒரு ரூபாய் வாங்கி போன் செய்யும் காட்சியில் திரையரங்கை சிரிப்பால் அதிரவைக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெங்கட்பிரபு கண் தெரியாத டப்பிங் கலைஞராக வந்து, அவரது மகள் சாராவை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் மனதை கனக்க செய்கிறார். இந்த நான்கு கிளைமேக்சில் ஒன்றாக சேரும் இடம் அருமையாக வந்திருக்கிறது. அதுவே உண்மையான திரைக்கதையின் வெற்றி. படத்தின் இறுதிக்காட்சி கடந்த வருடங்களில் நடந்த பல உண்மை சம்பவங்களை நினைவூட்டுகிறது.

முதலில் இத்தனை நடிகர்களை கொண்டு படம் முழுக்க இரவில் படமாக்கியிருக்கும் திறமைக்கே மீரா கதிரவனை பாராட்டவேண்டும். அவ்வளவு எளிதான காரியமல்ல. படம் எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட ஏற்படாமல் விறுவிறுப்புடன் செல்கிறது. நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு காட்சியில் வருபவர் கூட கதையை உணர்ந்து கவனமாக நடித்துள்ளது படத்திற்கு பெரிய பலம். தன்ஷிகா நடித்த சிறந்த படங்களில் 'விழித்திரு' கண்டிப்பாக இடம் பெறும். திறமையாக நடித்துள்ளார். வெங்கட்பிரபுவை இந்த மாதிரி இதுவரை சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்து இருக்க மாட்டோம். அச்சு மற்றும் சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசையும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. மீரா கதிரவன் போன்ற படைப்பு திறமையுள்ள இயக்குநர்களை வெற்றியடைய செய்வதன் மூலமாகவே சிறந்த தமிழ் படங்களை பெற முடியும். 'விழித்திரு' படத்தை இந்தி, தெலுங்கு என்று எந்த மொழியில் எடுத்தாலும் பெரிய வெற்றி பெறும். அத்தனை சாதகமான விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது. எனவே குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இந்த படத்தை பாருங்கள். நல்ல சினிமா பற்றிய விவாதத்தை முன்னெடுங்கள் நண்பர்களே...

- விஜய் மகேந்திரன்

No comments:

Post a Comment