Wednesday, September 22, 2010

ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை - மாமல்லன் கார்த்தி


ராவணன்(சிறப்புக் காட்சி ): அதிகாலை நாலரை மணி, கோவில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் பக்தகோடிகளை போல, மடை திரண்டு வந்திருந்தார்கள் விக்ரம் ரசிகர்கள். நடை திறந்ததும், கூச்சலும் கும்மாளமும் வானவேடிக்கைகளும் கேட்கவே வேண்டாம். படம் துவங்கியது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சத்தமே இல்லை, அவ்வளவு ஒன்றிப்போய் படம் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன், இடைவேளையில் விளக்குகள் போட்டதும் எல்லோரும் துயிலேளுந்தார்கள், பின் பாதியில் எங்களை தட்டி தட்டி எழுப்பினார்கள் மணிரத்னமும் ரஹ்மானும்..ஒரு வழியாக எங்களை பார்க்க வைத்துவிட்டார்கள்.

புராண இதிகாசங்களில் இருந்தும் இன்னபிற சர்வதேச இத்யாதிகளில் இருந்தும், கதைச்சரடைப் பின்னி.. நாட்டில் தற்போது நடக்கக்கூடிய முக்கிய பிரச்சனை ஒன்றை, பிரச்சனையே இல்லாமல் சொல்லிவிட வேண்டும் என்று, பறவையின் பார்வையில் (birds view) அந்த துக்கம் நிறைந்த காடுகளை கடந்து (escape) செல்கிறார் மணி. பழைய மாவையே வேறுவிதமாக அரைத்து மசாலா தடவ முயற்சித்திருக்கிறார், ஆனால் மாவு புளிப்பு தட்டி விட்டது. படத்தில் சித்தரிக்கப்பட்ட உலகத்தில் ஒரு நம்பகத்தன்மை இல்லாதது.. உண்மையில் இது ஹிந்தி மொழிக்காக செய்யப்பட்டதால் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.. சுஹாசினியின் வசனங்கள் அவ்வப்போது பெண்ணிய நிலைப்பாடுகளை பற்றி கதைக்கிறது.. இருந்தும் என்ன பிரயோஜனம்?.. ராகினி (ஐஸ்..) தன் பத்தினித்தனத்தை நிரூபிக்க வேண்டியதாக உள்ளதே..?(அதிலும் ஒரு சிண்டு முடிக்கிறார் மணி.. அதாவது வீராவை பிடிபதற்காக அவளது கணவன் போடும் நாடகமாம் அது.. பேத்தல்!). இன்னொரு கொடுமை வேறு உள்ளது, படத்தில் கடைசி வரை வீரா (விக்ரம்) ராகினியை தொடுவதே இல்லையாம்.. ஆனால் படத்தில் வரும் மற்ற குண்டர்கள் சகட்டுமேனிக்கு அவளை பிடித்திழுகிறார்கள், வீரா மட்டும் அவளை தொடாமலேயே தொட்டுவிட்டு பாதாளலோகத்தை சென்றடைகிறான். கவித்துவம்!!

படம் எனக்கு பல படங்களின்(apocalypse now, rashomon, north by north west, crouching tiger hidden dragon இன்னும் தோண்டினால் நிறைய கிடைக்கும் போல), பல கணங்களை நினைவு படுத்தியது, முக்கியமாக 'காதல் கொண்டேன்' . அந்த கிளைமாக்சை (climax) செல்வராகவன் 'உணர்வுரீதியாக' மிக சிறப்பாக செய்திருந்தார் என்று தோன்றுகிறது.

படத்தின் அடி நாதம் என்ன? ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கும், மேல் தட்டில் வாழும் ஒருத்திக்கும் (இந்த படத்தில் பழங்குடியினனுக்கும்-உலக மயமாக்கத்தில் இருப்பவளுக்கும்) ஏற்படும் நூல் இழையிலான அன்பும், காதலும், பரிதாபமும்..அவர்களின் உறவு தான் சூட்ச்சமம்... இந்த காரியத்தை ஒரு வகையில் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில் செய்திருக்கிறார்.. வினோத்(தனுஷ்) ஒடுக்கப்பட்ட வலியினால் மனசிக்களுக்குள் இருப்பவன்.. அவனது கதாபாத்திர வார்ப்பு நம்பகத் தன்மையுடன் இருந்தது.. வினோதிற்கும் திவ்யாவுக்கும் உள்ள உறவின் அலைகழிப்புகளை, போராட்டங்களை மிக வலிமையாக சொல்லி இருந்தார்.. மணிரத்தினம் அவர்களோ, தன் புரட்சி செய்யும் மகோன்னதமான கதாபாத்திரத்தை ஒரு பைத்தியத்தை போல் உளற வைத்து கேவலப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்..அழகான காட்சிகளையும், நடனங்களையும் பாடல்களையும் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் தான் ஓட்ட முடியும்..? 360 degree'யில் தேவையில்லாமல் காமெராவை வைத்துக்கொண்டு circus விளையாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார் மணி..முக்கியமான உணர்வெழுச்சி மிக்க சில காட்சிகளை, நம்மை சேர விடாமல் தடை செய்துவிட்டார்.. சந்தோஷ் சிவனை வீணடித்துவிட்டார். ' நீர்' என்பதை ஒரு குறியீடாக 'Terorist' படத்தில் சந்தோஷ் சிவன் பயன்படுத்தியிருந்தார்.. அது தன் மூல கதாபாத்திரத்தின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றத்தை பிரதிபலிப்பதற்கு மிக சரியாய் பொருந்தியது.. ஆனால் ராவணனில் அது ஒரு விளம்பர படத்தில் வருவது போன்று செயற்கையாக மாறிவிட்டது. அது ஒரு வித்தை என்பதைத் தவிர ஒன்றும் இல்லை.. ரஷிய திரைமேதையான் தார்கொவிஸ்கி(Tarkovsky) தனது படங்களில் 'நீரை' நம் பிரபஞ்சத்தின் குறியீட்டுத் தன்மையுடன் உள்ளார்ந்த கவித்துவத்துடன் மாற்றி இருப்பார்.. அங்கிருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட சந்தோஷ் சிவன் Terorist படத்தில் புரிதலோடு செய்திருந்தார்.. இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது நீர்கோர்த்த கூந்தலை அவள் முகத்தின் முன் தலைவிரி கோலமாக கொண்டுவரும் காட்சி அப்படியே தார்கொவிஸ்கியின் Mirror படத்தில் இருந்து சுட்டது. ஒரு கலைப் படைப்பில் இருந்து உருவி எப்படி ஜீவனற்ற சரக்காக மாற்றுகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் .

மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate. Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. ஊழல் கிடையாது(No corruption).

ராவணன் படத்தின் பின் இருக்கும் நடிகர்களின், தொழில்நுடக் கலைஞர்களின் சிரத்தையை பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காகத்தான் இத்தனை இம்சைகளை அனுபவித்தார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது, ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நான், அவரின் பங்களிப்பை சகித்துக் கொண்டேன்.. பிரபுவையும் கார்த்திக்கையும் காமெடியன்களாக ஆக்கிவிட்டார் மணி. என்ன சொல்வது, படம் பத்து நாள் நன்றாக ஓடினால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போல!!

இணையத்தளத்தில் தற்போது வந்து கொண்டிருக்கும் இராவணன் விமர்சனங்களை படித்து வருகிறேன்.. முடியல!! சும்மா எடுத்ததற்கெலாம் 'making is superb' என்கிறார்கள்..

நான் கேட்கிறேன்: அய்யா! நம் மணிரத்தினம் அவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர், அவரது செய்நேர்த்தி நாம் அறிந்ததே, அவர் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் இந்தியாவில் சிறந்தவர்கள், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ரஹ்மான்.. என்று நீள்கிறது... இவர்கள் கூட்டணியில் இது கூடவா வராது?..இதைத் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சீதாயணம் என்று காமெடி பண்ணுகிறார்கள்.. சரி..இதெல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்றால்.. அரசியல்!! என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள், வீரப்பன், நக்சலைட் இயக்கம், இலங்கை பிரச்சனை, என்று சொல்லி நம்மை துன்புறுத்துகிறார்கள்.. சட்டியில் ஒன்றும் அப்படியில்லை..ஏன் வெறுங்கையில் முழம் போடுகிறார்கள்?.. மணிரத்னம் படமெடுதிருக்கும் காடுகளில் காணப்படும் குண்டுகளும் குழிகளும் போல, அவரது திரைக்கதை பல சரிவுகளோடு உள்ளது.. இதை வைத்துக்கொண்டு என்னென்னமோ அரற்றுகிறார்கள்..என்னை பொறுத்த வரையில் இராவணன் ஒரு ஜீவனற்ற சவம்.. அந்த சவத்தின் அலங்காரங்களை கொஞ்சம் ரசிக்கலாம்.. மணிரத்தினம் படங்களில் முன்பு இருந்த 'ஓட்டை அரசியல்' கூட இதில் இல்லை .. உண்மையை சொன்னால் ஒன்றுமே இல்லை.. அவர் பல விஷயங்களை சொல்ல வந்திருக்கலாம், ஆனால் எதுவுமே நம்மை சேரவில்லை, வந்தடைய வில்லை.. அதன் இல்லாத அரசியலையோ.. சோர்வூட்டும் அழகியலையோ..பற்றி பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அய்யா! படத்தின் சூத்திரம் இது தான் : "ஒரு நல்லவன் - கெட்டவன், உண்மையில் கெட்டவனுக்கு ஒரு பெரிய நியாயம் இருக்கிறது, இவர்கள் இடையில் ஒரு பெண்- சல்லாபங்கள், சஞ்சலங்கள்,மோதல்கள்..அவள் நினைப்பது போல் அவன் கெட்டவன் அல்ல என்று புரிகிறது , கடைசியில் ஊருக்காக உழைத்த அந்த கெட்டவன் பரிதாபமாக, அனாதையை போல் சாகிறான்.." இது தானய்யா formula..!! இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?.. location புதிதாக மாற்றலாம், சில சித்து விளையாட்டுக்களை செய்யலாம்..இதிகாச அல்லது அரசியல் சாயம் பூசலாம்.. நல்ல விலைக்குப் போகக்கூடிய சரக்கை உற்பத்தி பண்ணலாம் ..அவ்வளவு தான்.!!.

cinemams@gmail.com
Note,,
19/7/2010 இல் எழுதப்பட்ட இந்த விமர்சனம் சமகால தமிழ் சினிமாவை பற்றிய அக்கறையை கொண்டுள்ளதால் இங்கு பதிவு செய்துள்ளேன்.
-விஜய் மகேந்திரன்.

No comments:

Post a Comment