Thursday, August 26, 2010

குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்

தமிழில் -ஸ்ரீபதி பத்மநாபா

2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் அவருடைய மனம் போலவே குழந்தைகளுக்கானவை அல்லது குழந்தைப் பருவம் இன்னும் எய்தாத பெரியவர்களுக்கானவை. மலையாளத்தில் நா பிறழும் வார்த்தை ஜாலங்களினூடாகவும் பழமொழிகளினூடாகவும் அழகான எளிமையான அதே சமயம் பிரம்மாண்ட அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருக்கும் அவரது எழுத்திலிருந்து சிலதுளிகள்...



1. பசிக்கும்போதுண்ணுவேன் நான்

தாகமெடுத்தால் குடிப்பேன்

களைத்தால் உறங்குவேன்

உறங்கும்போது எழுதுவேன் கவிதைகள்



2. எழுதுவதென்பதல்லவென்பதுதானெழுத்து



3. பின்னால் மட்டும் மடங்கும் கால்களால் தானே

முன்னால் பாய்கிறான் மனிதன்



4. நானிப்படியில்லாமலிருந்தா

லிப்பேரண்டமுமிப்படியில்லாமல் போகும்!

அடேங்கப்பா நானே!



5. நானொரு கடலுருவாக்கினேன்

நானொரு கரையுருவாக்கினேன்

முடியவில்லை ஒரு நெய்தலுருவாக்க



6. ஒரு சலவைக்காரனிருக்கிறானென்னூரில்

எல்லோரும் அம்மணமாயிருக்குமென்னூரில்

அந்த சலவைக்காரனும் அம்மணன்தான்



7. அதிசயமான பொருள் கொண்டுதானே

இறைவன் என்னைப் படைத்தான்

பின் அதில் மிச்சமிருப்பதை வைத்துத்தான்

பிரபஞ்சத்தைப் படைத்திருப்பானோ!



8. நானெனும் பூவின்

நானெனும் தேனைத் தேடிப்பறக்கும்

நானெனும் வண்டை கை வீசி அழைக்கும்

விளக்காய் எரிகிறேன் நான்



9. டிரைவர் யார் கண்டக்டர் யாரென்று பாராமல் தானே

பஸ் ஏறி பயணிக்கிறோம் நாம்

அம்மையாரப்பனாரென்று பார்க்காமலேயே இம்

மண்ணில் இறங்கிய முட்டாள்கள்தானே நாம்



10. உள்ளே முழுக்க ஆவேசம்

வெளியே முழுக்க ஆகாசம்



11. பொண்ணு பாக்கப் போகையிலே

கண்ணு மட்டும் பத்தாது

கண்ணாடியும் கையில் வேணும்



(இன்னும் இருக்கிறது... அடுத்த பதிவில்...)

1 comment:

  1. /பின்னால் மட்டும் மடங்கும் கால்களால் தானே
    முன்னால் பாய்கிறான் மனிதன்/

    Arumaiyaana varigal.

    ReplyDelete