Sunday, May 4, 2014

கடவுளும் மனநோயாளியும் ஒரே அடுக்ககத்தில் !

இந்நகரத்தில் மனநோயாளி கிளம்புறான் 
வெளுத்த உடைகள் துடைத்த சப்பாத்துகள் 
நேர்த்தியான கழுத்துப்பட்டை அணிந்து 
நகரத்தின் சாலைகளில் இறங்குகிறான் 

சிக்னலின் சிவப்பு தான்  
முதலாக காட்டிக்கொடுத்து நிறுத்துகிறது 
மனநோய் அவனுக்குள் கொப்பளிக்கிறது 
எரியும் பச்சை அவனை சிறிதே 
ஆசுவாசப்படுத்துகிறது !

மஞ்சள் வெயில் பீறிட்டு கிளம்பும் 
மதிய நேரத்தில் தன் கீழ்  பணியாளனின் 
முகத்தில் கோப்பால் எறிகிறான் 
கீழ் பணியாளன் என்னும் இன்னொரு 
மன நோயாளி கைகட்டி சிரித்த படியே 
கோப்புகளில் இருந்து சிதறிய காகிதங்களை 
கோப்புகளுக்கே திருப்புகிறான் 

மாலைநேரக் காற்று சகப்பெண் 
பணியாளியிடம் சமிஞ்சை 
செய்ய தூண்டுகிறது 
புறக்கணிக்கும் அவளிடம் இருந்து 
அந்த சனிக்கிழமை 
விடைபெறுகிறது 

மனநோயாளிக் கணவனின் 
தலையை தனது கைப்பள்ளத்தில் 
இருக்கும் எண்ணையை விட்டு 
உச்சிக்குளிர அரக்கத்  தேய்த்து 
இளவெந்நீர் குளியாட்டி ,
தலைநீவி மனநோயை 
மெல்ல உறங்கச் செய்கிறாள் 
அவனின் இல்லாள் 

அதே அடுக்ககத்தின் வாயிலில் 
வாயில் காப்போனிடம் 
கடவுள் உரையாடிக்கொண்டு இருக்கிறார் 
கையில் ஒரு பால் பாக்கெட் இருக்கிறது.

குழந்தை அழுகிறது என பால் 
வாங்கி வர இந்நகரத்தின் 
சாலைக்கு வந்தாராம் 
உயர்ந்து நிற்கும் இவ்வடுக்கு 
மாடி கட்டிடத்தில் தான் தனது வீடும் 
இருக்கிறது என 
காப்போனிடம் கூறுகிறார் 

மேலும் இவ்வடுக்கு மாடி 
கட்டப்படுவதற்கு முன்பே 
கிளம்பிச் சென்றுவிட்டாராம் 
பால் வாங்க ,
கடவுளின் கையில் 
பதினோரு மாதங்களுக்கு 
முன்தேதியிட்ட பால் பாக்கெட் !!!

(தீராநதி மே 2014 இதழில் வெளிவந்து இருக்கும்  கவிதை )

No comments:

Post a Comment