Monday, May 5, 2014

முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை

சமூகத்தளங்கள் ஆன  பேஸ்புக் ,ட்விட்டர்  போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின்,தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளை பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள் .தமிழ் இலக்கிய சூழலில் இலக்கிய ஆளுமைகள் .திரையுலக ஆளுமைகள் ,பத்திரிகையாளர்கள்  பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள் ,பார்த்த உலக  சினிமாக்கள் ,சமகால அரசியல் பற்றி தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகின்றனர்.

இப்படி எழுதும் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்கள் அதையும் எழுதி விவாதிப்பதற்கான சூழலும் முகநூளில் இருக்கிறது.துரதிர்ஷ்டவசமாக சிலசமயம் இந்த விவாதங்கள் அத்துமீறி தனிப்பட்ட சண்டையாக மாறி விடும் அபாயமும்   இருக்கிறது.  இதை எல்லாம் மீறி தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் ,கட்டுரைகள் ,பத்திகள்  தீராத படைப்புச்சக்தியுடன் இயங்கும் பல ஆளுமைகள் முகநூளில் இயங்கிவருகிறார்கள் .

  இவ்வாறு தொடர்ந்து படைப்புத்திறனுடன் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர்தான் ப்ரியாதம்பி .இவரது சில பத்திகளை முகநூலில் படித்தபோது யாரும் எழுதத்துணியாத சில விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார் .நவீனப்பள்ளிகள் குழந்தைகளை பொதுபுத்தியில் வளர்த்தெடுக்க முயல்கின்றன என்பதில் தொடங்கி பெற்றோர்களும் குழந்தைகளுடன் சென்று பாடம் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அந்த பத்தியை எழுதியிருந்தார் .மாதவிடாய் பற்றிய ஆவணப்படம் ஒன்றின் பதிவில் பெண்களுக்கு  ஏற்படும்  சாதாரண இயற்கைப்பிரச்சினையை கூட வெளியே சொல்ல இச்சமூகம் தடைவிதித்திருக்கிறது .கடையில் சென்று நாப்கின் வாங்கக்கூட அவள் நாலைந்துமுறை யோசித்து சுற்றும் முற்றும் பார்க்கவேண்டி இருக்கிறது.அந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை விவரித்து எழுதியிருந்தார் .அதற்கு எதிர்வினையில் சில நண்பர்கள்  
  இதைப்போல அவர் முகநூலில் எழுதும் குறிப்புகளை தொகுத்து புத்தகமாக கொண்டுவரலாமே என கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.அதற்கு ப்ரியாதம்பி ''இவை புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு தரமுள்ளவையா த,தெரியவில்லை?எனக்  கேள்வி எழுப்பியிருந்தார்.இறுதியாக கயல்கவின் புக்ஸ் முகநூலில் ப்ரியாதம்பி எழுதியுள்ள முக்கியமான பத்திகளை தொகுத்து ''மின்னுவும் அம்மாவும் ''என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் .இது பாராட்டிற்குரிய முயற்சி.

ப்ரியா தான் சந்தித்த ,கடந்து வந்த மனிதர்கள்,அன்றாடம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ,அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள்,படித்த நல்ல புத்தகங்கள் ,பார்த்த நல்ல படங்கள்,சந்திக்கும் அபூர்வ மனிதர்கள் மீதான  நேசம் எல்லாவற்றையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மெல்லிய அங்கதத்துடன் பதிவு செய்கிறார் .லேசான ரொமண்டிசம் இவர் எழுத்துக்களில் தென்பட்டாலும் அது இந்தப் பத்திகளை அழகாகத்தான் காட்டுகிறது.

சிறந்த மலையாள படங்களின் டிவிடிகள் வாங்க ஒருமுறை கடைக்குச் செல்கிறார்.மலையாளப்  படம் என்றதும் கடைக்காரர் கேலியாகச் சிரிக்கிறார்.பெண்கள் டிவிடிகள் சுகந்திரமாக வங்கக் கூடிய நிலைமை கூடவா இங்கில்லை என்கிறார்.மேலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வாங்கி பில் போடும் போது ,''அவள் பறையும்  கதா ''என்ற படம் கண்ணுக்கு படுகிறது.அதையும் வாங்கிவிடுகிறார்..கடைக்காரர் ''இதுவும் வேணுமா மேடம் ''என்கிறார்.இருக்கட்டும் ஏதோ பெண்ணியப்படம் என வாங்கி வந்துவிடுகிறார்.வீட்டிற்கு   வந்து குடும்பத்துடன் பார்க்க அந்த படத்தை போடும் போது தான்  தெரிகிறது அது ''அந்த'' மாதிரியான படம் என்கிற விஷயம்.உடனே அதை நிறுத்திவிட்டு பதிவில் எழுதுகிறார்.,இந்த மாதிரியான மட்டரக படங்களில் என்ன கிலேசம் கிடைக்கிறது என்று பார்க்கிறார்களோ ''பாவம்  ஆண்கள் !!!அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறார்கள் என அங்கதத்துடன் வெளிப்படையாக சில விஷயங்களை முன்வைக்கும் எழுத்துக்களாக இவரது பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன .

தான் சந்தித்த பெரிய பேருந்து விபத்து குறித்த பத்தி ,மிகவும் முக்கியமானதாக புத்தகத்தில் இருக்கிறது.தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறால் வண்டி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகிறது.விபத்து காட்சிகளை நேரடியாக நாமே பார்ப்பது மாதிரி விவரித்து இருக்கிறார்.

ப்ரியாவின் பக்கத்து இருக்கைப்பெண் இறந்து  போகிறாள் .திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞனின் கை துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.ப்ரியாவுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்துவிடுகிறது. நிறைய உயிரிழப்புகள் அந்த விபத்தில் ஏற்படுகிறது.விபத்தில்  இருந்து 
மீண்டு  எழவே  இரண்டு மாதம் பிடிக்கிறது.கை துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை மீண்டும் பொருத்த முடிவதில்லை. ப்ரியா தலையில் 
ஏற்பட்ட அடியால் நுகர்வுத்திறனை இழக்கிறார் .அந்த  விபத்து ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் மறையாத தழும்புகளை ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது.கையை இழந்த இளைஞனும் ,ப்ரியாவும் இணைந்து  நிறுவனத்தின் மீது வழக்குகளை தொடுக்கிறார்கள்.ஆனாலும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.பேருந்து நிறுவனத்தார் பணத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறார்கள்.விபத்தால் கை போன இளைஞனின் குடும்பத்தாரின் நட்பு கிடைத்தது மட்டுமே விபத்தால் ஏற்பட்ட ஒரே நற்பலன் என்று எழுதியிருக்கிறார்.

சகமனிதர்கள் மீதான நேசம் தொனிக்கும் பத்திகள் இப்புத்தகத்தில் நிறைய இடங்களில் இருக்கிறது.முதல் காதல் அனுபவம் குறித்து எழுதியிருக்கும் ஒரு பத்தி மிகுந்த கவித்துவம் நிரம்பியதாக அமைந்திருக்கிறது.அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள் ,அம்மா மகள் பேசிக்கொள்வது மாதிரி இல்லாமல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது மாதிரி உள்ளது.இது பெற்றோர்கள் இடையே ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்த கூடிய பதிவுகளாக இருக்கிறது.

பெண்ணியம் பற்றி இவர் கூறியிருக்கும் கருத்துக்களும் சலசலப்பை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது.உதரணமாக''பெண்களை விலக்கிய கூட்டங்களும் ,இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ ,அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி  வைத்து பெண்ணியம் பேசுவதும்''!என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.புத்தகம் முழுவதும்பெரிதும் சிறிதுமான பத்திகள் ஆகவும் ,குறிப்புகளாகவும் இருப்பதால் தடையின்றி வாசிக்க கூடியதாக  இருக்கிறது .மேலும் ப்ரியாவின் பத்திரிக்கையாளர்களுக்கு ரிய   'ரிப்போர்டிங்''நடை வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.பின்னால்  புத்தகமாக வரப்போகிறது எனஅறியாமல் தான் விரும்பியதையெல்லாம் எழுதியிருப்பதால் சிலமுக்கிய விஷயங்களை  விரிவாக எழுதாமல் குறிப்புகளாக நிறுத்தியிருப்பது மட்டும் இப்புத்தகத்தில் குறையாகத் தெரிகிறது.மற்றபடி ப்ரியாவின் முகநூல் குறிப்புகள்  அடங்கிய இப்புத்தகம் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் வாசிக்க  வேண்டிய பன்முகப்பிரதியே ஆகும்.

மின்னுவும் அம்மாவும் -ப்ரியாதம்பி 
வெளியீடு கயல்கவின் புக்ஸ் 
விலை 120ரூ 


தீராநதி ஏப்ரல் 2014 இதழில் வந்த கட்டுரை 

No comments:

Post a Comment