Sunday, February 6, 2011

சுவாரஸ்யமான ஒரு பகுதி

சிங்கப்பூர் இணைய இதழ் தங்கமீனில் வந்த ஒரு மனிதனின் ஒரு நகரம் கட்டுரையில் சுவாரஸ்யமான ஒரு பகுதி இங்கே கொடுக்கிறேன்..
என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது.

அந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. இதற்கு நடுவேதான் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. மருத்துவமனை வாரத்தின் பகல்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. விடுமுறைகளில் மட்டுமே நண்பர்களைச் சந்திக்கிற, இலக்கியம் பேசுகின்ற ஆளாய் மாறிப்போனேன். எழுதுவதும் கணிசமாக குறைந்துவிட்டது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார்.

நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.

நானும், அய்யப்ப மாதவனும், ஒரு கோடைகால மதியப் பொழுதில் திட்டம் ஒன்றைத் தீட்டினோம். அவருக்கும் எனக்கும் நெத்திலி மீன் சாப்பிடும் ஆசை வந்தது. நெத்திலி வறுவல் தி.நகரில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஹோட்டல் விருதுநகரில் பிரபலமான உணவுகளின் ஒன்று. அவரும் நானும் சென்று நெத்திலி மீன் வறுவல் ஆளுக்கு ஒன்றாகப் பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். அறையில் வறுவலைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு பீருடன் சாப்பிடுவது திட்டம். கோடைக்கால மதியத்தில் ரம்மியமாக இருக்கும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் வாரிசுகள் ஹோட்டலினுள் நுழைந்தனர். அவர்கள் ஏஸி அறைக்குள் சென்றனர். நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுறாப்புட்டு, இறாவறுவல், நெத்திலி வறுவல் என அவர்கள் அறைக்குள் சென்று கொண்டே இருந்தது. இருமுறை பில் போடும் இடத்தில் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தது. பொறுமையிழந்து இருவரும் சென்று கேட்டபோது நெத்திலி வறுவல் தீர்ந்துவிட்டதாகவும், வேண்டுமானால் சிக்கன் 65 போட்டுத் தருவதாகக் கூறினார்கள். எங்களுக்கு எடுத்து வைத்ததை அரசியல்வாதி குடும்பத்தினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

"முன்பே சொல்ல வேண்டியதுதானே, இவ்வளவு நேரம் காக்க வைத்தா அநியாயமாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வீர்கள்?" எனக்கேட்டேன்.

“அதான் 65 போட்டுத்தரம்னு சொன்னமே சார்” என்றார்கள்

“அட வெண்ணைகளா, அதுக்கு எதுக்குடா உங்க ஹோட்டல் தேடி வர்றோம்?” என படக்கென்று கேட்டார் அய்யப்பன்.

“பாருங்க வி.எம். சென்னையில் ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் அரசியல் உள்ளே நுழைஞ்சிடுது!” ஆற்றாமையுடன் அய்யப்பன் கூறினார்.

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=196

No comments:

Post a Comment