Monday, June 28, 2010

குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்


குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்

ஸ்ரீபதி பத்மநாபா


நான் ஒரு 'நிரீசுவரவாதி' - நாத்திகன் என்றாலும் அம்பலங்களுடனும் பூஜை அனுஷ்டானங்களுடனும் எப்போதும் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. முக்கியமான ஹோமங்களில் வந்து வெறுமனே உட்காருங்கள் போதும் என்று என் நண்பரான தந்திரி ஒருவர் அடிக்கடி அழைப்பதுண்டு. என் வேஷவிதானம் அப்படி. சமீபத்தில் நண்பர் ஜெரால்டு தன் சீரியலில் நடிக்க அழைத்தார். அதுவும் பூசாரி வேடம்தான்.

கட உள் என்ற கருத்தாக்கத்தின்படி பார்த்தால் கோவில்கள் எப்போதும் உள்ளத்தைக் கடக்க வைப்பவைதான். கேரளத்தின் பெரும்பாலான கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் ஒரு தூரத்து உறவினராவது பணியில் இருப்பார். எனவே தங்குமிடம் பெரும்பாலும் கிடைத்துவிடும். உணக்கச்சோறின் ருசியே தனிதான்.

கல்லூரிக் காலங்களில் அடிக்கடி குருவாயுபுரத்துக்கு செல்வதுண்டு. கிருஷ்ணனிடம் கொண்ட ஈர்ப்பு அல்ல; வேறொரு கதையது; இது வேறொரு கதை.

குரு பிரகஸ்பதியும் வாயுதேவனும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் என்பதால் குருவாயுபுரம்; குருவாயூர். அதிகாலை நிர்மால்ய தரிசனம் மிக பிரசித்தி. என் நண்பன் பி.வி.மேனன் சொல்வான்: இந்த அதிகாலை நேரத்தில் வரிசையில் நின்றிருக்கும் எல்லாப் பெண்களின் முகத்திலும் குடிகொண்டிருக்கும் ஒரு கோபிகா பாவம் இருக்கிறதே, இதை தரிசிப்பதற்காகவே இந்த பூலோக வைகுண்டத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.
குருவாயூருக்கு போகிறபோதெல்லாம் மேற்கு நடையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் அந்த முறை பி.வி.மேனன் கூட இருந்ததால் லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று. பனச்சிக்காட் வித்யாதர் மேனனும் நானும் கல்லூரித் தோழர்கள். அவன் எனக்கு ஒரு வருடம் சீனியர். காளிதாஸன் விவரித்த கள்ள சன்யாசி போன்றவன்.


ஒரு சன்னியாசி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டிருந்தார். அதை கவனித்தான் ஒரு வழிப்போக்கன். அவர்களின் சம்பாஷணையை ஒரு செய்யுளாகத் தருகிறார் காளிதாஸன்.

பிக்ஷோ, மாம்ச நிஷேவணம் கிமுசிதம்? கிம் தேன மத்யம் வினா?
மத்யம் சாபி தவப்ரியம்? ப்ரியம் அஹோ வாராங்கனாபிஸ்ஸமம்
வாரஸ்த்ரீ ரதயே குதஸ்தவ தனம்? தியூதேன சௌர்யேண வாம்.
சௌர்யதூத பரிஸ்ரமோடஸ்தி பவத ப்ரஷ்டஸ்ய கான்யா கதி?

சன்யாசியே, இறைச்சி சாப்பிடுவது சரியா?
தவறுதான், மதுவில்லாமல் இறைச்சி சாப்பிடுவது.
ஓ உங்களுக்கு மதுவும் பிடிக்குமா?
பிடிக்குமாவது, வேசிகளைப் போலவே மதுவும் இஷ்டம்தான்.
ஓஹோ, வேசிகளிடம் போக உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?
சூதாட்டமும் திருட்டும்தான்.
சன்னியாசியான நீங்கள் இதெல்லாம் செய்யலாமா?
கதியற்றவனுக்கு வேறு கதி என்ன?

(ஷோலே முதல் மன்மத லீலை வரை பல பெரும் படைப்பாளிகள் இதே போல 'சிந்தித்திருப்பது' உங்களுக்கே தெரியும்.)

காலை தரிசனம் முடிந்த பிறகு அவன் குருவாயூரின் இண்டு இடுக்கான ஒரு இடத்தில் ஓடுபோட்ட ஒரு சிறு டீக்கடைக்கு அழைத்துப் போனான். காலை உணவு இங்கேயா என்று முகம் சுளித்த என்னிடம் ஒரு சாயா மட்டும் சாப்பிடலாம் என்றான். இந்த இடத்தைத் தேடி சாயா சாப்பிட வருகிறான் என்றால் நிச்சயமாக கடைக்காரருக்கு ஒரு மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெண்மணி மட்டுமே. பி.வியைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. 'ரண்டு சாயா இவிடெ, பின்னே ரண்டு ஹோர்லிக்ஸ் டோக்கன்' என்றான் பி.வி. 'ஓ சாய காப்பியெல்லாம் மடுத்து அல்லே...' என்றபடி' ஹோர்லிக்ஸ் வெல கூடி கேட்டோ, ஆயிரம் ரூபா.' என்றாள் அந்தப் பேரிளம்பெண். எனக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவதுபோல இருந்தது. என்ன நடக்கிறது இங்கே? 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே? ஒண்ணும் புரியல' என்றேன். 'பேசாம வா' என்றான். ஒரு டாக்சி பேசினான். சாவக்காடு போய் அங்கே ஒரு மணிநேரம் வெய்ட் செய்து திரும்பி வரவேண்டும் என்றான்.

ஒரு காலத்தில் சவங்களின் காடாக இருந்தது சாவக்காடு. மத்தியின் மணம் வீசும் கடலோர சிறு நகரம். குருவாயூரிலிருந்து பக்கம்தான். ஒரு தனிமையான பங்களாவின்முன் கார் நின்றது. வராந்தாவில் கொம்பன் மீசை வைத்த ஆள் மப்டி போலீஸ் போல இருந்தான். பிவி டோக்கனைக் காண்பித்தான். 'ம்... அகத்து போய்க்கோ' என்றான் அவன்.

உள்ளே மாடிப்படியேறி ஒரு அறை. விசாலமான அறை. அங்கு மூன்று அறைகளுக்கான வழிகள் இருந்தன. இங்கேயும் ஒரு பெரிளம்பெண் தோன்றினாள். பிவியைப் பார்த்து சிரித்தாள். 'சாயயோ காப்பியோ அதோ ஹோர்லிக்சோ' என்றாள். 'ஹோர்லிக்ஸ்' என்றபடி டோக்கனைக் கொடுத்தான். 'ம்... இரிக்கூ' என்றபடி ஒரு அறையை நோக்கிப் போனாள். பிவி அந்தக் கதவுகளைக் காட்டி ஒன்று சாயா 100 ரூபா, இன்னொன்று காபி 500 ரூபா, அது ஹோர்லிக்ஸ் 1000 ரூபா' என்றான். ஹோர்லிக்ஸ் கதவு திறந்தது.... என்ன சொல்ல... கிருஷ்ண கிருபா சாகரம் ! ஏழு கோபிகைகள் நின்றிருந்தார்கள். 'எல்லாரும் கோளேஜ் குட்டிகளாணு...' என்றாள் பேரிளம்பெண். நான் பிவியை முறைத்து 'இதுக்குத்தான்னு முதல்லயே சொல்லிருந்தேன்னா நான் வந்திருக்கமாட்டேன்ல... ஆளை விடு சாமி' என்றபடி கீழே இறங்கினேன்.

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் 'வி.கே.என்'னின் 'பையன் கதைகளின்' ஒரு பகுதி நினைவுக்கு வந்தது:
தங்களின் வேசியிடம் போன அனுபவங்கள் பற்றி மூன்ற பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். பையன் சொல்கிறான்:

என் அனுபவம் வேறு மாதிரி. ஏஜென்ட் என்னிடம் வந்து, சார் மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருத்தி நடுத்தர வயதுக்காரி. ஒருத்தி இருபத்தெட்டு வயதுக்காரி. இன்னொருத்தி கொக்காலையை சேர்ந்தவ. இருபது வயசு. பி.ஏ. பாஸ் பண்ணிருக்கா சார்.

அவளே வரட்டும். வரும்போது மறக்காம சர்டிபிகேட்டையும் எடுத்தாரச் சொல்லு...........!

1 comment: