Saturday, June 18, 2016

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”

''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்பர் குமரகுருபரனுக்கு வழங்கப்படுகிறது.


அவரது கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்பு அனுபவத்தை கொடுப்பவை. தனக்கே உரிய பிரத்யேக மொழியையும் , தனிமையின் நிழல்களை கொண்டாட்டமாக மாற்றும் தன்மையும் கொண்டவை. இருண்மையான காட்சிபடிமங்களை இவ்வளவு எளிதாக கவிதையாக மாற்றும் தன்மை குமரகுருபரனுக்கே உரித்தானது .இவரது ஆதர்ச கவிஞர்கள் ஆத்மாநாமும், பிரமிளும் என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். நவீன தமிழ் கவிதைகளுக்கு தனது"ஞானம் நுரைக்கும் போத்தல்" '' மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' என்ற இரு தொகுப்புகளின் மூலம் புதிய திசையை காட்டியவர் என்ற முறையில் இந்த விருதுக்கு முழுமையான தகுதி உடையவர் . அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தனிப்பட்ட முறையில் பெரும் கொண்டாட்ட குணத்தை உடையவர் குமரகுருபரன் . அவருடன் நானும், நண்பன் விநாயக முருகனும் சென்னையில் இருந்து காரில் விமர்சகர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் மகள் திருமணத்திற்காக மதுரை சென்றோம், கிடத்தட்ட ''தில் சாத்தா கே'' படத்தில் மூன்று நண்பர்கள் கோவா போவார்களே அதுக்கு இணையான உற்சாகமான அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் வரும் அமீர்கானின் ஆளுமைக்கு இணையான உற்சாகம் கொண்டவர் குமார்! விருதுக்குரிய கொண்டாட்டத்தை விரைவில் தொடங்கட்டும் ! வாழ்த்துக்கள்!
விருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை

குற்றம் தவிர்

தண்டனைகள்
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டு
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment