Monday, April 25, 2011

டார்க் ப்ளாக்




சிறுகதை

"சேவ்" மறுவாழ்வு மையத்தின் கட்டிடம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அந்த நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் வேறு கட்டிடம் இல்லை. ஒரு தேவாலயத்தின் தோற்றத்தைப் போல சேவ் கட்டிடம். முகப்பில் குடி குடியைக் கெடுக்கும். குடிகாரர்களின் மறுவாழ்வு மையம் என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டு. தனது ஆயுள் காலத்தின் கடைசி நிமிடத்தினை உணரத் தொடங்கிக் கொண்டிருந்தது.

அந்தக் கட்டிடத்தின் வாசல் கதவை ஒட்டி மேஜை மேல் ஒரு குறிப்பேடு இருந்தது. இதுவரை யாரும் அந்த குறிப்பேட்டில் எதுவும் எழுதவில்லை. ரா.சரவணன் (வயது : 19, த/பெ. ராதா கிருஷ்ணன், தொழில் : மாநில அரசு அதிகாரி, வருமானம் : ஐந்து லட்சத்திற்கு மேல் வருடத்திற்கு) எனக் குறிப்பேட்டில் முதன் முறையாக எழுதினான். புகார் இல்லை. "சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க" என எழுதி தனது கையெழுத்தைப் போட்டிருந்தான். அவனை இன்று காலையில் சேவ் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவனுடன் அவனது அம்மா ரா.சுசீலாவும், இளைய சகோரன் ரா.அபிஷேக்கும் (வயது 11) வந்திருந்தான்.

சேவ் மறுவாழ்வு மையத்தின் பிரதான அலுவலக அறை அவன் அருகில் அவனது அப்பாவும், மையத்தின் சீனியர் டாக்டர்.பரந்தாமனும் அமர்ந்திருந்தனர். ரா.சரவணனுக்கு அறை ஒதுக்கப்பட்டது. C பிளாக்கில் 11-ம் நம்பர் அறை. C பிளாக் பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் ஒதுக்கப்படும்.

ரா.அபிஷேக் தனது சகோதரனுக்கு வாழ்த்துச் சொன்னான். கைகுலுக்கினான், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பைவ் ஸ்டார் சாக்லெட்டை எடுத்து அவனுக்குத் தந்தான். ரா.சரவணன் வாங்கிக் கொண்டான்.

பிறகு சாக்லெட்டின் உறையைப் பிரித்துத் தின்றான் அவர்கள் புறப்பட்டனர். சாலையை கடந்து செல்லும் காரின் சத்தம் சரவணனின் காதுகளுக்குக் கேட்டது. C பிளாக்கிற்கு வார்டன், அவனை அழைத்துச் சென்றார். 11ஆம் நம்பர் அறை திறந்திருந்தது. இரண்டு படுக்கைக் கொண்ட அறை. மறுவாழ்வு மையத்தில் தனித்த படுக்கையறை எதுவுமில்லை. தற்கொலை முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டுமென்பதற்காக மூன்று படுக்கையறைக் கொண்ட அறைகளாகத்தான் மையம் ஏற்பாடு செய்திருந்தது. ரா.சரவணன் 11 ஆம் நம்பர் அறைக்குச் சென்ற போது ச.முருகேசன் (வயது 49) அப்போதுதான் உறங்கி எழுந்திருந்தார். வராண்டாவிற்கு வந்து பராக்கு பார்த்தவரை வார்டன் "உள்ளாறப் போப்பா, டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்" என்று விரட்டினார். ரா.சரவணனும், ச.முருகேசனும் ஒருவரையயாருவர் பார்த்துக் கொண்டனர். ஏனோ அவர்கள் அந்நொடியிலிருந்து நெடுநாட்கள் புரிந்து கொண்டவர்களைப் போல முகம் மலர்ந்து சிரித்தனர். ஒருவரையயாருவர் அறிமுகம் செய்து கொண்டனர். "அண்ணே, உங்களுக்கு எத்தனை நாள் ட்ரீட்மெண்ட்"

"இன்னும் பதினைஞ்சு நாள், பாக்கி இருக்கு சரவணா"

"எனக்கு முப்பது நாள், எனக்கு இந்த இடமே பிடிக்கலை இங்கிருந்து போனால் போதும்னு தோணுது அண்ணே"

"உனக்கு இங்க ட்ரீட்மெண்ட் எடுக்கப்பிடிக்கலையா"

அவன் அமைதியாக இருந்தான். தனது பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த கோல்டுபிளாக் சிகரெட்டை எடுத்தான். ச.முருகேசனுக்கு சந்தோஷம் அவரது உள்ளங்கைகளைத் தேய்த்தபடி அந்த அறையின் வாசல் கதவிற்கு பின்பாக ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டையை எடுத்துத் தந்தார். சரவணன் பற்றவைக்கப்போனான். கொஞ்சம் பொறு டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வர்றாங்களான்னு பார்க்கிறேன் என்றார். பிறகு எடுத்து வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். வராண்டாவில் யாரும் இல்லை. B பிளாக்கிலோ அல்லது A பிளாக்கிலோ நடக்கின்ற சத்தம். கட்டிடம் முழுக்க அதிர்ந்தது. முருகேசன் சப்தத்தை வைத்து எத்தனை நபர் என்று யோசித்தார். முருகேசன் மையத்திற்கு வந்து மூன்ற மாதங்களுக்கு மேலாகிறது. யார், யார் எந்த நேரத்தில் வருவார்கள் என்பது அவருக்குத் தெரியும். பிறகு அவர் அவனைப் பார்த்து "ம்ம்.. பத்த வைய்யி, இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றார்.

சிகரெட்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து முருகேசனிடம் கொடுத்தான் சரவணன். அவர் கண்களை மூடிக்கொண்டு புகையை இழுத்து வெளியே விட்டார். முகம் தெம்பாக தெரிந்தது.

"இன்னும் கொஞ்ச நாள்தான், அப்புறமா போய் என் பிரண்ட்ஸ்களோட குடிச்சிட்டு ஜாலியா இருப்பேன்."

"திரும்பவும் டிரிங்ஸ் பண்ண ஆரம்பிக்கலாமா? மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு டிரிங்ஸ் யூஸ் பண்ணினா ரத்த வாந்தி எடுப்பீங்கன்னு டாக்டர் சொன்னாரே?"

"அதெல்லாம் சும்மா, இந்த ஹோமில தர்ற மருந்து மாத்திரை எல்லாம் நோ யூஸ். வீட்டிலே நம்மளை அவங்களோட மனத்திருப்திக்காக, அனுப்புறாங்க, நாமளும் அவங்களோட ஆத்திரத்திற்கு வர்றோம். ஹோமிற்கு வர்றவங்க எல்லோரும் நல்ல குணமாயிட்டா அப்புறம் இத்தனை டாஸ்மாக் எதுக்கு, குடிச்சு பழகினவங்களோட மனசு போதையைத் தேடிக்கிட்டேதான் இருக்கும்".

"அப்புறம் நாம ஏன் இங்க இருக்கணும், இங்கிருந்து போயிடலாம்ல, தப்பிச்சு கூட போயிடலாம்".

"தப்பிச்சுப் போனா அவங்களுக்குதான் லாபம், வீட்டுக்கு போனவுடனே நம்மளைத் திரும்பவும் இங்கதான் கொண்டு வந்து விடுவாங்க, இல்லை வேற ஏதாவது ஒரு ஹாம்,

அங்கே போனா ரீடேக்னு சொல்லி நம்மளை வேறொரு டார்க் ப்ளாக்கிலே போட்டுடுவாங்க, டார்க் பிளாக்குங்கிறது, எப்போதும் இரண்டு மூன்று பேரும் நம்மளை போலீசு மாதிரி மோப்பம் பிடிச்சுட்டே இருப்பாங்க, எதுக்கெடுத்தாலும் அடி உதை. அடிக்கிறதுக்கு தனி ரூம். தனி ஆளு, அதுக்கு பேசாம ருமிற்குள்ளேயே தர்ற மாத்திரையை தின்னுட்டு இருக்கலாம்".

"இங்கிருந்து யாரும் தப்பிச்சு போனதில்லையோ".

"இந்த பெட்டு காலியா கிடக்குது பார், சிங்காரவேல்னு ஒருத்தன், பெரிய பேட்டை ரவுடியா திரிஞ்சவன், எந்நேரமும் தண்ணிலதான் இருப்பான், வந்த ரெண்டு நாள்ல தப்பிச்சான், வெளியே போய் பார்ல தகராறு பண்ணி போலீஸ்ல மாட்டிக்கிட்டான், அங்கேயும் அடி உதை, அவங்க வீட்ல மறுபடியும் இங்கதான் வந்து சேர்த்தாங்க, டார்க் ரூம்ல போட்டாங்க, நேரத்துக்கு சாப்பிடனும், இவன் மறுத்தான், பிவிசி பைப்ல முட்டியிலேயே அடிய போட்டாங்க, இப்ப இருக்கிற இடம் தெரியாம இருக்கான்".

"ஆமா சரவணா நீ எத்தனை வருஷமா குடிக்கிற.."

"அண்ணே, இரண்டு, மூன்று தடவை குடிச்சிருப்பேன், அதுவும் பியர்தான் அப்புறம் வழக்கமாயிச்சு முதல் தடவை என்னோட லவ்வர் என்கிட்டே லவ் லெட்டர் கொடுத்தப்ப, எனனோட பிரண்ட்ஸ் ட்ரீட் கேட்டாங்க. பாருக்கு போய் பீர் சாப்பிட்டோம். அப்பா அதை கண்டுபிடிச்சுட்டாரு, திட்டு, அடி, உதை அப்புறம் என்னோட் லவ்வர் அவளோட பக்கத்து வீட்டுக்காரனோட சேர்ந்து சினிமாவுக்கு போனாள். அவன் கூட சேர்ந்து டூவீலரில் சுத்துறா. அவன் என் முன்னாலேயே கிஸ் தர்றான். எனக்கு ஆத்திரம் வருது, ஒரு கோன் ஐஸ்வாங்கி இரண்டு பேரும் சாப்பிட்டதை பார்த்துட்டு என்கூட படிக்கிற சாரு சொன்னாள். நீ என்னை லவ் பண்றயா. இல்லை அவனை லவ் பண்றயான்னு கேட்டேன். இரண்டு பேரையும்தான் அப்படின்னு சொன்னாள். எனக்குப் பொறுக்க முடியலை. நேராக பாருக்கு போய் இரண்டு பீர் சாப்பிட்டேன். வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்துட்டேன். அப்போதான் எங்க அப்பா ஹோமில கொண்டு போய் விட்டுடுவேன்னு சொன்னாரு !"

ரா.சரவணன் சொல்லி முடித்ததும் சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திப பற்ற வைத்துக் கொண்டான். அவளும், உன்ன மாதிரி ரெண்டு கெட்டான்தான் போலிருக்க அப்புறம் என்னாச்சு,

"அடிக்கடி அவள நினைச்சு அடிக்கடி பாருக்கு போய் பீர் சாப்பிட ஆரம்பிச்சேன். வீட்லே இருந்து காசு திருடிட்டு போயிடுவேன்".

"ம், அப்புறம் என்னாச்சு ?" "ஒரு நாள் போதை அதிகமாகி, பீர்பாட்டில்ல உடைச்சு, பக்கத்து வீட்டுக்காரன குத்தப்போயிட்டன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், உனக்குச் சின்னப் பொண்ணு கேக்குதா! "வக்காளி" வெளியே வாடான்னு, அவன் போலீசுக்கு போன் பண்ணினான்".

"போலீஸ் வந்து விசாரணை பண்ணியது. அப்பா பெரிய பதவியில் இருக்கிறதுனால, பிரச்சனையை பேசு முடிச்சிட்டாரு… போலீசும் போயிருச்சு.. அவ வீட்டுக்கு போன் போட்டேன், நீ அவன பார்க்கிறது தெரிஞ்சா உன்னையும் ஒரு நாள் போட்டுத்தள்ள வருவேன்னு சொன்னேன். அவ மிரண்டு போய் அவன்கிட்ட இருந்த தொடர்ப கட் பண்கிட்டா.. என்னையும் மட்டும்தான் லவ் பண்றதா இப்ப சொல்றா... ஆனா என்னால பீர் அடிக்கிறத மட்டும் விடமுடியல... அதான் எங்க வீட்ல கொண்டாந்து இங்க சேர்த்துட்டாங்க..."

முருகேசன் பெருமூச்சு விட்டார். அறையின் மின் விசிறியை வேகத்தில் சுழலவிட்டான் சரவணன். அப்போது பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. மதியச் சாப்பாடு நேரம் என்று முருகேசன் அவனிடம் சொன்னார்.

மதியச் சாப்பாடு முடித்துவட்டு கொஞ்சநேரம் சரவணனுக்கு மற்ற ப்ளாக்குகளை சுற்றிக் காண்பித்தார் முருகேசன், விதவிதமான மனிதர்கள். விதவிதமான கதைகள் அவர்கள் சூழ்ந்திருந்தது. கொலை செய்துவிட்டு தப்பித்து வந்தவன் மனநோயாளி, ஓரினச் சேர்க்கையாளன், பீடி திருடிக் கொடுப்பவன், கஞ்சா அடிப்பவன் முதல் ப்ரவுன்சுகர் எடுத்துக் கொண்டவன் வரை வேறு வேறு ப்ளாக்குகளில் அடைத்திருந்தனர். அவர்களைப் பார்க்க சரவணனுக்கு பயமாக இருந்தது. அநாயசமாக அவர்களின் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தார் முருகேசன்.

இந்த மையத்தை விட்டு எங்காவது ஓடிப் போக வேண்டும் என்று இருந்தது. அப்போது ஒரு இடத்தில் பொடீர், பொடீர் என சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார்கள். அதுதான் டார்க் ப்ளாக். ஜீரோ வால்ட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதுதான் அந்த அறையின் மொத்த வெளிச்சமே. வேறு எந்தவகையிலும் வெளிச்சம் உள்ளே வர முடியாதபடி அந்த அறைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒருவனை அந்தரத்தில் தொங்கவிட்டு இருந்தார்கள். இரண்டு பேர் பிவிசி பைப்பால் அவனது முட்டியில் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஆ வென்று அலறிக் கொண்டிருந்தான்". "ஏண்டா, நாயே குடி கேக்குதா, உனக்கு, ஒளிச்சு வைச்சு குடிக்கிறியா என ஒருவன் சொல்லி அடித்தான்".

ரா.சரவணின் உடல் சில்லிட்டது முருகேசன் அவனை C பிளாக்கிற்கு கூட்டிச் சென்றான். "இங்க மறைச்சு வைச்சு குடிக்கிறவன், தப்பிச்சு போக டிரை பண்றவன், சொல்லுறத கேக்காதவன், எல்லாரையும் இந்த டார்க் ப்ளாக்கிலதான் அடைச்சு வைச்சு சித்தரவதை பண்ணுவாங்க".

"திரும்பி வீட்டுக்கு இங்கிருந்து இவங்க போக முடியாதா".

வீட்ல இருக்கிறவங்க கேட்டா, இன்றும் சரியாகலை என்று சொல்லி காசை பிடுங்கவாங்க முடிஞ்ச மட்டும், பணம் கிடைக்கலைனா இவங்கள துரத்தி விட்டுடுவாங்க.

"எனக்கு பத்தாயிரம் ரூபா முன்பணமா, வாங்கி இருக்காங்கண்ணே".

"உங்கப்பா பெரிய ஆபீஸர் ஆச்சே, அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுவிடுவாங்கன்னு நினைக்கிற. இன்னும் சில ஆயிரம் பிடுங்குவானுங்க. சரவணனை பயம் பிடித்தாட்டியது".

"இங்கிருந்து எப்படியாவது தப்பிக்கணும், நீங்கதான் உதவி செய்யணும் என்று அழ ஆரம்பித்தான்".

முருகேசனுக்கும் அந்த ஆசை தொற்றியது. இவர்கள் என்ன முடிவது செய்வது இரண்டு வாரம் கழித்து வெளியே போவது என்று? இன்றே வெளியேறினால் என்ன? என்று அவருக்கு எண்ணம் வந்தது. சுதந்திர காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி யோசிக்க ஆரம்பித்தார்.

அன்றிவு அவர்கள் மையத்தை விட்டு வெளியேறி விடுவது என முடிவு செய்தார்கள். இருவருக்கும் அங்கு இருப்பதற்கு பிடிக்கவில்லை வீட்டிற்கு செல்லவும் பயம் இருந்தாலும், அவனுக்கு டார்க் பிளாக் அதிர்சிக்குள்ளாக்கியது.

மையத்தின் அலுவலக அறை எப்போதும் திறந்துதான் இருக்கும். இரவு வேளையில் வார்டன் அவரது அறைக்குச் சென்று விடுவார். டாக்டரின் உதவியாளர் மட்டும் அந்த அறையில் இருப்பார். அவரும் புகைப்பிடிப்பதற்காக அடிக்கடி வாசலுக்கு வேளியே வந்து நின்று கொள்வார்.

முருகேசன் கடந்த ஒரு வாரமாக இதையயல்லாம் பார்த்துவிட்டுதான் சரவணனிடம் சொன்னார். அவர்கள் இருவரும் C பிளாக்கை விட்டு வெளியேறி நடந்தார்கள். அலுவலக அறைக்கு அந்து டி.வி. பார்ப்பது போல நின்றனர். இரவு தூக்க மாத்திரைகளை சாப்பிடவில்லை. டாக்டர் தந்த மாத்திரைகளை நொறுக்கி கழிப்பறையில் போட்டுவிட்டார்கள்.

முருகேசன் சந்தர்ப்பம் பார்த்து அறையின் கதவைத் திறந்து வெளியேறினார். பின்பாகவே சரவணனும் ஒரே ஓட்டமாக ஓடிவந்தான். அவர்கள் நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டமெடுத்தார்கள். டாக்டரின் உதவியாளர் புகைத்துக் கொண்டிருந்த கீழே போட்டு திரும்புவதற்குள் இப்படி ஓடிவிட்டார்கள் என்று மணியை அழுத்தினார்.

பெல் சத்தம் கேட்டு உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வார்டன் என்னமோ, ஏதோ என்று வேட்டியைக் கட்டியபடி வந்தார். அலுவலக அறையினும் சிறு கூட்டம் கூடிவிட்டது. டாக்டரின் உதவியாளனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் முன்னால் நடந்த சம்பவத்தை அவர் சொல்வதற்கு வெட்கப்பட்டார் கூடவே பயந்து கொண்டிருந்தார்.

சரவணனது வீட்டிற்கு போன் செய்து வார்டன் தகவலைச் சொன்னார். அதே போல முருகேசன் வீட்டிற்கும் தகவல் சொன்னார்கள். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பி எல்லோரும் இருக்கிறார்களா என்று மற்ற ப்ளாக்குகளில் சரிபார்க்கச் சொன்னார் வார்டன். தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உறங்கினவர்கள் எழுப்பியதும் உளர ஆரம்பித்தார்கள்.

சரவணனும், முருகேசனும் மூச்சு வாங்கியபடி ஓடிக் கொண்டிருந்தனர். முருகேசனுக்கு ஓடிய வேகத்தில் செருப்பு அறுந்துவிட்டது. கழற்றி தூக்கி எறிந்து விட்டு ஓடினார். ஏற்கனவே அவர்கள் பேசி வைத்திருந்தனர். நேராக பேருந்து நிலையத்திற்குதான் ஓடவேண்டும் என்று யைமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவு ஓடவேண்டும் என்றதும் முதலில் அசந்தவர், பிறகு நம்பிக்கை வந்தவராக ஓட ஆரம்பித்தார் சரவணனும் வேகமெடுத்தான்.

அவர்கள் ஒன்றரை மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர். டீக்கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முருகேசனுக்கு கை நடுங்கியது. அவருக்க ஏற்கனவே சிறிது ரத்த அழுத்தம் இருந்தது. தண்ணீரை வாங்கி முகத்தில் அடித்துக் கொண்டார். அங்கிருந்த மரப்பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். அந்த இடத்தில் சிலர் சாக்கை விரித்தும், பேப்பரை விரித்தும் படுத்திருந்தனர். சரவணன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு இடத்தில் சிறுநீர் கழித்துவந்தான்.

சற்று நேரத்தில் போலீஸ் விசில் சத்தம் கேட்டது. முருகேசன் எழுந்துநின்றார். இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்த இடத்திற்கு வந்தனர்.

"ஏய் யார்ரா இந்நேரம்" என்று டார்ச்லைட் அடித்தார்கள்.

கையிலிருந்த லத்திக்குச்சியால், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து எழுப்பினார்கள், பின் முருகேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.

"யாருப்பா நீங்க, வெளியூர் ஆளங்க போலத்தெரியுது".

"ஸார் நான் பேங்க் ஸ்டாப்! ஒரு வேலை விஷயமாக இங்கேவந்தேன் முருகேசன் மூச்சுவாங்கியபடி சொன்னார்".

"இவன் யாரு சரவணனைக் காட்டி கேட்டார்கள். என் ஊருப்பையன் உதவிக்கு கூட்டி வந்தேங்க ஏன் இப்படி வியர்த்து ரெண்டு பேரும் உட்கார்ந்து இருக்கீங்க எங்கியோ பாக்கெட் அடிச்சு வந்த மாதிரி".

சரவணன் முழித்தான் முருகேசன் அமைதியாக இருந்தார். சரவணனைத்தான் முதலில் கைவைத்தார்கள். ஓங்கி "சப்பென்று" கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. உண்மையை உளறினான் சரவணன். முருகேசன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தார். மையத்தின் பெயரைக் கேட்டார்கள். சொன்னதும் ஹோமிற்கு போன் செய்தார்கள். டாக்டரின் உதவியாளர் ஆட்டோ எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறினார். B1 போலீஸ் ஸ்டேஷன் வந்து அழைத்துக் கொண்டு போங்கள் என்றார் போலீஸ்காரர்.

முருகேசனும், சரவணனும் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்தார்கள். அவர்களை கடந்து ஒரு ஆட்டோ வேகமாக ஓடியது. போலீஸ்காரர் அவனை கைதட்டி அழைத்தார். அதில் மூவரும் ஏறிக் கொண்டனர். வண்டி போலீஸ் ஸ்டேஷன் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சரவணன் டார்க் ப்ளாக்கைப் பற்றி நினைத்துக் கொண்டான். பிளாஸ்டிக் பைப்புகளில் அடிவிழுவது போல நினைத்துக் கொண்டான்.

"சார், சார், ஹோமிற்கு வேண்டாம் சார், எங்க அப்பாவிற்கு போன் போடுங்க", "இனிமேல் குடிக்கமாட்டேன் சார், சத்தியா குடிக்கமாட்டேன் பிளீஸ் சார் அப்பாவிற்கு போன் போடுங்க" என்று அழுது கொண்டே வந்தான். முருகேசன் தனது மூத்த மகனை மனதில் நினைத்தார். அவனின் காதல் தற்கொலைக்குப் பிறகு தான் அவர் அதிகம் குடிக்க ஆரம்பித்து இருந்தார். அவரறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

போலீஸ் ஸ்டேஷனை ஆட்டோ நெருங்கிய போது, மையத்தின் வார்டனும், உதவியாளரும் வாசலில் நின்று கொண்டிருந்தனர். சரவணன் தன் கண்களை மூடிக் கொண்டான். தங்களது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை முழுமையாக பறிபோயிருப்பதை அக்கணம் உணர்ந்தார் முருகேசன்.

விஜய மகேந்திரன் மொபைல் எண் 9444658131
உயிரோசை இணைய இதழில் வெளியான கதை

5 comments:

  1. அருமையான நடை .ரெம்போ நல்ல இருக்கு

    ReplyDelete
  2. படித்தவுடன் மனசு வேதனைப்படுகிறது.

    ReplyDelete
  3. அருமையான கதை. இதனை எழுத நிச்சயம் பெரிய உழைப்பும், ஆய்வும் தேவைப்பட்டிருக்கும். போதைக்கு அடிமையானவர்களை இத்தகைய மருத்துவ மனைகள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்து கொள்ள நினைப்பதில் உள்ள வணிகம் மனதை கனக்க செய்கிறது. நீங்கள் சொல்ல விளைந்ததும் அதுவே என உணர்கிறேன். மனதில் வலி உண்டாக்கிய கதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. Raji Kumaraswamy This story is very shocking....how can these half baked doctors can take someones life in their hands...that too the dark block thing...they are just alcohol addicts...while there are laws that evn mentally challenged should not be phyically abused..how come alcoholics be treated like this....ayyo...i feel ashamed to be a part of this society...really

    ReplyDelete
  5. கச்சிதமான நடை. எடுத்துக்கொண்ட கருவை தொய்வில்லாமல் எடுத்து சென்றிருக்கிறீர்கள். வணிகமயமாகி விட்ட சமூகசூழலை,சேவை என்ற பெயரால் பணம் பண்ணும் சில போலி மையங்களை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள், உங்கள் எழுத்தின் மூலம். மருத்துவமனையின் சூழலை ஓரிரு உரையாடல்களின் மூலமே தெளிவாக புரிய வைத்திருகிறீர்கள். இரு வேறு பட்ட தந்தைகளின் மன ஓட்டங்கள் கொடுக்கும் அனுபவம் யோசிக்க வைக்கிறது. மொத்தத்தில் விஜயின் இந்த சிறுகதை வெற்றிகரமான ஒரு படைப்பு. வாழ்த்துக்கள் விஜய்.

    ReplyDelete