Friday, July 30, 2010

இலக்கியவாதிகளே....தீவிரவாசகர்களே உடனடியாக பயன்பெறுங்கள்

ஓர் விளம்பரம்


பிரதி உயிர் அல்லது
புரட்சி நிச்சயம்... அதனால் கலகம் வேண்டாம்...

எல்லாமே மெய்நிகர் தோற்றம்தான்

A LOT CAN HAPPEN OVER COFEE

தமிழ் மொழியின் வாசகப்பரப்பு விரிந்திருப்பதாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வரை தமிழர்கள் தமிழ் புத்தகங்களையே தலையணை போல் அனுசரிக்கத் தொடங்கியிருப்பதாலும், விரிவாகியிருக்கும் வாசகத்தேவைக்கு சேவை செய்ய பிரதி வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது எழுத்துச் செயல்பாடுகளுக்குத் தளம் அமைப்பதோடு மட்டுமல்லாமல் அறிவின் சகல அசைவுகள் மீதும் தன் ஒளியைப் பாய்ச்சத் தலைப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய கலைவெளியில் பின் காலனியம், கீழை மார்க்சியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், தமிழ்த்தேசியம், முற்போக்கு இலக்கியம், இந்து தேசியம், தலித்தியம், திராவிடம் இந்துத்துவ தமிழ்த்தேசியம், வெகுஜனக் கலாச்சார ஆராய்ச்சி, விளிம்புநிலை ஆய்வுகள், மானுடவியல், தொண்டு கிறிஸ்தவம் எனப் பல போக்குகள் இன்று பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
இப்போக்குகளில் இயங்கும் எழுத்தாளர்களின் பிரதிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் பிரதி உயிர் - ன் நோக்கம்.
மேற்கொண்ட கருத்தியல்கள் அத்தனையும் கலந்து கட்டியோ, ஒரு கருத்தியலில் ஆணித்தரமாக நின்றோ, ஒருவர் ஒரு இதழை ஆரம்பிக்க விரும்பினால் அவர்களுக்குத் தேவையான படைப்புத் தேவைகளைப் பிரதி உயிர் சிறப்பான முறையில் செய்து தரும்.

ஒவ்வொரு இலக்கிய அரசியல் போக்கு சார்ந்தும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள், செயலாளிகள் மற்றும் வாசகர்களின் வங்கியைத் தனித்தனியே நாங்கள் விசேஷமாகப் பராமரித்து வருகிறோம்.

இதழ்களை அழகுறத் தயாரித்துத் தருவது, புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு பிரதி உயிர் தன் இயக்கத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை.

வெளியீட்டு விழாக்கள், விமர்சனக் கூட்டங்களைத் திட்டமிடுவதோடு விழாவுக்கு வருவதற்கு எப்போதும் தயாராகவுள்ள தலைசிறந்த மூத்த எழுத்தாளர்கள், சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்,விமர்சகர்கள், பெண்ணியவாதிகள்,பிரமுகர்கள் பட்டியலும் எங்களிடம் உண்டு. நிகழ்ச்சியின் வசதிகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப தனித்தனிக் கட்டணங்கள் உண்டு.

I AM NOMORE THAN THE WORDS YOU ARE NOW READING

பிரதி உயிரின், சமீபத்திய அறிமுகமாய் அது தலைநகரத்தில் நடத்திய சில விருந்துகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதற்குப் பிரதி உயிர் அமைப்பின் உறுப்பினராக வேண்டும். பிரதி உயிர் பதிப்பிக்கும் புத்தகங்கள் உறுப்பினர்களுக்குத் தள்ளுபடியில் வழங்கப்படுவதும் உண்டு. இந்த விருந்துகளில் பிரதி உயிரின் உறுப்பினர்கள், விருந்தினர்களாக கலந்துகொள்ளலாம். சற்று வித்தியாசமான சிந்தனை கொண்ட அல்லது அப்படி நினைக்கும் இளம் யுவதிகள் எல்லோருக்கும் உறுப்பினர் கட்டணம் இலவசம். மூன்று மாதங்களில் பாய்கட் தொடங்கி மொட்டை வரை அவர்கள் ஒப்பனை மாற நாங்கள் கியாரண்டி. ஆவணப்பட, குறும்பட, இனவரைவியல் திரை இயக்குநர்களாகத் தமிழில் பரிமளிக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்களிடம் நிதி சேகரிப்பதற்கும் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விருந்துகளில் மதுபானம் இலவசம் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. மதுப்பழக்கத்தை முதலில் ஆரம்பிக்கிறார் என்றால் அவர் அதை விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும். நட்சத்திர ஓட்டலில் குடித்து சலிப்பானவர்களுக்கு கவிதை, அழகியல், ஐரோப்பிய சினிமா, புரட்சி பற்றிப் பாதுகாப்பாக உரையாடியபடியே குடிப்பது நல்ல அனுபவமாய் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதோடு அங்கே தமிழின் இளம் சினிமா இயக்குநர்களையும், அரசியல் ஆளுமைகளையும் விருந்து நிகழ்ச்சிகளில் திடீரென்று சந்திக்கும் அனுகூலம் உண்டு. இந்த நகர விருந்துகளை தமிழக கிராமங்களை நோக்கி நகர்த்தும் திட்டங்களும் உண்டு. இதற்கான திட்ட நிரல் போர்டு அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உலகமயமாதல் போக்கில் மையமற்ற பிராந்தியப் பண்புகளும் முக்கியத்துவம் பெறும் தருணம் இது.

மார்க்கெட்டிங் துறையில் தனித்திறன் இருப்பதாக நம்புபவர்கள், முதல் இல்லாமலே நடுவாண்மை செய்யக்கூடிய கலாச்சார இடைவெளிகள் தமிழில் இதுவரை நிரப்பப்படாதது. ப்ராஜக்ட் என்னும் ஒரு சொல்லை மாற்றி மாற்றிச் சொல்லத் தெரிந்தால் போதும். அதுபோக சிறுபத்திரிகை அறிவுத்தளத்தில் உள்ள கலைச்சொற்கள் மற்றும் குழுக்குறிகள் ஆகியவற்றை 30 நாட்களில் தபாலில் கற்றுக்கொள்ளக்கூடிய பயிற்சிப் பட்டறைகளும் நடத்தத் தற்போது திட்டம் உள்ளது. இத்திட்டம் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழில் ஐம்பது ஆண்டுகளில் உருவான கலை இலக்கியப் போக்குகளை குறுக்குவெட்டாகத் தீண்டும் ஒரு க்ராஷ் கோர்ஸ் இது.

மானுடவியல், தொல்லியல், நாணயவியல், குறியியல் முதல் நுண்கலாச்சாரம், நாட்டார் மரபுகள் வரை கிளாசில் உள்ள விஸ்கியின் ஒற்றை மிடறில், மடிக்கணினியின் ஒற்றைச்சொடுக்கு வேகத்தில் செய்திகளை நீங்கள் பரிமாற முடியும். தமிழர்களில் யாரும் யார் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கேள்விகளுக்கும்(?) இது பொருந்தும். அதனால் அவை தீவிரமான விவாதமாக மாறவேண்டியது இல்லை. தீவிரமும் தேவை இல்லை. ஆனால் சூழ்நிலைக்கேற்ப தீவிரபாவம் அவசியம்.

லத்தீன் அமெரிக்க சினிமா, கறுப்பு சினிமா என்று சும்மாக் கிடந்த தமிழ் சினிமாவை ஒப்பிட்டு உசுப்பிவிட்டுத் தற்போதைய சினிமாவின் போக்கையே மாற்றியுள்ள பின்நவீனத்துவ சினிமா விமர்சகர்களால், வெகுஜன சினிமா இயக்குநர்களுக்கு வெகுஜனப் பத்திரிகை சினிமா விமர்சனங்களில் ஆர்வம் இல்லாத ஒருநிலைமையே ஏற்பட்டுவிட்டது. தமிழின் காத்திரமான தளமாற்றங்களில் ஒன்று என்றே இதைக் குறிப்பிட வேண்டும்.

சினிமா பி.ஆர்.ஓ.க்கள் அனைவரும் பிரதி உயிரைத் தொடர்பு கொண்டு பிரதி உயிர் நடத்தும் இதழுக்கு விளம்பரம் தந்தால் நயமான முறையில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களைக் கொண்டு பின்நவீனத்துவ விமர்சனங்களை ஏற்பாடு செய்யும்.

இப்பவெல்லாம் யார் ஒழுங்கா சமைக்கிறானுக, ஒழுங்கா படம் எடுக்கிறானுக... நாட்டுல அட்டூழியம் கூடிப்போச்சு... அந்தக் காலத்துல அவியல் இருக்கு பாருங்க... திருவனந்தபுரம் வரை மணக்கும்...

இறந்த காலம் குறித்த நல்லுணர்வும் நிகழ்காலம் குறித்த வெறுப்பும் கொண்ட ஒரு நாஸ்டால்ஜியா மனநிலையும் தமிழில் பண்டு தொட்டே நிலைபெற்றுள்ளது. இதற்கு நாற்பது வயதுக்கு மேற்பட்ட, நாற்பது வயது எனத் தங்களை நினைத்துக்கொள்ளும் ஈசி சேர் வாசக சமூகம் இருப்பதாக பிரதி உயிரின் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது. நிகழ்காலம் இருப்பதற்கு நியாயம் உண்டெனில் இறந்தகால நினைவையும் அனுமதிப்பது பாசிசத்தை மறுக்கும் செயல்பாடுதான் என்று பூக்கோ, சார்த்தரின் நினைவு விழாவில் பேசியதை இங்கு குறிப்பிடவேண்டும்.

அந்த வாசகர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் சிறுகதைகள், கட்டுரைகளை வழங்க இருக்கிறது. சுற்றிலும் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள், செய்திப் பக்கங்களுக்கு நடுவில் சினிமாவைக் காய்ந்து எழுதுவதற்கு நாஞ்சில் நாடனுக்கு இயற்கையாக உள்ள நாஞ்சில் நாட்டு தைரியமே காரணம் என்கிறார் பேராசிரியர் அ.கா. பெருமாள்.

இன்றைய நவீனமயமாதல், உலகமயமாதல் பின்னணியில் இந்தியாவின் சிந்தனை மரபு, இந்து சிந்தனை மரபு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, பிரமீள், தேவதேவன், கலாப்ரியா, கோபால் பல்பொடி, காந்தி, மூப்பனார், வைரமுத்து, ராஜ்தாக்கரே, கீதை, விவிலியம், காய்கறிகள், சைவம், வைணவம், பௌத்தம், ஆத்மா, அறிவியல் ஞானம், விஞ்ஞானம், இந்திய ஒற்றுமை இயற்கை வேளாண்மை, கோடாங்கித் தைலம் முதல் ஆரிய வைத்தியசாலை வழங்கும் அல்சுக்தாதி வரை சகலத்தையும் காக்டெய்ல் போடவல்ல ஜெயமோகன் என்ற பிறவி எழுத்தாளனின் அசுர பலம்தான் பிரதி உயிரின் அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இணையம், சிற்றிதழ், வெகுஜன் இதழ் முதல் அதிகாலை வீட்டுக்கு வரும் பால்பாக்கெட் எழுத்துக்கள் வரை செய்தியின் நவ துவாரங்களிலிருந்தும் ஜெயமோகனின் பீ.....றிடல் தமிழர் இன்று அடைந்திருக்கும் பாக்கியம் என்றே குறிப்பிட வேண்டும். இந்துத்துவம், மார்க்சியத்தில் தொடங்கி இப்போது தமிழ்த் தேசியம் வரை நீளும் அவரது பரிசீலனை இன்று உலகளாவிய பாரதூரமான தட்வெப்பநிலை மாறுதல்களில், சுற்றுப்புறச்சூழல் நோக்கியும் இருக்கலாம்.

சென்னைக்குச் சீக்கிரம் பனிஆந்தைகள் வரக்கூடும் என கணித்துள்ள தியோடர் பாஸ்கரனின் அவதானம் இங்கே கவனிக்க வேண்டியது.

ஜெயமோகன் சமீபத்தில் நண்பர்களோடு மேற்கொண்ட இந்தியப் பயணம் தமிழ்ச்சூழலில் பல்வேறு அதிர்வுகளை எழுப்பியுள்ளது. அவர் மேற்கொண்ட பயணம் கூகிள் எர்த்தில் வரைபடமாக சிகப்பு வெளிச்சமிடப்பட்டுள்ளன. கலைமனப்போக்கால் பீடிக்கப்பட்ட கணிப்பொறி வல்லுநர்கள், கார் உரிமையாளர்கள், பணவசதி படைத்தவர்கள், சினிமாக்காரர்கள், பைனான்ஸ் பேர்வழிகள் என இந்தியாவிற்குள் இருக்கும் அறியப்படாத பாரதத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், யார் வேண்டுமானாலும் ஜெயமோகனின் வழிகாட்டுதலுடன் பயணங்களை மேற்கொள்ளலாம்.

அவருக்கு கல் தடுக்குவது, அவரது மகன் பத்தாவது வகுப்பில் பாஸ் ஆவது எல்லாமே அவருக்கு ஆன்மீக தரிசனம்தான். ஏனெனில் இதுவரை இந்த பிரபஞ்சத்தில் யாருக்கும் கல் தடுக்கவில்லை. யாரும் பத்தாம் வகுப்பு பாசாகவும் இல்லை. எதுவும் நிகழாத வரை நான் பிறக்கவேயில்லை என்பதன் தத்துவ நீட்சியாக ஜெயமோகன் இருக்கிறார்.

பிரதி உயிர் அல்லது GATED COMMUNITY

எந்த இடத்தையும் பற்றிப் பார்ப்பதற்கு முன்னமேயே உள்ளுணர்விலிருந்து பேசத் தொடங்கிவிடும் ஜெயமோகனின் உடனிருப்பு உங்களுக்குக் கூடுதல் அனுகூலம். ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஜெயமோகனின் யாத்திரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. நடுவில் பி.எஸ்.என்.எல். பணி, இந்திய லௌகீகவாதத்தின் குறுக்கீடாக ஜெயமோகனால் வருத்தத்துடன் சுட்டப்படுகிறது. யாத்திரைகளுக்கு நடுவில் ஜெயமோகன் வசனம் எழுதும் திரைப்படப் படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்லும் திட்டமும் இருக்கிறது. பயணிக்க விரும்புபவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே பிரதி உயிரைத் தொடர்புகொள்ளவும்.

டியூப் லைட்டுகளை உடைத்து முழங்குவது முதல் தவளைகளைக் கடித்து சாப்பிடுவது வரை இந்திய தாந்திரீக மரபின் அதீத சுயமோகச் சாயலையும் ஜெயமோகன் தற்போது வெளிப்படுத்தி வருகிறார். ஒன் இந்தியா என முழங்கும் பி.எஸ்.என்.எல்.லின் செல் ஒன் விளம்பர வாசகத்தை இவர்தான் வடிவமைத்தது. இது இவரின் பன்முகத்தன்மையின் சமீபத்திய அடையாளம்.

ஜெயமோகன் பங்கேற்கும் திரைப்படங்களில் முதிய ஏழைத்தமிழ் எழுத்தாளர்களுக்கு யாசகர், வறியவர் வேடங்கள் காத்திருக்கின்றன. இலக்கியமும் சினிமாவும் இணைவதற்கான முயற்சியில் தன்னாலான பங்களிப்பு என கேரளச் சூழலை ஒப்பிட்டு ஜெயமோகன் பேசியதை நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பிரதி உயிர் சமூக உறுப்பினர்கள் ஆகுபவர்களுக்கு, தங்களது குடும்பப் பிரச்னைகள், சட்டரீதியான பிரச்னைகள், மனரீதியான நமைச்சல்கள், அதிகார, புகழ் அபிலாசைகள் இருக்கலாம். அவரவர்களின் பிரச்னைகளின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளும், ஆற்றுப்படுத்தலும், சந்திப்புகளும் உண்டு. எல்லாவற்றையும் உடைக்க வேண்டும். எதுவும் உடைந்துவிடக்கூடாது என்ற நம் ஜனநாயக மரபைப் பின்பற்றும் virtual கலகங்களுக்கும் இங்கு இடம் உண்டு.

அதனதன் தீவிரத்துக்கு ஏற்ப சட்ட ஒழுங்கு ஆலோசனைகளும், அரசியல்வாதிகளின் ஆதாயமும் சகாயமும் கிடைக்கும் என்பது உறுதி.
வாலைச் சுருட்டு வெளியே... கலகம் செய் பிரதியே
எனவே சீக்கிரம் உறுப்பினராகுங்கள்... சேர்ந்து பயன்பெறுங்கள்.

(மணல் புத்தகம் – 2009 இல் வெளியான விளம்பரம்)

6 comments:

  1. இதை விளம்பரம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.எனக்கு உண்மையிலேயே இந்த பதிவு சொல்லும் தகவல் எதுவும் புரியவில்லை.இது புதிதாக உருவாகும் அமைப்பு பற்றிய அறிவிப்பு தானா என்று விளக்கவும்.

    ReplyDelete
  2. எனது பின்னூட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது இந்த கருத்தியல் தடையை வன்மையாக கண்டிக்கிறேன். உங்களது முரண்பாட்டை சுட்டிக் காட்டினால் உடனே நீக்கி விடுவதா? சாரு உயிர்மையுடன் முரண்பட்டு இருந்தால் அதை எழுதி விடுகிறாரே ஏன் நீங்கள் மட்டும் இப்படி?

    ReplyDelete
  3. உயிர்மை புத்தகம் போட்டால் அதற்காய் அவர்களுக்கு அடிமையாய் மாறிவிடுவதா நண்பரே...அப்புறம் இது நான் எழுதியது இல்லை...அந்த நண்பர் தான் பேரை இப்போது வெளியிட வேண்டாம் ..என்று சொல்லி இருக்கிறார்..அவர் கட்டுரைகள் புத்தகமாக வரும் போது அது உங்களுக்கு தெரிய வரும்..அவர் ஒரு கவிஞர்..மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்கவே இதை பிரசுரம் செய்தேன்...

    ReplyDelete
  4. நன்றி. ஆனால் அதை எழுதியவர் என்று யாரையும் குறிப்பிடாதபோது அதை நீங்கள் எழுதியது போல் தான் ஆகிவிடுகிறது (வலைத்தளம் உங்களது என்பதால்) .மாற்று கருத்துகளுக்கு இடம் உண்டானால் எனது முந்தய பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. கட்டுரையின் அங்கதத்தை ரசித்தேன் எழுத்து நடை உங்களதைப் போன்று உள்ளதால் வந்த குழப்பம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. தவறான புரிதலை உருவாக்கும் என்பதால் அதை நீக்கினேன் ...இப்போது உங்களுக்கு தெளிவு உண்டானால் சரி,,

    ReplyDelete
  6. தெளிந்தேன் மேலே உள்ள அவ்வளவு பெரிய படத்தை கொஞ்சம் நீக்குங்களேன் பேஜ் லோட் ஆக தாமதம் ஆகிறது

    ReplyDelete