Wednesday, June 2, 2010

கதை திரைக்கதை வசனம் மற்றும் ...

ஸ்ரீபதி பத்மநாபா


சில வாரங்களுக்கு முன் 'காளிதாசன் விவரித்த கள்ள சந்நியாசி' பி.வி.மேனன் பற்றி சொல்லியிருந்தேன். நான் கணினியியல் படித்துக்கொண்டிருந்தபொழுது அவன் எனக்கு சீனியர். அவன் இளங்கலை மேலாண்மையியல் படித்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் எல்லோரிடமும் என்னை பார்த்து ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. இவன் எப்படியேனும் சினிமாவில் பெரியாளாகிவிடுவான் என்று எல்லோருக்கும் பயம். வகுப்பறைக்கு வரும்போதே ஒரு குவார்டர் பாட்டிலோடுதான் வருவான். ஆனால் முதல் பெஞ்சில்தான் உட்காருவான். இரண்டு முறை சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி திரும்பி வந்தவன். ஆனால் பாடத்தில் சுட்டி. சிஸ்டம் அனாலிசிஸ் பேப்பரில் மூன்று மணி நேரத்தில் எண்பத்தெட்டு பக்கங்கள் எழுதி எண்பத்தெட்டு சதமானம் மதிப்பு எண்கள் வாங்கியவன். உழைப்பின் விஷயத்தில் ஒரு குட்டி ஜெயமோகன் என்றே சொல்லலாம்.

பட்டப்படிப்பு முடிந்தபிறகு என் நெருங்கிய நண்பர்கள் முடிவு செய்தபடி திருப்பூரில் கணினி சம்பந்தமான தொழில் செய்வது என முடிவெடுத்தோம். என் நண்பர்கள் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால் கணிப்பொறியியல் இறுதியாண்டில் என் ப்ராஜெக்ட் தான் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தது. நுண் மென் சாளரங்களும் மூஷிகனும் இல்லாத அந்த காலத்திலேயே ஆர்டிபிசியல் இண்டல்லிஜன்சில் ப்ராஜெக்ட் செய்திருந்தேன். நுண் மென் சாளரங்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் , மூஷிகன் என்றால் மௌசிகன் என்கிற மௌஸ்.

நண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய தயார். ஒரே ஒரு நிபந்தனை. நான் சென்னை இருக்கும் திசையில் தலை வைத்து படுக்க கூடாது. ஐந்து நண்பர்கள் சேர்ந்து திருப்பூரில் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம் துவங்கினோம். மூன்று நண்பர்கள் பிரபல கணினி நிறுவனத்தின் வன்பொருள்களை விநியோகம் செய்வது என்றும் நானும் இன்னொரு நண்பனும் மென்பொருள் துறையை கவனித்துக்கொள்வது என்றும் தீர்மானமானது. மென்பொருள்துறை தற்காலம் போல ஏற்றம் பெற்ற துறையாக அப்போது இருக்கவில்லை.

திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு எக்ஸ்போர்ட் டாகிமேண்டஷன் என்பது சிம்ம சொம்மனப்பாயிருந்தது. Proforma, Bill of Lading, Shipping Bill இப்படி ஐம்பதுக்கும் மேலான ஆவணங்கள் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மில்லிமீடர் பிழை இருந்தாலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் நிராகரித்துவிடும். அதனால் அதற்கான மென்பொருள் தயார் செய்வது என்றும் அதன் மூலமாக மென்பொருள் துறையில் ஒரு அடி கல்லாகவோ ஒரு மைல் கல்லாகவோ மாறிவிடுவது என்றும் முடிவு செய்தோம்.

ஆறு மாதங்கள் அதற்காக உழைத்து ஒரு பிரபல நிறுவனத்திடம் செய்முறை விளக்கம் அளிப்பதற்கான நாள் நெருங்கிகொண்டிருக்கும்போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

எங்களுக்கு முன்பே திருப்பூருக்கு வந்து ஒரு பின்னலாடை நிறுவனம் நடத்திகொண்டிருக்கிறான். என்னை தேடி கண்டுபிடித்து அழைத்துவிட்டான். அவன் அலுவகத்துக்கு போனபோது மலையாளத்திலேயே பேசினான். தீவிரமான விஷயங்கள் என்றால் என்னிடம் மலையாளத்தில் பேசுவது அவன் வழக்கம்.

இரிக்கு... சாப்ட்வேர் இலானோ இப்போ களி? என்றான்.

அதே என்றேன்.

சினிம எல்லாம் மதியாக்கியோ என்றான்.

போகணம். சமயம் வரட்டே என்றேன்.

நமுக்கு ஒரு சினிமா செய்தாலோ? என்றான்.

நான் அவனை கூர்ந்து பார்த்தேன். எதாவது 'கம்பி' படத்துக்கு அடிபோடுகிரானோ கள்ள சந்நியாசி என்று யோசித்தேன். கம்பி படம் என்றால் பலான படம்.


நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு பெமினிஸ்ட் பிரயோகம் ஆயால் நன்னு என்றான்.

இன்னும் உறைந்து போய்விட்டேன். குருவாயுவூர் கிருஷ்ணன் அருள் புரிகிறானா?

நல்ல ஒரு கத உண்டல்லோ பி.வீ! என்றேன்.

ஒரு நல்ல ஹீரோயின் சப்ஜெக்ட். 'ஒரு யுகம்' என்னானு டைட்டில். ஒரு வேசியுடே ஒரு நாள். அன்னு நடக்குன்ன சம்பவங்களானு.
பக்ஷே கிளைமாக்சில் மாத்ரமானு ஒரு பெட்ரூம் சீன் வருன்னது.
வீட்டு சிலவினு வேண்டி ஆரே என்கிலும் கிட்டான் வேண்டி அவள் அலையுன்னு. பக்ஷே ராத்ரி வரே ஆரேயும் கிட்டுன்னில்ல. ஆ அலைச்சலானு படம் முழுவன். ஒடுக்கம் (கடைசியில்) அவளுடே விகலாங்கனாய (ஊனமுற்ற) பர்தாவுமொத்து (கணவனுடன்) குறச்சு கஞ்சி கழிச்சு சுகமாய் கிடன்னு உறங்குன்னு...

கிரேட் என்றான். ஆரானு ஹீரோயின் என்று கேட்டான். மலையாளத்தில் அப்போது ஓரளவு பிரபலமாயிருந்த அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

'சுவீதா!'
'வெரி குட்' என்றான்.

அடுத்த வாரம் 'அந்த புரத்தில்' உள்ள அவளுடைய வீட்டுக்கு கதை சொல்ல சென்றேன். அவளுக்கு வளரே இஷ்டமாயி. களைத்து போய் ஆயுதம் இழந்து நிற்கும் நிலையில் 'இன்று போய் நாளை வா' என்று கருணை கூர்ந்தாள்.

அதற்கு அடுத்த வாரம் எர்ணகுளத்தில் ப்ரொடியூசர் பி.வி.மேனோனுடன் சந்திப்பு. நான் எர்ணகுளத்தில் காத்திருந்தேன். பி.வீ. ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னான். பல ஆயிரம் நட்சத்ரங்கள் பெற்ற ஹோட்டல். அங்கு லானில் பி.வீயும் கருணையுள்ளம் கொண்ட சுவீதாவும் தவிர வேறொரு கதாபாத்திரமும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அந்நியன், விதேசி. மூவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுவீதா என்னை கண்டதும் வரூ கதாகிருத்தே என்றாள். அந்நியன் பி.வீயின் கஸ்டமர். மொராக்கோ விலிருந்து வந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனிடம் சுவீதா எதோ செவியோதினாள். இருவரும் கிளம்பி சென்றார்கள். நானும் பிவீயும் அப்சொலயுட் வோட்காவை மிக சரியாக சுவைத்துகொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து பேரர் வந்து பிவீயின் செவியோதினான். வாடா போலாம் என்றபடி ஆயிரம்
நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திர அறைக்கு அழைத்து போனான்.

அறைக்குள் ஒரு அரைக்கால் சராயோடு அமர்ந்திருந்தான் அந்நியன். அவளை காணவில்லை. பீவீயிடம் 'உனக்கு ஆர்டர் கொடுத்த டி ஷர்டை அணிந்து வர சொல்லியிருக்கிறேன் அவளிடம்' என்றான் அந்நியன். அவள் குளியல அறையிலிருந்து வெளியே வந்தாள். ஆங்கில எழுத்துக்களை கலைத்து போட்டு அதன் மேல் ஒரு நாய்குட்டியின் முகம் அச்சிடப்பட்ட ஒரு டி ஷர்ட். கீழே ஜீன்ஸ். அந்நியனுக்கு புராடக்ட் பிடித்து விட்டது போல. முகத்தில் மகிழ்ச்சி தெறித்தது. கூடவே கையில் பிடித்திருந்த வோட்காவின் குறும்பும் கொப்பளித்தது. டி ஷர்டை சுட்டி காட்டி கொஞ்சம் மேலே தூக்கமுடியுமா டியர் என்றான். சுவீதா டி சாடை கொஞ்சம் சுருட்டி மேலே உயர்த்தினாள் - தொப்புள் தெரிந்தது. அந்நியன் என்னை திரும்பி பார்த்து ஹவ் ஈஸ் இட் என்றான். வெரி குட் என்றேன். நோ நாட் குட் என்ற படி இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்த சொன்னான். இப்போது பீவீயை பார்க்கிறான். அவன் வெரி குட் சொன்ன போதும் திருப்தியாகவில்லை அந்நியனுக்கு. சுவீதா பொறுத்து பார்த்து மார்புகளில் பாதி தெரிவது வரை உயர்த்தி நிறுத்தினாள். அந்நியனுக்கு இப்போதுதான் வெரி குட்.

நண்பர்கள் என்னை கடுமையாக வைது கொண்டிருந்தார்கள் - தொழிலில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்காக. நான் அவர்களை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் பீவீயின் அலுவலகத்துக்கு போனேன். புதிதாய் ஒரு கார் நின்றிருந்தது. பீவீ பிசியாயிருந்தான். காத்திருந்து அறைக்குள் போனேன்.

வாடா ஸ்ரீ ! நானே கூப்படும்னு இருந்தேன். அந்த டி ஷர்ட்ல நல்ல லாபமடா. நீயும் சுவிதாவும் நல்ல ஹெல்ப் பண்ணீங்க. முதல்ல முழு டி ஷர்டுக்குதான் ஆர்டர் குடுத்து அக்ரீமென்ட் போட்டிருந்தான் அந்த பையர். சுவிதாவ பாத்து ஜொள்ளு விட்டு கால் வாசியா குறச்சிட்டான். விலைய மாத்தவே இல்ல. அவ்வளவு துணி நமக்கு லாபம்.
என்றபடி ஒரு நோட்டுக்கட்டை மேசையிலிருந்து எடுத்து 'பத்தாயிரம் இருக்கு, செலவுக்கு வச்சுக்கோ' என்றான்.

அப்போ 'ஒரு யுகம்?' என்று கேட்டேன்.

சினிமாதானே, எடுக்கலாம்டா, இன்னும் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நடக்கட்டும். என்றான்.

கதை திரைக்கதை வசனம் நான் எழுதினேன் என்றாலும் 'இயக்கத்தில்' அவன் தான் பெரிய ஆள் என்று உணர்ந்து கொண்டேன், மட்டுமல்லாமல், இயக்குனர் ஆவதற்கு கலையுடன் கூடவே பிசினஸ் மேநேஜ்மன்ட்டும் அவசியம் என்பதையும்.

No comments:

Post a Comment