Monday, April 26, 2010

தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்- ஸ்ரீபதி பத்மநாபா

தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்

கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை 'ஸ்மார்த்த விசாரம்'. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி
தண்டனை வழங்கும் ஆணாதிக்க ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது.

அந்தர்ஜனங்களின் அடுக்களை தோஷம் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெயர். பரபுருஷனிடம் ஒரு அந்தர்ஜனம் (மனைக்குள் இருக்கும் மக்கள் என்று அர்த்தம்) தொடர்பு கொண்டுவிட்டாள் என்ற சமூகத்துக்குள் ஒரு வதந்தி உருவாகும்போது இந்த ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படும்.

இந்த ஸ்மார்த்த விசாரம் 'தாசீ விசாரத்தில்' துவங்குகிறது. அதாவது அந்தர்ஜனத்தின் வேலைக்காரியை விசாரணை செய்தல். வேலைக்காரி தன் எஜமானி நடத்தை கெட்டவள் என்பதை உறுதி செய்துவிட்டால், உடனே அந்த அந்தர்ஜனம் தன் பெயரை இழக்கிறாள். தன் திணைûயுயும் இழக்கிறாள். அதாவது அஃறிணை ஆகிறாள். அதுமுதல், அவள் 'சாதனம்' என்றே அறியப்படுகிறாள்.

தாசீ விசாரம் முடிந்தவுடன் அடுத்த கட்டம் சாதனத்தை அஞ்சாம் புறையில் தள்ளுவது. அதாவது அவள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அஞ்சாம் புறை எனப்படும் தனி அறையில் தனிமைக்காவலில் வைக்கப்படுகிறாள்.

அடுத்த கட்டமாக அந்த தேசத்தின் ஆட்சியாளரிடம் (ராஜா அல்லது 'நாடுவாழி' என்று அழைக்கப்படும் பண்ணையார்) குற்ற விசாரணைக்கான அனுமதி கோரப்படுகிறது. விசாரணையை ஒரு நம்பூதிரிதான் நடத்த வேண்டும். அவருக்கு 'ஸ்மார்த்தன்' என்று பெயர். ராஜா அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு ஸ்மார்த்தனையும், இரண்டு மீமாம்சகர்களையும் ஒரு அரசப் பிரதிநிதியையும் விசாரணைக்காக நியமிக்கிறார்.

விசாரணை நடத்தி, சாதனம் குற்றம் செய்திருக்கிறது என்பதை எப்படியேனும் நிரூபித்து, சாதனத்தை 'கதவடைத்து பிண்டம் வைப்பது' வரை ஒரு மிகப்பெரிய கடமையை நிர்வகிப்பதுதான் ஒரு 'உண்மையான' ஸ்மார்த்தனின் பணி.

விசாரணை நேரத்தில் மேற்பார்வை செய்கின்ற அரசப் பிரதிநிதியை 'புறக் கோய்மை' என்றும் அந்தப் பிரதேசத்து நம்பூதிரிகளின் பிரதிநிதியை 'அகக் கோய்மை' என்று அழைப்பார்கள். அஞ்சாம்புறையின் புறத்தளத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். விருப்பமுள்ள ஊர் மக்களும் பங்குபெறலாம்.

ஸ்மார்த்தனும் இரண்டு கோய்மைகளும் சேர்ந்து உள்ளே நுழைய முற்படுகிறார்கள். அப்போது வாசலில் இருக்கும் தாசி அவர்களைத் தடுக்கிறாள். ஆண்கள் உள்ளே நுழையக் கூடாது என்கிறாள். ஏன் என்று இவர்கள் கேட்கிறார்கள். உள்ளே ஒரு சாதனம் இருக்கிறது என்று தாசி கூறுகிறாள். யார் அது என்று ஸ்மார்த்தன் கேட்கிறார். இந்த மாதிரி இந்த மாதிரி மனையின் இந்த மாதிரி இந்த மாதிரி நம்பூதிரியின் மகள் அல்லது சகோதரி அல்லது மனைவியான இந்த மாதிரி இந்த மாதிரி சாதனம் என்று அவள் பெயரைக் கூறுகிறாள் தாசி. இப்படிப்பட்ட ஒரு பெண் இந்த வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் என்று ஆச்சர்யம் அபிநயிக்கும் ஸ்மார்த்தன் கூடுதல் விவரங்களைக் கோருகிறார்.

இந்த இடத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் துவங்குகிறது ஸ்மார்த்த விசாரம். குற்றவாளியான சாதனம், கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, கண்ணையும் முகத்தையும் வெள்ளைத் துண்டால் கட்டி, ஸ்மார்த்தனின் கேள்விகளுக்கு தாசியின் மூலமாக பதில் அளிக்க வேண்டும். வேறு யாரும் பேசுவதற்கு அனுமதியில்லை. ஸ்மார்த்தனின் கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் அகக்கோய்மை தன் தலையில் கட்டியிருக்கும் துண்டை கீழே போடுவார். இதற்கு 'நாட்டாமை, கேள்வியை மாத்து' என்று அர்த்தம், ஸ்மார்த்தன் தன் கேள்வியை மாற்றிக் கேட்பார். எல்லாமே அவளை குற்றத்தை சம்மதிக்க வைப்பதற்கான வழிகள்தான்.

ஸ்மார்த்த விசாரம் அன்றைய தினம் முடியாமல் நீண்டு போகிறது என்றால் அன்றைய தினம் தனக்குக் கிடைத்த விவரங்களை சபையின் முன் அறிவிப்பார் ஸ்மார்த்தன். இதற்கு 'ஸ்வரூபம் சொல்லுதல்' என்று பெயர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்த்த விசாரம் முடிந்ததும் குற்றவாளியின் உறவினர்கள் ஜட்ஜ் டிரிப்யூனல் அங்கத்தினர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். சில ஸ்மார்த்த விசாரங்கள் மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன. (ஷோரணூருக்கு அருகில் கவளப்பாறையில் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் இந்த ஸ்மார்த்த விசாரம் 36 வருடங்கள் நீண்டது. இறுதியில் அந்த அந்தர்ஜனம் குற்றமற்றவர் என்று நிரூபணமாயிற்று. ஆனாலும்... தன யௌவனம் முழுவதும் இருளடைந்த அஞ்சாம்புறையில் கழித்ததற்கான எந்த நியாயமும் அவருக்கு வழங்கப்படவில்லை.)

சாதனம் குற்றத்தை ஒத்துக்கொண்டதும் தான் சம்போகித்த ஆள் யார், எந்த தருணத்தில் நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எவ்வளவு முறை நடைபெற்றது என்பதையெல்லாம் விவரிக்க வேண்டும். ஒரு வேளை ஒன்றிற்கு மேல் ஆட்கள் இருந்தால் ஒவ்வொருவர் பெயர் சொல்லப்படும்போதும் இந்த விவரணைகளும் தேவை. அதற்குப் பிறகு சாதனம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. அவள் மரித்துவிட்டதாகக் கருதி பிண்டம் வைக்கப்படுகிறது. பிரஷ்டம் செய்யப்பட்ட அவள் தனக்குத் தோன்றிய திசையில் செல்கிறாள்.

அவளால் சுட்டப்பட்ட ஆண்களும் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்பீலுக்குப் போகலாம். தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு நிரூபிக்கலாம். இந்த கைமுக்கல் சடங்கு நடப்பது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்தரம் கோவிலில்.

இப்படி ஆணாதிக்கம் கொடிகட்டி வாழ்ந்திருந்த அந்தக் கால நம்பூதிரி சமுதாயத்தில் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகி வீரத்துடன் எதிர்த்து நின்ற ஒரே ஒரு அந்தர்ஜனம் தாத்ரிக்குட்டி.

குன்னங்குளம் கல்பகசேரி மனையின் குறியேடத்து தாத்ரி என்ற தாத்ரிக்குட்டி, அழகாகயிருந்ததாலேயே ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானவள். சிறு வயதிலேயே தன் சொந்த தந்தையாலும் சகோதரனாலும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். திருமணம் நடந்ததும் முதலிரவில் கணவனின் மூத்த சகோதரனிடம் முதலில் தன்னைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்குப் பிறகுதான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்குகிறாள் தாத்ரிக்குட்டி. சமூகத்தின் பிரபலமானவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தி வீழ்த்துகிறாள். அவர்களுடன் சம்போகித்ததற்கான எல்லா நிரூபணங்களையும் சேகரித்து வைக்கிறாள்.
அவளிடம் ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படுகிறது.

நம்பூதிரி சமூகத்தையே நடுங்கச் செய்த இந்த ஸ்மார்த்த விசாரம் நடந்தது 1905ம் ஆண்டு. இதுவே கடைசி ஸ்மார்த்த விசாரம் என்றும் அறியப்படுகிறது.

விசாரணையில் சமூகத்தில் பிரபலமான 64 பேருடன் தான் சம்போகித்ததாக சொல்லும் தாத்ரிக்குட்டி ஒவ்வொருவரின் பெயராகச் சொல்கிறாள். 63 பெயர்களை சொல்லி முடித்தவள் ஸ்மார்த்தனை நோக்கி விரல் நீட்டி 64 வது ஆள் யாரென்று சொல்லட்டுமா என்று கம்பீரமாகக் கேட்கிறாள்.

சமூகத்திலிருந்து அந்த 64 பேரும் வெளியேற்றப்பட்டார்கள். தாத்ரிக்குட்டியும் தனக்குத் தோன்றிய திசையில் பயணத்தைத் துவங்கினாள்.

பி.கு.1
தாத்ரிக்குட்டி தமிழ்நாட்டு எல்லையில் கோவைக்கு அருகே ரயில்வே ஊழியரான ஒரு கிறிஸ்துவ இளைஞரை மணந்துகொண்டாள் என்கிறது செவி வழி வரலாறு. அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மலையாளத் திரையில் கொடிகட்டிப் பறந்த ஷீலா என்பதும் ஒரு (உறுதிப்படுத்தப்படாத) தகவல்!

பி.கு. 2
தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்.டி. வாசுதேவன் நாயரின் 'பரிணயம்', மாடம்பு குஞ்ஞக்குட்டனின் 'பிரஷ்டு', அரவிந்தனின் 'மாறாட்டம்' போன்ற படைப்புகள் வந்திருக்கின்றன.

பி.கு. 3
முக்கியமான குறிப்பு இது. தாத்ரிகுட்டியால் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்களில் மேலங்கத்து கோபால மேனனும் ஒருவர். கோழிக்கோடு அரசின் வரி வசூல் அதிகாரியாக இருந்தவர். நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு சென்ற அவர் அங்கே சத்யவதி என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார். அதில் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல்வர் சக்ரபாணி. இரண்டாமவர் ராமச்சந்திரன். இரண்டாமவர் என்றாலும் இவர்தான் முதல்வர் ஆனார். மேலங்கத்து கோபாலன் ராமச்சந்திரன் (MGR) !

2 comments:

  1. ஸ்மார்த்தவிசாரம் பற்றிய தெள்ளிய விவரணை.
    தாத்ரிக்குட்டி (Kuriyedath Dhatri) வரலாறு; புனைவல்ல.
    The last reported smarthavicharam took place in 1918, but the most famous was the samarthvicharam of Kuriyedath Dhatri. என்கிறது www.hrsolidarity.net.
    ஆனால் செம்மீன்காரி (கிளாராவாகிய ஷீலா) அவதரித்தது 1945ல். விக்கிப்பீடியா
    Sheela is the grand daughter of the notorious 'Thatrikkutty' of Smarthavicharam.
    என்கிறதே?
    அப்புறம்..
    எம்ஜிஆர் - மருதூர்​கோபாலன் ராமச்சந்திரன் இல்லியா?
    சரித்திரம் முக்கியம் அமைச்சரே :))

    ReplyDelete
  2. விஜய மகேந்திரன், நல்ல பதிவு. எந்த புத்தகம் இது என்ற தகவல் தரவில்லையே?

    ReplyDelete