Monday, February 22, 2010

சிறுவர் சினிமா’


நிகழ்வும் சாரமும்


விஸ்வாமித்திரன் எழுதி ‘புதிய பார்வை’ இதழில் வெளிவந்து, வாசகர்களின் பரவலான கவனிப்பையும் பாராட்டுதலையும் பெற்ற உலகத்தின் சிறந்த சிறுவர் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களடங்கிய ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை ‘வம்சி புக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 07.01.2008 அன்று, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள ‘வம்சி புக்ஸ்’ விற்பனை அங்காடியில் புத்தகத்தின் முதல்பிரதி வெளியிடப்பட்டது.

இலங்கைத் திரைப்பட இயக்குநரும், சர்வதேச அளவில் இலங்கைத் திரைப்படங்களைக் கொண்டு சென்றதில் முக்கியமான படைப்பாளருமான பிரசன்ன விதானகே ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை வெளியிட, எழுத்தாளரும் ‘கல்லூரி’ திரைப்பட ஒளிப்பதிவாளருமான செழியன் பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குநர்கள் அம்ஜத் மீரா அகிலன், மாமல்லன், யுவராஜ் மற்றும் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசின திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே, “தமிழ்த் திரைப்படங்களில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றம் நிலவி வருகிறது எனவும், உலகத் திரைப்படங்கள் குறித்த பிரக்ஞை தமிழ் இளைஞர்களிடையே பரவி வருகிறது எனவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த மாற்றத்திற்கு விஸ்வாமித்திரன் போன்றோரின் திரைப்பட எழுத்துக்களும் முக்கியமான காரணம்” என்று குறிப்பிட்டார்.

இந்நூல் குறித்து விஸ்வாமித்திரன் பேசும்போது, “உலகத் திரைப்படங்களை பரவலாக்குவதோடு மட்டுமில்லாமல், சிறுவர் வாழ்வியலைச் சித்திரிக்கும் படங்கள் குறித்து தமிழ்ப் பார்வையாளர்கள் கொள்ளவேண்டிய கூர்ந்த கவனத்தை ஏற்படுத்துவன் நோக்கமே இந்த நூலை நான் எழுத காரணமாயிற்று என்றார். மேலும், ‘வம்சி புக்ஸ்’ மூலம் இந்த நூலை பதிப்பித்த எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்கள் எல்லா தரப்பினரையும் பாரபட்சமின்றி புத்தகம் சென்றடைய வேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் குறைந்த அடக்க விலையை நிர்ணயித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனவும் கூறினார்.

விழா எளியமுறையில் நடந்தேறியது. ‘சிறுவர் சினிமா’ புத்தக வெளியீடு என்பதை பறைசாற்றும் வகையில் பள்ளிச் சிறுவர்களும் கலந்து கொண்டது விழாவை இன்னும் சிறக்கச் செய்தது.சிறந்த உலகத் திரைப்படங்கள் – முதல் பகுதி

பதிப்பு: டிசம்பர் 2007
ரூ. 80

வெளியீடு:

வம்சி புக்ஸ்,
19, டி. எம். சாரோன்,
திருவண்ணாமலை – 606 601
தொடர்பு எண்: 94448 67023, 94432 22997



- விஜய் மகேந்திரன்

*

நன்றி – ‘புதிய பார்வை’
ஜனவரி (15-30) இதழ்

1 comment:

  1. அவசியமான பதிவு.அடிக்கடி வலைப்பூவிலும் எழுதுங்கள். ஆமா? நடிகை ஷ்ரேயா உங்க வாசகியாமே? அரமாலுமா?

    ReplyDelete