Monday, November 13, 2017

முடக்கத்தான் ஆம்லெட்


முடக்கத்தான் கீரை உடலுக்கு நல்ல பலன்களை தரக்கூடியது. முக்கியமாக கை, கால் வலி, வாதங்களை நீக்கக்கூடியது. உடல் சோர்வாக இருந்தாலும் இந்த கீரையை அவித்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும். சூப்பாக இந்த கீரையை குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாய்வு பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த கீரை அருமருந்தாக வைக்கிறது. இந்த கீரை கிடைக்க பெறாத இடத்தில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. முடக்கத்தான் பொடி இப்போது நாட்டு மருந்து கடைகளில், சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தினமும் இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பயன்களை பெறலாம். இந்த முடக்கத்தான் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆம்லெட் நல்ல எனர்ஜி தரும் உணவு. இளைஞர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து பேச்சிலர் சமையல் போல வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
இரண்டு முட்டையை எடுத்து கொள்ளவும். உடைத்து பாத்திரத்தில் ஊற்றவும். இரண்டு சிறிய ஸ்பூன் மிளகுதூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். அதன் பிறகு முடக்கத்தான் பொடி இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கவும். கரைய கொஞ்சம் நேரமாகும். ஆகவே நன்றாக கலக்கவும். அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லைப் போடவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் காய வைக்கவும். பிறகு முட்டை கலவையை ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து வெந்தவுடன் பதமாக ஆம்லெட்டாக எடுத்து தட்டில் போடவும். இப்போது முடக்கத்தான் ஆம்லெட் ரெடி. இதை காலை உணவாக சாப்பிட்டால் கை, கால் வலி, உடல் சோர்வு எல்லாம் போய் சுறுசுறுப்பான மனநிலைக்கு வருவீர்கள்! முட்டை சிலருக்கு வாய்வு பிரச்னையை ஏற்படுத்தும் என்பார்கள். ஆனால், முடக்கத்தான் பொடியும், மிளகு பொடியும் அந்த பிரச்னையை நீக்கி செரிமானத்தையும் அதிகப்படுத்தும்.
- விஜய் மகேந்திரன்

No comments:

Post a Comment