Monday, November 13, 2017

ஆட்டுக்கால் சூப்பும் , அரைடவுசர் பையனும்...


இன்று அசைவ உணவுகளை மையமாக வைத்து சர்ச்சைகள் செய்வது சமூக வலைதளங்களில் அதிகமாகிவிட்டது. நான் சொல்லும் சம்பவம் நடந்தது எட்டு வருடங்களுக்கு முன்பாக. ஒரு தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட் ஆக நான் வேலை பார்த்து வந்தேன். அணு தினமும் ஏதாவது வலியைச் சுமந்து வருபவர்களைப் பார்க்க வேண்டும். கழுத்து வலி, முதுகு வலி உள்ளவர்கள் அதிக அளவில் வருவார்கள். பொதுவாக மூட்டு தேய்மானம் வயதானவர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கு கால்சியம், இதர தாது சத்துக்கள் மிக குறைவாக இருக்கும். மூட்டுகளில் சிறிய மின் காந்த அலைகளை (shortwave diathermy) வைத்து வலியை குறைத்து அனுப்புவோம்.
அன்று நான் பார்த்த பையனுக்கு வயது 12 தான். இரண்டு மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம் இருந்தது. அம்மாவை விசாரித்தபோது அவன் சத்தான உணவுகளை சாப்பிடுவது இல்லை என்று ஒப்புக்கொண்டார். வெறும் பருப்பு சாதமும், தயிர் சாதமும் சாப்பிடுவான். காய்கறிகள் கூட பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நான், அந்த பையனின் அம்மாவிடம், “அவனுடைய இப்போதைய மூட்டு வலியை தற்காலிகமாக குறைத்து அனுப்பலாம். சில மூட்டு பயிற்சிகள் சொல்லியும் தருகிறேன். ஆனால், நிரந்தரமாக இந்த பிரச்னையை நீக்க வேண்டும் என்றால் உணவு முறையை மாற்றி நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். கால்சியம் சத்தை அதிகப்படுத்த வேண்டும். முருங்கை கீரை, பால், மீன், முட்டை இவற்றில் கால்சியம் அதிகமுள்ளது” என்றேன். அவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நியாயப்படி கீரை மட்டும்தான் அவர்களால் கொடுக்க முடியும். ஆனால், பையன் நடக்கவோ அல்லது படியேறவோ மிகவும் சிரமப்பட்டான்.
“எங்க மதுரையில இப்படி பையன் வீக்கா இருந்தா, ஆட்டுக்கால் சூப்போ அல்லது குழம்போ வைத்து கொடுப்பார்கள். உடம்பு வலியெல்லாம் பறந்து போயிரும்” என்று பேச்சு வாக்கில் சொன்னேன். அந்தம்மா அதை பிடித்துக் கொண்டார்கள். “ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் இது சரியாயிடும்னா வேலைக்காரம்மாவை செய்யச் சொல்லி கொடுக்கிறேன். இது ஒரு மெடிசின் மாதிரிதானே” என்றார்.
“கால்சியம், சில தாதுக்கள், வைட்டமின் என முக்கிய சத்துக்கள் ஆட்டுக்கால் சூப்பில் உண்டு. அதை குடித்தால் மட்டும் போதாது. நான் கொடுக்கும் பயிற்சிகளையும் வீட்டில் செய்து வர வேண்டும்” என்றேன். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சாப்பிட வேண்டிய உணவுகளை ஒரு லிஸ்ட் எழுதியும் கொடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து பையன் அம்மாவுடன் வந்திருந்தான். நல்ல சுறுசுறுப்பாக இருந்தான். பரிசோதனை செய்தபோது மூட்டு வலி பெருமளவு அவனுக்கு குறைந்து இருந்தது. படிகள் ஏறி, இறங்க சொல்லி பார்த்தேன். எந்த பிரச்னையும் இல்லை. அவனது அம்மா, “நீங்க சொன்ன ஆட்டுக்கால் சூப் நல்லாவே வேலை செய்யுது. ரொம்ப நன்றி” என்றார். “நான் சொன்னாலும் உங்க பையனுக்கு சரியாகணும்னு எடுத்த உங்க முடிவுதான் முக்கிய காரணம்” என்றேன்.
“என்ன சஞ்சய் இப்ப ஓகேவா?” என்றேன். “சார், வஜ்ஜிரம் ஃபிஷ் வறுவல் டேஸ்டா இருக்கும்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. சாப்பிட ஆசையா இருக்கு” என்றான். “பையன் புல் நான்-வெஜ்ஜாக மாறிவிடுவான் போல” என்றேன். உடனே அவங்க அம்மா, “சார் வளர்கிற பையன் சாப்பிடட்டும். நல்ல நான்-வெஜ் ரெஸ்டாரண்ட் கூட்டி போகத்தான் அவனுக்கு ஆள் இல்லை. நானும், என் வீட்டுக்காரரும் கூட போக முடியாது. தப்பா நினைக்கலைன்னா நீங்க கூட்டிப்போய் அறிமுகப்படுத்துங்க. சண்டே கார் அனுப்பிடறேன். எந்த ரெஸ்டராண்ட், எவ்வளவு செலவுனாலும் சரி” என்று சொல்லி விட்டார். ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 12 மணிக்கு என் வீட்டு முன் காரும், பையனும் வந்து விடுவர். தலப்பாக்கட்டி, வேலு மிலிட்டரி என்று ஆரம்பித்து எல்லா சிறந்த அசைவ உணவகங்களுக்கும் அவனை டூர் கூட்டிப் போக வேண்டும். இது மூன்று வாரம் தொடர்ந்தது. பையன் இப்ப அமெரிக்காவில் கல்லூரி படித்து வருகிறான் . “சுறா புட்டெல்லாம் இங்கே டேஸ்டா இல்லை” என்று போனவாரம் போனில் அலுத்துக் கொண்டான். ஆகவே, ‘உணவே மருந்து’ என்பதை உணர்ந்தால் போதும். சைவம், அசைவம் எல்லாம் அவரவர் மனதில்தான் இருக்கிறது.

- விஜய் மகேந்திரன்

No comments:

Post a Comment