Monday, November 8, 2010

முதல் ஆணியக் கவிதை-ஸ்ரீபதி பத்மநாபா




எண்பதுகளின் இறுதி வருடங்களில் தமிழ்நாட்டில் முதல் கணினி பட்டப்படிப்பு அறிமுகமானபோது அந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட மவுஸ்களில் அவனும் ஒருவன் - அன்றைய கணினிகளில் மௌஸ்களைக் காண்பது மிக அரிது. மவுஸ் இல்லாமல் கணினியை இயக்க முடியுமா என்று கேட்காதீர்கள். அன்றெல்லாம் அலைபேசியில்லாமல்கூட வாழ்ந்தவர்கள்தானே நாம். அன்றைய கணினி யுகம் பற்றி குறைந்தபட்சம் 386 கட்டுரைகளாவது எழுத முடியும். அது பின்னர் எப்போதேனும். இன்றைய பேசுபொருள் வேறு.

கணினி அறிவியல் மாணவனாக இருந்தபோதும் அன்று கல்லூரியின் பிரதானக் கவிஞனாக அறியப்பட்டவன் அவன்தான். கையில் கணையாழி கொண்டிருக்கும் விசித்திர ஜீவியாக கணினி மாணவிகள் விலகவும் கலை மாணவிகள் அணுகவுமான இயல்பினனாயிருந்தான். அப்போது நடைமுறையிலிருந்த கடைக்கால நெம்புகோல் கவிதைகள் புனைவதில் மட்டுமல்லாது எண்சீர்கழிநெடிலடி விருத்தங்கள் செய்வதிலும் தான் நிபுணன் என்பதாகவும் நினைத்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது மலையாளக் கரையோரம் சென்று வந்து கொண்டிருந்ததால் மலையாளத்தின் 'அக்ஷர ஸ்லோகம்' எனும் கவிதைச் செயல்பாடு பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்.

அக்ஷர ஸ்லோகம் என்பது செய்யுள் சொல்வதற்கான ஒரு போட்டி. சென்ற தலைமுறையில் எந்த கேரள கிராமத்தை போய்ப் பார்த்தாலும் அம்பல மரத்தின் சுவட்டிலோ இல்லத்து முற்றங்களிலோ இப்படிப்பட்ட அக்ஷர ஸ்லோக சபைகள் காணக் கிடைத்திருந்தன. இங்கு ஸ்லோகம் என்பதற்கு மந்திரம் என்பதல்ல பொருள்; செய்யுள் என்பதே.

அக்ஷர ஸ்லோகம் என்பது இன்றைய அந்தாக்ஷரியின் முன்னோடி என்று சொல்லலாம். 4 அடிகளுடைய செய்யுட்கள். தானே இயற்றியதாகவோ பிரபல புலவர்கள் இயற்றியதாகவோ இருக்கலாம். முதல் நபர் ஒரு ஸ்லோகம் சொன்னவுடன் அந்த ஸ்வோகத்தின் மூன்றாவது அடியின் முதல் எழுத்தில் அடுத்த நபர் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்க வேண்டும். அந்த ஸ்லோகங்கள் பூந்தானத்தின் ஸ்ரீகிருஷ்ண கருணாமிர்தத்தில் இருந்தும் இருக்கலாம். எரணாகுளம் ஹோட்டல் சாப்பாடு பற்றி தானே இயற்றியதாகவும் இருக்கலாம்.

எட்டாண்டு எத்திய தயிரும் என் சிவனே சுண்ணாம்பு சோறும் புழுக்
கூட்டம் தத்திடும் ஊறுகாயும் அய்யோ கசப்பேறிய பொரியலும்
கெட்டபலாவில் மோரூற்றியின்னும் கெடவைத்த குழம்பும் இம்
மட்டில் பட்சணமுண்டு வெளிவரலாம் எரணாகுளம் ஹோட்டலில்.

அன்று முதல் தானும் தமிழில் இதுபோன்ற முயற்சிகளைச் செய்யலானான். எது கையில் கிடைத்தாலும் எதுகையாய் மாற்றி ஒரு செய்யுள் புனைந்து விடுவான். உதாரணத்திற்கு இரண்டு:
(முறைப்படி சீர் பிரிக்காமல்)

1. பாடினாள் பின்னாடியும் காட்டினாள் முகம்
ஏந்தியளித்திட்டாள் முத்தம் இதழி னுட்புகுந்து
கூடினாள் தள்ளிப்போய் கல்யாணப் பந்தரின்கீழ்
வாந்தியெடுத்திட்டாள் முட்டாள்.

2. மைக்கேல் ஏஞ்சலோ வைரஸ் புகழ்

ஊஞ்சலாடும் மனது கேட்கின்றதோர் நாள் லீவு
காஞ்சு கிடப்பாள் அனிதா மேட்னிஷோ போவதற்காய்
வாஞ்சையில் பூட்டுதே கம்ப்யூட்டர் - மிக்கயில்
ஏஞ்சலோ வைரசே நீவாழ்.

இப்போது வலையுலகில் தமிழில் மரபுக் கவிதைகளும் மலையாளத்தில் அக்ஷர ஸ்லோகங்களும் உலகமெங்குமிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறன்றன. மேற்கண்டவற்றை விட நவீன பாடுபொருட்களில் மரபுக் கவிதைகள் வகைதொகையின்றிக் கிடைக்கின்றன இணையத்தில்.

ஆனாலும் அக்ஷர ஸ்லோகம் பற்றி எண்ணும்போதெல்லாம் அவனுக்கு மஹாகவி காளிதாஸனோ அல்லது மாடமனை திரிவிக்ரமன் பட்டதிரிப்பாடோ நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. திரிவிக்ரமன் அக்ஷரஸ்லோகத்தில் விற்பன்னர். ஒரு முறை மஹாகவி காளிதாஸன் முதன்முதலில் எழுதிய ஸ்லோகம் என்று ஒரு சாதனத்தை சொல்லிக் காண்பித்தார். அதற்கு முன் அந்த செய்யுள் உருவான இதிகாசத்தையும் சொன்னார்:

காளிதாஸன் தான்தோன்றித்தனமான கற்பனைகளில் திளைத்து எங்கென்றிலாது அலைந்து திரிந்து கொண்டிருப்பார். அவ்வாறு ஒருக்கால் கூரிருட்டினுள் காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தார். நான்காம் யாமம் தாண்டி பொழுது புலரும் வேளையே வந்து விட்டது. அந்த இருட்டுக்குள் ஒரு ஆற்றைக் கண்டார்; ஆனந்தம் கொண்டார். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து வீசி ஆற்றில் குதித்தார். அந்த சமயம் பார்த்து அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஒரு யுவதி அங்கு வந்தாள். எப்போதும் அந்த இருளில் வந்து ஆற்றில் குளிப்பது அவள் வழக்கம். வழக்கம் போல அருகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவளும் ஆடைகள் முழுதும் களைந்து ஆற்றில் இறங்கினாள். நீரில் மூழ்கிக் கிடந்த காளிதாஸன் வெளிவந்து தலையைச் சிலுப்பிப் பார்க்கையில் அவரின் முன்னால் அவள். அதிர்ச்சியில் உறைந்துபோயினர் இருவரும். ஆனாலும் அவர்களின் அனிச்சை உணர்வுகள் விழித்தே யிருந்தன. ஒரு கையால் தன் தனங்களையும் ஒரு கையால் தன் அல்குலையும் மறைத்துக் கொண்டாள் அவள். கையறு நிலையில் காளிதாசனுக்குள் ஒரு கவிதைதான் முகிழ்த்தது:

ஹே பாக்யவதீ நாரீ
ஏக ஹஸ்த்யேன கோப்யதே
நிர்பாக்யம் காளிதாசஸ்ய
த்விமுஷ்டிம் சதுரங்குலம்.

வியாக்கியானம்:

பெண்ணே நீ பாக்கியவதி!
ஒரு கையாலேயே உன் மானத்தை மறைத்துவிட்டாய்
பாவம் இந்த காளிதாசன் துர்பாக்கியவான்
இரண்டு கைகளை உபயோகித்தும்
நான்கு அங்குலம் மீதமிருக்கிறதே!

இதுதான் காளிதாசனின் முதல் கவிதையா அல்லது திரிவிக்ரமன் பட்டதிரி எதாவது மண்டபத்தில் எழுதி வாங்கியதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும் உலகின் முதல் ஆணியக் கவிதை இதுதான் என்று சொல்லாமில்லையா என்று கேட்கிறார்
திரிவிக்ரமன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முதல் ஆணியக் கவிதை

No comments:

Post a Comment