Monday, May 24, 2010

பாரடி நீ மோகினி ! - ஸ்ரீபதி பத்மநாபா

பாடலாசிரியர் ஆவது எப்படி என்னும் 'dummies' பாடம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். நானும் ஒரு 'dummy' தான் என்றபோதிலும்.

கட்டுரையின் தலைப்பில் உள்ள முதல் வார்த்தை தமிழ் 'பாரடி' அல்ல. ஆங்கில parody. தமிழில் பகடி என்று எளிமையாக மொழிபெயர்க்கலாம். ஏற்கனவே வெளிவந்து பிரபலமான ஒரு பாடலை பகடி செய்து எழுதி பார்ப்பதுதான் parody. அங்கதமே அதன் அடிப்படை அலகு.
கேரளத்தில் 'பாரடி' ஒரு நல்ல குடிசை தொழிலாகவே வளர்ந்து வந்திருக்கிறது - மிமிக்ரியை போல. எந்த ஒரு புது பாடலையும் உடனே 'பாரடி' செய்து ஒரு கேசட்டை இறக்கி விடுவார்கள்.

இதுதான் பாடலாசிரியன் ஆவதற்கான பயிற்சியின் முதல் படி! உதாரணமாக 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை ஒரு 'dummy' பகடி செய்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

காலங்களில் அவள் கோடை / கலைகளிலே அவள் கராத்தே / மாதங்களில் அவள் சித்திரை / மலர்களிலே அவள் ஊமத்தை!

பறவைகளில் அவள் கௌதாரி / பாடல்களில் அவள் ஒப்பாரி / கனிகளிலே அவள் பப்பாளி / காற்றினிலே அவள் சூறாவளி /
பேய் போல் சிரிப்பதில் வில்லி / அவள் சனி போல் அணைப்பதில் கில்லி / நெருப்பை வளர்ப்பதில் எண்ணெய் / அவள் கிறுக்கன் ஆக்கினாள் என்னை !

கல்லூரி காலங்களில் பலர் அவரவர்களின் காதல் வளர்வதற்காக 'பாரடி' பாடல் புனைந்துதவ என்னை அணுகுவதுண்டு. நானும் நிறைய எழுதி கொடுப்பேன், பெரும்பாலும் காதலியின் பெயரை பதிலீடு செய்து கொடுத்தால் போதுமானதாயிருக்கும். சேது ராமசாமிதான் அவர்களிலிருந்து வேறுபட்டு காதல் தோல்விக்காக என்னிடம் 'பாரடி' எழுதி தர சொல்லி கேட்டவன். அப்போது 'மண்ணில் இந்த காதலன்றி' பாடல் காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது. 'பாவலர் வரதராசன்' என்ற புனை பெயரில் கங்கை அமரன் எழுதிய பாடல் அது என்று கேள்விபட்டிருக்கிறேன். கங்கை அமரனின் பாடல் திறமை மீது மேலும் நம்பிக்கை வந்த காலம் அது.
சேது ராமசாமி ஒரு நாள் என்னிடம் வந்து 'எனக்கு இந்த பாட்டை மாத்தி குடு' என்றான் முழு போதையில். 'எல்லாமே ஆப்போசிட்டா இருக்கணும். எனக்கு இந்த காதலை பத்தியும் பொண்ணுகள பத்தியும் நெனச்சாலே கொமட்டீட்டு வருது' என்று கல்லூரி வாசலில் வாந்தி எடுத்தான். அவன் ஒரு நல்ல பாடகன் கூட. காதலை பற்றியும் பெண்களை பற்றியும் என் கருத்தியல் வேறானது என்றாலும் அவனுக்காக எழுதி கொடுத்தேன். (ஒரு பாடல் ஆசிரியன் ஆவதற்கு இந்த குவாலிட்டி மிக அவசியம்.)

அன்று இரவு நண்பர்கள் சபையில் அவன் அந்த பாடலை பாடினான்.
மண்ணில் இந்த காதல் என்னும் போதை என்று தீருமோ / என்று கன்னிப் பாவை என்னும் பேயின் ஆட்டம் ஓயுமோ / பெண்மை என்னும் சாத்தான் வேதம் ஓதுது / உண்மை என்று நம்பி கூட்டம் கூடுது

வெட்டிப்பயல் வேலையத்தவன் தின்னுட்டு ஊரைச்சுத்தும் சொத்தைப்பயல் சோம்பல் உள்ளவன் அத்தனை நபர்களும் பித்தம் தலைக்கேரியிறங்க சிந்தனை மழுங்கிட சுத்தி வந்து சொல்லும் ஒரு சொல் பெண் எனும் ஒரு விஷம் / கன்னியிவள் இருந்தால் சனி தான் பிடிக்கும் / கன்னித்துணை இழந்தால் அதுவும் விலகும் / முடி முதல் அடி வரை முழுவதும் விஷம் தரும் ஒரு பெரும் புதிரினை படைத்தது அவன் தவறே....

(மூன்று முறை மூச்சு வாங்குவது போல் நடித்தான்)

கத்தியென குத்தும் விழிகள் கட்டிலில் விழுந்ததும் கட்டியவன் காதில் மந்திரம் ஓதிடும் இதழ்களும் புற்றிடையும் புன்னகையுமே புத்தியை மயக்கிடும் கற்றிருந்த கல்வி முழுதும் கணத்தில் மறந்திடும் / இதை எண்ணுவதர்கா உனக்கோர் பிறவி? / இவளிடம் பணிந்தான் அவனா துறவி?
...


பாடலை அவன் முடிக்க முடியவில்லை! தர்ம அடி! பெரும்பாலும் அப்போதுதான் காதலில் விழுந்தவர்களின் சபையில் இப்படியொரு பாடலை பாடலாமா? ரணகளம்! அதிலிருந்து இந்த 'பாரடி'யை மறந்துவிட்டேன்.


சில ஆண்டுகளுக்கு பிறகு இசைத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சங்கரின் (சுதேசமித்திரன்) உத்தி ஒன்று எனக்கு பிடித்தமானதாயிருந்தது. சங்கரும் இரண்டு இசைதொகுப்புகள் எழுதியிருந்தான். 'கண்களில் நாணேற்றி அம்பு எய்து காவியம் பாடும் என் காதல் தேவி' என்ற பாடல் எனக்கு பிடித்திருந்தது. அப்போது பிரபலமாயிருந்த யேசுதாசின் மலையாள பாடலான 'சிந்துவில் நீராடி ஈறனாயி' என்ற பாடலின் மெட்டை எடுத்து அதற்கு புதிய வரிகளை எழுதி இசை அமைக்கும் சுரேஷிடம் மூல மெட்டை கூறாமல் புதிய இசை அமைக்க சொன்னபோது ஒரு நல்ல புதிய பாடல் கிடைத்துவிட்டது.

என் சகோதர உறவுமுறையினரும் மலையாளத்தின் பிரபலமான பாடல் ஆசிரியரும் இசைக்கலைஞருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியின் சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதே மெட்டில் வேறொரு சூழ்நிலையை யோசித்து அதற்கு வரிகளை எழுதி சுரேஷிடம் கொடுத்து புது மெட்டு அமைக்க சொன்ன போது நல்ல பாடல்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வரிகளை மலையாளத்தில் கைதப்ரத்திடம் சொல்லிக்காட்டுவேன். அவருக்கு மிகப்பிடித்த என்னுடைய சில வரிகள்:

மலைச்சாலை போகும் வரை போகும் மனதில்
இன்னும் உள்ளது இரவின் மிச்சங்கள்
எது பாதை புரியாத போதும்
எதிர்பார்ப்பு எதுவானபோதும்
எனை மூடும் பனிமூட்டம் எல்லாம்
விலகும் உன் விழி வீசும் ஒளியால்...

அது மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த அவருடைய சில வரிகளை தமிழ்படுத்தி அவருடைய அனுமதியுடன் உபயோகித்ததும் பாடல் எழுதும் பயிற்சியின் ஒரு அங்கமாயிற்று. 'குஞ்சி கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி' என்னும் அவருடைய புகழ் பெற்ற வரியை தமிழில் வேறொரு மெட்டில் இப்படி மாற்றி எழுதியிருந்தேன்: 'பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே'
இவை மட்டுமல்லாமல் இலக்கணப் பயிற்சி, மரபு கவிதைகளில் பயிற்சி போன்ற மொழி சார்ந்த அறிவுகளும் கூடவே கொஞ்சம் அந்நிய மொழி தேர்ச்சியும் பொது அறிவும் அறிவியல் மற்றும் புள்ளியியல் அறிவும் தமிழ் சினிமா பாடல் ஆசிரியன் ஆவதற்கு மிக மிக அவசியம். பியூட்டிக்கு சமமாக டியூட்டியோ ஸ்வீட்டியோ போட தெரிய வேண்டும். டூயட் பாடலில் 'செவ்வாயில் காற்றே கிடையாது... அது யாருக்கும் தெரியாது... காதலர்களின் கண்ணீரும் அது போல யாருக்கும் தெரியாது...' என்று எழுத தெரிய வேண்டும்.

மிக முக்கியமானது எழுத போகும் பாடலின் பாத்திரத்தின் தன்மை என்ன, அதை ஏற்று நடிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வது.

உதாரணமாக, உங்களுக்கு சினிமா பாடல் ஆசிரியனாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கதையை விவரித்து, குறிப்பிட்ட பாடலின் சிச்சுவேஷனையும் சொல்லிவிட்டார்.
சிச்சுவேஷன் இதுதான்:

நாயகி தன் சோகச்சுமைகளை நெஞ்சுக்குள் தாங்கியபடி ஊமைக்குயிலாய் பாடும் ஒரு பாடல்.

இசை அமைப்பாளர் 'தத்தகாரத்தை' சிடியில் கீபோர்ட் ட்ராக் கொடுத்துவிட்டார். நீங்களும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு பாடல் எழுதி விட்டீர்கள். நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இயக்குனரும் இசை அமைப்பாளரும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வேறு வரிகள் எழுதிகொண்டுவாருங்கள் என்கிறார்கள். வரிகளில் என்ன குறை என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
'சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்' என்று நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். சோக ரசம் நன்றாகவே தளும்புகிறது. ஆனால் கதாநாயகியாக அபினயிப்பவர் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை!நமீதா!

2 comments:

  1. நல்ல பதிவு நண்பரே..

    ReplyDelete
  2. மண்ணில் இந்த காதலின்றி பாடல் சூப்பர்.

    ReplyDelete