Monday, January 12, 2015

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

No comments:

Post a Comment