

மெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ராமசாமி
1992 ம் வருடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி திரைப்படக்கழகம் திரையிட்ட முள்ளும் மலரும் என்ற திரைப்படம் என் வாழ்வில் ஒரு புதிய திசையை திறந்தது. அதுவரை இலக்கியம் படிப்பவனாக இருந்த என்னுள் ஒரு முழுநீள திரைப்படம் ,நீக்கமறக் கவிதை நூலாக நிறைந்தது. படம் முடிந்து மதுரையிலிருந்து 7 கி.மீ நடந்தே பனியிரவில் வீடு வந்து சேர்ந்தேன்.
என் இரண்டு தங்கைகள் மீதும் என்னையறியாமல் அவர்களுக்காக உள்ளார்ந்த கண்ணீர் என்னுள் சுரக்கத் தொடங்கியது. மென்மேலும் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மோலோங்கியது. ஒரு அண்ணனாக முழுமையாக உணர்ந்த தருணமது. பெண்மையின் பேச்சற்ற கணத்தின் பின்னனியில் இருக்கும் மெளனத்தின் அர்த்தம் புரியத்தொடங்கியது. பின்பு அவரின் அத்தனை படங்களும் உதிரிப்பூக்களாக என்னுள் நிறைந்தது.
ஏகலைவத் தவம் தொடங்கியது, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் , அதன் மூலமே அறிமகமாக வேண்டும் என்ற தவிப்பு இருந்தது. ஜானி மாதிரி ஏன் முயலக்கூடாதென கூடல்நகர் திரைப்படத்தை முயன்றேன். ஆயினும், அவரை சந்திக்கும் துணிவு வரவில்லை.
தென்மேற்கு பருவகாற்று அத்திசையின் கதவுகளை திறந்தது. படத்தை அவர் பார்த்துவிட்டார் என்பதை அறியாமலே, என் படத்தை பார்க்குமாறு தொலைபேசியில் அவரை கேட்டுக்கொண்டேன். அவரோ “மிஸ்டர் ராமசாமி, உங்க படம் பார்த்தேன், நல்லாயிருக்கு, எனக்கு புடிச்சிருக்கு” என்றார்.
மலைச்சரிவில் ஓடும் சிறுவனைப் போல பரவசம் தொற்றிக்கொண்டது.
கூடல்நகர் திரைப்படத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சஞ்சலத்தில் என் உறுதி சரியத் தொடங்கி மசாலா கதைகளை உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணமும் வந்தது உண்மை. ஒரு வயது பெண்குழந்தையுடன் மாநகரம் அன்றாட வாழ்வுக்கு திசை விரட்டிய கலை வாழ்வில், அமைதியற்ற நேரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவரின் முள்ளும் மலரும் `காளி` எனக்கு நம்பிக்கையூட்டினான்.
சென்னை பள்ளிக்கரனை நோக்கி எனது காரில் அவரை சந்திக்க சென்றேன். புறநகர் குடியிருப்பொன்றில் செட்டிநாடு வீடு வகைகளை நினைவுறுத்தும் பேரமைதியான இல்லத்தின் முன் ஜப்பானிய மொழியில் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ”வாங்க, மிஸ்டர் ராமசாமி” என்னை அழைத்தவர் இயக்குனர் மகேந்திரன். வெள்ளுடையில் இருந்தார். புருவம் சுருக்கி பேசினார் . தென்மேற்கு பருவகாற்றில் சில காட்சிகளைக் குறிப்பிட்டார். பட விழா, விருதுகளுக்கு இதை அனுப்ப சொன்னார். சினிமா பற்றிய எனது அபிப்பிராயங்களை கூர்ந்து கவனித்தார். அவரது அபிப்பிராயங்கள் எனக்கு இணக்கமாகவும் , நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.
இயக்குனர் சீனு ராமசாமி என கையழுத்திட்டு அவரின் புத்தகங்களை தந்தார். அப்பெரிய வீட்டிலிருந்து வெளிவந்து யாருமற்ற அத்தெருவில் வெயிலில் நின்று வழியனுப்பினார். என் தந்தையை அறிந்த மன நெகிழ்வில் நெஞ்சில் கைவைத்து நன்றி சொல்லி விடை பெற்றேன்.
வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். நதிக்கரையில் ஓடும் உதிரிப்பூக்கள் குழந்தைகளும். ஷோபாவின் பொட்டு வைத்த சிரிப்பும், சுடு தண்ணீரை தூக்கச் சொன்ன தங்கையின் முன் கையிழந்த அண்ணனின் முகமும், பூட்டாத பூட்டுகளாக திறந்த கார்க் கதவின் வழியாக மனக்கண்ணில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment